முன்னோட்டம்
“மிசஸ் சித்தார்த், நீங்க உங்களோட முடிவுல உறுதியா தான் இருக்கீங்களா? இல்ல யோசிக்கணுமா?”
வழக்கறிஞரை எவ்வித தயக்கமுமின்றி ஏறிட்டாள் யசோதரா. இந்த முடிவை எடுப்பதற்குள் அவள் எத்தனை முறை மனதுக்குள் குமுறியிருப்பாள் என்பதை அவள் மட்டுமே அறிவாள். ஆனால் இனியும் யோசிப்பதில் பலனில்லை. ஏனெனில் அவள் செய்யும் தாமதம் அவளது காதலைக் கேலிக்கூத்தாகி விடும். அவளது குடும்பத்தின் ஜீவனை வதைத்துவிடும்.
“என்னோட டிசிசன்ல நான் ஸ்ட்ராங்கா இருக்கேன் லாயர் சார்... ஐ வாண்ட் டிவோர்ஸ்... இதுக்கு மேல ஒரு நிமிசம் கூட என்னால மிஸ்டர் சித்தார்த்தோட ஒய்பா வாழ முடியாது... அப்பிடி நான் அவரோட ஒய்பா வாழ்ந்தேன்னா என் குழந்தையோட எதிர்காலம் கேள்விக்குறி ஆயிடும்... என் பொண்ணுக்காக நான் எதையும் செய்வேன்” என்றவளின் குரலில் தெரிந்த உறுதியைக் கண்டு திகைத்தார் அவர்களின் குடும்ப வழக்கறிஞர் ஞானசேகரன்.
“இன்னைக்கு நடக்கப்போற அவார்ட் செரிமோனில நான் தான் யங்கஸ்ட் நாமினேசன் தெரியுமா? ஆனா நீ ஃபங்சனுக்கு வரமாட்டேனு சொல்லுற... ஏன் மய்யூ இப்பிடி?” அங்கலாய்த்தபடி தனது முழுக்கை சட்டை மீது கருநீலவண்ண ப்ளேசரை அணிந்தான் மாதவன்.
“ஏன்னா எனக்கு உன் சினி ஃபீல்டோட கேமரா ஃப்ளாஷ், பகட்டான பேச்சு, போலியான சிரிப்பு இதெல்லாம் பாத்தா அலர்ஜி மாதிரி ஃபீல் ஆகுது மேடி... இது தெரிஞ்சு தானே நீ என்னை லவ் பண்ணி மேரேஜூம் பண்ணுன... இப்போ அவார்ட் பங்சனுக்கு வானு சொன்னா என்ன அர்த்தம்?” என்று கேட்டபடி அவனது மொபைலை எடுத்து மயூரி.
மாதவன் பெருமூச்சுவிட்டபடி அவளை ஏறிட்டவன் “நம்மள காதலிக்கிறவங்களுக்குகாக சில விசயங்களை விட்டுக் குடுக்கலாம் மய்யூ” என்றான்.
“ஆனா யாருக்காகவும் நம்மளோட இயல்பை மாத்திக்க முடியாது மேடி” என்றாள் அவனது மனையாள் தீர்மானமாக.
இதற்கு மேல் அவளை வற்புறுத்தும் எண்ணமற்றவன் “அட்லீஸ்ட் பப்புவ கூட்டிட்டுப் போகவாச்சும் பெர்மிசன் உண்டா?” என்று வினவி அவளை கடுப்படித்தான்.
“நானே வரமாட்டேன்னு சொல்லுறேன்... இதுல என் பையனை மட்டும் எப்பிடி அனுப்புவேன்னு நினைச்ச நீ? அந்த பாப்பராஸி கிட்ட இருந்து எங்களோட ப்ரைவேட் லைஃபை காப்பாத்திக்க நான் எவ்ளோ பிரயத்தனப்படுறேனு எனக்குத் தான் தெரியும் மேடி... இந்த லைம்லைட்ல நீ மட்டும் நனைஞ்சா போதும்... நானும் என் மகனும் அதை ரசிக்கிற இடத்துல நிக்கத் தான் ஆசைப்படுறோம்” என்று அவள் விளக்கமளிக்க மாதவன் அவளது பதிலில் அமைதியானான்.
இது வழக்கமாக நடக்கும் விவாதம் தான். பிரபலங்கள் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை இயல்பாக சாதாரண மக்களைப் போல வாழ முடிவதில்லை. காரணம் நம் மக்களுக்கு அவர்களின் பிரபலத்துவத்தின் மீதிருக்கும் கண்மூடித்தனமான வெறி!
அந்த குருட்டுப்பக்தி பொது இடங்களிலோ பொது நிகழ்வுகளிலோ பிரபலங்கள் பங்கேற்கும் போது அவர்களிடம் அன்பு என்ற பெயரில் எல்லை மீறுவது, புகைப்படம் எடுக்கிறேன் என அனுமதியின்றி நடந்து கொண்டு அவர்களை எரிச்சல் மூட்டுவது, அவர்களை காணும் ஆர்வத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது என பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுவது வழக்கம்.
இவை எதுவுமில்லாத அமைதியான இயல்பான வாழ்க்கையை மயூரியும் தனது மகனும் வாழட்டும் என எண்ணியவன் கடுப்பே உருவாக நின்றவளை தன் வசம் இழுத்து அணைத்துக் கொண்டான்.
“உடனே புரொபசருக்கு மூக்கு மேல கோவம் வந்துடுச்சா? என்னோட ஹேப்பியான மொமண்ட்ல நீ என் கூட இருக்கணும்னு ஆசைப்பட்டேனே தவிர உனக்கு அது அன்கம்பர்டபிளா இருக்கும்னு யோசிக்கல.. ஐ அம் சாரி... நான் போய்ட்டு சீக்கிரமா வந்துடுறேன்.. அது வரைக்கும் தாங்குற மாதிரி ஒரு கிஸ் குடு பாப்போம்” என்று கன்னத்தைத் தட்டிக்காட்ட அவனது அருகாமையில் கோபம் தீர்ந்து இதழ் பதித்தாள் மயூரி.
“குட்டிப் பாப்பாக்கு இலக்கியானு நேம் வைப்போமா மம்மி?”
கண்களை உருட்டிக் கேட்டவனின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்ட ஹேமலதா “என் செல்லக்குட்டி சொன்ன பேர் எவ்ளோ அழகா இருக்கு... இதையே வச்சிடுவோம்” என்றாள்.
“எனக்கும் இந்த பேர் பிடிச்சிருக்குடா” என்றார் சாந்தநாயகி. அவரருகே அமர்ந்திருந்த யசோதரா கேலியாக அவரைப் பார்த்தவள்
“ஐயோ ஆன்ட்டி டிபிக்கள் மாமியாரா நீங்க இவ கூட சண்டை போடணும்... புரியலயா? அது என்ன பெண்குழந்தைனு சொல்லுற... எனக்குச் சிங்கக்குட்டி மாதிரி பேரன் தான் பிறப்பான்” என்று உரத்தக்குரலில் நடித்துக் காட்ட மயூரியுடன் தமக்கையை ஒட்டி அமர்ந்திருந்த சாருலதா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.
“இவங்க அக்கா கூட சண்டை போட்டாங்கனா அது தான் இந்த உலகத்தோட எட்டாவது அதிசயம் யசோக்கா... மாமியாரும் மருமகளும் ஓவர் கொஞ்சல் குலாவல்.. அதை பாக்குறப்போ எனக்கு வரப்போற மகராசி என்ன பண்ண காத்திருக்காளோனு ஒரு சின்ன பயம் வருது” என்று போலியாய் கவலை காட்டினாள் அவள்.
அவளது தலையில் நறுக்கென்று குட்டிய ஹேமலதா “அவங்க வர்றப்ப பாத்துக்கலாம்... நீ அதுக்கு முன்னாடியே அவ இவனு மரியாதை இல்லாமலா பேசுற?” என்று முறைக்க பால்கனியிலிருந்து திரும்பிய கௌதம் புன்சிரிப்புடன் மனைவியைப் பார்த்தான்.
“இப்போ தான் சித்து கிட்ட பேசுனேன்... நானும் அவரும் கமிங் ஃப்ரைடே சுவாமிஜிய பாக்க போறோம்” என்று அவன் கூறவும் அங்கிருந்த பெண்களின் முகம் யோசனையாய் அவனை நோக்கி திரும்பியது.
அதில் முக்கியமானவள் யசோதரா.
“ஒர்க்கிங்டேல போய் பாக்குற அளவுக்கு அப்பிடி என்ன அவசரம்?” கேட்டவள் மயூரி. ஒரே கல்லூரியில் பணியாற்றுபவர்கள் அல்லவா!
“என் பொண்ணு பிறக்குறப்பவே அவரோட ஆசிர்வாதத்தோட பிறக்கணும்னு ஆசைப்படுறேன்... தட்ஸ் ஒய்” என்று தோளைக் குலுக்கியவன் ஹேமலதாவிடம்
“நான் குட்டிமாவுக்கு நேம் கூட செலக்ட் பண்ணிட்டேன்... என்ன பேர் தெரியுமா? ருத்ரா” என்றான் புன்னகையுடன்.
அதை கேட்டதும் நந்தனின் முகம் வாடியது. அவனது குட்டி தங்கைக்கு அவன் தேர்ந்தெடுத்த பெயர் கிடையாதாம்! வருத்தம்!
அவனது வருத்தம் பெண்களையும் பாதித்தது. அத்துடன் கௌதம் சொன்ன காரணம் யசோதராவின் மூன்றாவது கண்ணைத் திறந்துவிட்டது.
“ஸ்வாமிஜியோட பேரை வச்ச நேரம் நம்ம பொண்ணுக்கு எல்லாமே நல்லதா நடக்கும் ஹேமா”
ஹேமா புருவம் சுருக்கி “ஸ்வாமிஜி?” என்று கேள்வியாய் நோக்க
“சர்வ ருத்ரானந்தாவ பத்தி தான் பேசுறேன்... அவரோட பேரை தான் நம்ம பொண்ணுக்கு வைக்கப்போறேன்”
அந்தப் பதிலில் எரிச்சலுற்ற யசோதரா “இங்க பாரு கௌதம், ருத்ராங்கிறது சர்வேஸ்வரனோட பேர்... அந்த அர்த்தத்துல நீ வச்சேனா நோ ப்ராப்ளம்... ஆனா சாமியாரை மீன் பண்ணி தான் வைக்குறேனா உன்னை மாதிரி அடிமுட்டாள் எவனும் இல்ல... ஏன்டா உன் புள்ள செலக்ட் பண்ணுன பேரை விட எவனோ ஒரு சாமியார் உனக்கு முக்கியமா போயிட்டானா?” என்று பொரிந்து தள்ள ஆரம்பித்தாள்.
ஹேமலதாவோ கணவனை முறைத்து வைக்க சாருலதா அவனுக்குப் பரிந்து பேச வந்தாள்.
“ஸ்வாமிஜி இதுல என்ன தப்பு பண்ணுனார் யசோக்கா?”
“வாயை மூடு... உங்க பக்தி பரவசத்தை எல்லாமே உங்க கூடவே வச்சுக்கோங்க... குழந்தை விசயத்துல தலையிட்டீங்கனா அவ்ளோ தான்” என்று கடுகடுத்த யசோதரா அங்கே வருத்தம் தோய்ந்த முகத்துடன் நின்ற நந்தனை தூக்கிக் கொண்டாள்.
“செல்லக்குட்டி நீ செலக்ட் பண்ணுன நேமையே குட்டிப்பாப்பாக்கு வச்சுடலாம்... சரியா?” என்று அவனது கன்னத்தில் முத்தமிட நந்தனுக்குக் கொண்டாட்டம். அவனைப் பெற்றவனோ முகம் வாட நின்றான்.
“வாவ்! அண்ணா சாரு இஸ் த வின்னர்... அண்ணா லுக் அட் திஸ் சைட்... ஷீ இஸ் த வின்னர் ஆப் நேஷ்னல் போட்டோகிராபி அவார்ட்... பிரகதீஸ்வரர் கோயில் கோபுரத்தை எவ்ளோ அழகா போட்டோ எடுத்திருக்கா பாருங்கண்ணா”
கண்கள் ஜொலிக்க இந்திய அரசாங்கத்தின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் கீழ் இயங்கும் போட்டோ டிவிசன் இணையதளத்தைப் பார்த்து உற்சாகத்துடன் கத்தினான் இந்திரஜித்.
சித்தார்த்தும் மாதவனும் அவனருகே சென்றவர்கள் மடிக்கணினியின் திரையைக் கவனிக்க அங்கே ‘வின்னர் ஆப் நேஷ்னல் போட்டோகிராபி அவார்ட் அமெச்சூர் லெவல் – குமாரி சாருலதா' என்று எழுத்துகள் கண்ணில் படவும் புருவங்கள் உயர அவளைத் தங்களுக்குள் பாராட்டிக் கொண்டனர்.
இந்திரஜித் இருவரிடமும் திரும்பியவன் “ஃபைனலி சொன்னத செஞ்சுட்டா அவ... நான் அவளை விஷ் பண்ணியே ஆகணும்ணா... சொல்லுங்க... அவளுக்கு என்ன கிப்ட் குடுக்கலாம்?” என்று தோழிக்குப் பரிசைத் தேர்ந்தெடுக்க அவர்களின் உதவியைக் கேட்கவும் இருவரும் முறுவலுடன் அவனைப் பார்த்தனர்.
மாதவனோ கண்களில் குறும்பு மின்ன “அவ புரொபசனல் போட்டோகிராபர்... அவளுக்கு என்ன கிப்ட் குடுத்தா யூஸ்புல்லா இருக்கும்னு யோசி... அது டெய்லி அவ யூஸ் பண்ணுறதா இருக்கணும்... ஒவ்வொரு தடவை அதை பாக்குறப்போவும் உன் நியாபகம் வரணும்... அதே நேரம் அதோட லைப் கொஞ்சம் அதிகமா இருக்கணும்” என்றான் மாதவன்.
இந்திரஜித் சில நொடிகள் யோசித்தவன் “யுரேகா... அவளுக்கு டெய்லி யூஸ் ஆகுறது கேமரா தான்... சோ நான் இருக்குறதுலயே பெஸ்ட் டி.எஸ்.எல்.ஆரை அவளுக்கு கிப்ட் பண்ணப்போறேன்” என்றான் குதூகலத்துடன்.