தாயுமானவள்
" பசிக்கிது மா..." அன்னையின் முந்தானையைச் சுற்றிக் கொண்டே கேட்டாள் சின்னவள்."எனக்குந்தேன் பசிக்கிது, இதோ மடியில் கிடக்கானே இவனுக்குந்தேன் பசிக்கிது. இந்தக் கருகமணி பாசியை வித்து நாலு காசு வந்தாதேன் சோறு நமக்கு, பேசாம போயி இந்த ஊக்க வித்துட்டு வா..." என்று அந்தச் சிறுமியின் கைகளில் ஊக்குக் கொத்துகளை கொடுத்து விக்கச் சொன்னாள் அந்த குழந்தையின் தாய்.
கிழிந்த மேலாடையை மட்டும் உடுத்தி, பிஞ்சு தாள்களில்(கால்) செருப்பணியாது அக்கோயிலின் வெளியே கல் , மண் மிதித்து சூட்டையும் பொருட்படுத்தாது ஒவ்வொருவரிடம் ஊக்கை விற்க முயன்றது நம் நாட்டின் எதிர்காலம்.
இன்னும் ரேகை கூட முழுமையாகாத அந்தப் பிஞ்சின் தலையெழுத்து ஊக்கு விற்று பிழைக்க வேண்டுமென்றே எழுதி வைத்திருக்கும் அக்கல்லாளான கடவுளும் கல்லே.
வெகு நேரமாகச் சுற்றித் திரிந்தவள், ஒரு ஊக்குக் கொத்தைக் கூட விற்க வில்லை. பசி ஒருப்பக்கம் வெயில் ஒருப்பக்கம் அவளை வாட்டிட, இன்னும் முளைக்காத சிறு விரல்களை நெற்றியில் வழிந்தோடும் வியர்வையை துடைத்துக் கொண்டு வலம் வந்தவள்,
அப்பெரிய கோயிலைச் சுற்றி ஆங்காங்கே குடிநீர் வசதிகள் இருக்க, அதில் நீரை அருந்தி, பின் தெம்போடு வலம் வந்தது அந்த இளங் குருத்து.
மரத்தடியில் அலைபேசியைப் பார்த்தவாறு நின்றிருந்த வஞ்சியைக் கண்டு அவள் முன் நின்றாள் அந்தச் சின்னவள்.
"அக்கா, ஊக்கு வாங்கிகோக்கா. அக்கா ஊக்கு வாங்கிக்கோக்கா..." தன் குரலை வைத்து இயன்றளவு கத்தினாள். அலைபேசியில் முழ்கி இருந்தவளுக்கு அந்தக் குழந்தையின் குரல் சிறிதும் எட்டவில்லை.
பொறுத்து பார்த்த அந்தப் பிஞ்சு, அவளது ஆடையை இழுத்தது. போனை விலகி யாரென கண்டாள் அம்மடந்தை.
" ஓய்... என்ன வேணும் உனக்கு...?" எனக் குனிந்து சின்னவளிடம் கேட்டாள்.
" அக்கா, சாப்ட்டு நாலுநாளாச்சுக்கா, பசிக்கிதுக்கா, இந்த ஊக்க வாங்கிட்டு காசு தாக்கா..." அக்குழந்தையின் பசியேக்கம் கல்மனதையும் கரைத்து விடும் போலும் அவளும் பையிலிருந்த பத்து ரூபாயைக் கொடுத்து இரண்டு ஊக்குக் கொத்துகளை வாங்கிக் கொண்டாள்.
பத்து ரூபாயைக் கண்டதும் அக்குழந்தையின் முகத்தில் வாழ்நாளில் காணாத சந்தோசத்தைக் கண்டதது போல துள்ளிக் குதித்து கடையை நோக்கிச் சென்றது.
ஐந்து ரூபாய்க்கு ஒரு பன்னை வாங்கி,மீதம் ஐந்து ரூபாயைக் கையில் அடைத்து கொண்டு, ஒரு ஒரு விள்ளலாக அந்தப் பன்னை வாயில் திணித்து கொண்டே வந்தாள்.
பைக்காரன் இடித்து நடுரோட்டில் இறந்த நாயை, குப்பைத் தொட்டி அருகே போட்டிருந்தனர். அந்த நாயின் குட்டிகள், தன் அன்னையைச் சுற்றியே பாலுக்காக ஏங்கிப் பசியில் கத்திக் கொண்டு அதன் மேல் ஏறி, இறந்து விட்டதென்று கூட தெரியாமல் எழுப்ப முயன்று தோற்று அழுது கொண்டுருந்தன.
அதைக் கண்ட அச்சின்னவளின் சிறு இதயம் இளகியதோ, என்னவோ அக்குட்டிகளின் பசியைப் போக்க விரைந்தாள்.
தன் கையில் இருந்த, பன்னை பிய்த்து குட்டிகளுக்குப் போட, பசியில் வேகமாக உண்டன. தானும் ஒரு வாய் வைத்து குட்டிகளுக்கும் கொடுத்த அந்தக் குழந்தை ஒருகணம் அக்குட்டிகளுக்கு தாயுமானவளாக மாறிப் போனாள் .
குட்டிகள் உண்பதை ரசித்து கொண்டிருந்தவளின் முதுகைப் பதம் பார்த்தது ஒரு வலியகரம். வலியில் அந்தப் பிஞ்சு துடிக்க, குட்டிகள் பயத்தில் ஒதுங்கியது.
"ஊக்கு வித்த காச கொண்டாராம நாய்க்கு செலவு பண்றீயா? வா, உனக்கு சூடு வைக்கிறேன்... நாமலே சோறு இல்லாம இருக்கோம் நாய்க்கு பன் வேறயா ..." அக்குழந்தையின் காதை திருகியவள் தர தரவென அடித்து இழுத்துச் சென்றாள்.
அவள் விட்டுச் சென்ற உணவு அக்குட்டிகளின் அப்போதைய பசியைப் போக்கியது.
எதுவுமறியா பிஞ்சுகள் மனதிலும்
தாயினுள்ளம் சிறிதளவு முளைந்திருக்கும்.