ஓம் சாய்ராம்
வணக்கம், அன்பு நெஞ்சங்களே!
இந்த தளத்திற்கு நான் புதிய முகம். தளத்திற்கு மட்டுமல்ல, ஆன்லைனில் படிப்பதற்கும், எழுதுவதற்கும் கூட. எழுத்துலகில் மாபெரும் புரட்சி ஏற்ப்பட்டு இருக்கிறது என்று லாக்டௌனில்(Lockdown) நான் கற்ற பாடங்களில் ஒன்று.
என்னை பற்றியும், நான் இத்தளத்தில் பதிவு செய்யவிருக்கும் கதையை பற்றியும் முடிந்தளவிற்கு சுறுக்கமாக இங்கு பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
என்னை பற்றி:
அமெரிக்காவில் பணிப்புரிய வந்த கணவன்மார்களோடு வந்த இல்லத்தரசிகளில் நானும் ஒருத்தி. சலிக்காமல் புத்தகங்கள் படிப்பேன்; பொழுதுக்கும் பாடல்கள் கேட்பேன்; அதனால் “போர்” என்ற வார்த்தைக்கு இடமே இல்லை. தற்போது ஒரு பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன். எங்கள் நகரத்தில் இருக்கும் தமிழ் பள்ளியிலும் பாடம் கற்றுக்கொடுக்கின்றேன்.
கதை எழுத ஆர்வம்….
சில வருடங்களுக்கு முன்பே கதை எழுத ஒரு ஆசை மலர்ந்தது. அப்போது இங்கு நடந்த “NaNoWriMo” என்ற போட்டியில் பங்கெடுத்துக்கொண்டேன். ஏனோ அதில் மனநிறைவு இல்லை. சற்று சிந்தித்து பார்த்ததில், மொழிதான் காரணம் என்று புரிந்து கொண்டேன். தாய்மொழியில் எழுதும் போது, எண்ணங்கள் அழகாக வடிவம் எடுப்பது போன்ற ஒரு உணர்வு.
கனவுகள் கதைகளாய் உருவெடுத்தன….
கனவுகள் நம் ஆழ்மனதின் பிரதிபலிப்பு என்று எங்கோ படித்த நியாபகம். எனக்கும் நிறைய கனவுகள் வரும். அதில் சில, நெஞ்சைவிட்டு நீங்காத அளவுக்கு அத்தனை நெருக்கமாக இருந்தன. அவற்றை மையமாக வைத்து எழுத தொடங்கியதே இந்த எழுத்து பயணம்.
என் முதல் கதை – “அன்பின் ஆழம்”
கதையை பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், நண்பர்கள் ஒருவருக்கொருவர் எப்படி உதவியும், ஊக்குவித்தும், விட்டுக்கொடுத்தும் வாழ்கிறார்கள் என்பது பற்றியே....
கதைக்கு பெயர் சூட்டுவது எவ்வளவு சிரமம் என்று முதல் கதையிலேயே உணர்ந்துவிட்டேன். அதனால், தமிழ் எழுத்து வரிசையில் பெயர்கள் வைக்கலாம் என்று நினைத்தேன். (இன்னும் நிறைய கதைகள் எழுத வேண்டும் என்று ஆசை தான்) …. என்னாலான முயற்சி நிச்சயமாக எடுப்பேன்….அதற்கு மேல் கடவுள் விட்ட வழி.
உங்கள் கருத்துக்களையும், நிறைகுறைகளையும், பகிர்ந்து கொள்ளுமாறு, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
வாய்ப்பு கொடுக்கும் சகோதரி எழிலன்பு அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்