• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உயிரூற்றாய் வந்தாய் - முன்னோட்டம்

Ezhilanbu

Administrator
Staff member
Writer
#உயிரூற்றாய்_வந்தாய்...

நேரடி புத்தகமாக வெளிவந்த உயிரூற்றாய் வந்தாய் கதை ஏப்ரல் 22 முதல் ஆன்லைனில் தொடர்கதையாக...

வழக்கம் போல் திங்கள், புதன், வெள்ளி அன்று மாலை 5 மணியளவில் பதிவுகள் வரும்.

🙂🙂🙂

எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது.

ஆனால்… எங்கே சறுக்கியது?

இல்லையே? எங்கேயும் சறுக்கவில்லையே? தெளிந்த நீரோடை போலத்தானே வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

அப்படியிருந்தும்? என்று நினைத்தவனைச் சுற்றி விடையறியா இருள் சூழ்ந்து கொண்டது.

கேள்வியே இல்லாமல் சென்று கொண்டிருந்த அவன் வாழ்க்கையைச் சுற்றி இப்போது கேள்விகள் மட்டுமே சூழ்ந்திருந்தன.

ஏன்?

எதற்கு?

எப்படி?

எதனால்?

என்ன நடந்தது?

கேள்விகள்! கேள்விகள்! அதே பதிலறியா கேள்விகள்!

அனைத்திற்கும் பதிலானவளோ…

அவன் நினைவு எங்கெங்கோ சென்று கொண்டிருக்க, “அத்தான்…” என்ற அழைப்பில் அவனின் சிந்தனை அறுபட்டுப் போனது.

அவனின் குழந்தையைக் கைகளில் ஏந்தியபடி நின்றிருந்தாள் யதுநந்தினி.

ஒரு வாரத்திற்குப் பின் தன் மகளைப் பார்க்கிறான் விஷ்வமித்ரன்.

தூங்கி எழுந்திருந்திருப்பாள் போலும். கண்களை மெதுவாக மூடி மூடி திறந்து கொண்டிருந்தாள் ரூபிணி.

“ஏங்க, இவள் கண்ணைப் பாருங்களேன். அப்படியே என் கண்ணு மாதிரியே இருக்கு. எப்படிப் பொசுக்கு பொசுக்குன்னு முழிக்கிறாள் பாருங்க. நான் கூடச் சின்னப் பிள்ளையில் இப்படித்தான் இருப்பேனாம். அம்மா சொன்னாங்க…” என்று குதூகலமாய்ச் சொன்ன மனைவியின் குரலை, மகளின் கண்களின் வழி கேட்டான் விஷ்வா.

“கண்ணு மட்டுமா? அவள் கன்னம், உதடு, காது எல்லாமே உன்னைப் போல்தான். என்னோட விதுவே இப்ப குட்டி விதுவா வந்து பிறந்திருக்காள்…” மகளைக் கொஞ்சினானா? மனைவியைக் கொஞ்சினானா என்று ஆராய்ச்சி செய்யும் வகையில் தான் சிலாகித்ததும்,

“அச்சோ! ஆமாம்ல? நான் உங்களைப் போலக் குழந்தை வேணும்னு தாங்க ஆசைப்பட்டேன்…” என்று மனைவி ஏமாற்றத்தில் உதட்டை பிதுக்கியதும்,

அதில் ஒரு அவசர முத்தம் வைத்து, “இப்ப உன்னைப் போலவே ஒரு குட்டி பேபி வந்துட்டாள். அடுத்த முறை என்னைப் போலவே ஒரு குட்டி பையனை பெத்துக் கொடுத்திடு…” என்று தான் மனைவியின் காதில் ரகசியம் பேசியதும்,

“ச்சு, போங்க… இப்பத்தான் குட்டி பேபியே வந்திருக்காள். அதுக்குள்ள குட்டி பையனுக்குப் போயிட்டீங்க. என்னால் தாங்க முடியாது சாமி…” என்று மனைவி சுகமாக அலுத்துக் கொண்டதும் கணப்பொழுதில் அவனின் கண்ணின் முன் ஊர்வலம் போனது.

“அத்தான், அத்தான்… என்ன அப்படிப் பார்க்கிறீங்க?” என்று யதுநந்தினி உயர்ந்து குரல் கொடுத்ததும், கண் முன் விரிந்த நிஜம், நிழலாகி போக, எதிரே இருந்தவளை என்ன என்று பார்த்தான்.

“என்ன அத்தான் பதிலே சொல்லாமல் அப்படிப் பார்க்கிறீங்க?” என்று அவள் மீண்டும் கேட்க,

“என்ன பதில்?” என்று புரியாமல் கேட்டான்.

“எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன் அத்தான். பாப்பாவை பார்த்துக்க வேண்டியது இருந்தால் என்னால் ஹாஸ்பிட்டல் வர முடியலைன்னு சொல்லிட்டு இருந்தேன்…” என்றாள் யதுநந்தினி.

“எப்படி இருக்கேன்? அதுதான் நீயே பார்க்கிறயே. நடக்க முடியாமல், இதோ என் பொண்ணு பக்கத்திலேயே இருந்தும் தூக்க முடியாமல் இருக்கேனே…” என்று தன் கை கட்டையும், கால் கட்டையும் காட்டியவன், சலிப்புடன் சொன்னான்.

“கவலைப்படாதீங்க அத்தான். சீக்கிரம் சரியாகிடும். இப்ப என்ன நீங்க பாப்பாவை தூக்கணும், அவ்வளவுதானே?” என்றவள், அவன் அருகில் சென்று அடிபடாத கையின் பக்கம் குழந்தையை அவன் மடியில் அமர வைத்தாள்.

குழந்தையைச் சுற்றி கையைப் போட்டு மென்மையாக அணைத்துக் கொண்டவனின் மேனியின் ரோமங்கள் சிலிர்த்து நின்றன.

“ரூபி குட்டி, அப்பாவை தேடினீங்களாடா? அப்பா இல்லாம ரூபி குட்டி என்ன செய்தீங்க?” என்று குழந்தையிடம் பேச்சுக் கொடுக்க, அவனின் முகத்தை அண்ணாந்து பார்த்து சிரித்தாள் குழந்தை.

அவர்களுக்குள் மூன்றாம் ஆளாக நிற்காமல் வெளியே சென்று அமர்ந்தாள் யதுநந்தினி.

“அப்பா ஹாஸ்பிட்டல் போய்ட்டேன்டா. அதுதான் உன்னைப் பார்க்க வரலை. இனி அப்பா உன்னை விட்டு இப்படிப் போக மாட்டேன்…” என்று தொடர்ந்து மெல்லிய குரலில் அவன் பேசிக் கொண்டிருந்தது காதில் விழ, வெளியே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தவளின் கண்ணின் ஓரம் கண்ணீர் கசிந்து நின்றது.

“என்ன யது, இங்கே வந்து உட்கார்ந்துட்ட?” என்று கேட்ட படி அவளின் அருகில் வந்து அமர்ந்தார் கவிதா.

“அத்தான்கிட்ட ரூபியை விட்டுட்டு வந்தேன் அத்தை…” என்றவள், உள்ளே கேட்ட குரலை சுட்டிக் காட்டினாள்.

மகனின் பேச்சு குரலும், பேத்தியின் மழலை மொழியும் அந்த அறையிலிருந்து வந்து கொண்டிருக்க, அவரின் கண்களும் கசிந்தன.

“என் பிள்ளை எவ்வளவு சந்தோஷமா இருந்தான். இப்ப யார் கண் பட்டுச்சோ… அவன் சந்தோஷமே காணாமல் போயிடுச்சு…” என்று புலம்பினார்.

அவரின் தோளை அழுத்தியவள், “கவலைப்படாதீங்க அத்தை. அத்தான் திரும்பச் சந்தோஷமா இருப்பாங்க…” என்றாள்.

“அதுதான் எப்படி?” என்று கலக்கத்துடன் கேட்க,

அவள் பதில் சொல்ல முடியாமல் அமைதியானாள்.

அவன் சந்தோஷம் அவனின் மனைவிதான் என்று அவளுக்கே தெரியுமே. அவன் மனைவி அருகில் இல்லாமல் அவன் சந்தோஷம் எப்படி மீண்டு வரும்?

1000075537.jpg
 

New Episodes Thread

Top Bottom