பயணங்கள் - 8
முதலில் சுதாரித்த மது, நிரஞ்சனை நேருக்கு நேர் பார்க்காமல்,அசோக்கைப் பார்த்து, "அண்ணா… நீங்க பேசிட்டு இருந்ததை கேட்டோம். நாங்க ஃப்ரண்ட்ஸ் சர்க்ளிலில் விசாரிச்சதுல ரம்யாக்காவைப் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. ஆனால் வானதிக்காவை பற்றி தெரிந்தது." என்று கூறும் போதே, நிரஞ்சன் பரபரத்தான், " சொல்லு மது மா… வானதி எங்க இருக்காங்க? உனக்குத் தெரியுமா? அந்த விவரம் தெரிந்தால் கூட ரம்யாவைப் பற்றி தெரிந்துக் கொள்ள சுலபமாக இருக்கும் என்று அசோக்கோட அண்ணன் சொன்னாங்க டா… "என்றான்.
"அது." என்று இழுத்தாள்… எப்படி அவனை அழைப்பது எனத் தெரியாமல், பிறகு பொதுவாகவே சொல்லத் தொடங்கினாள். "அக்காவோட ஃப்ரெண்ட் ஒருத்தவங்க, வானதி அக்காவை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இரண்டு முறை பார்த்திருக்காங்க. வானதிக்கா அவங்களை அவாய்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க… அதனால் வேற தகவல் எதுவும் தெரியவில்லை."
" இது போதும் மது. நான் அண்ணனுக்கு ஃபோன் பண்ணி தகவல் சொல்லிடுறேன். நானும் நிரஞ்சனும் அங்க போய் விசாரித்து விட்டு உங்களுக்கு சொல்லுறோம். உங்க ஃபோன் நம்பரை கொடுங்க." என்றான் அசோக் …
அதுவரை அமைதியாக நின்றுக் கொண்டிருந்த கீதா மெல்லிய குரலில், " அண்ணா… நாங்களும் வரோம்." என்றாள்.
அசோக், நிரஞ்சனைப் பார்க்க... அவனோ வரட்டும் என தலையசைத்து விட்டு கார் கீயை எடுத்துக் கொண்டு முன்னே செல்ல… இவர்கள் மூவரும் அவன் பின்னே சென்றனர்.
அறைக்கு வெளியேஅலுவலர்கள் எல்லோரும் அதுவரை கூட்டம் கூட்டமாக நின்று சலசலத்துக் கொண்டு இருந்தவர்கள், எம்.டியைப் பார்த்தவுடன் அமைதியாக இருந்தனர்.
எல்லாம் பியூன் உபயம். இதையெல்லாம் நிரஞ்சன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கீதாவும் கவனிக்கவில்லை. அவர்கள் அனைவரும் காரிலேறி புறப்பட்டு விட்டனர்.
இன்னும் வேலையை ஆரம்பிக்காமல், கதை அடித்துக் கொண்டு இருந்தவர்களை சுபத்ரா தான் திட்டி வேலையை பாருங்கள் என்றாள்.
"நம்ம சாரைப் பற்றி உங்களுக்கு தெரியாதா? பெண்கள் விஷயத்தில் நெருப்பு மாதிரி… அவர்கள் சாருக்கு ஏற்கனவே தெரிந்தவர்களாக இருப்பாங்க… அது தவிர ஒரு கல்யாணம் ஆனப் பொண்ணை பத்தி தெரியாமல் எதுவும் பேசக்கூடாது." என்றாள்
"சாரி " என பியூன் கூற…
" சரி… உங்க இடத்துக்கு போய் வேலையை பாருங்க…" என்ற சுபத்ரா தனது இடத்திற்கு சென்று வேலையை ஆரம்பித்தாள்.
************
கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை ரிசப்ஷனில் அசோக்கும், நிரஞ்சனும் வானதியை பற்றி விசாரிக்க… ரிசப்ஷனில் இருந்தவர்களோ, " சார் பேஷண்டப் பத்தி வெளிஆட்கள் கிட்ட நாங்க எந்த விவரமும் சொல்ல மாட்டோம் … நீங்க படிச்சவங்க தானே. போங்க சார்." என திட்ட…
கீதா அவர்களிடம், "மேம் … நாங்க பேஷண்ட்டப் பத்தி எதுவும் கேட்கலையே. மே பி அவங்க பேஷண்டோட அட்டெண்டரா இருக்கலாம். ஜஸ்ட் நீங்க வானதிங்கறவங்க இங்கே வந்துருக்காங்களான்னு பார்த்து சொல்லுங்க. அவங்களோட கான்டாக்ட் நம்பர் இருந்தாக் கூட போதும். ரொம்ப நாளா அவங்க எங்க இருக்காங்க என்று தெரியாமல் தேடிட்டு இருக்கிறோம். இப்போ தான் அவ இங்க அடிக்கடி வந்துட்டு போறதா தகவல் கிடைத்தது. கொஞ்சம் தேடிப் பார்த்து சொல்லுங்க மேம்."எனக் கெஞ்ச…
"ஐயோ ! உங்களோட பெரிய தொந்தரவா இருக்கு … பொதுவாக எந்த நோயாளிகள் பற்றியும் நாங்க சொல்லமாட்டோம்… நீங்க போறீங்களா இல்லை போலீஸ்ல கம்ப்ளையின்ட் பண்ணவா."என ரிசப்ஷனிஸ்ட் எரிச்சலாகக் கூறினாள்.
இவள் மீண்டும் ஏதோ கேட்கப் போக, நிரஞ்சன் அவளைத் தடுத்தான்." விடு கீதா… அசோக்கோட அண்ணன் வந்துட்டு இருக்காங்க. அது வரைக்கும் வெயிட் பண்ணுவோம்." என்றுக் கூறியவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார். சற்று தள்ளி மதுவும், கீதாவும் அமர்ந்தனர்.
அசோக் அண்ணனின் வருகைக்காக, நொடிப் பொழுதுகளை நெட்டி தள்ளிக் காத்திருந்தனர்.
************************
சற்று நேரத்தில் அங்கு வந்த ராகவ், தன் தம்பி அசோக்கிற்கு, அருகில் அமர்ந்து இருந்த நிரஞ்சனைப் பார்த்து விட்டு, அவன் அருகே சென்று,அவன் தோளில் தட்டி, "கவலைப்படாதே நிரஞ்சன். சீக்கிரம் உன் தங்கையை கண்டு பிடித்து விடலாம்." என்றார்…
நிரஞ்சன் ,"சரி." என்பது போல தலையாட்டியவன், ரிசப்ஷனிஸ்ட் கூறியதைத் தெரிவிக்க...
"நீங்கள் எல்லோரும் இங்கேயே இருங்க. நான் போய் விசாரிச்சிட்டு வரேன்." என்றுக் கூறி விட்டு ராகவ் நகர்ந்தான்…
இவர்கள் அனைவரும் டென்ஷனோடு காத்திருந்தனர்.
ரிசப்ஷனுக்கு சென்று," ஐயாம் ராகவ்… சி.பி.ஐ ஆஃபிஸர்." என்றுக் கூறி ஐ. டி ஃப்ருஃபை காண்பித்தான்.
பிறகென்ன ராஜ மரியாதை தான். அரைமணி நேரத்தில் அனைத்து தகவல்களும் அவன் விரல் நுனிக்கு வந்து விட்டது.
வானதியின் வீட்டு முகவரி, அவள் வேலை செய்யும் இடம், அவளது ஃபோன் நம்பர் என அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொண்டு அங்கு அமர்ந்திருந்தவர்களிடம் வந்தார்.
" வீட்டு அட்ரஸ் கிடைச்சிருச்சு. இந்த ஏரியா தான்… ஆனால் வானதி இப்போ வேலைக்கு போய் இருப்பாங்க.
அவங்க போன் நம்பர் இருக்கு. வர சொல்லுவோம். முதல்ல வீட்டுக்குப் போகலாம். மத்த விவரம் போகும் போது சொல்றேன்." என்றவர் அவர்களின் வண்டியிலேயே ஏறிக் கொண்டார்.
சற்று நேரம் எதையோ யோசித்துக் கொண்டிருந்தவர்,பிறகு பேச ஆரம்பித்தார். "வானதியோட, அண்ணனுக்கு தான் மனநிலை சரியில்லாமல் இருக்கு. நான்கு வருடமாக இங்கே தான் ட்ரீட்மெண்ட்டில் இருக்கிறார்." என்றுக் கூற…
மற்ற நால்வரும் அதிர்ந்து போய் ஒருவரை, ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
வானதி தான் அடிக்கடி வந்துப் பார்த்துட்டு போவாங்க. அவங்க அப்பா, அம்மா எப்போதாவது தான் வருவார்கள். .வேறு யாரும் வந்ததில்லை என்று இங்க வேலை பார்ப்பவர்கள் கூறுகிறார்கள். சோ... உங்க தங்கச்சி இவங்களோட இல்ல... ஆனா அவங்களுக்கு விவரம் தெரியலாம். நம்ம வானதியையும், அவங்க குடும்பத்தையும் விசாரிப்போம். நான் வானதிக்கு ஃபோன் பண்றேன்." என்றுக் கூறியவர், வானதிக்கு அழைத்து, "தான் ஒரு சைபர் கிரைம் ஆஃபிஸர். ஒரு விசாரணைக்காக வந்திருக்கேன்… உங்களை சந்திக்கணும்… எங்க இருக்கீங்க? நான் உங்க வீட்டுக்கு அருகில் தான் இருக்கிறேன்."எனக் கூற…
அந்தப் பக்கம் வானதியோ," என்ன விஷயம் சார். யாரைப் பற்றி விசாரிக்கணும் சொல்லுங்க சார்." என…
" நேரில் தான் சொல்லணும். இல்லை உங்கள் ஆஃபிஸ்க்கு வரவா?" என ராகவ் வினவ…
"வேண்டாம் சார்.நான் வீட்டுக்கே வரேன். இன்னும் பத்து நிமிடத்தில் வீட்டில் இருப்பேன். அதற்கு பிறகு நீங்கள் வீட்டுக்கு வாங்க சார். தப்பா எடுத்துக்காதீங்க சார்… என்னோட பேரண்ட்ஸ் கொஞ்சம் பயந்த சுபாவம். "
" நோ ப்ராப்ளம் வானதி. நாங்க வெயிட் பண்ணுறோம், நீங்க வாங்க …" என்றுக் கூறி விட்டு ஃபோனை வைத்தார்.
"பத்து நிமிடத்தில் வந்துடுவாங்க, வெயிட் பண்ணுவோம்." என்றார்.
அதற்கு பிறகு அந்த காரில் அமைதி மட்டுமே ஆட்சி செய்தது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனையில் இருக்க …
சற்று நேரத்தில் ராகவின் ஃபோன் அடித்தது… அதை எடுத்து பேசியவர், "இதோ வந்துட்டோம்."என்றார்.
" சரி காரை எடு நிரஞ்சன். அந்த ரைட் சைட் கார்னர் வீடு தான்.அங்க நிறுத்து." எனக் கூற…
நிரஞ்சனும் வண்டியை நிறுத்தினான்.
அனைவரும் இறங்கிச் செல்ல, கீதாவோ கால்கள் பின்ன… தயங்கிக் கொண்டே மதுவின் கை பலத்திலே நடந்து வந்தாள்.
உள்ளே நுழைந்த ராகவிடம், "என்ன விஷயம் சார்? யாரைப் பற்றி விசாரிக்க வேண்டும். சொல்லுங்க? என அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே…
எல்லோருக்கும் கடைசியாக வந்துக் கொண்டிருந்த கீதா, எல்லோரையும் இடித்துக் கொண்டு ஓடி போய் வானதியைக் கட்டிக் கொண்டு அழ…
வானதியோ ஒரு நிமிடம் திகைத்து நின்றவள்.பின்பு அவளும் கதறி அழுதாள். சுற்றி நின்ற மற்றவர்களோ என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க…
மது, தான் முதலில் சுதாரித்தாள். அங்கு ஓரமாக பயந்து போய் நின்ற வானதியின் அம்மாவிடம்," ஆன்ட்டி கொஞ்சம் தண்ணீர் குடுங்க."என்று கேட்டு வாங்கிட்டு போய் இருவருக்கும் தண்ணீர் குடிக்கக் கொடுத்து அமைதிப்படுத்த…
பிறகு ராகவ் விசாரிக்க ஆரம்பித்தார்.
" இங்கு பாருங்கள் வானதி… உங்கள் அண்ணனும், நிரஞ்சனின் தங்கையும் காதலித்து வீட்டை விட்டு வந்து விட்டார்களா? இப்போது ரம்யா உங்களுடன் தான் இருக்கிறார்களா? சொல்லுங்க … நிரஞ்சன் கம்ப்ளைண்ட் செய்திருக்கிறார்,அவரது தங்கையை காணவில்லை என்று… சொல்லுங்க வானதி…"எனக் கூற…
அவர் கூற,கூற வானதியோ அதிர்ச்சியில் உறைந்து போனாள். அருகிலிருந்த மதுவும், கீதாவும் அவளை அசைக்க.. மெல்ல சுயநினைவுக்கு வந்தவள்… புயல் போல வந்து நிரஞ்சனின் சட்டையைப் பிடித்து, "ரம்யாவை கொன்னுட்டீங்களா! பாவிகளா… ஐயோ! என் அண்ணன் அன்னைக்கே சொன்னானே விட்டுட்டு வந்தால் கொன்னுடுவாங்கனு கதறுனானே ! எங்க இருந்தாலும் என் தோழி உயிரோடு இருந்தால் போதும் என்று விட்டுட்டு வந்தேனே. நான் பாவி… " என்றுக் கதறியவள் கீழே விழுந்து அழ…
கீதாவோ அவளை வாரி அனைத்துக் கொண்டு, " வானு… என்ன நடந்தது சொல்லுடி… எனக்கு பயமா இருக்குடி … ரஞ்சனுக்கு எதுவும் தெரியாது.அவர் வெளிநாட்டில் இருந்தார். இங்கு வந்த போது ரம்யா ஓடிப் போய் விட்டாள் என்று அவங்க அம்மாவும், அப்பாவும் சொல்லிருக்காங்க… அவளை தலைமுழுகியாச்சு தேட வேண்டாம் என்று சொன்னாங்க … அதற்குப் பிறகு இவரும் சென்னைக்கு வந்துட்டார்.
இப்போ நான் வேலைக்கு போகும் போது தான் இவரை சந்திச்சேன்.அதற்கு பிறகு நான் தான் ரம்யாவைப் பற்றி சொல்லித் தேட சொன்னேன். அன்னைக்கு என்ன தான் நடந்தது சொல்லுடி." என
கீதா, வானதியை உலுக்க…
வானதியோ நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்தததைக் கூற ஆரம்பித்தாள்.
பயணங்கள் தொடரும்…..