TTA final

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

தேன் 18

சோனாவிற்காக மணீஷ் தற்கொலைக்கு முயன்ற போது அவனை ஒரு தைரியமான ஆண் மகனாக இவன் காப்பாற்றிவிட்டாலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவனை நேரில் பார்த்தவனாயிற்றே, ஒரு சகோதரனாக அந்த நேரம் எப்படி துடித்துப் போனான். அவன் உயிர் பிழைக்க வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக் கொண்டு மருத்துவமனையில் நின்றிருந்த அந்த நேரம் அவன் எப்படி உணர்ந்தான் என்பதை வார்த்தையால் சொல்ல முடியாது. இப்போது ரித்துவிற்கு நடந்ததை கேட்ட போதும் அவனுக்கு அப்படி தான் இருந்தது. அதுவும் அவளைப்பற்றி அனைத்தும் தெரிந்ததால், “அன்னைக்கு மட்டும் அவங்க அப்பா சரியன நேரத்திற்கு அவளது அறைக்கு செல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்து தலையை உலுக்கிக் கொண்டான்.
 
இதற்கு நடுவில் அவன் வீட்டிற்கு செல்வதற்குள்ளேயே சுஷாந்த் வேறு அலைபேசியில் அழைத்தான். யாஷ்க்கு முன்னரே ரிஷிவர்த் அவனிடம் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதை சொல்லிவிட்டதால், அதுகுறித்து அவன் மகிழ்ச்சியாக பேசினான். ஆனால் யாஷால் அந்த மகிழ்ச்சியில் இணைந்துக் கொள்ள முடியவில்லை. “வீட்டுக்கு போய்ட்டிருக்கேன். அப்புறம் கூப்பிட்றேன் சுஷாந்த்.” என்று சொல்ல,
 
“சரி டா, அப்படியே சோட்டீயையும் பேச வை.” என்று சொல்லி அழைப்பை அணைத்தான்.
 
வழி முழுக்க ரித்துவை பற்றிய நினைவு தான். எப்படி வண்டியை ஓட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான் என்று அவனுக்கு தெரியவில்லை. வீட்டிற்குள் நுழையும் போதே ரித்து தான் வரவேற்பறையில் அமர்ந்து புடவையில் வேலைபாடு செய்துக் கொண்டிருந்தாள். கிஷன் ஒரு நண்பரை பார்த்துவிட்டு வருவதாக சொல்லிவிட்டு வெளியே சென்றிருந்தார்.
 
அவர் இருக்கிறாரா? என்று கூட அவன் கவனிக்கவில்லை. அவனைப் பார்த்ததும் கையிலிருந்ததை சோஃபாவில் வைத்துவிட்டு இன்முகத்தோடு எழுந்து நின்றவளின் அருகில் சென்று அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
 
கதவு திறந்தே இருந்ததை கூட அவன் கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் அவளுக்கு அது ஒருமதிரியாக இருக்க, “யாஷ் என்ன ஆச்சு? கதவு திறந்தே இருக்குப் பாருங்க,” என்று அவள் சொல்லியும் அவன் கேட்கவில்லை. என்னவோ இப்போது தான் அவள் தற்கொலைக்கு முயன்றது போல், அவளை இழந்திடக் கூடாதென்ற பிடிவாதத்தோடு அவளை இன்னுமே இறுக அணைத்துக் கொண்டான். 
 
அவனுக்கு என்னவாகிற்று? என்று புரியாததால் அவளுமே அவனது அணைப்பில் அடங்கியிருந்தாள். பிறகு சிறிது நேரம் கழித்து அவன் விடுவிக்க, “என்னாச்சு யாஷ்? கதவு திறந்திருக்கான்னு கூட கவனிக்கல, பப்பா இருப்பாரான்னு யோசிக்கல, என்னாச்சு உங்களுக்கு? என்று கேட்டவள், அவன் முகமே ஒருமாதிரி சோர்வாக தெரியவும், “என்ன யாஷ் இன்னைக்கும் இண்டர்வியூ போனீங்களா? ரிசல்ட் நெகட்டிவ்வா? அதுக்கா இப்படி ஃபீல் செய்றீங்க? உங்களுக்கு கண்டிப்பா வேலை கிடைச்சிடும்,” என்று சொன்னவள்,
 
“நீங்க போய் ஃப்ரஷ் ஆகிட்டு வாங்க, உங்களுக்கு காஃபி போட்டு எடுத்துட்டு வரேன். பயப்படாதீங்க கொஞ்சமே குடிக்கிற அளவுக்கு காஃபி போட கத்துக்கிட்டேன்.” என்று சொல்லி சிரித்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள். 
 
அவளுக்கு ஒரு மெல்லிய புன்னகையை பதிலாக தந்தவன், அறைக்குள் சென்றான். நேற்று வாங்கி வந்த பொருட்களை அவள் கட்டிலில் பரப்பி வைத்திருக்க, அதை கொஞ்சம் நகர்த்திவிட்டு ஓரமாக அமர்ந்தான். ஏனோ அவளது தந்தையை பார்த்துவிட்டு வந்ததை சொல்ல தோன்றவில்லை. அவள் தற்கொலைக்கு முயன்ற நிகழ்வே அவனது சிந்தனையில் இருக்க, அப்படியே தலையைப் பிடித்தப்படி அவன் அம்ர்ந்திருக்க, சில நிமிடங்களில் காஃபியோடு வந்தவள், அவன் அம்ர்ந்திருந்த நிலையை பார்த்து,, “என்ன யாஷ், தலை வலிக்குதா? வெயிலில் அலைஞ்சிட்டு வந்தீங்கல்ல, அதனாலாயா இருக்கும், முதலில் இந்த காஃபியை குடிங்க, தலையை பிடிச்சு விட்றேன்.” என்று சொல்லி அவனிடம் காஃபியை நீட்ட,
 
“அதெல்லாம் வேண்டாம் ரித்து, காஃபி சாப்பிட்டா சரியாகிடும்,” என்று அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே, வெளியில் கேஸ் சிலிண்டர் கொண்டு வந்தவர் குரல் கொடுக்க, “அய்யோ கேஸ் வந்துடுச்சு போல, பப்பா என்னை வாங்கி வைக்க் சொன்னார்.” என்று சொல்லி பதட்டத்தோடு சென்றாள். அவளுக்கு இதெல்லாம் புதிது இல்லையா? அதனால் தான் அந்த பதட்டம், அங்கு போய் கேஸ் சிலிண்டரை கிஷன் சொல்லியது போல் அடுப்பில் பொருத்தி சரிப்பார்த்து வாங்கினாள். அடுத்து கிஷன் கொடுத்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டை நீட்ட, “சில்லரை இல்லையேம்மா,” என்று அந்த சிலிண்டர் கொண்டு வந்தவர் கூறவும்,
 
“தன் கைப்பையில் பணம் இருக்கவே, ‘இருங்க பய்யா,” என்று சொல்லிவிட்டு அவசரமாக அறைக்கு வந்தாள். “என்ன ரித்து?” என்று யாஷ் கேட்கவும்,
 
“சேஞ்ச் இல்லையாம் யாஷ்,” என்று அவனுக்கு பதில் கூறியப்படியே கட்டில் மேலிருந்த கைப்பையில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு அதை மூடாமல் கூட வேகமாக வைத்துவிட்டு செல்ல, அது கவிழ்ந்து கீழே விழுந்தது.
 
“ஹே பார்த்து பொறுமையா போ,” என்று சொல்லிய யாஷ், கிழே விழுந்த பையை எடுத்தவன், அதிலிருந்து வெளியே வந்து விழுந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து உள்ளே வைத்தான்.
 
வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் இதெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து பிரித்து பிரித்து பார்த்து வைத்தவன், அடுத்து மடித்து வைக்கப்பட்டிருந்த பேப்பரையும் என்னவென்று பிரித்து பார்க்க, ரித்து ஐ லவ் யூ என்று அதில் எழுதியிருந்ததை பார்த்து அதிர்ச்சியாகினான். அது யார் எழுதியிருப்பார் என்பதை கண்டுபிடிப்பது ஒன்றும் அவனுக்கு கஷ்டமாக இருக்கவில்லை. அதில் இருப்பது தனது கையெழுத்து தான் என்று அவனுக்கு நன்றாக தெரிந்தது. அதை ரித்விகாவிற்காக எழுதியதும் அவனது ஞாபகத்திற்கு வந்தது.
 
அதை ரித்து வைத்திருக்கிறாள் என்றால், முன்பு தெரியாத, அடுத்து அது ஞாபகத்திற்கு வராத அந்த இருவரின் பெயர் பொருத்தம் இப்போது அவனுக்கு ஞாபகத்திற்கு வந்த்து. அப்படியானால்? ரித்து காதலித்ததாக  அவளின் தந்தை கூறிய பையன் தான் தானா? என்று கேட்டு கொண்டவன், அப்படியே தரையிலேயே தலையைப் பிடித்தப்படி அம்ர்ந்துக் கொண்டான். அவனை அறியாமலேயே ரித்துவின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி, அவளது தற்கொலைக்கும் கரணமாகியிருக்கிறான். அவளுக்கு மட்டும் அன்று ஏதாவது ஆகியிருந்தால்? அவனுக்கு மன்னிப்பே இருந்திருக்காது. எப்படி அவள் மனதில் இப்படி ஒரு சலனம் ஏற்பட்டது. எந்தவிதத்தில் அவளுக்கு அப்படி தோன்றுவது போல் தான் நடந்துக் கொண்டோம்? ஒருவேளை இந்த கடிதம் தான் அதற்கு காரணமா? ஒன்றும் புரியாத நிலையாக இருந்தது.
 
வெளியில் சிலிண்டர் கொண்டு வந்தவர் சென்றதும், மறக்காமல் கதவை தாளிட்டுவிட்டு அறைக்குள் வந்தவள், யாஷ் தரையில் அமர்ந்திருந்த நிலையை பார்த்து, “அய்யோ என்னாச்சு யாஷ்?” என்று கேட்டு அவன் அருகில் செல்ல,
 
சிறிது நேரம் அவளது முகத்தையே பார்த்திருந்தவன், “எல்லாம் என்னால தான ரித்து, உன்னோட அந்த நிலைக்கு காரணம் நான்தானே?” என்று வேறுமனே கேட்க,
 
“எந்த நிலைக்கு யாஷ்? எனக்கு என்னாச்சு? நான் நல்லா தானே இருக்கேன். ஏன் இப்படி பேசறீங்க யாஷ்?” என்று அவள் பயத்தோடு கேட்டாள்.
 
“அன்னைக்கு உன்னோட பப்பா மட்டுமில்லன்னா உனக்கு என்னாகியிருக்குமோ? நீ தற்கொலை செய்ததுக்கு நான் தானே காரணம்?” என்று அவன் வருத்தத்தோடு சொல்லவும்,
 
‘அய்யோ கடவுளே, இவங்களுக்கு தெரியக் கூடாதுன்னு நினைச்சது எப்படி இவங்களுக்கு தெரிஞ்சது?’ என்று அதிர்ச்சியோடு மனதில் கேட்டுக் கொண்டவள்,
 
“உங்களுக்கு எப்படி தெரியும் யாஷ்?” என்றுக் கேட்க,
 
“உன்னோட பப்பா தான் சொன்னாரு,” என்றான் அவன்,
 
‘யாருக்குமே தெரியாதுன்னு நினைச்சேனே அப்புறம் பப்பாக்கு எப்படி தெரியும்? என்று யோசித்தவள், பிறகு மருத்துவர் தான் சொல்லியிருப்பார் என்று புரிந்துக் கொண்டாள். அப்படியே இருந்தாலும், அது யாஷ் தான் என்பது அவருக்கு எப்படி தெரியும்? என்று யோசித்தவள்,
 
“பப்பாவை போய் பார்த்தீங்களா? அவர் சென்னையில் தான் இருக்காறா? அவர் என்ன சொன்னார்? அவருக்கு எப்படி நான் உங்களை தான் காதலிச்ச விஷயம் தெரியும்?” என்றுக் கேட்டவள், “முதலில் எழுந்து கட்டிலில் உட்காருங்க,” என்றாள்.
 
அவனும் எழுந்து கட்டிலில் அமர, அவனது அருகில் அவள் அமர்ந்துக் கொண்டாள். “உன்னைப்பத்தி சுஷாந்த்க்கிட்ட தான் கேட்டேன். ஆனா அவனுக்கு உன்னோட உண்மையான பேரும் தெரியல, உன்னோட போட்டோவும் அவனிடம் இல்லை. அதை உன்னோட பப்பாக்கிட்ட கேட்டிருப்பான் போல, அவர் ஏற்கனவே உன்னை தேடிட்டு இருந்தாரா? நான் உன்னைப்பத்தி கேட்கவும், என்னை நேரில் பார்க்கணும்னு சொன்னாரு, சரி நீதான் சோட்டீயான்னு தெரிஞ்சிக்க நானும் அவரை நேரில் பார்க்க போனேன். அவரும் நீதான் சோட்டீன்னு சொன்னாரு, நமக்கு கல்யாணம் ஆனதை சொன்னேன். அப்போதான் சென்னையில் பார்த்த பையன் நானான்னு கேட்டாரு,” என்று அவருடன் பேசிய அனைத்தையும் கூறியவன், 
 
“அவர் சொன்னப்ப கூட, அது நான் தான்னு முதலில் எனக்கு தெரியல, ஆனா இந்த லெட்டர் பார்த்ததும் தான் எனக்கு தெரிஞ்சது.” என்று அந்த கடிதத்தை அவளிடம் காட்டியவன், எப்படி உன்னோட மனசுல அப்படி ஒரு எண்ணம் வர நான் காரணமானேன்னு எனக்கு புரியவே இல்லை ரித்து, இந்த லெட்டர் தான் காரணமா?” என்று அதை காட்டி கேட்க,
 
அதை கைப்பையில் வைத்து மறந்து போனதை நினைத்துக் கொண்டவள், “அய்யோ எந்தவிதத்திலும் அதுக்கு நீங்க காரணமில்ல யாஷ், இதுக்கெல்லாம் காரணம் மீத்தி தான், “ என்று அப்போது ரிதன்யா கூறியதை எல்லாம் சொன்னவள், “அதுதான் என்னை உங்களைப்பத்தி அப்படி நினைக்க வச்சது யாஷ், அந்த நேரம் நீங்க ரிகா தீதிக்கு கொடுத்த லெட்டரை பேர் குழப்பத்தில் மீத்தி என்கிட்ட கொடுத்திட்டா, இது நீங்க எனக்கு கொடுத்ததுன்னு நினைச்சு நானும் சந்தோஷப்பட்டேன். ஆனா அது ரிகா தீதிக்குன்னு தெரிஞ்சதும் அந்த ஏமாற்றத்தில் தான் அப்படி செய்துக்கிட்டேன்.
 
அது எப்பவோ நடந்தது. இப்போ நான் நல்லா தானே இருக்கேன். அதுவும் உங்க மனைவியா உங்க பக்கத்தில் இருக்கிறேன். அப்புறம் என்ன யாஷ்? அப்போ நடந்ததை மறந்திடுவோம்,” என்று அவள் கூற,
 
“ம்ம்,” என்றவன், “ஆமாம் உன்னோட கசின் யாருக்குமே மத்தவங்க ஒரிஜினல் பேர் தெரியாதா? சுஷாந்த்க்கும் தெரியல, மீத்திக்கும் தெரியல.” என்றுக் கேட்க,
 
“அது எல்லோருக்குமே ஒரே மாதிரி பேர் ஆரம்பிப்பதால் தாதி செல்லப் பேர் வச்சு தான் கூப்பிடுவாங்க, எல்லோருக்குமே அந்த பேரே பழகிடுச்சு, எனக்குமே ரிகா தீதி பேர் தெரியல, அந்த குழப்பம் தான், என்னென்னவோ நடந்திடுச்சு.” என்றாள்.
 
“அப்போ பரவாயில்லை, இப்போதும் தெரிஞ்சிக்கலன்னா எப்படி?”
 
“அது நான் சென்னையிலிருந்து போனப் பிறகு யாரோடவும் டச் வச்சிக்கல, அதான் என்னைப்பத்தி தெரிஞ்சிக்காம இருந்திருப்பாங்க,”
 
“ம்ம் என்னவோ பணக்காரங்கன்னா இப்படி தான் போல, ஆனாலும் உனக்கு நடந்ததை என்னால ஏத்துக்கவே முடியல, பெரியவங்கல்லாம் செய்தது, உன்னை கஷ்டப்படுத்தியிருக்கு, அப்புறம் உன்னோட பப்பாக்கிட்ட சொத்துப்பத்தி நான் சொன்ன முடிவில் உனக்கு விருப்பமா? உன்னைக் கேட்காமல் அப்படி சொன்னது உனக்கு கோபமில்லையே, உன்னோட பப்பாக்கு என்னோட முடிவில் விருப்பமே இல்லை. உன்னைப் பார்க்கணும்னு வேற ஆசைப்பட்டாரு தெரியுமா?”
 
“நீங்க சரியா தான் முடிவெடுத்திருக்கீங்க யாஷ், எனக்குமே அப்படி ஒரு யோசனை தான் இருந்துச்சு, அதுமட்டுமில்ல இப்போதைக்கு பப்பாவை எனக்கு பார்க்கணும்னு தோனல, அது அவர் மேல உள்ள கோபத்தால் இல்லை,
 
என்னை அறியாமலேயே அவங்க வாழ்க்கையில் நான் ரெண்டுப்பேருக்கும் இடைஞ்சலா இருந்திருக்கேன். இனியாவது நான் அவங்க வாழ்க்கையில் இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன் யாஷ்,”
 
“அதுக்கு நீ காரணமில்லையே, அவங்க தானே காரணம்.”
 
“அவங்க தான் காரணம், ஆனா சந்தர்ப்ப சூழ்நிலை என்னவோ செய்துட்டாங்க, உண்மை தெரிஞ்சு அவங்கக்கிட்ட சண்டை போட்றதால என்னோட இத்தனை வருட ஏக்கம் தீர்ந்துடவா போகுது. உண்மை தெரிஞ்சப்பின் அவங்களை விட்டு ஒதுங்கியிருப்பது தான் நல்லது. அப்போதாவது அம்மா சந்தோஷமா இருக்காங்களா பார்போம்,” என்று கூறினாள்.
 
தெளிவாக எடுத்த முடிவு தான், ஆனாலும் பிறந்ததிலிருந்து அவர் தான் தன் அன்னை என்று நினைத்து வளர்ந்தவளுக்கு அவர் அன்பு கிடைக்காமல் போகவே, அதை நினைத்து கண்ணில் தானாக கண்ணீர் வந்தது.
 
அதை உணர்ந்த யாஷோ, “ஒருநாள் கண்டிப்பா அவங்க உன்னை மகளா ஏத்துப்பாங்க ரித்து, கண்டிப்பா அந்த நாள் வரும், அதுவரைக்கும் உனக்கு நானிருக்கேன். பப்பா இருக்கார். வருத்தப்படாத ரித்து,” என்று அவன் ஆறுதல் கூற,
 
“நீங்க என்கூட இருப்பது தான் எனக்கு தைரியமே யாஷ், இல்ல இதெல்லாம் யோசிச்சு என்ன ஆகியிருப்பேனோ?” என்று அவனது கையோடு கைகோர்த்து அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள்.
 
“எல்லாமே கடவுள் ஒரு காரணமாகத்தான் செய்வார் ரித்து, சரி அந்த காதல் விஷயம் எனக்கு தெரியக் கூடாதுன்னு தான் நீதான் சோட்டீன்னு என்கிட்ட சொல்லலையா?” என்று அவன் கேட்க,
 
“ஆமாம் யாஷ், நடந்ததை மறந்திட்டு, சாதாரணமாக ஒன்னும் நடக்காதது போல உங்கக்கிட்ட என்னால இருக்க முடியல, அதான் நீங்களா தெரிஞ்சிப்பீங்கன்னு அமைதியாகிட்டேன்.
 
இன்னொருப்பக்கம் எனக்கே குழப்பம் தான், எனக்கு உங்க மேல வந்தது காதல் இல்லை, ஈர்ப்புன்னு அந்த டாக்டர் சொன்னாங்க, ஆனா என்னால உங்களை மறக்கவே முடியல, அதான் இந்த நாட்டிலேயே இருக்கக் கூடாதுன்னு போனேன். அங்கப் போனதில் உங்களை மறந்துட்டதா தான் நினைச்சேன். ஆனா கல்யாணம்னு வீட்டில் சொன்னதுமே மனதில் ஒரு கலக்கம், அதிலும் சென்னைன்னு சொன்னதும் அப்போ உங்க ஞாபகம் தான், அது தப்பா? சரியான்னு கூட தெரியல,
 
அப்புறம் என்னென்னமோ நடந்து தப்பிச்சு வந்தா கல்யாண மண்டபத்தில் பார்த்தா நீங்க தான் மாப்பிள்ளை. உங்களுக்கும் வேற ஒரு பெண்ணுக்கும் கல்யாணம் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியல, ஆனாலும் முக்தா இல்லாததை காரணமாக்கி உங்களை கல்யாணம் செய்யவும் தயக்கம்? மொத்தத்தில் குழப்பத்தோடு தான் உங்களை கல்யாணம் செய்துக்கிட்டேன். ஆனாலும் இன்னமுமே உங்க மேல எனக்கு இருப்பது காதலா? இல்லை கல்யாணம் ஆகிட்டதால வந்த அன்பா? எனக்கு புரியவே இல்லை யாஷ்” என்று தன் மன குழப்பத்தினை கூற,
 
“அந்த வயதில் நீ ஒருத்தரை காதலிக்கிறதா சொன்னதும் டாக்டர் அதை ஈர்ப்புன்னு சொல்லியிருப்பாங்க ரித்து, பொதுவா அப்படித்தானே, என்னோட அழகோ, தோற்றமோ, சிரிப்போ, பேச்சோ உன்னை ஈர்த்திருந்தா அது ஈர்ப்பு தான், ஆனா பாட்டிக்கிட்ட மட்டுமே கிடத்த அன்பும் அக்கறையும் அடுத்து நீ என்கிட்ட தான் பார்த்த, அந்த நேரம் மீத்திக்கு பதிலா பெரியவங்க யாராவது இருந்திருந்தா நான் உன்கிட்ட காட்டின அக்கறையை ஒரு அண்ணன் ஸ்தானத்தில் வச்சு சொல்லியிருப்பாங்க, ஆனா அந்த வயதில் மீத்தி தான் பார்த்ததை வச்சு என்னோட அன்பு, அக்கறையை காதல்னு உன்கிட்ட சொல்லிட்டா, நீயும் அந்த கோணத்தில் என்னை வச்சு பார்த்துட்ட, உன்னை அறியாமலேயே என்மீது உனக்கு ஏற்பட்ட அன்பையும் காதலா முடிவு செய்துக்கிட்ட, 
 
வெறும் வெளிப்புற ஈர்ப்புன்னா அது நாளைடைவில் மறைந்து போயிருக்கும், ஆனா நான் காட்டின அன்பையும் அக்கறையையும் உன்னால மறக்க முடியல,  ஒருவேளை என்னைவிட அன்பும் அக்கறையுமா இருக்கும் ஒருத்தர் உன்னோட வாழ்க்கையில் வந்திருந்தா அப்போ என்னை சுத்தமா நீ மறந்திருக்கலாம்,
 
ஒரு லைஃப் பார்டனரா நீ  என்னை உன்னோட மனசில நினைச்சிட்டது திரும்ப கல்யாணம் என்ற பேச்சை எடுத்ததுமே உன்னோட ஞாபகத்திற்கு நான் வந்திருக்கேன். அந்த நேரம் எதையுமே யோசிக்காதபடி என்னென்னவோ நடந்துடுச்சு, நாமளே எதிர்பார்க்காம நம்ம கல்யாணம் நடந்துப் போச்சு,
 
அந்த வயதில் வேணும்னா காதல் தப்பாயிருக்கலாம், ஆனா இந்த வயதில் காதல் தப்பில்லையே, அதுவும் நமக்கு கல்யாணம் ஆனப்பிறகு நமக்கு வந்த  காதல் தப்பா என்ன?” என்று அவன் கேட்க,
 
“என்ன சொல்றீங்க யாஷ், நீங்களும் என்னை காதலிக்கிறீங்களா?” அவள் வியப்போடு கேட்டாள்.
 
“ஏன் காதலிக்க கூடாதா?”
 
“இல்லை, நான் சோட்டீன்னு சொல்லாமலேயே நீங்க என்னை ஏத்துக்கிட்டாலும், என்மேல அன்பா இருந்தாலும், நமக்கு கல்யாணம் ஆனதால தானே இந்த மாற்றம்னு நான் அடிக்கடி யோசிப்பேன். ஆனாலும் அந்த மாற்றம் எனக்கு பிடிச்சிருக்கு,”
 
“கல்யாணம் ஆனதால் தான் இந்த மாற்றம். ஆனா இதே இடத்தில் வேற ஒரு பெண் இருந்திருந்தா இந்த மாற்றம் வந்திருக்குமா? அந்த வயதில் உன்மேல எனக்கு ஏற்பட்ட அன்பு கண்டிப்பா காதல் இல்லை. திரும்ப உன்னை பார்த்த போது நீதான் சோட்டீன்னு எனக்கு தெரியவுமில்லை. ஆனா ஏதோ ஒரு சக்தி, என்னால உனமேல கோபப்படவும் முடியல, உன்னை தள்ளி வைக்கவும் முடியல, 
 
இது நமக்கு கல்யாணம் ஆனதால் வந்த மாற்றம் மட்டுமில்ல, அதையும் மீறி ஏதோ இருக்கும்னு மனசு அடிக்கடி சொல்லும், அப்போ தெரியல, ஆனா இப்போ புரியுது. அப்போ எப்படியோ, ஆனா இப்போ  என்னோட காதலை மட்டுமே எதிர்பார்க்கும் உன்னோட மனசு, அதில் கலப்படம் இல்லாத எனக்கான அன்பு, இதெல்லாம் உன் பார்வை வழியா உன்னை எந்த தப்பும் செய்யாதவளா காட்டும், அதுதான் என்னோட மனமாற்றத்திற்கு காரணம்.”
 
“இந்த மாற்றம் நிரந்தரம் தானே யாஷ், எனக்கு உங்க காதல் எப்போதும் கிடைக்கும் தானே,”
 
“அதிலென்ன சந்தேகம், இந்த அன்பும் காதலும் நிரந்தரமா எனக்கே எனக்காக இருக்கும்போது,  என்னோட காதல் என்னைக்குமே மாறாது ரித்து,” என்று அவன் உறுதி கொடுக்க,
 
“இது போதும் யாஷ்.” என்று அவனை அவள் அணைத்துக் கொள்ள,
 
“எனக்கு போதாது, திகட்டாத உன்னோட அன்பில் என்னைக்குமே நான் திளைத்திருக்கணும்,” என்று சொல்லி அவள் இதழில் ஒரு நீண்ட முத்தம் பதித்து அதில் திளைத்திருந்தான்.
 
சுபம்