20 – உனதன்பில் உயிர்த்தேன்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 20

சாமந்தி பூக்களை டவுனில் போட்டு முடித்ததும், அங்கிருந்தே அவனுக்கு இன்னொரு இடத்தில் வாடகைக்கு அழைக்க, நேராக அதற்கும் சென்று வேலையை முடித்து விட்டு இரவில் தான் வீடு வந்து சேர்ந்தான் வைரவேல்.

காலையிலிருந்து வெளியே அலைந்ததில் உடல் எல்லாம் கசகசத்தது. இரவில் மழை பெய்த குளுமை எல்லாம் எங்கோ ஓடி சென்றிருக்க, பகலில் வெட்பம் வெளுத்து வாங்கியிருந்தது.

பகல் அனலில் தகித்த சூட்டை தணிக்க நேராகக் குளியலறை சென்று குளித்துவிட்டு வீட்டிற்குள் வந்தான்.

அப்போது வீட்டின் பின்பக்கம் அமர்ந்து ராசுவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் தேன்மலர்.

அவன் ஈரத்தலையைத் துடைத்துக் கொண்டே வர, அவனைப் பார்த்தவள், “என்னய்யா இந்த நேரத்துல தலைக்கு ஊத்தியிருக்கீரு? இன்னைக்கும் மழை வர்றாப்புல இருக்கு. சேராம போகப் போகுது…” என்றாள்.

வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே “காஞ்சிரும்…” என்றவன் உள்ளே சென்று விட்டான்.

அவளும் பின்னால் எழுந்து செல்ல, அவன் நேராகத் தனது அறைக்குச் சென்று கதவை அடைத்திருந்தான்.

பூட்டியிருந்த கதவை வெறித்துப் பார்த்தாள் தேன்மலர்.

அவளும் இவ்வீட்டிற்கு வந்து சில மாதங்கள் ஆகிவிட்டன.

இன்னும் அவள் அந்த அறைக்குள் சென்றது இல்லை.

கணவன் ஒரு அறையிலும், மனைவி ஒரு அறையிலும் தங்கும் வினோதம் இங்கே தான் நடந்து கொண்டிருக்கிறது போலும்? என்று நினைத்தவளுக்குப் பெருமூச்சு தான் வந்தது.

சட்டென்று மனம் எல்லாம் கனத்துப் போனது போல் இருந்தது.

தன் ஆசையெல்லாம் அதிகப்படி என்று தன்னையே அடக்கிக் கொள்ள முயன்றாள்.

தனக்குக் கல்யாணம் என்பதே நடக்காது என்று ஒரு காலத்தில் நினைத்திருக்கிறாள்.

ஆனால் எதிர்பாராமல் அவள் கழுத்தில் தாலி ஏறிவிட்டது. அதன் பிறகும் கூட, எந்த எதிர்பார்ப்பும் அவளிடம் இருந்தது இல்லை.

ஆனால் என்று ராமரிடமிருந்து அவளைக் காப்பாற்றி, கைப்பற்றி அழைத்து வந்தானோ, அப்போதிருந்தே அவளின் மனதில் சலனம் தான்.

அச்சலனம் முளைத்து இப்போது மூச்சு முட்டும் அளவில் விருட்சமாக அவனின் மீதான நேசம் செழித்து வளர்ந்திருந்தது.

ஆனால் அந்த நேசத்தை அவனிடம் காட்ட முடியாமல் அடக்கி வைக்கும் நிலை அவளுக்கு அவஸ்தையைக் கொடுத்தது.

அவளையும் மீறி காட்டிவிட்டால் அவன் இன்னும் விலகி போவதால் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டு போராடிக் கொண்டிருந்தாள்.

அவள் அப்படியே நின்றிருக்கும் போதே, கதவை திறந்தான் வைரவேல். அவனைக் கண்டதும் சட்டென்று அந்த இடத்தை விலகி சென்றாள் தேன்மலர்.

ஆனால் அதற்குள் அவளின் ஏக்கமான பார்வையைப் பார்த்துவிட்டிருந்தான் வைரவேல்.

அவளின் பார்வையைக் கண்டுவிட்டவனுக்கு மனது பிசைந்து வலி விரைந்தோடியது.

உடனே வேகமாக வீட்டிலிருந்து வெளியே செல்ல போனான்.

“எய்யா வேலு, உம் பொஞ்சாதி சோறு எடுத்து வச்சுட்டு இருக்கா. சாப்பிடாம எங்கன கிளம்பிட்டீரு?” என்று அப்பத்தா குரல் கொடுக்க,

குனிந்து குழம்பு சட்டியை கீழே வைத்துக் கொண்டிருந்த தேன்மலர் விசுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.

இன்றும் வெளியே சாப்பிட போகிறானா? என்ற கேள்வியுடன் அவனைப் பார்த்தாள்.

அவனோ இறுக்கமாக வாசல் அருகில் நின்றிருந்தான்.

“நேத்து ராவுல நீரு உம் பொஞ்சாதி கையால சாப்பிடாம போனதால நேத்து அவ சாப்புடாம சோத்துல தண்ணி ஊத்திட்டு வெறும் வயித்தோட படுத்தா. இன்னைக்கும் நீர் சாப்புடாம போனா அந்தப் புள்ள பட்டினி தேன் கிடக்கும். என்ன சோலி இருந்தாலும் வூட்டுல சாப்புட்டு போட்டு போயா…” என்றார் அப்பத்தா.

திகைத்து திரும்பி தேன்மலரை பார்த்தான்.

அவளோ அவனைப் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு நின்றாள்.

மீண்டும் வீட்டிற்குள் வந்து அவளின் எதிரே நின்றான்.

“நாந்தேன் ரோட்டு கடைல சாப்ட்டேன். நீ போய்ச் சாப்புடுன்னு தானே சொல்லிவிட்டேன். அப்புறம் ஏன் சாப்புடாம இருந்த?” என்று கேட்டான்.

அவளோ பதில் சொல்லாமல் அப்படியே நிற்க, “அவ எப்படிச் சாப்புடுவா? இந்த வூட்டுக்கு வந்த நாளுல இருந்து அவ கையால உமக்குச் சோறு போட்டு நீர் வயிறார உண்ட பொறவு தேன் அவ வயித்தை ரெப்புவா. ஆனா நேத்து அந்தப் பழக்கம் மாறிப் போனா அவ மனசு நோவாதா?” என்று கேட்டார் அப்பத்தா.

“ஏன் நா வெளிய சாப்பிட்டதே இல்லையா?” என்று கேட்டவனின் பார்வை தேன்மலரை கூர்ந்து பார்த்தது.

“சோலியா வெளிய போய்ச் சாப்புடுறதும், நீர் புதுப் பழக்கமா வேணும்னே வூட்டுக்கு வராம வெளிய போய்ச் சாப்புடுறதும் ஒன்னா?” இப்போதும் அப்பத்தாவே கேட்டார்.

“ஆத்தா, நாந்தேன் அது பத்தி பேச வேணாம்னு சொன்னேனே?” என்று தேன்மலர் அவரை அமைதிபடுத்த முயல,

“அவன் இப்போ என்னாத்துக்குச் சாப்புடுற நேரத்துக்கு வெளிய கிளம்பினான்னு கேளு. இன்னைக்கும் வெளிய சாப்புட்டு, மோட்டார் அறைல படுக்கப் போகலைன்னு அவன் சொல்லட்டும். நா கேள்வி கேட்கலை…” என்றார்.

தேன்மலர் கணவனை ஆராய்ச்சியாகப் பார்த்தாள்.

இப்போது அவன் அவளின் பார்வையைச் சந்திக்காமல் முகத்தைத் திருப்பிக் கொள்ள, இன்றும் அவன் நேற்றைய கதையைத் தொடர்கதை ஆக்கப் போகிறான் என்பதைத் தெளிவாக்கி விட, தேன்மலரின் மனது வலித்தது.

“பார்த்தியா, பேச மாட்டேங்கிறான். எய்யா வேலு, இப்ப என்னய்யா இது புதுப் பழக்கம்?” என்று நேரடியாகப் பேரனிடமே கேட்டார்.

அவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, “பதிலு சொல்லுய்யா?” என்றார்.

என்ன சொல்வது என்ற தெரியாத தயக்கம் அவனிடம்.

“ஆத்தா வேணாம், விடுங்க. அவருக்கு என்ன இஷ்டமோ அதைப் பண்ணட்டும். வெளிய சோலியா போற மனுசனுக்கு எம்புட்டோ பிரச்சனை இருக்கும். எல்லாத்தையும் வூட்டுல இருக்குற பொம்பளக கிட்ட சொல்ல முடியுமா?” என்று சொல்லிக் கொண்டே கூடத்தில் வைத்த உணவை மீண்டும் அடுப்படிக்கு எடுத்துச் செல்ல ஆரம்பித்தாள்.

அதுலேயே இன்றும் அவன் வீட்டில் உண்ணவில்லை என்றால் அவளும் உண்ண மாட்டாள் என்று புரிந்து கொண்டவன், அவனுக்காக அவள் எடுத்து வைத்த தட்டின் முன் சென்று அமர்ந்தான்.

குழம்பு சட்டியை எடுக்க வந்தவள், அவன் சாப்பிட அமர்ந்திருப்பதைப் பார்த்து வியந்து, மீண்டும் உள்ளே ஓடி சென்று சோத்து சட்டியை எடுத்து வந்தாள்.

வேகமாகச் சோறை தட்டில் போட்டுக் குழம்பை ஊறினாள்.

“உமக்கும் தட்டுல சோத்தை போடு…” என்றான்.

“நீர் மொதல சாப்புடுயா…”

“நானும் சாப்பிடுறேன். நீயும் சாப்புடு…” என்றவன் தட்டில் கை வைக்காமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

அவன் பிடிவாதத்தில் தன் வாதத்தை விட்டவள், தனக்கும் தட்டில் பரிமாறிக் கொண்டாள்.

அதன் பிறகே சோற்றில் கை வைத்தான் வைரவேல்.

இருவரும் எதிரெதிரே அமர்ந்து உண்பதை திருப்தியுடன் பார்த்துவிட்டு வெளியே சென்று திண்ணையில் அமர்ந்தார் அப்பத்தா.

அவனின் செய்கையில் தேன்மலரின் மனம் கனிந்து போக, ஆசையுடன் அவனுடன் உண்ண ஆரம்பித்தாள்.

அவளின் கண்கள் லேசாகக் கலங்கவே ஆரம்பித்துவிட்டது. அவளின் நிலையைப் பார்த்துக் கொண்டே உண்டு எழுந்தான்.

அவன் கையைக் கழுவிவிட்டு வெளியே செல்ல, மோட்டார் அறைக்குப் போகிறானோ என்று நினைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் வேகமாக எழுந்து வாசல் அருகே சென்று பார்த்தாள்.

வெளியே நிமிர்த்தி வைத்திருந்த கட்டிலை வாசலில் எடுத்துப் போட்டு அதில் அமர்ந்து கொண்டிருந்த கணவனைப் பார்த்து நிம்மதி மூச்சு விட்டு மீண்டும் உள்ளே வந்து சாப்பிட அமர்ந்தாள்.

அவளிடம் ஆசையாகப் பேசுவது இல்லை, அவளை ஆர்வமாகப் பார்ப்பதும் இல்லை. ஆனாலும் தன் சிறு சிறு செய்கை மூலமும் தன் அன்பை அவன் அவளுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருப்பதை அவனே உணர்வில்லை.

ஆனால் உணர வேண்டியவள் சரியாக உணர்ந்து கொண்டாள்.

தேன்மலரின் பெயரை போலவே அவளின் மனமும் தேனாகத் தித்திப்பதை உணர்ந்தாள்.

அவனின் இந்த அன்புகாகவே தான் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பொறுமையாகக் காத்திருக்கலாம் என்று தோன்றியது.

அன்று இரவு வெளியே படுத்துக் கொண்டான் வைரவேல். இரவு மழை வருவது போல் இருந்தாலும், வரவில்லை. ஆனால் குளிர்காற்று அதிகமாக இருக்க, அப்பத்தா குளிர் தாங்காமல் வீட்டிற்குள் வந்து படுத்துவிட்டார்.

ஆனால், வைரவேல் எழுந்து வராமல் அந்தக் குளிர்காற்றிலேயே படுத்திருந்தான்.

காலை விடிந்த போது அவனால் கண் திறக்கவே முடியவில்லை. தலை எல்லாம் பாரமாகக் கனத்தது.

தேன்மலர் எழுந்து வாசல் தெளிக்க வந்த போதும் அப்படியே படுத்துக் கிடந்தான்.

“பொழுது விடிஞ்சிருச்சுயா. எழுந்திருக்கலையா?” கட்டில் அருகில் நின்று அவனை எழுப்பினாள்.

“ம்ம்…” என்று முனங்கினானே தவிரக் கண் திறக்கவில்லை.

“யோவ்…” என்று மீண்டும் மீண்டும் அழைத்து அவனை எழுப்பியதும், மெல்ல எழுந்து அமர்ந்தான்.

ஆனாலும் கண்களைத் திறக்க முடியாமல் எரிந்தன. கண்களை மூடிய படி கட்டிலில் அப்படியே அமர்ந்திருந்தான்.

அவனின் செய்கையை வித்தியாசமாகப் பார்த்தவள், அருகில் வந்து அவன் தோளை தொட்டாள்.

சட்டையையும் மீறி அவன் உடல் சூடு அவளின் கையைச் சுட்டது.

“என்னய்யா ஒடம்பு இம்புட்டு சுடுது? குளுரு காத்துல கிடந்தது சேரலை போலயே…” என்று பதறியவள், “எழுந்துச்சு உள்ளார போய்ப் படும்யா…” என்றாள்.

“ம்ம்…” என்றவன் மெல்ல எழுந்து நின்றான்.

தலைபாரத்தால் தலையை நிமிர்த்த முடியாமல் தலையைச் சுற்றிக் கொண்டு வருவது போல் இருந்தது.

பிடிமானத்திற்குக் கைகளைத் துழாவிய படி தடுமாறினான்.

அவனின் கையை வேகமாக பற்றிக் கொண்டாள்.

“என்னய்யா தல சுத்துதா?” என்று கேட்டாள்.

“தல பாரமா இருக்கு…” என்றான்.

“எங்கையைப் புடிச்சு உள்ளார வாரும்…” என்று கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தாள்.

அவனும் மறுக்கவில்லை.

கூடத்தில் அப்போது தான் எழுந்து அமர்ந்திருந்தார் அப்பத்தா.

“என்னாச்சு தாயி அவனுக்கு?” என்று பதட்டமாகக் கேட்டார்.

“காய்ச்ச அடிக்கிது ஆத்தா. தல கனக்குதாம்…” என்றாள்.

“ராவு குளுரு அதிகமா இருந்துச்சு. நா உள்ளார வரும் போதே அவனையும் கூப்பிட்டேன். வரலைன்னு சொல்லிட்டான். இப்ப யாரு நோவு வந்து கிடக்குறது? நா போய் ஒத்தனம் வைக்க உப்பு வறுக்குறேன்…” என்று புலம்பிக் கொண்டே அடுப்படி பக்கம் போனார்.

அவனின் அறை வாசல் வந்ததும் அதற்கு மேல் நடக்காமல் அப்படியே நின்றாள் தேன்மலர்.

கேள்வியுடன் திரும்பி மனைவியைப் பார்த்தான் வைரவேல்.

“நீரு அப்படியே உள்ளார போரும்யா. நா போய்க் கசாயம் போட்டு கொண்டாறேன்…” என்று தயக்கத்துடன் சொல்லியபடி அவனின் கையை மெல்ல விடுவித்தாள்.

அவளின் தயக்கம் ஏன் என்று அந்த நிலையிலும் அவனுக்குப் புரிந்து போக, இப்போது தானே அவள் கையைப் பற்றிக் கொண்டான்.

“என்னைய கட்டுலு வர கூட்டிட்டு போ…” என்றான்.

‘இவனா தன்னை அறைக்குள் அழைக்கிறான்?’ என்று வியந்து பார்த்தாள்.

“ம்ம்…” என்று அவன் உந்த, அதற்கு மேல் தயங்காமல் அவனுடன் ஒன்றாக அந்த அறைக்குள் முதல்முறையாகக் காலடி எடுத்து வைத்தாள் தேன்மலர்.

உள்ளே சென்றதும் கட்டிலில் படுத்துவிட்டான்.

தலைபாரம் தாங்க முடியாமல் நோக, தலையைத் தானே அழுத்தி விட்டுக் கொண்டான்.

அப்போது உப்பை வறுத்து ஒரு துணியில் கட்டி எடுத்து வந்தார் அப்பத்தா.

“அவனுக்குத் தலைபாரத்துக்கு இந்த ஒத்தனம் தேன் கேட்கும். தலைல வச்சு விடு. நல்லா உச்சியில வச்சு விடு. நா போய்க் கசாயம் போட்டு எடுத்தாறேன்…” என்றார்.

தன்னை ஒத்தடம் வைக்க விடுவானோ என்று தயங்கி, “நீரே வைய்யும் ஆத்தா. நா போய்க் கசாயம் போடுறேன்…” என்றாள்.

“ம்க்கும்… உம் புருசனுக்கு நா இந்த வயசுலயும் சேவகம் செய்யணுமாக்கும்? அவனை வளத்து ஆளாக்கி விட்டு பொஞ்சாதி கையில கொடுத்ததோட எங் கடமை சோலி முடிஞ்சு போச்சு. இந்தா, நீயே உம் புருசனுக்குச் சேகவம் செய்…” என்று நொடித்துக் கொண்டவர், அவள் கையில் ஒத்தட உப்பை திணித்து விட்டுப் போனார்.

அவனின் அருகில் தயக்கத்துடன் குனிந்து தலையில் மெல்ல ஒத்தடம் வைக்க ஆரம்பித்தாள்.

அவர்கள் பேசியது எல்லாம் கேட்டாலும் கண்களைத் திறக்காமல் படுத்திருந்தான் வைரவேல்.

ஒத்தட சூடு இதமாக இருந்தாலும், யாராவது தலையை நீவி விட மாட்டார்களா என்பது போல் மனம் ஏங்கியது.

ஆனால் தன் ஏக்கத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் இறுகி போய்ப் படுத்திருந்தான்.

“சூடு தாங்கலைனா சொல்லும்யா…” என்று சொல்லிக் கொண்டே நெற்றியில் ஒத்தடம் வைத்தாள்.

“ம்ம்…” என்றாலும் அதற்கு மேல் அவன் ஒன்றும் சொல்லவில்லை.

“இந்தக் கசாயத்தைக் குடிச்சு போடுயா…” என்று அப்பத்தா கசாயம் போட்டு எடுத்து வந்து கொடுத்தார்.

மெல்ல எழுந்து அமர்ந்தவன் கசாயத்தை வாங்கிப் பருகினான்.

“செத்த நேரம் உட்கார்ந்து இருய்யா… அவனுக்குக் கசாயம் சேராது தாயி. வாந்தி எடுத்துருவான். நெஞ்ச நீவி விடு…” என்றார்.

‘அய்யோ! ஆத்தா என்ன எல்லாம் என்னையவே செய்யச் சொல்றாக? அவருக்குக் கோவம் வரப்போவுது’ என்று பதறி அவன் முகம் பார்க்க, அவன் கண்களை மூடி அமர்ந்திருந்தான்.

“செய் தாயி…” என்று அவர் உந்த, மெல்ல, தன் விரல்களால் அவன் நெஞ்சை நீவி விட ஆரம்பித்தாள்.

அவன் அவளின் செயலை எல்லாம் பொறுத்துக் கொண்டானா? ஏற்றுக் கொண்டானா? என்று எதையுமே அவனின் முகத்திலிருந்து கண்டறிய முடியவில்லை.

“உம் புருசனுக்குச் சின்னப் புள்ளல ஒடம்பு முடியாம போனா அவன் கூடவே ஒருத்தர் இருக்கணும்பான். என்னைய எங்கனயும் நகல விடாம பிடிச்சு வச்சுக்குவான். அதுவும் எம் மடில படுத்துக்கிட்டு எழுந்திருக்கவே மாட்டேன்னு அடம்பிடிப்பான். கசாயம் வச்சுதாறேன் என்னைய விடுடான்னா, உம் மடி தேன் அப்பத்தா எமக்கு மருந்துன்னு வியாக்கியானம் பேசுவான்…” என்று பழைய கதை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார் அப்பத்தா.

“எய்யா, ராசா… இப்ப உம்மை மடி தாங்க உம்ம பொஞ்சாதி இருக்கா. அவ மடில படுத்து தலைய பிடிச்சு விடச் சொல்லு. நா போய் உமக்குக் கஞ்சி வைக்கிறேன்…” என்றவர் வெளியே செல்ல போனார்.

“ஆத்தா, என்ன அம்புட்டு வேலையும் நீர் இழுத்துப் போட்டு செய்றீர்? நா போய்ப் பார்க்கிறேன். அவரு அது வரைக்கும் தூங்கட்டும்…” என்று ஆத்தா பின்னால் செல்ல போனவளின் கையைப் பிடித்து நிறுத்தினான் வைரவேல்.

சட்டென்று நின்று கேள்வியுடன் அவனைப் பார்த்தாள்.

எதுவும் பேசாமல் அவளை இழுத்துக் கட்டிலில் அமர வைத்தவன், அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.

இப்படி ஒரு செய்கையை அவனிடமிருந்து எதிர்பார்க்காமல் மூச்சடைத்தது போல் அவனைப் பார்த்தாள்.

பேரனை பார்த்து மெல்ல சிரித்துக் கொண்டே அறையை விட்டு வெளியே சென்றார் அப்பத்தா.

விக்கித்து அமர்ந்திருந்தவளின் கையை எடுத்து தன் தலையில் வைத்தவன், அழுத்தமாக மனைவியின் மடியில் முகம் புதைத்துக் கொண்டான்.

மெல்ல கணவனின் தலையை வருடி விட ஆரம்பித்தாள் தேன்மலர்.