அடங்காத அதிகாரா 40
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அதிகாரம் 40
இரண்டு நாட்கள் நீரூபனின் அலுவலகமே கதி என்று நீரூபன் ஆனந்த் வசீகரன் மூவரும் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதை பற்றி முழுமையாக விவாதிக்க தொடங்கினர்.
முதலில் அவன் தந்தையிடம் அவனுடைய அரசியல் பிரவேசம் பற்றி பேசுவது தான் சரியாக இருக்கும் என்று வசீகரன் சொல்ல, ஆனந்த் அதனை பிடித்தமின்மையோடு நோக்கினான்.
அவனை கவனித்த நீரூபன் “மனசுல என்ன இருந்தாலும் சொல்லு ஆனந்த்”என்று அவனை ஊக்குவிக்க,
“நீங்க போயி அவர்கிட்ட கேட்டு அவர் உங்களை கட்சியில் சரின்னு சேர்த்துக்கிட்டாலும் அடுத்து என்ன ப்ரோக்ரஸ் நம்மளால பண்ண முடியும்? நீங்க இப்ப நுழைஞ்சிட்டு உடனே பதவிக்கு வர முடியாது. இல்ல நீங்க சொல்றத தான் அடுத்தவங்க கேட்பாங்கன்னும் நம்ம எதிர்பார்க்க முடியாது எனக்கு அதுதான் யோசனையா இருக்கு.”என்று தயக்கத்துடன் கூறினான்.
“வேலீட் பாயிண்ட். ஆனா அவரைக் கேட்காமலே நான் வேற ஏதாவது முடிவு எடுத்தேன் அப்படின்னா அதுவும் தப்பா தான் போகும்.” என்று சிந்தனையுடன் நீரூபன் கூறினான்.
வசீகரன் இந்த சிக்கலான சூழ்நிலையை சமாளிக்க ஒரு யோசனை கூற அது இருவருக்கும் சரி என்று தோன்றியது.
அதன் பின்வந்த நாட்கள் இரண்டிலுமே அவர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கான முழுமையான அட்டவணையை தயாரித்திருந்தனர். அலுவலகத்தில் மற்றவர் வேலை செய்வது பற்றி மூவருமே கண்டு கொள்ளவில்லை. உணவிற்கும் குளித்து உடை மாற்றுவதற்கு மட்டுமே மூவரும் கான்பரன்ஸ் அறையை விட்டு வெளியேறினர். மற்ற நேரம் முழுவதும் மூவரும் இதைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர்.
பூமிகாவும் நேத்ராவும் இவர்கள் இருவரையும் மூவரையும் தொடர்பு கொள்ள முயன்று இவர்கள் பதில் அளிக்காததால் சற்று கவலை அடைந்தனர் இரண்டு நாட்களுக்குப் பின் வந்த ஞாயிறன்று காலை தங்களது திட்டத்தை செயல்படுத்த பிரிந்து சென்றனர்.
கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு பின் மகனை வீடினால் உடையும்போதே கவனித்து விட்டு வேகமாக ஓடி வந்தார் நாகரத்தினம்.
“என்னப்பா வெளியூர் எதுவும் போனியா? ஒரு தகவலும் சொல்லலையே போன் பண்ணாலும் எடுக்கவே இல்ல” என்று சற்று கவலையோடு அவர் வினவ,
“இல்லம்மா முக்கியமான வேலை இருந்தது இப்பதான் எல்லாம் முடிச்சேன். அதான் வீட்டுக்கு வந்தேன் குளிச்சிட்டு திருப்பி ஆபீஸ் போகணும்.” என்று சிரித்தபடி கூறியவன் அன்னையின் கன்னத்தை கிள்ளி
“உங்க ஆசை நான் நிறைவேற்ற போறேன் இன்னிக்கு எல்லாரையும் லஞ்சுக்கு வீட்ல இருக்கணும்னு நான் சொன்னேன்னு சொல்லிடுங்க.” என்றவன் வேகமாக படிகளை தாவி ஏறினான்.
தன்னுடைய ஆசையை நிறைவேற்றுவது என்றால் எதைக் குறிப்பிடுகிறான் என்று தெரியாத அந்த வெள்ளந்தியான பெண்மணியும் தன் மகள் திருமணம் அல்லது அவன் திருமணத்தை பற்றி குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் அவன் பேசப்போவதாக எண்ணி மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனார் உடனடியாக கணவர் இருந்த அறை நோக்கி சென்றவர்,
“இன்னைக்கு எதுவும் முக்கியமான சந்திப்பு இருக்குங்களா?” என்று பணிவுடன் வினவினார்.
“இல்லையே ரத்தினம். என்ன விஷயம்?” என்று தன் மனைவியின் முகத்தில் தெரியும் அதீத மகிழ்ச்சியை கண்டு அவர் முகத்தில் தோன்றிய சிறு புன்னகையுடன்நோக்கினார் திருமூர்த்தி.
“இல்ல தம்பி எல்லார் கூடவும் ஏதோ முக்கியமான விஷயம் பேசணுமாம். மதியம் சாப்பாட்டுக்கு எல்லாரையும் வீட்டுக்கு வர சொல்லி சொல்ல சொல்லுச்சு. அதான் உங்களை கேட்டேன். எனக்காக பெரிய பாப்பா கிட்ட சொல்லிட முடியுமா?”என்று தயக்கத்துடன் கேட்டார்.
“அஞ்சனா கிட்ட நான் சொல்லணுமா? சரி சொல்லிடலாம். ஆனா உன் பையன் என்ன விஷயம்ன்னு எதுவும் சொன்னானா?”என்றவரின் குரலில் ஆர்வம் நிறைந்திருந்தது.
“தெரியல. சின்னவ கல்யாணம் பத்தி பேசுமோ என்னவோ?” என்றவர் முகம் பூரித்து இருந்தது.
ஏனோ திருமூர்த்திக்கு அந்த பதில் உவப்பில்லாமல் போனதோ என்னவோ, பதில் பேசாமல் அறையை விட்டு வெளியேறினார்.
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வந்த இந்த மூன்று நாட்களில் தன்னிடம் ஒரு வாழ்த்து கூட அவன் தெரிவிக்க வில்லை என்று லேசான ஆதங்கத்தில் இருந்த அவருக்கு மகன் பேச வருகிறான் என்றதும் வாழ்த்து கூறவும் அல்லது வேறு ஏதாவது பேச வருவான் என்று எண்ணியிருக்க மனைவி கூறிய இளைய மகளின் திருமணம் என்ற பேச்சு அவருக்கு அத்தனை ருசிக்கவில்லை.
ஏற்கனவே மூத்த மகள் அவள் விருப்பத்தை கூறி ஒத்துக் கொள்ளாவிட்டால் அதை செய்வேன் இதை செய்வேன் என்று மிரட்டியே ராக்கேஷை திருமணம் செய்து கொண்டாள். இவனும் இன்றுவரை திருமணம் பற்றி எந்த முடிவும் தெரிவிக்காத நிலையில் இளைய மகளின் திருமணத்தையாவது தன்னுடைய விருப்பப்படி நடத்த வேண்டும் என்று எண்ணியிருந்த திருமூர்த்திக்கு மகன் அதை தன் கையில் எடுத்துக் கொள்வதில் விருப்பம் இல்லாமல் இருந்தது.
காரணத்தை தெரிவிக்காமல் மகன் அனைவரையும் மதிய உணவுக்காக அழைத்திருக்கிறான் என்பதை மட்டும் அஞ்சனாவுக்கும் ராகேசுக்கும் தெரிவித்தவர் தன்னுடைய அன்றைய சந்திப்புகளை மதிய உணவுக்கு பின் ஒத்தி வைத்தார்.
நேத்ரா அண்ணனிடமிருந்து வந்த குறுஞ்செய்தியை வாசித்து விட்டு முதல் வேலையாக வசீகரனைத் தான் அழைத்தாள்.
“என்னடா திடீர்னு அண்ணா எல்லாரையும் லஞ்ச்ல மீட் பண்ணனும்னு சொல்லி இருக்காங்க. என்ன விஷயம்? மூணு நாளா நீயும் போன் எடுக்கல அண்ணாவும் போன் எடுக்கல என்னதான் நடக்குது?” என்று எரிச்சலுடன் வினவ வசீகரன் அவளை அமைதியாக இருக்கும்படி கூறினான்.
“மாமா என்ன பேசினாலும் அவருக்கு சப்போர்ட் பண்ணு நேத்ரா. நீ செய்வன்னு எனக்கு தெரியும். இருந்தாலும் கோபத்துல எதுவும் பேசிடாத.பிளீஸ்.”
“நான் ஏன் அண்ணா மேல கோவப்படப் போறேன்?எனக்கு பிடிக்காதது செய்தா கூட யார் கிட்டயும் என் அண்ணனை விட்டுக் கொடுக்க மாட்டேன். ஆனா நீ சொல்றத வச்சு பார்த்தா வீட்ல ஏதோ நடக்கப் போகுது அப்படித்தானே?” என்றவள் மனதில் மெல்லிய பயம் எழுந்தது.
அஞ்சனாவின் அறையில் அவள் கூண்டுப் புலி போல அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள். ராகேஷ் அவள் எதிரில் புரியாமல் சிந்தனை வயப்பட்டவனாக அமர்ந்திருந்தான். அவனால் இன்றல்ல என்றுமே நீரூபன் என்ன நினைக்கிறான் என்பதை கணிக்க முடியாது. அதிலும் நேரடியாக அவனுடன் மோதி பதிலடி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொண்டபின் உடனே எதையும் யோசிக்க கூட அவன் விரும்பவில்லை.
அந்த பள்ளி அவனது ஆசையாக இருந்தாலும் நீரூபனுடன் நேரடியாக இனி மோதுவது முட்டாள்தனம் என்பதை மருத்துவமனை மூலம் பாடம் படுத்துவிட்டதால் இனி பழைய பாணியில் குள்ளநரியாக பின்னிருந்து வேலை செய்வதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
மனைவியின் கோபத்தை கண்டவனுக்கு இவள் தன்னை வைத்து எதையும் யோசித்து வைக்க கூடாது என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது.
இன்னும் சிறிது நாட்களுக்கு நீரூபன் பார்வையில் படாமல் இருந்தாலே அவன் தன்னை ஒரு பொருட்டாக எண்ணாமல் அவன் வேலையில் கவனமாக இருந்து விடுவான். கண்ணுக்கு படாதது கருத்தில் பதியாது என்பது போல ஒதுங்கி மறைவாக காலம் வரும்போது பதிலடி கொடுக்கக் காத்திருந்தான் ராக்கேஷ்.
அவரவர் சிந்தனையில் அனைவரும் ஒன்று மதிய உணவுக்கு உணவு மேசையில் கூடியிருந்தனர் நாகரத்தினம் மகிழ்ச்சியோடு அனைவருக்கும் உணவு பரிமாற ஆரம்பித்தார் இப்படி குடும்பமாக அனைவரும் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பது அவரது பல நாள் கனவு இன்று அது நிறைவேறியதில் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார் அவர்.
ஆனால் இன்று தான் முதலும் கடைசியும் என்பது அவர் அறியாதது.
திருமூர்த்தி மகன் என்ன பேச இருக்கிறான் என்பதை எதிர்பார்த்து அவனை அவ்வப்போது பார்த்த வண்ணம் உணவை உண்டு கொண்டிருந்தார்.
அஞ்சனாவுக்கு உணவை உண்ண கூட பிடிக்கவில்லை. இவன் எதைப்பற்றி பேச இருக்கிறான் என்ற தவிப்பு அவளை உண்ண விடவில்லை என்பதே உண்மை.
நேத்ராவுக்கு அவள் அண்ணன் எது பேசினாலும் அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் உணவை ருசித்து உண்டு கொண்டிருந்தாள்.
ராக்கேஷ் உங்க அமர்ந்திருந்த அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு உணவை அளந்தபடி அமர்ந்திருந்தான். அவனது உடலில் ஏற்பட்ட காயங்களின் வலி இன்னுமே அவனுக்கு இருந்ததால் அதை தனக்கு பரிசளித்தவனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் இன்றைய சூழல் அதற்கு சரியானதல்ல என்ற சிந்தனையில் என்ன நடந்தாலும் அமைதியாக இருக்க வேண்டும் என்ற முடிவுடன் இருந்தான்.
அனைவரும் உணவை முடித்து எழுந்து செல்ல எண்ணிய நேரத்தில் அவன் அரை வாசலில் நின்று இருந்த வேலை ஆளுக்கு கண்ணசைக்க அனைவருக்கும் ஒரு கிண்ணத்தில் கை அலம்ப நீர் கொண்டு வந்து வைக்கப்பட்டது. மிக முக்கியமான பேச்சுக்கள் உணவின் போது நிகழும் நாட்களில் பிங்கர் பவுல் வைப்பது அவர்கள் வழக்கம் தான் என்பதால், அனைவரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
உடனடியாக உண்ட தட்டுகளும் பாத்திரங்களும் எடுத்துச் செல்லப்பட்டு சுத்தி இருந்த வேலையாட்கள் அனைவரும் உணவு அறையை விட்டு வெளியேறி இருந்தனர்.
அவன் கண்ணசைவில் காரியம் செய்ததை மெச்சுதலோடு பார்த்துக் கொண்டிருந்த திருமூர்த்திக்கு அவன் தொண்டையைச் செருமி பேச துவங்கியதும் கவனம் பேச்சில் சென்றது.
“நான் உங்க எல்லார்கிட்டயும் பேசணும்னு சொன்னதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. ஒன்னும் இல்ல ரெண்டு காரணம் இருக்கு.” என்று பீடிகையோடு பேச்சை துவங்கினான் நீரூபன்.
“முதல் விஷயம்… நேத்ராவோட கல்யாணம்.” என்றதும் நாகரத்தினம் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
“நீ பார்த்து என்ன செஞ்சாலும் சரிதான் தம்பி” என்று மனநிறைவுடன் அவர் அவனுக்கு தெரிவிக்க, திருமூர்த்தி யோசனையாக அவனை பார்த்தார்.
“நம்ம இந்த தேர்தல்ல ஜெயிக்க ஒரு கம்பெனி அப்ரோச் பண்ணினோம் இல்லையா அதோட ஓனர் பேரு வசீகரன். அந்த பையனை பார்த்ததும் நேத்ராவுக்கு சரியா இருப்பான்னு தோணுச்சு. அதே போல அரசியலுக்கு தேவையான சப்போர்ட் அந்த பையன் மூலமா நமக்கும் கிடைக்கும். உங்க தகுதிக்கு குறைவா தெரியவே மாட்டான். பணம் அந்தஸ்து பார்க்காம அவன் குணம் மட்டும் பாருங்க.” என்று தந்தையை நோக்கி அவன் கூறியதும்,
“நான் அந்த பையனை பார்த்திருக்கேன். ஆனா நேத்ராவுக்கு பிடிக்குமா?” என்று திருமூர்த்தி சிந்திக்க,
“உங்க மனசுல வேற யாரையும் யோசிச்சு வச்சிருந்தீங்களா?” என்று வினவினான் நீரூபன்.
“நம்ம கோதண்டம் பையன் சந்திரன் ரொம்ப சூட்டிக்கையா இருந்தான். இல்லைன்னாலும் ஆந்திரா கவர்னர் ஒரு தடவை அவர் மகனுக்கு நேத்ராவைக் கேட்டாரு.”என்று நிறுத்தினார்.
அஞ்சனாவுக்கு சந்திரனின் பெயரைக் கேட்டதும் விளக்கெண்ணெய் குடித்தது போல முகம் மாறி, “சந்திரனும் வேண்டாம் வேற ஸ்டேட் பையனும் வேண்டாம். நீரு சொல்றது போல அந்த கம்பெனி பையனையே வர சொல்லு பார்த்து பேசுவோம்.”என்றதும்,
நீரூபன் தன் தமக்கையை விசித்திரமாக பார்த்துவிட்டு “நாளைக்கு நம்ம கட்சி ஆபீஸ் வந்து இளைஞர் அணி தலைவரா நான் பொறுப்பு எடுத்துக்கிறேன். எல்லா மாவட்டத்துக்கான இளைஞர் அணி தலைவர் செயலாளரை நாளைக்கு இனிஷியேட் பண்ணிட்டு யூத் விங்கை இனிமே நான் பார்த்துக்கிறேன்.” என்று அவன் கூறி முடித்த போது ஆவேசமாக எழுந்து நின்றாள் அஞ்சனா.
“என்ன நெனச்சிட்டு இருக்க ஏதோ துண்டு போட்டு வச்சிருந்த சீட்ல வந்து உட்கார போற மாதிரி தகவல் சொல்ற?” என்று கத்த ஆரம்பித்தாள்.
“ஏன்கா நீ கட்சியோட மகளிர் அணி தலைவியா இருக்கும்போது நான் இளைஞரணி தலைவரா பதவிக்கு வரக்கூடாதா?” என்று நக்கலாக வினாவினான் நீரூபன்.
“இப்ப வரைக்கும் கட்சியில இளைஞரணி தலைவர்னு யாரும் இல்ல இளைஞர் அணிக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து பாக்குறது உங்க மாமா தான்.” என்று ராகேஷ் பக்கம் திரும்பிய அவள் பார்வை அவன் எதுவும் சொல்லாமல் நீரூபனை பார்த்த வண்ணம் இருப்பது எரிச்சலை கொடுத்தது.
“ஏன் எதுவும் பேசாம உட்கார்ந்து இருக்கீங்க இந்த எலக்சன்ல போன்லயே யூத் இன் பசங்கள வேலை செய்ய வச்சது நீங்க தானே இன்னிக்கு வந்து இவன் தலைவராகிறேன் எல்லா ஊருக்கும் ஆள் போட்டு நான் பாக்குறேன்னு சொல்றது நல்லாவா இருக்கு எதுவும் சொல்ல மாட்டீங்களா?” என்று கணவனை ஒரு பிடி பிடித்து விட்டு
“என்னப்பா என் இஷ்டத்துக்கு பேசிகிட்டு இருக்கான் நீங்களும் பார்த்துக்கிட்டு இருக்கீங்க?” என்று தந்தையையும் கேள்வி கேட்டாள்
“இப்ப தானம்மா பேச ஆரம்பிக்கிறான் அவன் சொல்லி முடிச்சா தானே நான் பதில் சொல்ல முடியும்? அதுக்குள்ள நீ எழுந்து பேச ஆரம்பிச்சுட்ட!” என்று பொறுமையை இழுத்து பிடித்தவராக திருமூர்த்தி மகளை அமர வைத்து விட்டு நீரூபனிடம் திரும்பினார்
“கட்சியில சேரணும்ன்னு சொல்லுறப்பா. எனக்கு ரொம்ப சந்தோஷம். வா வந்து வேலையை பார. நீ என்ன செய்ற எப்படின்னு பாத்துட்டு என்ன பதவி தரணும்னு நாங்க தான் முடிவு பண்ணனும்.”என்று தன்மையாகவே மகனுக்கு பதில் அளித்தார்.
அதுவரை அமைதியாக இருந்த நேத்ரா “அண்ணன் பத்து வருஷத்துக்கு முன்னாடியே அரசியலுக்கு வந்திருக்கும். ஆனா சிலரோட செயலாளர் தான் அண்ணன் ஒதுங்கி இருந்துச்சு. நல்லது செய்யணும்னு நினைக்கிறதுக்கும் செய்றதுக்கும் அண்ணன் எவ்வளவு முயற்சி பண்ணும்னு கட்சியில் இருக்கிற எல்லாருக்குமே தெரியும். இந்த எலக்சன் வேலை நடக்கும் போது எல்லா ஊரோட இளைஞர் அணி தலைவர் செயலாளர் வயசெல்லாம் பார்த்தா 40 , 45 னு இருக்கு அவங்க எல்லாம் இளைஞரா? இந்த எலக்சன் வேலை நடக்கும்போது நானும் வசீகரன் கூட எல்லாத்தையும் கவனிச்சிட்டு தான் இருந்தேன். கட்சியோட எந்த செயல்பாடுமே சரி இல்ல. அண்ணா வந்து சரி பண்ணுனா நல்லது தானே? அதை ஏன் ரெண்டு பேரும் தடுக்க பாக்குறீங்க?” என்று கோபத்துடன் சரமாரியாக கேள்விகளை அடுக்கினாள்.
“என்னது வசீகரன் கூட நீ எலக்சன் வேலை பார்த்தியா? அப்போ நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா? அதைத்தான் இவன் பூசி மொழுகி கல்யாணம் பண்ண ட்ரை பண்றானா?” என்ற அஞ்சனாவின் பார்வை தங்கையின் மேனியில் கேவலமாக உலா வர நேத்ரா துடிதுடித்துப் போனாள்.
அதுவரை அமைதியாகவே அனைத்தையும் கையாள வேண்டும் என்று எண்ணியிருந்த நீரூபன் அந்த எண்ணத்தை கைவிட்டவனாக தந்தை புறம் திரும்பி “நான் கேட்டது கட்சி தலைவரான உங்க கிட்ட தான். முடியும்னா முடியும்னு சொல்லுங்க முடியாதுன்னா முடியாதுன்னு சொல்லுங்க. இன்னைக்கு இதுக்கு ஒரு பதில் தெரிஞ்சு தான் ஆகணும்.” என்று பிடிவாதமாக அவனும் எழுந்து நின்றான்.
“இந்த கட்சி ஒன்னும் நம்ம குடும்ப கட்சி இல்லப்பா. நீ நெனச்சப்ப கட்சியில் உனக்கு பதவி கொடுக்கவும் அதையும் நீ கேட்டு வாங்குறது எல்லாம் கொஞ்சமும் நல்லா இல்ல. கட்சியோட உறுப்பினரா சேர்றதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை மிச்சம் உள்ளத நான் கட்சியில் இருக்கிற மத்தவங்களோட சேர்ந்து தான் முடிவு எடுக்க முடியும்.” என்று திருமூர்த்தியும் சற்று அழுத்தமாகவே கூறினார்.
“ஓ அப்படி தான் இத்தனை நாளும் உங்க கட்சியில எல்லார்கிட்டயும் கேட்டு முடிவெடுத்தீங்களா? எல்லாம் முடிவுகளையும் இவங்க தானே எடுத்தாங்க? இவங்க எடுத்ததுக்கு நீங்க தலையாட்டுனீங்க. இப்பயும் அதை தான் செய்றீங்க.” என்று நேத்ரா கோபத்துடன் கூறியவள் தன் அண்ணனிடம்
“இதெல்லாம் உனக்கு தேவையா? இவங்ககிட்ட எதுக்கு நீ இதெல்லாம் பேசுற? நான்தான் வேண்டாம்னு சொன்னேன்ல!” என்று உரிமையுடன் கேட்டாள்.
“நானா முடிவெடுத்து இதுதான் சொல்லிட்டா எங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம் இல்லன்னு இவங்க நாளைக்கு எதுவும் பேசக் கூடாது இல்லையா? அதுக்கு தான் அவங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுத்தேன். அவங்க முடிவ அவங்க சொல்லிட்டாங்க. என் முடிவு நாளைக்கு அவங்க தெரிஞ்சுப்பாங்க” என்று தங்கையிடம் கூறியவன்,
“நேத்ராவுக்கும் வசீகரனுக்கும் கல்யாணம் நடக்கும். இதுல எந்த மாற்றமும் இல்ல. என் தங்கச்சி யாரை விரும்பினாலும் நான் அவங்களை அவளுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன். இதுல யாரும் தலையிட கூடாது. கட்சி விஷயத்துல உங்க முடிவு தான் இறுதியானதுனா அதனால் ஏத்துக்கிறேன். ஆனா என் தங்கச்சி விஷயத்துல நான் என்ன முடிவு எடுக்கறேனோ அதுதான் இறுதியானது.” என்றவன் தங்கையின் கையை பற்றி கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.