அடங்காத அதிகாரா 30

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 30

கான்ஃபரன்ஸ் அறையில் அமர்ந்து தன்னுடைய லேப்டாப்பில் முக்கியமாக ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான் வசீகரன் மறுநாள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் பத்திரிகையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நினைவு பரிசு என்னவென்று தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தான்.

இந்த வாரத்தில் கடைசி நாளில் சேலத்தில் மிகப்பெரிய மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் பங்கு பெறுவது போல ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன அதற்கான பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதற்கும் காவல்துறையிடம் அனுமதி பெறுவது பற்றியும் கடிதங்கள் அனுப்ப நிறுவன ஆட்களிடம் வேலைகளை மெயிலில் கூறிவிட்டு சற்று இளைப்பாறுவதற்காக கைகளை உயர்த்தி நெட்டி முறித்தான். அப்போதுதான் கான்ஃபரன்ஸ் அரியின் வாசலில் நேத்ரா அவனையே பார்த்தபடி நின்று கொண்டிருப்பதை கண்டான்.

“ஹே ஐஸ்! எப்ப வந்த? ஏன் அங்க ஏன் என்கிட்ட இருக்க உள்ள வா.” என்று அழைக்க,

வந்தவள் அவனுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“வேலை எல்லாம் நல்லா போகுதா?” என்று மட்டும் கேட்டுவிட்டு அவனையே பார்த்துக் கொண்டிருக்க,

அவனும் “என்ன இருக்கோ மனசுல அதை மறைக்காம கேட்டுடு. இப்படி பாக்காத” என்று மெலிதாக புன்னகை செய்தான்.

“ஒன்னும் இல்ல இன்னைக்கு ஈவினிங் வெளியில போலாமான்னு கேட்க வந்தேன். என் பிரண்டோட பர்த்டே பார்ட்டி இருக்கு.கூட வர்றியா?” என்று கண்களில் அவன் வரவேண்டும் என்ற ஆசையை தேக்கி வைத்து வினவினாள்.

அவன் சங்கடமாக புன்னகை செய்து “தப்பா நினைக்காத இந்த உள்ளாட்சி தேர்தல் முடிகிற வரைக்கும் நீயும் நானும் அப்படி சேர்ந்து வெளியில போக முடியாது. யாராவது கவனிச்சிட்டா பிரச்சனை ஆயிடும்.மாமாவுக்கு சங்கடமா இருக்கும்.” என்றவன் அவளை என்னை புரிந்துகொள்ளேன் என்பது போல பார்த்துக் கொண்டிருந்தான்.

“எனக்கும் தெரியும்டா சும்மா உன்கிட்ட கேட்டு பாக்கலாமேன்னு நினைச்சேன். எப்படா இந்த தேர்தல் முடியும்னு இருக்கு. நானும் நீயும் ஹேப்பியா வெளிய போறது, சாப்பிடுறது, தனியாக உட்கார்ந்து பேசிட்டு இருக்கிறது இந்த மாதிரி எல்லா நேரத்தையும் நான் மிஸ் பண்றேன் டா.” என்றாவது மிகவும் உணர்ந்து கூறினாள்.

“எனக்கு தெரியுது பார்க்கலாம் என்ன ஒரு 20-25 நாள்தான் இருக்கு. அப்புறம் ஓட்டு எண்ணுறது ஒரு அஞ்சு நாள்ல எப்படியோ எல்லாமே முடிஞ்சிடும். சோ ஒரு மாசம் தானே பொறுத்துக்க மாட்டியா?” என்று அவனுடைய லேப்டாப்பை பார்த்தபடியே கேட்டு வைக்க,

கொஞ்சம் கடுப்பான நேத்ரா “டேய் அதை கூட என்னை பார்த்து சொல்ல முடியாதா உன்னால? என்று எட்டி அவனுடைய லேப்டாப் ஸ்கிரீனை பார்த்தாள்.

அதில் சில முக்கியமான கோப்புகள் அதுவும் கான்ஃபிடென்ஷியல் என்று எழுதப்பட்ட கோப்புகள் நிறைய அடங்கி இருந்தது.

புரியாமல் அவனையே அவள் பார்க்க, ” மாமா போன் பண்ணி இருந்தாரு. கட்சி ஆபீஸ்ல இருக்குற கம்ப்யூட்டர்ல இருக்குற முக்கியமான எல்லா டாக்குமெண்ட்ஸையும் ஒரு காப்பி எடுத்து தனியா வைக்க சொன்னாரு. எல்லாத்தையும் ஒரு தரம் ஃபுல்லா செக் பண்ணி, என்ன செஞ்சிட்டு இருக்காங்க, இல்ல வேற என்ன உள்ள நடந்து இருக்கு, என்னன்னா அவங்க டாகுமெண்டா வச்சிருக்காங்க, எல்லாத்தையும் ஒரு தடவ பார்க்க சொன்னாரு” என்றவன் மிகவும் தயக்கமாகவே அதை கூறினான்.

“அவங்க உள்ள என்ன செஞ்சா நமக்கு என்ன டா? நம்ம என்ன வேலையா வந்தோம்? அவங்கள தேர்தலில் ஜெயிக்க வைக்க தானே வந்தோம், அத மட்டும் செஞ்சிட்டு பேசாம போயிடலாமே!” என்று நேத்ரா எரிச்சலானாள்.

“எனக்கும் அப்படித்தான் தோணுச்சு ஆனா என்ன ஆச்சுன்னு தெரியல மாமா எல்லாத்தையும் எடுத்து ஒரு தரம் பாரு உனக்கு ஏதாவது வித்தியாசமா தெரிஞ்சா அது மட்டும் எனக்கு மெயில் அனுப்பு அப்படின்னு சொன்னாரு. மாமா சொல்றாருன்னா யோசிக்காமலோ என்னன்னு தெரியாமலோ கேட்டிருக்க மாட்டாரு. அவருக்கு அப்ப ஏதோ விஷயம் தெரிஞ்சுருக்கு. அதுக்கான ஆதாரம் அங்கே இருக்கான்னு பார்க்கிறதுக்காக தான் என்னை செக் பண்ண சொல்லி இருக்காரு.” என்று வசீகரன் யோசனையாக கூறினான்.

“சரிடா அப்படினாலும் பைல்ஸ் எல்லாம் உன்கிட்ட எப்படி?”

“அன்னைக்கு சந்திரன் அவர்கள் கட்சி ஆபீஸ்ல இருந்து லேப்டாப் எடுத்துட்டு வர சொன்னேன் இல்லையா அதிலிருந்து எல்லாத்தையும் ஹேக் பண்ணி எடுத்துட்டேன்.” என்று சொல்வதற்கே யோசித்து யோசித்து கூறினான்.

“தப்பு டா” என்று நேத்ரா கூற ,

“எனக்கும் தெரியும். ஆனா மாமா கேட்டிருக்காரு. காரணம் இல்லாமல் கேட்க மாட்டாரு.”

“அது புரியுது ஆனா நீ இதெல்லாம் எடுத்திருக்கேன்னு தெரிஞ்சா உன்மேல கேஸ் போட்டுருவாங்க டா.” என்று பயத்துடன் நேத்ரா விழிக்க,

“நான் எடுத்திருக்கேன் தெரிஞ்சா தானே? நான் என்ன கம்பெனி நடத்துறேன்னு உனக்கு தெரியும்? சைபர் செக்யூரிட்டி. இவங்க கிட்ட ஒழுங்கா எந்த செக்யூரிட்டி சிஸ்டமுமே இல்ல. முதல்ல என் கம்பெனியில் இருந்து இவங்களுக்கு கொட்டேஷன் அனுப்பி இவங்களுக்கு டேட்டா செக்யூரிட்டி ரெடி பண்ணனும்” என்று சிரித்தான்.

“ஆமா எல்லா பைலையும் எடுத்துட்ட இனி என்ன டேட்டா செக்யூரிட்டி?” என்று அவளும் சிரிக்க,

“நான் எடுத்துட்டேன்னா அது பெரிய தப்பு இல்ல. நான் வருங்கால மாப்பிள்ளை. எதையும் நான் வெளியே சொல்ல மாட்டேன். ஆனால் எல்லாரும் அப்படி இருப்பாங்களா? இதே வேற கட்சிக்காரங்க இந்த மாதிரி ஹேக் பண்ணி எடுத்துட்டாங்கன்னா என்ன பண்றது? செக்யூரிட்டி இருந்துச்சு. ஃபயர் வால் இல்லைன்னு சொல்ல முடியாது. பட் அந்த அளவுக்கு குவாலிட்டி இல்ல. அதாவது என் கம்பெனி கொடுக்கிற அளவுக்கு” பேசிக் கொண்டிருக்க வசீகரனிடம் இந்த வேலையை ஒப்படைத்த நீரூபன் மிகவும் தெளிவாக தன்னுடைய பள்ளியை பற்றி நிருபர்களிடம் பேசிக் கொண்டிருந்தான்.


“என்ன சார் நார்மலா உங்க அப்பா உங்க அக்கா தான் வந்து பிரஸ்மீட் கூப்பிடுவாங்க. நீங்க அரசியல்ல இல்லாததுனால இன்னைக்கு வரைக்கும் எந்த பிரஸ் மீடியும் ஏற்பாடு பண்ணதுல. உங்களோட புதுவிதமான விவசாயம், உங்க பண்ணை, இத பத்தி நாங்களே வந்து கேட்டு தெரிஞ்சுக்கணும்ன்னு வந்தாலும் உங்க அசிஸ்டன்ட் தான் வந்து எங்களுக்கு தேவையான பதில கொடுத்து அனுப்புவாரே தவிர உங்க போட்டோவோ இல்ல நீங்க நேரா பேசுற மாதிரியே எந்த ஒரு சூழ்நிலையிலும் வராது அப்படின்னு சொல்லிடுவாரு. இன்னிக்கு நீங்களே பிரஸ் மீட் கூப்பிட்டு இருக்கீங்கன்னா ஏதாவது ரொம்ப முக்கியமான விஷயமா இருக்கும்னு நினைக்கிறேன்.நீங்க அரசியலுக்கு வர போறீங்களா?” என்று ஒரு நிருபர் எழுந்து நின்று வினவினார்.

அவருடைய கேள்வியை கேட்டு மெல்ல சிரித்த நீரூபன் “அரசியலுக்கு வருவதைப் பற்றி எல்லாம் இப்போ வரைக்கும் எந்த யோசனையும் இல்லைங்க. இத்தனை நாளா பிரஸ் மீட் எல்லாம் வைக்காததுக்கும் உங்க முன்னாடி வராததுக்கும் காரணம் ‘அதுக்கு அவசியம் இல்லை’ அவ்வளவுதான். என்னோட பண்ணைய பத்தி தகவல் தரதா இருந்தா அது நீங்க தாராளமா எழுத்து வடிவமாக தரலாம் அந்த நான்தான் வந்து சொல்லணும்னு எந்த அவசியமும் இல்லயே. அதனால தான் இத்தனை நாளா எந்த பிரஸ் மீட்டம் வைக்கல.” என்று பொறுமையாக அவருக்கு பதில் அளித்தான்.

“அப்போ இன்னைக்கு கூப்பிட்டு இருக்கீங்கன்னா ஏதோ ரொம்ப முக்கியமான விஷயம் இல்லையா? அதை நாங்க தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கோம். அரசியலும் இல்ல. அப்போ உங்க பண்ண விவசாயம் சார்ந்ததும் இல்ல. வேற ஏதோ புதுசா சொல்ல போறீங்கன்னு தெரியுது. சொல்லுங்க சார். நாங்க எல்லாரும் கேட்க தயாரா இருக்கோம்.” என்று ஒரு நிருபர் கூறிவிட்டு அவருடைய இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

“எஸ் யூ ஆர் ரைட். புதுசா ஒரு விஷயத்தைப் பற்றி தான் பேச வந்திருக்கேன். சமீபமா எல்லாரும் ‘விடிவெள்ளி அகாடமி ஆப் எஜுகேஷன்’ பத்தி அட்வர்டைஸ்மெண்ட் பார்த்திருப்பீங்க.” என்று இடைவெளி விட்டான்.

“ஆமா சார் ஏதோ ‘கல்வியில் புதிய புரட்சி’ ‘அனைவருக்கும் வாய்ப்பு’ அப்படின்னு புதுசா ஏதோ அட்வர்டைஸ்மென்ட் வந்துட்டு இருந்தது. சார்.. அது உங்களுதா?” என்ற ஒருவர் ஆர்வமாக வினவ நீரூபன் சிரித்தபடி ‘ஆம்’ என்று தலையசைத்தான்.

“விடிவெள்ளி அகடமி ஆப் எஜுகேஷன் ஒரு வித்தியாசமான கல்விச்சாலையா இருக்கும். இந்த கல்விச்சாலையில் சிலபஸ் ஸ்டேட் போர்டு, சென்ட்ரல் போர்டு, இல்லை இன்டர்நேஷனல் டைப் இல்லாம எங்களுக்குன்னு ஒரு தனி டீச்சிங் மெத்தட் ஆரம்பிக்கலாம்னு பிளான் பண்ணி இருக்கோம். அதுக்கான அப்ரூவல் தலைமை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கு.

இப்போ இதை நான் உங்களை கூப்பிட்டு சொல்றத்துக்கான முதல் காரணம், இதுல நாங்க முன் வைத்திருக்கிற முக்கியமான சில விஷயங்கள் தான்.

இங்க ஆசிரியர்கள் வெறும் ஆசிரியர்கள் கிடையாது,அவங்களும் மாணவர்கள் தான்.” என்று இடைவெளி விட்டான் உடனே நிருபர்களிடம் சின்ன சலசலப்பு எழுந்தது.

“அது எப்படி சார் நீங்க ஒரு ஸ்டூடண்ட் வச்சு இன்னொரு ஸ்டூடண்டுக்கு சொல்லி தர முடியும்? அப்ப ஸ்டுடென்ட் நாலேஜ் எப்படி அதிகமா ஆகும்?” என்று வினவ,

“சொல்லித் தர டீச்சரும் ஸ்டூடண்டும் தான் சொன்னேனே தவிர, சொல்லித்தரவங்க ஸ்டுடென்ட்ன்னு நான் சொல்லவே இல்ல” என்று சிரித்தான். அனைவரும் புரியாது விழிக்க,

“நம்ம ஊர்ல ஐஏஎஸ் ஐபிஎஸ் மாதிரி உயர் பதவி படிப்புகளுக்கு ஆஸ்பிரன்ஸ் ரொம்பவே சிரமப்பட்டு படிக்கிறாங்க. அதுக்கு அவங்க கோச்சிங் சென்டர்களுக்கு தனியா பணம் கட்ட அதிகமா செலவழிக்கவும் செய்றாங்க. ஏழை குடும்பத்தில் இருக்கிறவங்களுக்கு அதுக்கான ஸ்கோப் ரொம்பவே கம்மியா இருக்கு. அதனால எங்க அகாடமில அஸ்பரன்ஸ் அவங்களுக்கான எக்ஸாமுக்கு படிக்க மாணவர்களா சேரலாம். அவங்களுக்காக சொல்லி தர்றதுக்கு ஹை லெவல் ஃபேக்கில்ட்டி அவைலபிலா இருப்பாங்க. அதே நேரம் அந்த அஸ்பரன்ஸ் காலைல பள்ளிக்கூடத்துல குழந்தைகளுக்கு டீச்சரா இருப்பாங்க. இது மூலமா அவங்களுக்கு ஒரு சம்பளம் கிடைக்கும். அந்த சம்பளம் அவங்களுக்கு ஸ்டடி மெட்டீரியலோ இல்ல அவங்க குடும்பத்துக்கு உதவியா இருக்கவோ வசதியா இருக்கும்.” என்று கூறி நிறுத்தினான்.

“எப்படி சார் டீச்சர் ட்ரைனிங் முடிச்சவங்க மட்டும் தான டீச்சரா இருக்க முடியும். அப்படி இருக்கிறப்ப ஆஸ்பிரன்ஸ நீங்க டீச்சரா வச்சுப்பேன்னு சொன்னா அவங்களுக்கான படிக்கிற நேரம் குறையும் இல்லையா?” என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்ப

“அவங்க அவங்களோட படிப்ப கெடுத்துக்காத அளவுக்கு ப்ராப்பர் டைம் டேபிள் நாங்க ஃபாலோ பண்ணுவோம். எங்களோட எண்ணம் எங்களுக்கு வர டீச்சிங் ஸ்டாப்பை குறைச்சு பணம் சம்பாதிக்கிறது இல்லை. இந்த மாதிரி படிக்கிறவங்களுக்கு ஹை லெவல் நாலேஜ் இருக்கும். அந்த நாலேஜ் சின்ன வயசுல இருந்தே குழந்தைகளுக்கும் கிடைக்கும்.

அதே நேரம் ஆஸ்பிரன்ஸ்க்கு அவங்க அவங்க படிக்கிறதுக்கு தேவையான எல்லாமே ஒரே இடத்துலயே இருக்கணும். வேலைக்காக அவங்க சிரமப்படக்கூடாது. அதுக்கு நாலு மணி நேரம் காலைல குழந்தைகளுக்கு கிளாஸ் எடுத்தா போதும். அந்த நாலு மணி நேரத்துல அவங்களுக்கு சொல்லித்தருவதற்காக அவங்க எந்த விதத்திலும் தனியா பிரிப்பேர் பண்ண வேண்டியது இல்ல. ஏன்னா அது எல்லாமே அவங்களுக்கு ஃபிங்கர் டிப்ல இருக்கும்” என்று பொறுமையாக எடுத்துரைத்தான்.

“புரியுது சார் ஆனா உங்களுக்குன்னு தனி சிலபஸ் இந்த ஆஸ்பிரன்ஸ் இதுக்கெல்லாம் குழந்தைகளோட பேரண்ட்ஸ் ஒத்துப்பாங்க நீங்க நினைக்கிறீங்களா?” என்று கேட்க

“பல பிரைவேட் ஸ்கூல்ல நேத்து பிஈ முடிச்சவங்களும் பிஏ முடிச்சவங்களும் எம் ஏ முடிச்சவங்களும் டீச்சரா வேலைக்கு சேர்ந்துட்டு இருக்காங்க. அங்க எத்தனை பசங்க படிக்கிறாங்கன்னு தெரியுமா?” என்று நீரூபன் அவரைப் பார்த்து கேள்வி எழுப்பினான்.

“இல்லன்னு சொல்ல முடியாது சார், ஆனா ஸ்டாண்டர்ட்னு ஒன்னு இருக்குல்ல இப்போ அந்த மாதிரி ஸ்கூல்களோட பீஸுக்கும் நீங்க சொல்ற உங்களோட ஃபேக்கில்டி இந்த பீஸுக்கும் சம்பந்தம் இருக்கும் இல்லையா? அப்போ வரப்போறவங்க கண்டிப்பா பெரிய இடத்து பிள்ளைகளா மட்டும் தான் இருக்க முடியும். நீங்க சொல்ற ஆஸ்பிரன்ஸ் ஏழை குடும்பத்திலிருந்து வந்தவங்களா இருந்தாலும், படிக்க வருகிறவங்க பணக்கார வீட்டு பிள்ளைங்களை மட்டும் தானே இருப்பாங்க?” என்று ஒருத்தர் அவனை கார்னர் செய்து கேள்விகளை தொடுத்தார்.

“அதுதான் இல்ல எல்லாருக்கும் சமமான கல்வி கிடைக்கணும். இதுல பணக்காரன் ஏழை வித்தியாசம் இருக்க கூடாது. இது என்னோட ஆழமான எண்ணம். அதனால பீஸ் ஸ்ட்ரக்சர் ஒரே மாதிரி தான் இருக்கும். அது ஏழை குழந்தைகளும் தாராளமா வந்து படிக்கிற மாதிரி தான் இருக்கும். அதாவது அட்மினிஸ்ட்ரேஷன் எப்படி பண்றது, உள்ள பணம் கொண்டுவருவது அதெல்லாம் எங்க பாடு. எங்களுக்கு தேவை வரப்போற தலைமுறை நல்ல நாலெஜ்ஜோட இருக்கணும். அதே நேரம் சொல்லித் தரவங்களும் அவங்களோட அடுத்த கட்டத்துக்கு போவதற்கு நாங்கள் உதவியா இருக்கணும். அதுக்கு தான் இந்த ‘விடிவெள்ளி அகடமி ஆப் எஜுகேஷன்’ ஆரம்பிக்கப்பட்டு இருக்கு. இந்த மாசத்திலேயே அஸ்பரன்ஸ்க்கான பேட்ச் ஆரம்பிச்சுரும். அடுத்த அகடமிக் இயர்ல ஸ்கூல் ஸ்டார்ட் ஆகும். இதுல எந்த மாற்றமும் இல்ல. கல்வித்துறையில் இருந்து அப்ரூவல் வாங்க தேவையான எல்லா நடவடிக்கைகளும் நேர்மையான முறையில் நடந்துகிட்டு இருக்கு.

எங்களுக்கு தேவை மக்கள் இதை பத்தி தெரிஞ்சுக்கணும். வேறு கேள்விகள் இருந்தாலும் எங்களிடம் நேரடியாக வந்து கேட்டு தெரிஞ்சுக்க எங்க கதவுகளை நாங்க திறந்து வச்சிருக்கோம் அப்படிங்கறத சொல்றதுக்காக தான் இந்த பிரஸ்மீட்.” என்று கூறியவன்

“கல்வி எல்லாருக்குமானது. கல்வியை கற்பிக்கிறவங்களும் இன்னும் கத்துக்க ஒரு இடம். உங்களை அறிவிச்சுடரை நோக்கி அழைத்துச் செல்ல ஆவலா வரவேற்கிறது விடிவெள்ளி அகடமி ஆப் எஜுகேஷன்.” என்று கூறி பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்த அனைத்து பத்திரிகையாளர்களிடமும் நன்றி கூறி விடை பெற்றான்.