அடங்காத அதிகாரா 26

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 26

“மாமா.. காம் டவுன். அவங்களை வீட்டை விட்டு அனுப்பினா எல்லாம் சரியா போய்டுமா? இல்ல நீங்க மூணு பேரும் வெளில வந்தா தான் நல்லா இருக்குமா? எமோஷனலா முடிவெடுக்காதீங்க மாமா.” என்று அவன் தோளில் ஆதரவாக கரம் பதித்தாள் பூமிகா.

“அது எப்படி பாப்பா, நம்ம வீட்லயே நம்மளால பாதுகாப்பா உணர முடியாம போறது எவ்வளவு மனஉளைச்சல் கொடுக்கும். நேத்ரா பாவம். மூணு நாளா உத்து உத்து பார்த்திருக்கான் அந்த ஆளு. இதுல நான் தான் அடிச்சேன்னு அஞ்சுக்கா கிட்ட சொல்லுவேன்னு சொல்றான். ” என்றான் எரிச்சலுடன்.

“பிளீஸ் இப்ப உள்ள பிரச்சனையை மட்டும் பார்க்காதீங்க. சீ தி பிக்கர் பிக்சர். அவர் அரசியலுக்கு வர டிரை பண்றாருன்னு சொல்றீங்க, இப்ப என்ன செய்தாலும் நாம வெறுப்புல செய்தது போல தெரியும். அதை அஞ்சு அண்ணியும் நம்ப வாய்ப்பு இருக்கு. அவங்க நமக்கு முக்கியம் இல்லையா? அவரை எப்படியாவது கண்ட்ரோல் பண்ணிட்டு, நீங்க அஞ்சு அண்ணிக்கு அரசியல்ல சப்போர்ட் பண்ணுங்க.  பெரிய மாமா கிட்ட கோவப்படாம பேசி ராக்கேஷ் அண்ணன் எண்ணத்தை புரிய வைங்க. நீங்க தள்ளி நின்னு செய்ய நினைக்கும்போது உங்க நல்ல செயல்கள் கூட தப்பா தெரியும். இதே அவரு பக்கத்துல இருந்தே மனசுல விஷத்தை விதைக்கிறாரு. யோசிச்சு செய்ங்க மாமா.” என்றாள்.

“ஹா..” என்று ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டவன்,

ஆபிஸ் டேபிளில் ஏறி அமர்ந்து கொண்டான்.

பின்னால் நின்றபடி அவனை பார்த்திருந்தவள் விழிகளில் கனிவு தெரிந்தது.

“அம்மாவுக்கோ நேத்ராவுக்கோ ஏதாவதுன்னா என் பொறுமை எங்க போகுதுன்னு தெரியல பாப்பா. இதுவரை இது போல பிரச்சனை வரல. அவளை காலேஜ்ல கூட யாரும் டீஸ் பண்ணினது கிடையாது. அவ அழுதான்னு வசீகரன் சொன்னதும் எனக்கு கோபம் வந்துடுச்சு.” என்றான் இறுக்கமாய்.

“விடுங்க மாமா. அதான் காலை உடைச்சு விட்டாச்சுல்ல இனிமே எதுவும் பண்ண மாட்டாரு. நீங்களும் வீட்ல எல்லா ரூமுக்கு வெளிலையும் சிசிடிவி கேமரா வைங்க.” என்று தோளை தொட்டு முன்னே வந்தாள்.

அவளை அப்படியே வாரி தன் மடியில் சேர்த்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

அவன் கைகள் அவள் முதுகை இறுக்கமாக பிடித்திருக்க, அவனது உணர்வுப் போராட்டத்தை புரிந்து கொண்ட பூமிகா, அவன் கழுத்தில் தன் கரத்தை கோர்த்துக் கொண்டு அவன் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். அவள் அவனுக்கு அளிக்கும் முதல் முத்தம். நீரூபனின் வதனம் மகிழ்ச்சியைக் காட்டி, அவளை காதலுடன் பார்த்திருக்க,

அவள் முகத்தில்  விழுந்திருந்த கூந்தலை விலக்கி அவன் விரல்கள் கன்னத்தில் கோலமிட்டன.

“மாமா.. ” என்று ஹஸ்கி வாய்சில் அழைத்தவள், “டான்ஸ் கிளாஸ் போகணும். மாஸ்டர் வெயிட் பண்ணுவாரு.” என்று கூற,

“அப்ப இந்த கிளாஸ்..” என்று அவளது கீழுதட்டை நிமிண்டினான்.

“எங்கேயும் போக போறது இல்ல. லைஃப் லாங் உங்களுக்கு தான். இப்ப போகட்டா? பிளீஸ் மாமா” என்றவள் கண்களை சுருக்கி வினவ,

மெல்ல அவள் நெற்றியில் முட்டியவன், “உனக்கு என்னை இவ்வளவு தூரம் எப்படி பாப்பா புரிஞ்சு வைக்க முடிஞ்சது? ரொம்ப எமோஷனலா இருந்தேன். என்ன தான் உன்கிட்ட பேசினதும் கோபம் குறைந்தாலும்  ஏதோ உள்ள கனன்றுட்டே இருந்தது. இப்ப நார்மலா இருக்கேன்.” என்று சிரிக்க,

“இவ்வளவு பக்கத்துல உங்க சிரிப்பை பார்க்க அழகா இருக்கு மாமா.” என்று கன்னத்தில் விரல்களை பதித்துக் கூறியவாறே அவன் மடியில் இருந்து இறங்கிக் கொண்டாள்.

“நான் கிளம்புறேன். போய் பெரிய மாமாவை பார்த்து பேசுங்க வருங்கால முதல்வரே?” என்று சிரிக்க,

“அன்னைக்கு ஏதோ சும்மா சொல்றன்னு நினைச்சேன். உன் மனசுல என்னை அப்படி பார்க்க ஆசையா உனக்கு? ஆனா எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்ல பாப்பா.” என்று அவன் குதித்து இறங்கினான்.

“நான் அப்படி ஆசைப்பட ஒரு காரணம் இருக்கு. ஒருநாள் அது உங்களுக்கும் புரியும்.  அதுக்கு உங்ககிட்டயும் ஒரு காரணம் உருவாகும். பெரிய மாமாக்கு அப்பறம் அவரோட இடம் உங்களுக்கு தான் வரும். அஞ்சு அண்ணி.. “என்று இழுத்தவள்,

“உங்க கூட இருப்பாங்க. ஆனா பெரிய மாமாவுக்கு அப்பறம் நீங்க தான்.” என்று உறுதியாக கூறிவிட்டு அங்கிருந்து விடைபெற்றாள்.

அவள் பேசுவது புதிராக இருந்தாலும் அவள் மனதின் ஆசையை தன்னிடம் வெளிப்படுத்த அவளுக்கு எல்லா உரிமையும் இருப்பதால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்  அவனும் தந்தையை சந்திக்கச் சென்றான்.


புகைப்படப் பிடிப்பு முடிவுக்கு வந்து விளம்பரப் படத்திற்காக சில சிறிய வீடியோ பதிவுகள் மேற்கொள்ளப் பட்டிருந்தது.

அதனை கண்களால் அளந்தபடி உள்ளே வந்தான் நீரூபன்.

“வா நீரூபா” என்று  எழுந்து வந்தார் திருமூர்த்தி.

“வர சொல்லி போன் பண்ணினீங்க? ” என்று நிமிர்ந்து நின்று அவன் கேட்ட விதத்தில் அவருக்கு மட்டும் பணிவு தெரிந்தது.

“இல்லப்பா போட்டோ எடுக்க தான் வர சொன்னேன்.” என்று மென்று விழுங்கினார்.

“நானா? என்னையா?” இருமுறை புரியாமல் வினவினான் நீரூபன்.

“ஆமா பா. வா போகலாம்.” என்று அவர் முன்னே நடக்க,

“அப்பா. அக்கா இருக்கும் போது” என்று இழுத்தவன் மனதில் பூமிகாவின் குரல் ஒலித்தது .

‘அண்ணி இருந்தாலும் நீங்க தான்.’ ‘என்ன அசரீரி மாதிரி பேசி இருக்கா?’என்று சிந்தித்தவன் கால்கள் தந்தை பின்னே சென்றாலும்,

“அக்காவுக்கு கால் பண்ணி பாருங்க”என்று கூற மர்ககவில்லை.

“இருக்கட்டும் பா. நிறைய தடவை கூப்பிட்டாச்சு. எடுக்கவே இல்ல. அதுவும் இல்லாம இப்ப தான் மாநாடெல்லாம் முடிச்சு வந்திருக்கா, அங்க எடுத்த போட்டோ எடுத்து பயன்படுத்திக்கலாம். நீயும்..” என்று மேலே என்ன பேசுவதென்று தெரியாமல் தவித்தார்.

“அப்பா எனக்கு உங்க கொள்கை மேல அதிக பிடிப்பு இல்லாம இருக்கலாம். ஆனா என் அப்பா மேல அன்பிருக்கு. அப்பாவுக்கு ஆதரவா எப்பவும் கூட இருப்பேன்.” என்று அவர் கைகளில் சிறு அழுத்தம் கொடுத்துக் கூறினான்.

“அப்ப எலெக்ஷன்ல நிக்கிறியா?” கண்கள் ஒளிர கேட்டார் திருமூர்த்தி.

“இல்லப்பா வேண்டாம். நான் வெளில இருந்து உங்களை சப்போர்ட் பண்ணுறேன். ஆமா திடீர்னு என்னைக் கூப்பிட உங்களுக்கு எப்படி தோணுச்சு?” சந்தேகமாக வினவினான் நீரூபன்.

“அந்த எலெக்ஷன் கேம்பெயின் தம்பி தான் வீட்ல யாரையாவது கூப்பிடுங்கன்னு சொல்லுச்சு.” என்று மகன் தலை முடியை ஆராய்ந்தார்.

அவரின் பார்வை புரிந்தவனாக,  “காலையிலேயே ஜெல் வச்சு செட் பண்ணிட்டேன். கலையாது” என்று சிரித்தவன் மனம் உள்ளே வசீகரனை திட்டிக் கொண்டுருந்தது.

அங்கிருந்த புகைப்படக் கலைஞர் அவனது பேண்ட் சட்டையை விசித்திரமாக நோக்க,

“நான் பியூர் அரசியல்வாதி இல்ல பிரதர். இந்த டிரேஸ் போதும்” என்றவனைக் கண்ட திருமூர்த்தியின் மனம் வருந்தியது.

தான் அன்று மனைவியிடம் அவன் வேட்டி சட்டை ஏன் போடுறான்? அரசியலுக்கு வர மாட்டான். ஆனா என்னை எரிச்சல் படுத்த இப்படி ட்ரெஸ் பண்ணிட்டு அலைவானா? என்று கேட்டது நினைவுக்கு வந்து சங்கடம் கொள்ள வைத்தது.

புகைப்படங்கள் எடுத்து முடிந்ததும் தந்தையிடம் சொல்லிக்கொண்டு கிளம்பியவன் முதலில் அழைத்தது வசீகரனுக்கு தான்.

“வசீ” என்று அவன் அழைத்ததும்,

“மாமா பிளீஸ் திட்டாதீங்க. நான் உங்கை கூப்பிட சொல்லல. அஞ்சனா அண்ணி இல்லன்னா அத்தையை கூப்பிடுவார்ன்னு நினைச்சு தான் சொன்னேன். பிளோர் அசிஸ்டன்ட் போன் பண்ணி சொன்னப்ப தான் நீங்க வந்தே எனக்கு தெரியும். மாமா ஐ டின்ட் மீன் டு கால் யூ” என்று அவசரமாகக் கூறினான்.

கடகடவென்று அவன் சொன்னா விதத்தில் நீரூபனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

“எல்லாம் மாமா மாமான்னு சொல்லி ஏமாத்துங்க டா.” என்று வாய்விட்டு நகைத்தான்.

“என்ன மாமா சொல்றீங்க?” என்று புரியாமல் வசீ வினவ,

“ஒன்னும் இல்ல. இனிமே இப்படி கோர்த்து விடுற மாதிரி இருந்தா முன்னாடியே சொல்லு. ட்ரெஸ் மாத்திட்டு வருவேன்.” என்று கூறி அழைப்பை வைத்தவன் ஏன் தன் அக்கா வரவில்லை என்று சிந்திக்கலானான்.

நீரூபனின் சிந்தனையில் இருந்தவளோ அங்கே கணவனை மருத்துவமனையில் கண்டு கொதித்துக் கொண்டிருந்தாள்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவனை பார்க்க வரும் பதற்றம் அற்றவளாக அவனிருந்த அறைக்குள்ளே நுழைந்தாள்.

“என்ன ராக்கி பண்ணி வச்சிருக்க? ” என்று அவன் முன்னே வந்து நிற்க

அப்பொழுது தான் எக்ஸ்ரே எடுக்க வெளியே அழைத்துச் சென்று அறைக்குள் அவனை வீல்சேரில் விட்டுச் சென்றிருந்தனர்.

“நான் என்ன பண்ணினேன்? சும்மா நின்னுட்டு இருந்தவனை ஆள் வச்சு அடிச்சவனை விட்டுட்டு என்னை கேள்வி கேட்கற?” என்று கோபமாக ராக்கி இரைந்தான்.

அவன் சொன்னது அவளுக்கு புதிய தகவலாக இருக்க,

“என்ன சொல்ற ராக்கி?” என்று பதறி அவனிடம் வந்தாள்.

அவசரத்தில் வாய் விட்டது புரிந்தது ராக்கேஷுக்கு.

“அது.. அது. யாருன்னு தெரியல அஞ்சு. திடீர்னு வந்து அடிச்சிட்டு போயிட்டாங்க.” என்று கூறி சமாளித்தான்.

“சரி நான் கமிஷனர் கிட்ட பேசுறேன். உன்னை யாரு அடிச்சிருந்தாலும் தூக்கிட்டு வர சொல்றேன்.” என்று அவள் ஆவேசமாக கூற

எங்கே தன் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் ராக்கேஷ்,

“அதெல்லாம் வேண்டாம் அஞ்சு. காசுக்கு அடிக்க வர்றவன் கிட்ட உண்மையான பேரெல்லாம் சொல்லிட்டா அனுப்புவான் ஒருத்தன்? இனிமே கவனமா இருக்கேன். நீ இப்ப தான் கட்சி ஆபிஸ்ல இருந்து வர்றியா?” என்று பேச்சை மாற்றினான்

“இல்ல ராக்கி காலைல ஒரு அனானிமஸ் நம்பர்ல இருந்து அப்பா அபாயின்ட் பண்ணி இருக்குற கேம்பெயின் கம்பெனி பத்தி தகவல் வந்தது. அதை பத்தி விசாரிக்க போனேன். அங்க சுத்தி இங்க சுத்தி.. டிராபிக்ல லேட்டாகி ஆபிஸ் கிட்ட போகும்போது தான் உன்னைப் பத்தி போன் வந்தது.பார்த்துட்டே அங்க போகலாம்ன்னு வந்தேன்.” என்று கூற,

“என் மேல உனக்கு எவ்வளவு அன்பு அஞ்சு?” என்று லேசாக கண்கள் ஓரத்தில் ஈரத்தைக் காட்டினான் ராக்கேஷ்.

“அதெல்லாம் இல்ல, வரலைன்னா, ‘காலைல அடிபட்ட புருஷனை பார்க்க வராம போட்டோஷூட் எடுத்தார் அஞ்சனா தேவி’ன்னு ‘மாலை நேரம் ‘ பேப்பர்ல ஹெட் லைன்ஸ் வந்துடும். அதான் எப்படியும் பிரஸ் இருப்பாங்கன்னு நினைச்சு வந்தேன் யாரையும் காணோம்..” என்று கடுப்புடன் கூறினாள்.

‘அடிப்பாவி’ என்று உள்ளே நினைத்தாலும் காட்டிக் கொள்ளாமல்,

“எனக்கு ஒன்னும் இல்ல அஞ்சு, நாளைக்கு வீட்டுக்கு வந்துடுவேன். நீ போட்டோ ஷூட்டுக்கு கிளம்பு.” என்று அனுப்ப அவசரம் காட்டியவனிடம்,

“நான் இல்லாம போட்டோ எடுத்து முடிச்சிடுவாங்களா? நான் போகற வரையிலும் காத்துட்டு தான் இருப்பாங்க” என்று கர்வமாக கூறிய அஞ்சனாவுக்கு தெரியாது அங்கே புகைப்பட பிடிப்பு முடிந்து அனைவரும் கிளம்பி விட்டது.

அவனிடம் விடைபெற்று காரில் ஏறியவள் கைபேசியை எடுக்க, எந்த செயலியைத் திறந்தாலும் திருமூர்த்தியின் படமும் நீரூபனின் படமும் பக்கம் பக்கமாக நிற்பது போல விளம்பரங்களும் வாசகங்களும் கண்ணில் அகப்பட கொத்தித்துப் போனாள் அஞ்சனா.