21 – உனதன்பில் உயிர்த்தேன்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 21

‘ஏன் நெருங்க வேண்டும்? பின் ஏன் விலக வேண்டும்?’

தேன்மலர் கடந்த சில நாட்களாகத் தனக்குள் தொடர்ந்து கேட்டுக் கொண்ட கேள்வி இதுவே!

அன்று காய்ச்சல் அடித்த போது, தன் கையைத் தயங்காமல் பற்றிக் கொண்டவன், நெஞ்சை நீவி விட அனுமதி கொடுத்தவன், மடியில் தானாகத் தலை வைத்து படுத்தவன், தலையைக் கோதி விடச் சொன்னவனா இவன்? என்று தன் எதிரே அமர்ந்து உண்டு கொண்டிருந்தவனைப் பார்த்து நினைத்துக் கொண்டாள் தேன்மலர்.

முகம் இறுகியிருக்க, கண்களில் இருக்கும் கனிவு காணாமல் போயிருக்க, உதடுகளில் வார்த்தைகளற்ற மௌனம் குடிக்கொண்டிருக்க அமர்ந்திருந்தான் வைரவேல்.

முன்பு அதிகம் சொல்லும், ‘சோத்தை போடு புள்ள’ என்ற வாக்கியம் கூட இப்போதெல்லாம் அவனின் வாயிலிருந்து வருவது இல்லை.

தட்டு முன் அமைதியாக வந்து அமர்வான். அது மட்டுமே அவனின் செய்கை.

வயல் வேலைகளைப் பற்றி மட்டும் அவளின் முன் நின்று சொல்லுவான். அப்போதும் அவள் முகம் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு சொல்வான்.

ஆரம்பத்தில் அவனின் இந்தச் செய்கைகள் தேன்மலருக்கு அதீத வலியை கொடுத்தது. போகப் போக மரத்துப் போனது போல ஒரு உணர்வு ஆட்கொள்ள அவளும் மௌனப் பதுமை ஆகிப் போனாள்.

இருவரும் ஆளுக்கு ஒரு மூலையில் விறைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அன்றைக்குப் பிறகு பேரனின் வாழ்க்கை செழித்து விடும் என்று கனவு கொண்டிருந்த அப்பத்தாவிற்குப் பெருத்த ஏமாற்றம்.

பேரனின் விலகல் தான் காரணம் என்று புரிந்தது. அவனைக் கேள்வி கேட்க நாவு துடிக்கவும் செய்தது. ஆனால் ஒன்றும் பேச விடாமல் அவரைத் தடுத்து வைத்திருந்தாள் தேன்மலர்.

“நீயும் கேள்வி கேட்காம விலகி போவ, என்னையவும் கேட்க கூடாதுன்னு சொன்னா எப்படித் தாயி? பூனைக்கு யாருதேன் மணி கட்டுறது?” என்று ஆதங்கப்பட்டார்.

“எமக்கும் அவரு அப்படி விலகி போறது வலிக்குதுதேன் ஆத்தா. ஆனா அதுக்காக அன்பை பிச்சை கேட்க முடியலை ஆத்தா. அவரு மனசுல என்ன இருக்குன்னு எமக்கும் ஒன்னும் புரியலை. ஆனா ஏதோ ஒரு கலக்கம் மட்டும் அவருக்கிட்ட இருக்குன்னு மட்டும் புரியுது ஆத்தா. அந்தக் கலக்கம் ஏன் எதுக்குனு புரியாம மண்டை எல்லாம் காயிது…” என்றாள்.

“அதைத்தேன் என்னன்னு அவன் கிட்ட கேட்போம்…” என்றார்.

“வேணாம் ஆத்தா. அவருக்குச் சொல்ல விருப்பம் இல்லைங்கும் போது, கேட்டு என்ன ஆவப்போவுது? அவரு போக்குலயே விடும் ஆத்தா…” என்றாள்.

இவளும் இப்படிச் சொல்லி விட்டு செல்ல, அப்பத்தாவிற்கு அமைதியாக இருப்பதைத் தவிர வேறு வழியும் இருக்கவில்லை.

இந்த நிலையில் தான் வைரவேலுவின் முதல் மனைவி குமுதாவின் நினைவு நாள் வந்தது.

அந்த நாளுக்கு இரண்டு நாட்கள் முன்பே அவன் அவனாகவே இருக்கவில்லை. லோடுக்கு கூடப் போகாமல் கிணற்றடியே கதி என்று கிடந்தான்.

பூக்களை லோடு ஏற்றும் வேலையைக் கூடத் தேன்மலரே ஆள் வைத்து கவனிக்க வேண்டியதாக இருந்தது.

அவனின் மனநிலை புரிந்ததால் அவனைத் தொந்தரவு செய்யாமல் அனைத்து வேலைகளையும் தானே எடுத்து செய்தாள்.

முதல் மனைவியை நினைத்து உருகுகிறவன் தன்னை ஒரு பொருட்டாகக் கூட நினைக்க மாட்டேங்கிறானே என்று ஒரு நாள் கூடத் தேன்மலர் நினைத்தது இல்லை.

ஏனோ அவளுக்கு அப்படி நினைக்கத் தோன்றவும் இல்லை.

சிறு வயதில் இருந்தே எதார்த்தத்தை ஏற்றுப் பழகியவள். அளவு மீறி ஆசை கொண்டதும் இல்லை.

கிடைத்ததை வைத்து நிறைவு கொள்ளும் வாழ்க்கை வாழ மகளைப் பழகி விட்டிருந்தார் அவளின் அன்னை முத்தரசி.

சொல்லப் போனால் கணவனைக் கண்டு ஒரு பெண்ணாகப் பெருமையே கொண்டாள்.

கட்டிய மனைவி அருகில் இருக்கும் போதே மற்ற பெண்களின் மேல் கண்களை மேய விடும் சில ஆண்கள் இருக்கும் போது, தன் கணவன் தன் முதல் மனைவி இறந்த பிறகும் அவளை நினைத்து வருந்துகிறான் என்பது அவனின் ஆழமான நேசத்தைத் தானே எதிரொலிக்கிறது.

அவனைக் கண்டு பெண்ணாகப் பெருமை படும் அதே நேரத்தில் ஒரு மனைவியாக வருத்தமும் கொண்டாள்.

அவ்வருத்தமும் கூட அவன் தன்னை நினைக்கவில்லையே என்று இல்லை. அவனின் உடல் நலனை பற்றி நினைக்கவில்லையே என்றே தான் வருத்தம் கொண்டாள்.

ஆம்! கடந்த இரண்டு நாட்களாக அவன் சரியாகச் சாப்பிடுவதும் இல்லை, உறங்குவதும் இல்லை.

அதில் கிணற்றடியில் கிடப்பதும், கிணற்றுத் தண்ணீரில் இருப்பதுமாக நேரத்தை போக்க, எங்கே உடலுக்கு எதையும் இழுத்து வைத்துக் கொள்வானோ என்று அவளுக்குப் பயமாக இருந்தது.

தன் பயத்தை எல்லாம் அடக்கி வைத்துக் கொண்டு அவனை அவன் போக்கில் விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அதை விடக் கொடுமையாக இருந்தது.

மறுநாள் குமுதாவின் நினைவு நாளாக இருக்க, இரவு நேரம் சென்று சோர்வுடன் வீட்டிற்கு வந்தான் வைரவேல்.

“எமக்கு ராவுக்குச் சோறு வேணாம்…” என்று சொல்லிக் கொண்டே தன் அறைக்குச் செல்ல போனான்.

“எய்யா வேலு, நில்லு…” என்று அப்பத்தா அழைக்க,

“என்ன அப்பத்தா?”

“நாளைக்குக் குமுதாவுக்குத் திதி கொடுக்கணுமேயா. ஒ மாமனாரை கூப்பிடணுமே?” என்றார்.

“அவரா?” என்று யோசனையாக அப்பத்தாவை பார்த்தவன், அப்படியே திரும்பி அங்கே நின்றிருந்த மனைவியைப் பார்த்தான்.

தேன்மலர் அமைதியாக அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்று கோவிந்தன் முன் அவன் மீண்டும் தேன்மலரின் கழுத்தில் தாலி கட்டிய போது இவ்வீட்டிற்கு வந்ததுடன் சரி, அதன் பிறகு அவர் இங்கே வரவே இல்லை.

வழியில் எங்கேயாவது அவனைப் பார்த்தால் கூட வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு போனார்.

அவனும் போகிறார் என்று விட்டுவிட்டான்.

“என்னய்யா, விடிஞ்சதும் போய் ஒரு எட்டு சொல்லிப் போட்டு வர்றீயா?” என்று அப்பத்தா கேட்க,

“இல்ல அப்பத்தா, வேணாம். அவரு வந்தா சும்மா இருக்க மாட்டார். ஏற்கனவே இந்தப் புள்ளய நா நோகடிக்கிறதே போதும். அவரு வந்தா பேச்சாலேயே கொதறிட்டுத்தேன் போவார். பாவம் அப்பத்தா அந்தப் புள்ள. விட்டுடும், இனி எம் மாமனாரு உறவு ஒட்டாது…” என்று சொன்னவன் அதற்கு மேல் அங்கே நிற்காமல் அறைக்குள் சென்று விட்டான்.

சென்றவனையே காதலுடன் பார்த்துக் கொண்டு நின்றாள் தேன்மலர்.

மனம் முழுவதும் முதல் மனைவியின் துக்க நினைவில் இருந்தாலும், அந்த நிலையிலும் தான் வேதனை படக்கூடாது என்று நினைக்கும் அவனின் நல்ல மனது அவளின் நெஞ்சத்தை நெகிழ்த்தியது.

இதை விட அவளுக்கு என்ன வேண்டும் என்று தான் அந்த நேரம் தோன்றியது.

அவனின் அந்த அன்பு தான் அவன் பால் அவளை இன்னும் ஈர்த்தது.

அன்று இரவு அப்பத்தாவை மட்டும் சாப்பிட வைத்து விட்டு, அவனுடன் அவளும் சாப்பாட்டைப் புறக்கணித்தாள்.

அதை அவனும் கவனிக்கவே செய்தான். ஆனாலும் ஒன்றும் கேட்கவில்லை.

அன்று தன் அறையிலேயே படுத்துக் கொண்டான்.

காலை எழுந்து முதலில் குமுதாவின் புகைப்படத்தைப் பார்த்து வருந்தியவன் குளித்து விட்டு, கிணற்றுக்குச் சென்றான்.

தோட்டத்தில் பூத்த பூக்களைப் பறித்துக் கிணற்றில் தூவி விட்டு சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்து விட்டு வீட்டிற்கு வந்தான்.

அவன் வீடு வந்த போது படையல் வைக்க, அப்பத்தாவும், தேன்மலருமாக உணவை தயாரித்து வைத்திருந்தனர்.

கூடத்தில் இருந்த குமுதாவின் படத்திற்கு மாலையிட்டு, அதன் முன் இலை விரித்துப் படையல் போட்டனர்.

மனம் கசங்க மனைவியின் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டு நின்றான் வைரவேல்.

படையல் போட்டு முடிந்ததும் சோகத்துடன் மீண்டும் கிணற்றடிக்குச் சென்றான்.

அவனை அப்பத்தாவோ, தேன்மலரோ எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. அவன் போக்கில் விட்டுவிட்டனர்.

மாலை தான் மீண்டும் வீடு வந்தான்.

“எய்யா, குமுதாவ நினைச்சு உம் மனசு நோவும் தேன். நா இல்லைன்னு சொல்லலை. அதுக்காகப் பட்டினி கிடந்து என்ன ஆகப்போவுதுயா? ஒரு வாய் சாப்புடு ராசா…” என்றார்.

“ம்ம்…” என்றவன் “நீர் சாப்பிட்டீரா அப்பத்தா?” என்று கேட்டான்.

“அதெல்லாம் உம் பொஞ்சாதி ஏ வயித்தை வாட விட மாட்டீங்கிறா. ஆனா அவதேன்…” என்று அவர் ஏதோ சொல்ல வர,

“ஆத்தா, வேணாம்…” என்று வேகமாகத் தடுத்தாள் தேன்மலர்.

தேன்மலரை கூர்மையாகப் பார்த்தான். அவளின் முகத்தில் சோர்வு தெரிந்தது.

தான் சாப்பிடாமல் அவளும் சாப்பிட்டிருக்க மாட்டாள் என்று புரிந்தது. அதைத்தான் சொல்ல விடாமல் தடுக்கிறாள் என்று நினைத்தான்.

உடனே கையைக் கழுவிவிட்டு சாப்பிட அமர்ந்தான்.

“நீயும் அப்படியே சாப்பிடு தாயி…” அப்பத்தா சொல்ல, கணவனுக்கு வைத்து விட்டு தான் உண்டாள் தேன்மலர்.

நாட்கள் அதன் வேகத்தில் செல்ல ஆரம்பித்தன.

வைரவேல், தேன்மலர் வாழ்க்கையில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

ஒட்டிக் கொள்ளவில்லை, உரசிக் கொள்ளவில்லை, பற்றிக் கொள்ளவில்லை.

அது உடல்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மனது! அது மிக மிக நெருங்கியிருந்தது.

அவனுக்காக அவள் ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்துச் செய்வதும், அதிகம் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அவளின் மீது அவன் காட்டும் அக்கறையும் என்று இருவருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் வாழ்ந்தனர்.

அந்த வழியில் அவர்களின் மனது நெருங்கித்தான் இருந்தது.

அன்று தன் தோட்டத்தில் மல்லிகை பூக்களை வேலையாட்களுடன் சேர்ந்து பறித்துக் கொண்டிருந்தாள் தேன்மலர்.

நாளை முகூர்த்த நாளாக இருந்ததால் மல்லிகை பூக்களை டவுனிற்கு அனுப்பி வைக்க வேண்டியது இருந்தது.

அவள் தன் தோட்டத்தில் இருக்க, வைரவேல் அவன் தோட்டத்தில் இருந்தான்.

ஆட்கள் பூக்களைப் பறித்து வர, அதை எடை போட்டு மூட்டை போட்டுக் கொண்டிருந்தான்.

அந்த வேலை முடிந்ததும், அவளின் தோட்டத்திற்குச் சென்று எடை போட வேண்டியது இருந்தது.

சற்று நேரத்தில் தன் வயலில் வேலையை முடித்தவன், அங்கே சென்றான்.

ஆட்கள் ஒரு பக்கம் இருக்க, தேன்மலர் மட்டும் தனியாக ஒரு பாத்தியில் நின்று பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள்.

அவளின் அருகில் சென்றவன், “அங்கன எடை போட்டுட்டேன் புள்ள. இங்கன எடை போட ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டான்.

“ஆரம்பிக்கலாம்யா. அவுகளை எல்லாம் அந்த மரத்தடிக்கு வர சொல்லிட்டு வாறேன். நீர் முன்னாடி போரும்…” என்றவள், தான் பறித்த பூக்களுடன் அடுத்தப் பாத்திக்குப் போனாள்.

அவனும் அவளின் பின்னால் நடந்து கொண்டிருந்தான்.

அப்போது அவளின் காலடியில் திடீரென ஒரு பாம்பு வேகமாக வர, அதைப் பார்த்து விட்டவன், “இந்தா புள்ள, இப்படி வா…” என்று பதறி அவளைத் தன் பக்கம் இழுத்தான்.

அதற்குள் அவளும் பாம்பை பார்த்து திடுக்கிட்டுப் பின்னால் நகர, அவன் இழுத்த வேகத்திலும் இன்னும் நகர்ந்து அவனின் மீது மோதி நின்றாள்.

அவள் உடல் திடீரென ஏற்பட்ட பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது.

“சாரைப் பாம்பு தேன் புள்ள. போயிருச்சு…” என்று தன் கையணைப்பில் இருந்தவளின் முதுகை வருடினான்.

அவனின் அந்த நெருக்கத்தில் பாம்பு பயத்தால் நடுங்கிய நடுக்கம் போய் உணர்ச்சிவசத்தால் நடுங்க ஆரம்பித்தது.

“ஒன்னுமில்ல புள்ள…” என்று அவள் நடுக்கம் கூடுவதை உணர்ந்து இன்னும் அவன் தடவ, அவளுக்கோ உடலே சிலிர்த்துப் போனது.

முதல் முறையாக அவ்வளவு நெருக்கமாகத் தன் கணவனின் நெருக்கத்தை உணர்கிறாள்.

கிட்ட தட்ட பின்னாலிருந்து அவன் தன்னை அணைத்துக் கொண்டிருப்பது போலான நிலை அது.

“என்னாச்சு தேனு?” என்று வேலை செய்யும் ஒருவரின் குரல் கேட்க, அப்போது தான் தங்கள் நிலையை உணர்ந்தவன் போல் பட்டென்று விலகினான் வைரவேல்.

அவனின் முகத்தில் ஓர் அவஸ்தையான உணர்வு ஓடி மறைந்தது.

உடனே அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டான்.

அவன் அங்கிருந்து சென்ற பின்னும் அவளின் மனம் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.

அவள் இதுவரை அனுபவித்திராத புதுவிதமான உணர்வு அவளை ஆட்கொள்ளச் சில நொடிகள் அவளுக்குள்ளேயே தவித்துத் தான் போனாள்.

“வேலு தம்பி பூ எடை போட கூப்பிடுது தேனு…” என்று ஒருவர் குரல் கொடுக்க, தன்னைச் சமன்படுத்திக் கொண்டு அங்கிருந்து சென்றாள்.

அங்கே சற்றுமுன் ஒன்றுமே நடவாவது போல் ஆள்கள் பறித்த பூக்களை எடைப் போட்டுக் கொண்டிருந்த கணவனை ஓரப்பார்வையாகப் பார்த்தாள் தேன்மலர்.

பூக்களை அளந்து கொண்டிருந்த அவன் கையைக் கண்டவளுக்கு, இன்னும் தன் முதுகை அவன் வருடுவது போல் குறுகுறுப்பை உணர்ந்தாள்.

“எடைய குறிச்சு வை புள்ள. அப்படியே அந்தச் சாக்கை எடு…” என்று கணவன் குரல் கொடுத்ததும் தன் கனவை விட்டு நிகழ் உலகிற்கு வந்தாள்.

அடுத்து வேலையே சரியாக இருக்க, வேறு எதையும் நினைக்க நேரமில்லாமல் போனது.

ஆனால் அன்று மாலை வீட்டு வேலைகளை முடித்து நிதானமாக அமர்ந்ததும் மீண்டும் தேன்மலருக்குள் ஒரு குறுகுறுப்பு.

கணவனின் நினைவு மனம் முழுவதும் ஆட்கொள்ள, வீட்டின் பின் பக்கம் துவைக்கும் கல்லில் அமர்ந்திருந்தாள்.

ராசு அவள் காலடியில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.

“என்ன ராசு என்னைய அப்படிப் பார்க்கிறீரு? இவ என்ன ஒரு மார்க்கமா இருக்கா. இவளுக்குக் கிறுக்கு எதுவும் பிடிச்சுப் போச்சான்னு பார்க்கிறீரோ?” என்று அதனிடம் கேட்டாள்.

அதுவும் ‘ஆமாம்’ என்பது போல் வேகமாக வாலை ஆட்டியது.

“எமக்குக் கிறுக்குத்தேன் பிடிச்சுப் போலருக்கு ராசு. எம் புருசன் மேல கிறுக்கு. மனசு எல்லாம் அப்படியே பிராண்டி எடுக்குது ராசு. ஏன் இப்படின்னே தெரியலை. ஆனா இதுவும் நல்லாத்தேன் இருக்கு…” என்று கண்கள் கனவில் மின்ன கூறினாள்.

அப்போது ராசு, ‘வவ்… வவ்…” என்று குரைத்துக் கொண்டே பின்னால் ஓடியது.

எதையாவது பார்த்து ஓடி இருக்கும் என்று அவள் சர்வசாதாரணமாக அமர்ந்திருக்க,

“சரி ராசு, வாறேன் இரு…” என்று அவளின் முதுகிற்குப் பின்னால் குரல் கேட்டது.

பட்டென்று திரும்பி பார்த்தாள். அவளின் கணவனை ராசு வரவேற்று அவனின் மீது தாவி கொண்டிருந்தது.

‘தான் பேசியதை கேட்டிருப்பாரோ?’ என்று அவனைப் பார்த்ததும் அதுதான் அவளுக்குத் தோன்றியது.

தாவி வந்த ராசுவை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாலும், அவனின் பார்வை கூர்மையுடன் அவளின் மீது தான் படிந்திருந்தது.

அவனின் பார்வையில் தான் பேசியதை கேட்டு விட்டான் என்று புரிந்து போக, முகத்தைத் திருப்பிக் கொண்டு வேகமாக வீட்டிற்குள் சென்றாள்.

அன்றிரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் தேன்மலர்.

நல்ல தூக்கத்தில் அவளின் கழுத்தில் ஏதோ உரசுவது போல் இருந்தது.

அதில் கூசி கழுத்தை திரும்பினாள். ஆனால் மீண்டும் சிறிது நேரத்தில் கழுத்தில் கூச்சத்தை உணர்ந்தாள்.

தூக்கத்திலேயே கழுத்தில் கை வைத்து தட்டிவிட்டாள்.

ஆனால் கைகளுக்கு ஒன்றும் அகப்படவில்லை.

‘ப்ச்’ என்று சலித்துக் கொண்டவள் மீண்டும் வேறுபக்கம் கழுத்தை திருப்பி லேசாக விழிகளைத் திறந்து பார்த்தாள்.

அவள் அறையின் வாசலில் ஏதோ நிழல் உருவம் தெரிய, பயத்தில் நன்றாக விழிகளைத் திறந்து பார்க்க, அவ்வுருவம் அவ்விடத்தை விட்டு வேகமாகச் செல்வது போல் இருந்தது.

“யாரது?” என்று கேட்டுக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்தவள் வெளியே வந்து விளக்கை போட்டு விட்டுக் கூடத்தை நன்றாகப் பார்த்தாள். யாரும் தெரியவில்லை.

‘யாரோ போன மாதிரி இருந்ததே…’ என்று நினைத்துக் கொண்டே வாசல் கதவு அருகே நின்று கதவை பார்த்தாள்.

கதவு தாழ் போடாமல் இருக்க, உடனே திறந்து கொண்டது.

இரவு அவள் தான் கதவை அடைத்தாள். நடுவில் வெளியிலிருந்து அப்பத்தாவோ, வைரவேலுவோ எதுவும் தேவைக்கு உள்ளே வர வேண்டுமென்றால் அவர்களிடம் ஒரு சாவி இருந்தது.

அப்பத்தா எப்போதும் தன் தலையணைக்கு அடியில் அந்தச் சாவியை வைத்திருப்பார்.

அனேகமாக இருவரும் அந்தச் சாவியைப் பயன்படுத்துவது இல்லை. காலையில் தேன்மலர் எழுந்து வந்து கதவை திறக்கும் போது தான் அவர்களும் உள்ளே வருவர்.

அப்படியிருக்க இப்போது யார் கதவை திறந்தது என்ற கேள்வியுடன் வெளியே வந்து பார்க்க, திண்ணையில் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தார் அப்பத்தா.

வாசலில் இருந்த கட்டிலில் வைரவேலுவும் உறக்கத்தில் இருந்தான்.

இருவரும் உறக்கத்தில் இருக்க, யார் கதவை திறந்து வீட்டிற்குள் வந்து சென்றனர் என்று பயத்துடன் யோசித்தாள் தேன்மலர்.

அப்போது தெருவில் யாரோ நடந்து செல்வது போல் இருக்க, யாரென்று கூர்ந்து பார்த்தாள்.

தெருவில் நடந்து கொண்டிருந்தவனின் முகம் இப்போது தெருவிளக்கின் வெளிச்சத்தில் தெரிய, அந்த ஆடவனின் முகத்தை அரண்டு போய்ப் பார்த்தாள் தேன்மலர்.

கண்களில் வன்மத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டே தன் ஒரு காலை இழுத்து இழுத்து அவர்களின் வீட்டை கடந்து சென்று கொண்டிருந்தான் ராமர்.