12 – சிந்தையில் பதிந்த சித்திரமே

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 12

கதிர்நிலவனின் ஆக்ரோஷமான பேச்சில் அதிர்ந்து நின்று போனாள் நயனிகா.

அவள் கண்கள் முழுவதும் அவனின் செயற்கை கையின் மீதே இருந்தது.

தோளிலிருந்து முழங்கை வரை மட்டுமே அவனின் வலது கை இருந்தது.

முழங்கையிலிருந்து விரல்கள் வரையிலும் செயற்கை கை பொறுத்தப்பட்டிருந்தது.

அதைப் பார்த்தவள் கலங்கவில்லை. ‘இவன் கை இப்படியா இருக்கும்?’ என்று அதிரவில்லை.

இயல்பாக அவனின் கையைக் கண்ணுற்றாள்.

அவளின் அதிர்வெல்லாம் அவனின் கோபத்திற்கு மட்டுமே.

உடலே ஆடி நடுங்கும் அளவிற்கு அவன் கொண்ட கோபம் தான் அவளைத் திகைக்க வைத்தது.

தன் முன்னால் அவன் நீட்டிய கையை மெல்ல பற்றிக் கொண்டவள், தன் கன்னத்தோடு அவனின் கையை அழுத்தி வைத்துக் கொண்டாள்.

“ஆமா, உங்க வலது கைக்கு உயிர் கிடையாது தான். அதனால் என்ன?” என இயல்பாகக் கேட்டவளை உறுத்து விழித்துத் தன் கையை அவளிடமிருந்து விடுவித்துக் கொண்டான்.

“ஒரு கை இல்லாதவனைக் கல்யாணம் பண்ண எப்படி முடிவு எடுத்த?” என்று கேட்டான்.

“நான் உங்க உருவ அழகை பார்த்து விரும்பலை கதிர். நான் உங்க பெயர் சொல்லி கூப்பிடலாம்ல? என்னால் இனி சார்ன்னு உங்களைக் கூப்பிட முடியாது. வெறும் ‘ங்க’ போட்டு கூப்பிடவும் கஷ்டமா இருக்கு. அதனால் கதிர்னே சொல்றேன்…” அவனிடம் அனுமதி கேட்டவள் அதைப் பெற்றுக் கொள்ளாமலேயே கதிர் என்று அழைக்க ஆரம்பித்தாள்.

“நான் விரும்பியது உங்க மனசை பார்த்து தான் கதிர். அதிலும் உங்க பிறந்தநாள் அன்னைக்கு உங்க அம்மாவை நினைச்சு நீங்க பேசி கலங்கிய போது நீங்க உங்க அம்மாகிட்ட ஆசைப்பட்டதை எல்லாம் நான் உங்களுக்குச் செய்யணும்னு ஒரு உத்வேகம் வந்தது.

நீங்க கண்கலங்கியதை என்னால் தாங்கவே முடியலை. உங்க தாரமா உங்களுக்கு எல்லாமுமா நான் இருக்கணும்னு என் மனசு துடிச்ச துடிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த மாதிரி ஒரு உணர்வை நான் வேற யார்கிட்டயும் உணர்ந்தது இல்லை…” என்று காதலில் மிதந்த விழிகளுடன் சொன்னாள்.

“ஓஹோ! என் கண்ணீரை பார்த்ததும் காதல் வந்ததாக்கும்? அதுக்குப் பெயர் பரிதாபம். பரிதாபத்தைக் காதல்னு நினைச்சு நீ தான் மனசை குழப்பிக்கிட்ட. எனக்கு யாரோட பரிதாபமும் வேண்டாம். போ…” என்றான்.

“பரிதாபத்திற்கும், காதலுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு நான் விடலை பருவத்தில் இருக்கலை கதிர். இனி போ… போன்னு சொல்லாதீங்க. உங்கள் வாழ்க்கையில் நான் இருப்பேன். என்னால் உங்களை விட்டுட்டு போக முடியாது…” என்று உறுதியாக நின்றாள்.

அவளின் பேச்சில் அவனுக்குக் கோபம் தான் வந்தது.

“போதும் நயனிகா. உன் அர்த்தமில்லாத பேச்சை கேட்க நான் இனி தயாராக இல்லை. கை இல்லாதவனைக் காதல் பண்றேன்னு இப்ப சொல்ல நல்லாத்தான் இருக்கும். ஆனா ஒரு நாள் இவனுக்கு ஒரு கை இல்லையேன்னு யாராவது உன் முன்னாடி சொன்னால் அப்போ கண்டிப்பா ஃபீல் பண்ணுவ.

அப்போ உடைஞ்சு போகப் போறது நீ இல்லை. நான் தான். நான் உடையவும் தயாராக இல்லை. அப்படி உடைய காரணமாக இருக்கப் போகிற கல்யாணமும் எனக்குத் தேவையில்லை. என்னை நிம்மதியா வாழ விடு நயனிகா…” என்றான்.

“நான் அப்படி ஃபீல் பண்ணுவேன்னு நீங்களா ஏன் நினைக்கிறீங்க? கண்டிப்பா நான் அப்படி ஃபீல் பண்ண மாட்டேன் கதிர்…” என்றவள் அவன் அருகில் வந்து தோளில் கை வைக்கப் போக, வேகமாக அவளை விட்டு விலகினான்.

“என்னைத் தொடாதே! நீயும் இன்னொரு அஷ்வத்தா மாறிடாதே!” என்று அவன் பட்டென்று சொல்ல, அடிவாங்கிய குழந்தையாக விதிர்த்து நின்றாள் நயனிகா.

அவன் சொன்ன வார்த்தையை அவளால் தாங்கவே முடியவில்லை.

‘அப்போ என்னையும் அஷ்வத் போல் காதல் செய்யச் சொல்லி டார்ச்சர் செய்வதாகச் சொல்கிறானா?’ என்று நினைத்தவள் நெஞ்சம் வலிக்க அவனைப் பார்த்தாள்.

அவளின் கண்கள் சட்டென்று கலங்கி போனது.

“நீங்க இப்படிச் சொல்லுவீங்கன்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை கதிர். அப்போ காதல் செய்யச் சொல்ல உங்களை மிரட்டுறேன்னு சொல்றீங்க? அப்படித்தானே? நான் உங்களை என்னைக் காதல் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தவே இல்லை கதிர்.

நான் தான் உங்களை விரும்புறேன்னு சொன்னேன். நான் உங்களை விரும்புவதை உங்களால் தடுக்க முடியாது கதிர். நீங்க என்னை விரும்பலைனாலும் நான் உங்களை விரும்பிக்கிட்டே இருப்பேன். என் உயிர் உள்ள வரை!” என்று லேசாக இமைகள் நனைய தன் மனதை சொன்னாள்.

கதிர்நிலவனோ அசையாமல் நின்றான். அவனின் உடல் எஃக்கிரும்பாக இறுகிப் போயிருந்தது.

அவன் அப்படியே நிற்க, அதற்கு மேல் அவனிடம் என்ன பேசுவது என்றும் அவளுக்குத் தெரியவில்லை. தன் மனதை அவனிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தாள் சொல்லிவிட்டாள்.

இதற்கு மேல் தான் எதுவும் பேசினால் அவன் சொன்னது போல் தான் அஷ்வத் போல் தான் ஆகிவிடுவோமோ என்று நினைத்தவள் வேறு எதுவும் பேசாமல் கதவை திறந்து கொண்டு வெளியே சென்றாள்.

தன் வீட்டு கதவை தட்டப்போகும் நேரம் சரியாக அபிராமி கதவை திறந்தார்.

“இப்பத்தான் என்னடா இன்னும் உன்னைக் காணோம்னு பார்த்தேன். உன் போன் என்னாச்சு? போட்டுப் பார்த்தேன்… நீ எடுக்கவே இல்லை. அதான் வெளியே வந்து பார்ப்போம்னு வந்தேன்…” என்றார்.

“கொஞ்சம் லேட் ஆகிடுச்சுமா. போன் சார்ஜ் கம்மியா இருந்தது, ஆப் ஆகியிருக்கும் போல…” என்று சோர்வாகச் சொன்ன படி உள்ளே சென்றாள்.

மகளின் சோர்வை கண்டவர் அதற்கு மேல் எதுவும் கேள்வி கேட்கவில்லை.

“சரி காஃபி போடுறேன். குடிச்சுட்டு உன் ரூமுக்கு போ. ரொம்பச் சோர்வா தெரியுற…” என்றவர் உடனே சமையலறைக்குச் சென்றார்.

‘சோர்வு உடலில் இல்லைமா, மனதில் தான்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவளுக்குக் கண்கள் கலங்குவது போல் இருந்தது.

நயனிகா அப்படித்தான். அவள் சற்று உணர்ச்சிவசப்பட்டாள் என்றாலே கண்கள் சட்டென்று கலங்கி விடும்.

தன் கண்ணீரை கண்டுவிட்டு அன்னை கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாது என்று நினைத்தவள் முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

அபிராமியும் உடனே காஃபியுடன் வர, அதை அமைதியாக வாங்கிக் குடித்து விட்டு தன் அறைக்குள் சென்றாள்.

தனிமை கிடைத்ததும் அவனின் நிராகரிப்பை நினைத்து வாய் விட்டு அழத் தோன்றியது.

ஆனாலும் அன்னை எந்த நேரம் வேண்டும் என்றாலும் தன் அறைக்குள் வரலாம் என்பதால் தன் அழுகையை அடக்கிக் கொண்டவள் குளியலறைக்குள் புகுந்து முகத்தில் தண்ணீர் அடித்துக் கழுவினாள்.

உடையையும் அப்படியே மாற்றி விட்டு வந்தவள் படுக்கையில் அமர்ந்து நிதானமாக யோசித்தாள்.

கதிர்நிலவன் பேசியதை எல்லாம் மனதில் ஓட விட்டாள்.

அவன் கல்யாணமே செய்து கொள்ளப் போவது இல்லை என்று தானே சொன்னான். தன்னை மட்டுமே கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று மறுக்கவில்லையே என்று நினைத்தாள்.

அவன் தன் கைக்காகத் தான் தயங்குகிறானே தவிரத் தன் மீது வெறுப்பில்லை என்று இப்போது புரிந்தது.

அதிலும் அவன் கோபப்படும் போது உரிமையானவன் போல் ‘டி’ என்று அழைத்ததையும் நினைத்துப் பார்த்தாள்.

யாரிடமும் அவன் மரியாதை குறைவாகப் பேசியதை அவள் கேட்டதே இல்லை. வயதில் சிறியவர்களை ஒருமையில் அழைத்துப் பேசினாலும் அதிலும் பண்பு இருக்கும்.

கோபமே என்றாலும் அப்படி யாரையும் ‘டி’ சொல்லிவிடும் குணம் அவனுக்கு இல்லை என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.

அவன் குணத்தையும் தாண்டி சொல்லியிருக்கிறான் என்றால், தன் மீது அவனுக்குத் தனி இடம் உண்டோ என்று தோன்றியது.

அந்த எண்ணம் தோன்றியதும் அவளின் உடல் லேசாகச் சிலிர்த்துக் கொண்டது.

தன்னை விலக்கி நிறுத்தவே அவன் அஷ்வத் பெயரை இழுத்திருக்கிறான் என்பது புரிய, அது அப்போது போல் இப்போது அவளுக்கு வலியைத் தரவில்லை.

‘உங்க நினைப்பு படி நான் விலகியே இருக்கேன் கதிர். ஆனால் உங்கள் நிழலாக நான் உங்களைப் பின் தொடர்வதை உங்களால் தடுக்க முடியாது…’ என்று தன் மனதோடு சொல்லிக் கொண்டவள் ஒரு முடிவுக்கு வந்து விட்டிருந்தாள்.

இங்கே கதிர்நிலவன் அவள் சென்றதும் ‘ஷ்ஷ்’ என்று மூச்சை இழுத்து விட்டவன் தளர்ந்து சோஃபாவில் அமர்ந்தான்.

அவனின் உடல் இன்னும் உணர்ச்சி வசத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது.

தன் இடது கையால் தலையை அழுந்த கோதிக் கொண்டவன், தன் வலது கையை முகத்திற்கு நேராக நீட்டிப் பார்த்தான்.

தன் செயற்கை கையையும் எந்த வேறுபாடும் காட்டாமல் அவள் தன் கன்னத்தில் அழுத்தி வைத்துக் கொண்டதை நினைத்தவனின் உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.

அவளின் காதலில் உள்ளம் துடித்தாலும், அதற்கு எதிர்வினை ஆற்ற முடியாத தன் நிலையை அறவே வெறுத்தவன் தளர்ந்து சோஃபாவில் தலையைச் சாய்த்துக் கண் மூடிக் கொண்டான்.

அவனின் யோசனை எங்கெங்கோ சுழன்று வந்தது. கூடவே மனதில் இனம் புரியாத வலியும் பரவியது.

ஆனாலும் நயனிகா விஷயத்தில் அவன் முடிவில் மட்டும் சிறிதும் மாற்றமில்லை.

நாட்கள் எந்தத் தேக்கமும் இல்லாமல் சீராகச் சென்று கொண்டிருந்தது.

அன்றைக்குப் பிறகு நயனிகா அவனை எந்த வழியிலும் தொந்தரவு செய்யவில்லை.

கல்லூரிக்குச் செல்வதும், வருவதுமாக இருந்தாள்.

இதற்கு இடையே ஒருநாள் அவளின் தோழி பானுவிற்குத் திருமணம் நடைபெறும் நாள் வந்தது.

தன் தந்தையுடன் வீட்டிற்கு வந்து பத்திரிக்கை கொடுத்து விட்டு சென்றிருந்தாள் பானு.

நாளை காலை திருமணம் என்பதால் முதல் நாள் மாலை தோழிக்கு பரிசு வாங்க கடைக்குச் செல்ல முடிவெடுத்து, தயாவையும் உடன் அழைத்தாள்.

தயா தன் பைக்கில் அவளை அழைத்துச் சென்றான்.

“அக்கா, நாளைக்கு உன் ஃபிரண்ட் கல்யாணத்துக்கு என்னையும் கூட்டிட்டு போவீல?” என்று கேட்டான் தயா.

அவனுக்குப் பின் உட்கார்ந்திருந்தவள், “ஏன்டா நாளைக்கு நீ விளையாட போகலையா? நாளைக்குச் சண்டே ஆச்சேடா. கிரிக்கெட் விளையாட போவியே?” என்று கேட்டாள்.

“இந்த வாரம் விளையாட்டுக்கு லீவ் போட போறேன்கா. வாராவாரம் தானே விளையாடுறேன். இந்த வாரமாவது கலர் கலரா பார்க்கிறேனே…” என்றான் குறும்புடன்.

“கலர், கலராவா…” என்று யோசனையுடன் இழுத்தவள் சட்டென்று புரிந்தது போல், “அடப்பாவி! சைட் அடிக்கவா வர்றேன்னு சொல்ற? நீ இன்னும் சின்னப் பையன்டா. அது நினைப்பு இருக்கா இல்லையா?” என்று கேட்டாள்.

“ஹலோ அக்கா, எனக்குச் சைட் அடிக்கிற வயசு வந்துடுச்சு. என்னைப் போய் இன்னும் சின்னப்பையன்னு சொல்லிட்டு இருக்குற. நாளைக்கு நானும் உன் கூடக் கல்யாணத்துக்கு வருவேன். சைட் அடிக்கத்தான் போறேன்…” என்றான் தயா.

அவனின் தலையில் லேசாக அடித்தவள், “இப்பயே என்னடா உனக்கு எல்லாம் சைட்டு? என் கூடப் படிச்ச பிள்ளைங்க தான் நிறையப் பேர் வருவாங்க. அவங்க எல்லாம் உனக்கு அக்கா மாதிரிடா…” என்றாள்.

‘சைட் அடிக்கிறதுக்கு அக்கா வயசா இருந்தால் தான் என்ன?’ என்று அவன் முனங்கி கொள்ள,

“நீ முனங்குறது கேட்குதுடா தம்பி…” என்று அவனின் காதை லேசாகத் திருகினாள்.

“ஆஆ… அக்கா, பேசாம இரு. வண்டியை எங்கயாவது விட்டு மோதிட போறேன்…” என்று அவன் அலறிய பிறகு தான் விட்டாள்.

“என்ன கிப்ட்கா வாங்க போற?” என்று கேட்டான்.

“என்ன வாங்குறதுன்னு எனக்கும் குழப்பமாத்தான் இருக்கு தயா. கடைக்குப் போய்ப் பார்த்தால் தான் முடிவு பண்ண முடியும்…” என்றாள்.

அக்கா, தம்பி இருவரும் பேசிக் கொண்டே ஒரு பரிசு பொருள் கடைக்குச் சென்றனர்.

சற்று நேரம் தேடி பிடித்து ஒரு பரிசை வாங்கி அங்கேயே வண்ணத்தாள்களால் பார்சல் செய்தும் வாங்கிக் கொண்டாள்.

“அக்கா ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிடுவோமா?” கடையை விட்டு வெளியே வந்ததும் கேட்டான் தயா.

“சரி வா போகலாம். எந்த ஐஸ்கிரீம் கடைக்குப் போற?” என்று கேட்டாள்.

“பக்கத்து ரோட்டுல இருக்குற கடையில் நல்லா இருக்கும். அங்கே போகலாம்…” என்று தமக்கையை அழைத்துப் போனான்.

இருவரும் உள்ளே சென்று அவரவருக்குப் பிடித்த ஐஸ்கிரீமை தருவித்து உண்டனர்.

அது வரிசையாகக் கடைகளாக இருக்கும் சாலை.

தன் ஐஸ்கிரீமை உண்டு கொண்டே வெளியே சாலையையும், எதிர் கடைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் நயனிகா.

அப்போது எதிர் கடை வாசலில் நின்றிருந்த கதிர்நிலவனைப் பார்த்து தன் கண்களை அங்கே நிலைக்க விட்டாள்.

கதிர்நிலவன் மட்டும் இல்லாது அவனுடன் ஒரு யுவதியும் இருக்க, அவளின் விழிகள் கேள்வியுடன் பார்த்தன.

அந்தப் பெண் கதிர்நிலவனிடம் ஏதோ சிரித்தபடி பேச, அவனும் பதிலுக்கு மெல்லிய சிரிப்புடன் அவளுடன் பேசிக் கொண்டிருந்தான்.

அவனை ஒரு பெண்ணுடன் பார்த்தவளுக்கு மனதிற்குள் ஏதோ பிசைந்தது.

நீட்டாகச் சேலை கட்டி, விரித்து விட்ட கூந்தலை அவ்வப்போது ஒதுக்கி விட்டபடி, முகம் மலர சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.

அதிலும் கதிர்நிலவனின் மிக அருகே நின்று அவள் பேச, காதல் கொண்ட நயனிகாவின் மனம் பொறாமையில் பொங்கியது.

‘யாரது, என் கதிரிடம் இவ்வளவு உரிமையாகப் பேசுவது?’ என்று உள்ளுக்குள் புகைந்த படி பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது எதிர் கடையைக் காட்டி கதிர்நிலவன் ஏதோ சொல்ல, அவளும் சம்மதமாகத் தலையை அசைத்துக் கொண்டிருந்தாள்.

உடனே இருவரும் எதிரே இருந்த காஃபி ஷாப்பிற்குள் நுழைந்தனர்.

உள்ளே சென்று இருக்கையில் இருவரும் எதிர் எதிரே சென்று அமர்ந்தனர்.

இங்கே இருந்து பார்த்தால் அவர்கள் இருவரும் அமர்ந்திருக்கும் இடம் நன்றாகத் தெரிய, நயனிகா அவர்களை விட்டுக் கண்களைத் திருப்பவில்லை.

“அக்கா, அப்படி என்ன வேடிக்கை பார்க்கிற? உன் ஐஸ்கிரீம் உருகுது பார்…” என்று தயா அவளின் பார்வையைக் கலைக்க,

“உருகினால் உருகட்டும் போடா…” என்று தலையைத் திருப்பாமல் சொன்னாள்.

“உனக்குப் பிடிச்ச ஐஸ்கிரீமே வேண்டாத அளவுக்கு என்னத்தைப் பார்க்கிற?” என்று கேட்ட தயாவும் தன் பார்வையை அவள் பார்க்கும் திசையில் திருப்பினான்.

அவனும் கதிர்நிலவனைக் கண்டான். கூடவே இருக்கும் பெண்ணையும் பார்த்துவிட்டு, தன் அக்காவின் புறம் கண்களைத் திருப்ப, கண்களில் பொறாமை பொங்க கதிர்நிலவனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளை மனதில் தோன்றிய கேள்வியுடன் பார்த்தான்.

விடலை பருவத்தில் நுழைந்திருந்த தயாவிற்கு அக்காவின் பார்வையில் இருந்த வித்தியாசம் பிடிப்பட்டுப் போனது.

‘கதிர் சார் யாரோ ஒரு பொண்ணு கூடப் பேசினால் அக்காவுக்கு ஏன் இவ்வளவு பொறாமை வருது? அப்போ கதிர் சார் மேல அக்காவுக்கு…?’ என்று நினைத்தவனுக்கு மேலும் அதை எப்படி நினைப்பது என்று புரியவில்லை.

ஏனெனில் கதிர்நிலவனுக்கும், தன் அக்காவிற்கும் இடையே ஆசிரியர், மாணவி என்று ஒரு உறவு இருப்பதால் தான் நினைப்பது சரியா என்றும் அவனால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

அதனால் அமைதியாகத் தன் அக்காவின் நடவடிக்கையைக் கவனிக்க ஆரம்பித்தான் தயாகர்.

தம்பியின் பார்வை தன் மேல் படிந்ததைக் கவனத்தில் கொள்ளாமல் கதிர்நிலவனைச் சுற்றியே தன் நயன விழிகளைச் சூழ விட்டாள் நயனிகா.