🌊 அலை 36 🌊

இருக்கும் போது தெரியாத

அருமை இழந்த பின்னர்

அறிவுக்கு எட்டும்!

சேர்ந்திருக்கையில் புரியாத

உணர்வுகள் பிரிந்தால் தான்

புத்திக்கு உரைக்கும்!

காதலில் பிரிவு கூட அழகே!

மதுசூதனன் மருத்துவமனையில் இருந்து திரும்பியதிலிருந்து அவன் மனம் நிலையாக இல்லை. தனுஜா சுயநலவாதி என்பதை ஒரு சில சம்பவங்கள் மூலம் அறிந்திருந்தாலும் நோயாளியாய் இருக்கும் சங்கரநாராயணன் பொய் கூற மாட்டார் என நம்பினான் அவன்.

ஆனால் தந்தையும் மகளுமாய் சேர்ந்து எவ்வளவு அழகாய் பொய் சொல்லி அவனை நம்ப வைத்துவிட்டார்கள்! அவனும் தன் அறிவை அடகு வைத்துவிட்டு அவர்களின் பேச்சை நம்பி மதுரவாணியிடம் குறுக்கு விசாரணை நடத்தியது உலக மகா முட்டாள்தனம் அல்லவா!

எல்லாவற்றுக்கும் மேலாய் இன்றைய தினம் அவள் லவ்டேலில் வைத்துப் பேசியது வேறு மனதை கனக்க செய்ய தானும் ஸ்ரீதரும் ஏற்கெனவே பேசியிருந்தபடி தாங்கள் போட்ட திட்டத்தைச் செயல்படுத்தும் முடிவுக்கு வந்தான் அவன்.

வேறு வழியும் இல்லை! நாளைக்குப் பேசிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டால் மதுரவாணி இன்றைய தினத்தைப் போல நாளையும் தன்னைப் பார்வையாலேயே மிரட்டிப் பணியவைப்பாளேயன்றி தனது பேச்சையோ சமாதானங்களையோ காதில் போட்டுக்கொள்ளவே மாட்டாள்!

எனவே ஸ்ரீதரை அழைத்தவன் இப்போதே ஸ்ரீரஞ்சனியின் வீட்டுக்குச் செல்லலாம் என்று சொல்லி அவனையும் கையோடு அழைத்து வந்துவிட்டான்.

ஸ்ரீதர் அழைத்ததும் வேறு வழியின்றி வெளியே வந்த ஸ்ரீரஞ்சனி அங்கே மார்பின் குறுக்கே கைகளைக் கட்டியவண்ணம் நின்றவனைக் கண்டதும் எரிச்சலுற்றாள்.

“இப்போ என்ன சொல்லி என்னைத் திட்டித் தீர்க்கலாம்னு யோசிக்கிறிங்களா?” என்றாள் உஷ்ணக்குரலில்.

“நான் ஏதோ ஒரு கோவத்துல பேசிட்டேன் ரஞ்சனி… ஐ அம் சாரி! அதோட நீ பண்ணுனதும் தப்பு தானே! பொய் சொல்லுறது நல்ல பழக்கம் இல்ல… இதை நீயும் புரிஞ்சிக்கணும்”

“இசிண்ட்? நான் புரிஞ்சுக்கிட்டேன்… நீங்க கிளம்புங்க நல்லவரே” என்று அலட்சியமாய் உரைத்தவள் வீட்டினுள் செல்லும் பாதையில் அடியெடுத்து வைக்க அதற்குள் அவளது இடை பற்றி இழுத்து தன்னருகே நிறுத்திக் கொண்டான் ஸ்ரீதர். அதில் முதலில் அதிர்ந்து பின்னர் சினமுற்றாள் ஸ்ரீரஞ்சனி.

“பொறுப்பான போலீஸ் ஆபிசர் மாதிரி நடந்துக்காம டீனேஜ் பையன் மாதிரி பிஹேவ் பண்ணுறிங்க… விடுங்க என்னை”

“போலீஸ் ஆபிசர் மாதிரி நடந்துக்கணும்னா உன் நெத்தியில கன் வச்சு என் லவ்வ புரிஞ்சுக்கோடினு சொல்லணுமா? ஐ அம் ரெடி டு டூ தட்… பட் நீ அப்போவாச்சும் என் மனசுல உள்ளத புரிஞ்சிப்பியா ரஞ்சி?”

“உங்கள மாதிரி பசங்களுக்கு மனசுனு ஒன்னு இருக்குதா? வாவ்! வாட் அ சர்ப்ரைஸ்… நான் இது வரைக்கும் இங்க இருக்கிறது வெறும் கல்லுனு நினைச்சேன்” என்றபடி அவனது இடப்பக்க மார்பில் இதயம் இருக்கும் இடத்தை ஆட்காட்டிவிரலால் அழுத்தமாய் தொட்டுவிட்டு நின்றாள் ஸ்ரீரஞ்சனி.

அவள் கண்களில் கண்ணீர் பளபளப்பது அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கின் ஒளியில் அவனுக்குத் தெரிய அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டவன் “ஐ அம் ரியலி சாரி ரஞ்சனி! என்னோட வார்த்தைகள் ரொம்பவே ஹார்சா தான் வந்துடுச்சு… அதுக்குனு உன்னை என்னால வெறுக்க முடியாதுடி… ஐ லவ் யூ… நீயும் என்னை வெறுத்து விலகிப் போகாத ரஞ்சனி… முக்கியமா என் கிட்ட பொய் சொல்லாத.. நான் நொறுங்கிடுவேன்” என்று ஆழ்ந்த குரலில் தெளிவாய் உரைத்தான்.

அந்த வார்த்தையைக் கேட்ட போது தான் சொன்ன பொய் அவனை எவ்வளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்தவள் அவனது மார்பில் புதைந்து மௌனமாய் கண்ணீர் விட ஆரம்பித்தாள்.

அதே நேரம் ஸ்ரீதர் ஸ்ரீரஞ்சனிக்குப் போன் செய்ததும் அவள் கதவைத் திறந்த சத்தம் கேட்டு மதுரவாணி விழித்துவிட்டாள்.

இந்நேரத்தில் இவள் இங்கே செல்கிறாள் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டவள் உடனே தானும் அவள் பின்னே செல்லாது சற்று பொறுத்து மெல்லிய காலடிகளுடன் அங்கிருந்து வெளியேறினாள்.

வீட்டின் கதவைத் திறந்து பார்த்தவளுக்கு வீட்டின் முன்னே அலங்காரத்துக்கு வளர்க்கப்பட்டிருந்த செடிகளிடையே எதுவும் புலப்படாது போக அங்கே எரிந்த பால்வண்ண விளக்கின் ஒளியில் யாராவது நிற்கிறார்களா என்று தேடியவள் தனது தோளில் யாரோ கை வைக்கவும் சட்டென்று திரும்பினாள்.

அவளுக்குப் பின்னே நின்றிருந்த வளர்ந்த உருவத்தின் வதனம் வீட்டின் இருளில் அவள் கண்ணுக்குப் புலப்படவில்லை. ஆனால் அவன் யாரென்று அவள் அறியமாட்டாளா என்ன?

தன்னைத் தொட்டவன் மதுசூதனன் தான் என்று அவள் கண்டுபிடிப்பதற்கு அவனது ஒற்றை ஸ்பரிசம், விரல் தீண்டல் போதும்!

அப்படி இருக்கையில் இரு தினங்களாய் தன்னை வதைக்கும் அவனது வார்த்தைகளையும், இப்படி யார் என்ன நினைப்பார்கள் என்று கொஞ்சம் கூட கவலையின்றி நடு இரவில் திருட்டுத்தனமாய் வந்து நிற்பதையும் கண்டு எரிச்சலுற்றவள் சற்றும் யோசியாது அவனது கன்னத்தில் பளாரென அறைந்தாள். அந்தச் சத்தத்தில் எங்கிருந்தோ ஸ்ரீதரும் ஸ்ரீரஞ்சனியும் அங்கே ஓடி வந்தனர்.

அறை கொடுத்தவளின் வதனம் பத்திரக்காளி போல கடுஞ்சினத்தைப் பூசியிருக்க அறை வாங்கியவன் மெதுவாய் இருளில் இருந்து முன்பக்க விளக்கின் ஒளி முகத்தில் விழும் வண்ணம் தள்ளி வந்து நின்றான்.

அவள் அறைந்த கன்னம் இன்னும் எரிந்து கொண்டிருக்க அதைத் தடவியபடியே மற்ற இருவரிடமும் “வாணி நான் தான்னு தெரியாம அறைஞ்சிருப்பா” என்று சொல்லி சமாளித்தான் அவன்.

மதுரவாணியோ “தெரிஞ்சு தான் அறைஞ்சேன்” என்றாள் பட்டென்று.

ஸ்ரீதர் ஸ்ரீரஞ்சனியை நோக்க அவளோ மதுசூதனனைப் பாவமாய் பார்த்து வைத்தாள்.

அவன் மதுரவாணியை மன்னிக்கும் பாவனையுடன் “இட்ஸ் ஓகே! இன்னைக்கு எனக்கு சந்திராஷ்டமம்னு மானிங்கே ராசிபலன்ல சொன்னாங்க… அத இப்போ நம்புறேன்” என்று சொல்லவும் மதுரவாணி சீறத் தொடங்கினாள்.

“உனக்குச் சந்திராஷ்டமம் இல்லடா… உனக்குப் பிடிச்சிருக்கிறது சனி! எப்போ இருந்துனு தெரியுமா? நானே சொல்லுறேன்! நீயும் நானும் லவ்வர்ஸ்னு பொய் சொன்னோமே அப்போவே உனக்கு அஷ்டமத்துல சனி வந்துடுச்சு! அந்தச் சனி தான் உன் வாயில நர்த்தனம் ஆடுது! வீணா நட்டநடுராத்திரில யாரைப் பத்தியும் யோசிக்காம கொஞ்சம் கூட கூறு இல்லாம இப்பிடி வந்து நின்னு அஷ்டமச்சனிய ஜென்மச்சனியா மாத்திக்காத மது! ஒழுங்கா கிளம்பு”

அவளது கோபத்தைப் பார்த்து மதுசூதனன் வாயடைத்து நிற்க ஸ்ரீதர் அவளைச் சமாதானம் செய்யத் தொடங்கினான்.

“மதுரா! உன் கோவம் நியாயமானது தான்! யாரோ ஒருத்தரோட பேச்சைக் கேட்டுட்டு உன்னைக் கேள்வி கேட்டது தப்பு தான்… அதை மதுவும் ஒத்துக்கிறாரே! நீயும் ரஞ்சனியும் பண்ணுனது மட்டும் சரியா மதுரா? கொஞ்சம் யோசிச்சுப் பாரு…

நீங்க ரெண்டு பேரும் சொன்னது சாதாரண பொய் இல்ல… அதால எவ்ளோ குழப்பம்! எவ்ளோ கன்பியூசன்! சப்போஸ் மதுவும் தனுஜாவும் உண்மையாவே காதலிச்சிருந்தா உன்னோட இந்த விளையாட்டுத்தனமான பொய் அவங்க காதலை பிரிச்சிருக்குமே… அதைப் பத்தி கொஞ்சம் யோசியேன்!” என்று சொல்லவும் மதுரவாணி துணுக்குற்றாள்.

“வெயிட்! உண்மையாவே காதலிச்சிருந்தாவா? என்ன சொல்லுறிங்க ஸ்ரீதர் சார்? அப்போ இவனும் அவளும் காதலிக்கலயா?” என்று குழப்பமும் பரபரப்புமாய் வினவியவள் மதுசூதனனையும் ஸ்ரீதரையும் மாறி மாறிப் பார்க்க

“நான் தனுஜாவ காதலிக்கல வாணி! அவ எப்போவுமே எனக்கு ஃப்ரெண்ட் மட்டும் தான்” என்றான் மதுசூதனன் மெதுவாக.

அவனது பதில் காரணமேயின்றி அவளுக்குள் இனிய அதிர்ச்சியை உண்டாக்கியது. மற்ற கோபங்கள் எல்லாம் விலக “அவளை காதலிக்கலனா…..” என்று ஆவலுடன் இழுத்தாள்.

“என்னோட ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் லவ் நீ தான் வாணி!” என்றவனின் கூற்றில் இந்த உலகிலேயே அந்த நிமிடம் தன்னை விட அதிர்ஷ்டசாலி யாருமில்லை என்பது போல உணர்ந்தாள் மதுரவாணி.

“தனுஜா என்னை லவ் பண்ணுனா! அவ எனக்கு ஃப்ரெண்டும் கூட… சோ ஃப்ரெண்டை மேரேஜ் பண்ணிக்கிட்டா அவ என்னோட ஒர்க் நேச்சரை, கேரக்டரை புரிஞ்சு நடப்பானு நான் நினைச்சேன்… இதுக்கு மேல எங்கப்பா வேற நீ காதலிக்கிற பொண்ணை விட உன்னைக் காதலிக்கிற பொண்ணு தான் வாழ்க்கைக்குத் தகுதியானவனு அடிக்கடி டயலாக் பேசுவாரு… அது மைண்ட்ல பதிஞ்சு போய் நானும் அவளோட லவ்வ புரிஞ்சுக்க டிரை பண்ணுனேன்…

பட் அவளோட லைப் ஸ்டைல், பழக்கவழக்கம் எதுவுமே எனக்கு செட் ஆகல… எனக்குனு நான் சில பிரின்சிபிள்ஸ் வச்சிருந்தேன்… அதுலாம் அவளுக்குப் பிடிக்கல… இதுக்கு இடைல நீ பண்ணி வச்ச கன்பியூசன் வேற… அவளா என்னை வேண்டாம்னு ஒதுக்கிட்டா… இவ்ளோ தான் நடந்துச்சு… அது புரியாம நீ அடிக்கடி பிரேக்கப், எக்ஸ் லவ்வர்னு பேசுறப்போ செம்ம கோவம் வரும்… என்ன பண்ணுறது? சின்னப்பொண்ணாச்சேனு உன்னைச் சீண்டுறதோட நிறுத்திப்பேன்… அப்புறம் நீ தான் அந்த ரயில்வே ஸ்டேசன் பொண்ணுனு தெரிஞ்சதும் எல்லாமே மாறி போயிடுச்சு… நானும் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சேன்… இதோ இப்போ வரைக்கும் உன்னை மட்டும் தான் லவ் பண்ணிட்டிருக்கேன்”

அவன் நீண்ட விளக்கவுரை கொடுக்க அதில் அனைத்தையும் புரிந்து கொண்டாள் அவள்.

அவனுக்கு முதலும் கடைசியுமான காதலி தான் மட்டுமே! இது இரவு நேரமாய் மட்டும் இல்லாது போயிருந்தால் மதுரவாணி உற்சாக கூச்சலிட்டிருப்பாள்!

மகிழ்ச்சியில் ஜொலித்த முகத்துடன் தனது தவறையும் ஒத்துக்கொண்டவளாய் “ஸ்ரீதர் சார் சரியா தான் சொன்னாரு… நான் சொன்ன பொய் ரொம்ப பெரிய தப்பு… அதால தான் இவ்ளோ குழப்பமும்… ஆனா அன்னைக்கு தனு…” என்றவளின் பேச்சில் இடையிட்டவன்

“அதுவும் எனக்குத் தெரியும்… ஹாஸ்பிட்டல்ல தனுவும் அவங்கப்பாவும் பேசுனதை கேட்டுட்டேன்… ப்ச்… உடம்பு சரியில்லாதவரு பொய் சொல்ல மாட்டாருனு நினைச்சேன்… அதுவுமில்லாம எனக்குப் பொய் சொல்லுறது சுத்தமா பிடிக்காது” என்று நிறுத்த அந்தக் குரலில் தெரிந்த வருத்தம் மதுரவாணியை வருத்தியது.

தான் முன்னர் சொன்ன பொய்கள் தான் அவனை அப்படி யோசிக்க வைத்திருக்கிறது என்பதை புரிந்துகொண்டாள் அவள்! இனி வாழ்க்கையில் பொய் பேசும் எண்ணமே அவளுக்கு வராது!

“நீ என்னால அடிக்கடி அழுறனு தோணுச்சு வாணி! உண்மையான காதல் அழ வச்சு வேடிக்கை பாக்காது… எனக்கு அது உறுத்தலா இருந்துச்சு… அதான் மானிங்கே உன் கிட்ட பேசலாம்னு நினைச்சேன்… ஆனா நீ கோவமா இருந்த…. உன் கோவமும் நியாயமானது தான்” என்றவனின் கைகளை அழுத்தியவள்

“என் கோவம் நியாயமானது தான்… அதே போல நானும் கொஞ்சம் அதிகமாவே பொய் சொல்லிட்டேன்… அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு… நீ வேற நான் தான் உன்னோட ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் லவ்னு சொல்லிட்ட… எனக்கு வானத்துல பறக்குற மாதிரி இருக்கு மது! ஐஃபீல் சோ ஹேப்பி” என்று இதயம் திறந்து வார்த்தைகளை உதிர்க்க அவளைக் கண்ட மூவரும் புன்னகைத்தனர்.

இவ்வளவு நேரம் கோபத்தில் பாப்கார்ன் போல துள்ளியவளா இவள் என்ற ஆச்சரியம் அவர்களுக்கு! ஆனால் அவளுக்கு இது மிகப்பெரிய சந்தோசம் அல்லவா!

மதுரவாணி ஸ்ரீரஞ்சனியிடம் “நீயும் ஸ்ரீதர் சாரை மன்னிச்சிடு… அவருக்கும் நீ தான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் லவ்” என்று ஸ்ரீதருக்குப் பரிந்து பேச

அவனோ “ஃபர்ஸ்ட் லவ்னு சொன்னே… ஓகே! அது என்ன லாஸ்ட் லவ்? இவ சொன்ன பொய்காகவே இவளை பிரேக்கப் பண்ணனும்” என்று கேலியாய் சொல்ல ஸ்ரீரஞ்சனி உதடு சுழித்தாள்.

“என்னைத் தவிர ஒருத்தியும் உங்க கூட குப்பை கொட்ட முடியாது டி.சி.பி சார்… பிரேக்கப் பண்ணுற மூஞ்சிய பாருங்க… முதல்ல என்னைத் திட்டுனதுக்கு சாரி கேளுங்க” என்று முறுக்கியவளின் கரத்தைப் பற்றிக் கொண்டான் ஸ்ரீதர்.

“ஐ அம் சாரி! நான் உன் கிட்ட அப்பிடி ஒரு வார்த்தைய பேசிருக்க கூடாது… மது சாருக்கு மட்டுமில்ல., எனக்கும் வாய்ல சனியன் இருக்குனு நினைக்கேன் ரஞ்சனி… நீ என்னை மன்னிச்சிடு! ப்ளீஸ்! இல்லனா நான் என்னோட வாழ்க்கை முழுக்க எதாவது பொக்கே கடை வாசல்ல பைத்தியக்காரனா உக்காந்திருப்பேன்டி” என்று கேலியும் காதலுமாய் மன்னிப்பு வேண்ட அவனது ரஞ்சனி அவனுக்கு அபயம் அளித்தாள்.

“உன்னை யாம் மன்னித்தோம் குழந்தாய்! இனிமே நீ என் கிட்ட உண்மையா காதலிச்சியானு கேள்வி கேட்டா பிரேக்கப் பண்ண மாட்டேன்… டேரக்டா மர்டர் தான்” என்று சொல்ல ஸ்ரீதர் அவளை உரிமையோடு தன்னருகே இழுத்தவன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

மதுரவாணி அதைக் கண்டு வாயைப் பிளக்க மதுசூதனன் “நானும் உன்னை ஹக் பண்ணிக்கவா?” என்றபடி காதல் பார்வையுடன் அருகே வந்தவன் அவளது கொலைவெறிப் பார்வையில் பின்னடைந்தான்.

ஸ்ரீரஞ்சனியும் நாக்கைக் கடித்தவண்ணம் ஸ்ரீதரிடம் இருந்து விலகிக் கொண்டவள் “க்கும்! சரி சரி! நாங்க உங்கள மன்னிச்சிட்டோம்… இந்த ஜென்மத்துல எங்களுக்குப் பொய் சொல்லணும்கிற எண்ணமே வராது! அது மாதிரி இனிமே அன்டைம்ல வந்து பேசணும்கிற எண்ணம் உங்களுக்கும் வரக் கூடாது… அப்பிடி வந்துச்சுனா அவ்ளோ தான்” என்று மிரட்ட இரண்டு ஆண்களும் மனபாரம் அகன்றவர்களாய் சிரித்தனர்.

இப்படியே சிரித்த முகமாய் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க இரு தோழியருக்கும் ஆசை தான்! ஆனால் நாளை காலை முகூர்த்தத்துக்குச் சிறப்பாக தயாராக வேண்டுமே! இப்படி இரவில் கண் விழித்தால் முகம் சோர்ந்துவிடும் என்பது புத்தியில் உறைக்கவும்

“ஓகே! நாளைக்குச் சீக்கிரம் முழிக்கணும்… அப்போ தான் என் நாத்தனார் மேரேஜ்ல நான் அழகா ஜொலிப்பேன்… ரஞ்சி வாடி! நம்ம போவோம்… நீங்களும் போங்கய்யா… நாளைக்கு மேரேஜ் ஹால்ல வச்சு பாக்கலாம்… டாட்டா” என்று சொல்லிவிட்டு மதுரவாணி ஸ்ரீரஞ்சனியை இழுத்துக் கொண்டு வீட்டினுள் ஓடி மறைந்தாள்.

அவர்கள் செல்வதைப் பார்த்துவிட்டுப் புன்னகையுடன் திரும்பிய இருவருக்கும் இந்த இரு நாட்களில் மறைந்த நிம்மதி மீண்டும் திரும்பி வந்த திருப்தி!

“கிளம்பலாமா பாஸ்?” – மதுசூதனன்…

“கிளம்பலாமே! அப்போ தான் நம்மளும் நாளைக்கு ஹேண்ட்சம்மா தெரிவோம்… பை த வே தேங்யூ சோ மச் மது…. நீங்க இல்லனா இன்னைக்கு என்னால ரஞ்சிய சமாதானம் பண்ணிருக்க முடியுமானு தெரியல!” – ஸ்ரீதர்…

“ஏன் பாஸ் பெரிய வார்த்தைலாம் பேசுறிங்க? அப்பிடி பாத்தா நான் எனக்காகவும் தான் இங்க வந்தேன்… இப்போ அவங்க பண்ணுன தப்பும் அவங்களுக்குப் புரிஞ்சிருக்கும்… நம்மளுமே காதலிக்கிற பொண்ணு மேல காதலை மட்டும் கொட்டுனா போதாது; நம்பிக்கையும் வைக்கணும்னு பாடம் கத்துக்கிட்டோம்… அதோட நம்ம சொந்தக்காரங்களா ஆகப்போறோம்! நம்மளோட வருங்கால மிசஸ்கள் வாடி போடினு தானே பேசிக்கிறாங்க… நம்ம மட்டும் ஏன் ஃபார்மலா பேசணும்? இனிமே நீங்க…ப்ச்… நீ என்னை டேய் மதுனு சொன்னா மட்டும் தான் நான் பேசுவேன்” என்றவனைத் தோளோடு அணைத்தான் ஸ்ரீதர்.

“ஓகேடா! இனிமே நோ மோர் ஃபார்மாலிட்டிஸ்… இப்போ நீயே டிரைவ் பண்ணுறியா? அது ஒன்னுமில்ல… என்னோட ரஞ்சனி என்னை ஹக் பண்ணுன ஃபீல் இன்னும் போகல!” என்று சொல்ல மதுசூதனன் நமட்டுச்சிரிப்புடன் சரியென தலையசைத்தவாறு அவனுடன் சேர்ந்து நடையைக் கட்டினான்.

*****************

மறுநாள் விடியலில் கதிரவன் வான்மகளுக்கு ஆரஞ்சு வண்ண திலகமிட்டபடியே உதயமானான். மதுசூதனனின் இல்லத்தில் திருமணத்தின் கோலாகலம் ஆரம்பித்து விட்டது. மணப்பெண்ணை மண்டபத்துக்கு அழைத்துச் செல்லும் முன்னர் பூஜையறையில் விளக்கேற்றிய வைஷாலி இறைவனிடம் தனது புதிய வாழ்க்கைக்காகவும் தனது சகோதரனின் வருங்காலத்துக்காகவும் வேண்டிக் கொண்டாள்.

என்றுமில்லாத திருநாளாக மதுசூதனனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டவளின் கண்கள் கலங்க அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டவன்

“எதுக்கு வாட்டர் ஃபால்ஸ் ஓப்பன் பண்ணுற? நியாயப்படி இது திலீபுக்கு வர வேண்டிய கண்ணீர்” என்று கேலி செய்வது போல தங்கையை இயல்பாக்க முயற்சித்தான்.

பின்னர் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டவளை அழைத்துச் செல்ல உறவுக்காரப்பெண்கள் வரவும் மதுசூதனன் திரும்பினான். அவர்களுடன் பட்டாடையும் ஆபரணங்களுமாக ஜொலித்தபடி வந்து நின்றாள் மதுரவாணி.

புருவத்தை உயர்த்தி என்னவென வினவியவளின் இதழில் நெளிந்த குறுநகையும் அப்சரஸ் போல நின்றவளின் பேரழகும் ஒரு கணம் அவனைத் தடுமாறச் செய்ய வைஷாலி அவன் காதில்

“டேய் அண்ணா! எனக்கு கல்யாணம் ஆகுறதுக்குள்ள நீ செல்பி புள்ளய ஹனிமூனுக்குக் கூட்டிட்டுப் போயிடுவ போல… உன் பார்வையே சரியில்ல… அங்க பாரு! பரிமளா அத்தை உன்னைத் தான் லுக்கு விடுது… அவங்க பொண்ணை குள்ளமா இருக்கானு சொல்லி ரிஜெக்ட் பண்ணுனல்ல… அந்த காண்டு” என்று கேலி செய்ய அவன் நிதானத்துக்கு வந்தான்.

மதுரவாணி அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடியே மாமனார் மாமியாரிடம் தான் செய்யவேண்டியவற்றைக் கேட்டுத் தெரிந்து கொண்டவள் வைஷாலியைக் கரம் பற்றி அழைத்துச் சென்றாள்.

சுபசகுனம் பார்த்து மணமகளுடன் அவள் காரில் அமர மைதிலியும் ராமமூர்த்தியும் கூடவே அமர்ந்து கொண்டனர். கார் கிளம்பவும் ஸ்ரீரஞ்சனிக்குப் போன் செய்துவிட்டாள் மதுரவாணி.

“ரஞ்சி! நாங்க வந்துட்டிருக்கோம்டி… அங்க எல்லாம் தயாரா வச்சுக்கோங்க” என்று சொல்ல ஸ்ரீரஞ்சனியும் அங்கே இருந்த திலீபின் அன்னையிடம் மணப்பெண் கிளம்பி விட்டதாகச் சொன்னவள்

“ஆலம் கரைச்சு வச்சிடவா?” என்றபடி அவருடன் இயல்பாக ஒட்டிக்கொள்ள அவருக்கும் பிடித்துப் போய்விட்டது.

சிறிதுநேரத்தில் மணப்பெண் வந்துவிட ஆரத்தி எடுக்க வந்த ஸ்ரீரஞ்சனியை மதுசூதனனுடன் வந்த ஸ்ரீதர் வைத்தக் கண் வாங்காமல் பார்க்க அவள் நாணம் கொண்டவளாய் கன்னச்சிவப்பை மறைக்க போராடியபடி ஆரத்தியை எடுத்து முடித்தாள்.

அப்போதிலிருந்து மாங்கல்யதாரணம் ஆகும் வரை திலீபின் தாயாருடன் சுற்றிக் கொண்டிருந்தவளை ஸ்ரீதரின் விழிகள் படம் பிடித்துக் கொண்டே இருந்ததை அனைவரும் கண்டும் காணாதது போல நமட்டுச்சிரிப்புடன் நகர்ந்து கொண்டனர்.

மதுரவாணி வருங்கால மாமியாருடன் சுற்றுவதை அவளது குடும்பத்துப் பெண்மணிகள் பூரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க அவளது அண்ணன் மனைவிகளோ

“என்னமோ சொன்னிங்களே! பாருங்க நம்ம மதுரா கல்யாணத்துக்கு முன்னாடியே மாமியார் மெச்சுன மருமக ஆயிட்டா” என்று கர்வத்துடன் சொல்லிக் காட்டினர்.

அதைக் கேட்ட அவளது தந்தையோ “அவ யாரு? ரத்தினவேல் பாண்டியன் மக… யாரு கிட்ட எப்பிடி பேசணும்னு அவளுக்கு நல்லா தெரியும்” என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.

யாழினியும் சங்கவியும் இவள் இப்படி மாறுவதற்கு தாங்கள் எத்துணை முறை நெஞ்சுவலியை அனுபவித்திருப்போம் என்ற ரீதியில் சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

அந்த அழகான தருணத்தில் வைஷாலியின் கழுத்தில் மங்கலநாண் அணிவித்து அவளைத் தன் சரிபாதியாக்கிக் கொண்டான் திலீப். அதன் பின்னர் புதுமணமக்களுக்கு நடந்த விளையாட்டுகள், சடங்கு சம்பிரதாயங்கள் என கலகலப்பாய் நேரம் சென்றது.

மைதிலி தம் பக்கத்து உறவினர்களிடமும் ரேவதி தனது உறவினர்களிடமும் தங்களின் வருங்கால மருமகள்களை அறிமுகப்படுத்தி வைத்து அவர்களின் வேலை செய்யும் பாங்கை மெச்சிக் கொண்டனர். இதைக் கண்டு மதுசூதனனும் ஸ்ரீதரும் தமது காதலிகளை ரசனையுடன் நோக்கியபடி திருமண நிகழ்வுகளில் திலீபுடன் சேர்ந்து கலந்து கொண்டனர்.

அப்போது தான் ராகினி அழகம்மையிடம் கௌதம்மை அழைத்துச் சென்று ஒரு பஞ்சாயத்தைக் கூட்டிக் கொண்டிருந்தாள்.

“ஆச்சி! இவன் தானே வீடியோ கவர் பண்ணுறான்… என்னை நல்லா வீடியோ எடுனு சொன்னா கேலி பண்ணுறான்”

“ஓய்! அவன் இவன்னு பேசுனா அவ்ளோ தான்! அழகிய தான் அழகியா காட்ட முடியும்… உன்னைய மாதிரி கிழவிய எங்க இருந்து அழகியா காட்டுறது?”

“பாருங்க ஆச்சி.. இவன் என்னை மறுபடியும் கேலி பண்ணுறான்”

“பாருங்க பாட்டி! இவ என்னை மறுபடியும் மரியாதை இல்லாம கூப்பிடுறா”

அழகம்மை இருவரையும் நோட்டம் விட்டவர் கடுப்புடன் “பருக்கை பதம் கேட்டுச்சாம்; பண்ணருவா இதம் கேட்டுச்சாம்… அந்தக் கதையால்ல இருக்கு! ரெண்டு பேரும் கொஞ்சம் வாய மூடுறியளா?” என்று அதட்டவும் தான் இருவரும் அமைதியாயினர்.

“இங்க பாருத்தா ராகினி! இப்பிடி அடாபுடானு பேசுறது நல்லாவா இருக்கு! வயசுக்கு மரியாதை குடுக்கணும்தா” என்று ராகினியை அடக்கியவர்

“எய்யா! அது தான் சின்னப்பிள்ளை… நீயாச்சும் பொறுமையா பேசக் கூடாதா? ஏன்யா இந்தக் கழுதை கிட்ட எசலுற?” என்று கௌதமையும் அமைதிப்படுத்தினார்.

இவ்வாறு ஒரு புறம் சண்டைகளும் சமாதானங்களுமாய் திருமணமும் அதைத் தொடர்ந்த வரவேற்பும் முடிய வைஷாலியும் பெற்றோரின் ஆசி, சகோதரனின் அன்புடன் கணவன் வீட்டுக்கு வழியனுப்பி வைக்கப்பட்டாள்.

அன்றைய தினம் மைதிலியும் ராமமூர்த்தியும் பெரும் கடமையொன்றை முடித்தவர்களாய் நிம்மதி பெருமூச்சு விட்டனர். விசாலாட்சியும் ரத்தினவேல் பாண்டியனும் இந்த நாள் தங்கள் வாழ்வில் வர இன்னும் பத்து மாதங்கள் உள்ளதே என்ற ஏக்கப்பெருமூச்சு விட்டனர்.

அனைத்தும் முடிந்து ஸ்ரீரஞ்சனியின் வீட்டுக்கு வந்தவர்கள் களைப்பில் நித்திராதேவியின் ஆளுமைக்குக் கீழ் சென்றுவிட்டனர். மதுரவாணியும் ஸ்ரீரஞ்சனியும் உடை கூட மாற்றாது படுக்கையில் விழுந்தவர்கள் காலையிலும் நேரம் கழித்தே விழித்தனர்.

அன்றைய தினம் ரத்தினவேல் பாண்டியன் குடும்பத்தோடு ஊருக்குக் கிளம்புவதாகச் சொல்லியிருக்க விசாலாட்சியும் அவரது மருமகள்களும் பெட்டி படுக்கையைக் கட்ட ஆரம்பித்தனர்.

யாழினியும் சங்கவியும் இன்னும் இரண்டு நாட்கள் இருக்கலாமே என்று எவ்வளவு வேண்டியும் கார்த்திக்கேயனும் சரவணனும் சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவதைச் சுட்டிக்காட்டிவிட்டு கிளம்ப ஆயத்தமாயினர்.

அனைவருடனும் மதுரவாணியும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்ப யாழினி, சங்கவி, ராகினி, ஸ்ரீரஞ்சனி என அனைவருக்கும் அது அதிர்ச்சியை உண்டாக்கியது.

ரத்தினவேல் பாண்டியனோ மகள் முன்னரே ஊருக்கு வந்துவிடுவதாகச் சொல்லி வேலை செய்யும் இடத்தில் நோட்டீஷ் கொடுத்துவிட்டதாகத் தெரிவித்தார்.

அவருக்கு நீண்டநாள் கழித்து மகளுடன் சொந்த ஊருக்குச் செல்லும் ஆர்வம்! ஆனால் அவளோ யாரிடமும் இதை தெரிவிக்காமல் யாருக்கும் பதில் அளிக்காது தனது உடமைகளை எடுத்துக் கொண்டவள் தனது குடும்பத்தினருடன் கிளம்பியே விட்டாள்.

கோயம்புத்தூர் சந்திப்பில் இரயிலுக்காக காத்திருக்கும் நேரத்தில் ஸ்ரீரஞ்சனி கண் கலங்கிவிட்டாள். தன்னிடம் எதையும் மறைக்காதவள் இப்படி திடுதிடுப்பென ஊருக்குக் கிளம்ப காரணம் என்ன என்று கேட்டும் மதுரவாணி புன்னகைத்தாளேயன்றி பதில் சொல்லவில்லை.

எல்லாம் மதுசூதனன் ஸ்ரீதருடன் வரும் வரை தான்! வந்தவன் நேரே மதுரவாணியிடம் சென்று “ஏன் இவ்ளோ அவசரமா ஊருக்குக் கிளம்புற வாணி? என் கிட்ட கூட சொல்லாம போற அளவுக்கு உனக்கு என்ன பிரச்சனை? கல்யாணத்துல அந்த பரிமளா அத்தை உன்னை எதுவும் சொன்னாங்களா?” என்று படபடக்க

“நீ சொன்ன எந்தக் காரணமும் இல்ல மது! நான் எங்க இருந்து வந்தேனோ அங்கேயே திரும்பிப் போறேன்” என்றாள் மதுரவாணி புன்னகையுடன்.

மதுசூதனன் அவளது பதிலில் குழம்பியவனாய் “பட் ஏன் திடீர்னு… ப்ச்… அதை விடு… உன்னைப் பிரிஞ்சு நான் எப்பிடி இருப்பேன் வாணி?” என்று கேட்க

“இந்த இருபத்தியேழு வருசம் நீ தனியா தானே இருந்த மது?” என்று கேட்டு அதிரவைத்தாள் மதுரவாணி.

அவளைப் பிரிய விரும்பாதவனாய் அவனும், பிரிவைக் கூட புன்னகையுடன் ஏற்கும் அவளுமாய் அடுத்து என்ன தான் செய்யப் போகின்றனர் என்பதை அறியாது திகைத்துப் போயினர் ஸ்ரீதரும் ஸ்ரீரஞ்சனியும்.

அலை வீசும்🌊🌊🌊