💞அத்தியாயம் 21💞

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

“தனா உண்மையாவே அருமையான மனுசன்… ஏன் தனுவும் ஷானுவும் அவரு மேல இவ்ளோ பாசமா இருக்காங்கனு இப்போ தான் புரியுது… அனிக்கு கூட அவரு இப்போ குளோஸ் ஆகிட்டாரு… நான் பாத்த ஆண்கள்ல விஸ்வா, சித்துக்கு அப்புறம் தனா தான் நல்ல மனுசன்… அவருக்கு அவரோட அம்மாவும் தங்கச்சியும் ரொம்ப பிடிக்கும் போல… நான் எப்போ பேசுனாலும் ரெண்டு வார்த்தை இலக்கியாவ பத்தியும் அம்மாவ பத்தியும் அவரு சொல்லாம இருந்ததே இல்ல”

                                                                     -அஸ்வினி

ஆம்ஹெர்ஸ்ட் அவென்யூ, ரிவர் ஓக்ஸ்…

தன் முன்னே கைகளைக் கட்டிக் கொண்டு யோசனையுடன் அமர்ந்திருந்த ஷான்வியை ஓரக்கண்ணால் கவனித்தபடி அருகில் நின்ற அண்ணனிடமும், தன்வியிடமும் இரகசியமாய் காதில் முணுமுணுத்தான் சித்தார்த்.

அஸ்வினி அவன் என்ன கேட்க போகிறான் என்று புரியாது விழிக்க தனஞ்செயன் வழக்கம் போல ஷான்வியிடம் தண்மையாய் அனைத்தையும் புரியவைக்க முயன்றான்.

சற்று முன்னர் தான் அவன் அவளையும் சித்தார்த்தையும் நீண்டநேரம் காணாததால் தனது காருடன் அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்துக்குச் சென்று அழைத்து வந்திருந்தான். வந்ததும் தன்வியையும் விஸ்வஜித்தையும் ஒரு முறை ஆராய்ச்சிப்பார்வை பார்த்தவள் அதன் பின்னர் மறந்தும் கூட அவர்கள் புறம் திரும்பவில்லை.

தனஞ்செயனும் கிளாராவும் அனிகாவுடன் விளையாடிக் கொண்டிருக்க அவர்களுடன் இணைந்து கொண்டாள். அதைக் கண்ட அஸ்வினி சித்தார்த்தின் காதை கடித்தாள்.

“டேய்! அவ இன்னும் கோவமா தான் இருக்கா… எதாச்சும் பண்ணி ஷானுவ சமாதானப்படுத்து சித்து… தனுவும் விஸ்வாவும் பாவம்ல”

“பாவம் இல்ல!” என்று இறுகிய குரலில் உரைத்தவனை விஸ்வஜித்தும், அஸ்வினியும் அதிர்ந்து நோக்க தன்வியின் கண்ணில் தோழனின் பேச்சைக் கேட்டு கண்ணீர் தேங்க ஆரம்பித்தது.

“உடனே வாட்டர் டேமை ஓபன் பண்ணாத தனு… நீ அண்ணா மேல இவ்ளோ லவ் வச்சிருக்கிறத பாக்குறப்போ எனக்கு சந்தோசமா தான் இருக்கு… ஆனா நீ இன்னைக்கு ஷானு கிட்ட கோவத்துல கத்துனது தப்பு… அந்தப் பொண்ணு உன் தங்கச்சியாவே இருக்கட்டுமே! அதுக்குனு இப்பிடி கத்துவியா? நீ ரொம்ப அப்பிராணி பொண்ணு, உன்னை யாரும் ஏமாத்திடுவாங்களோனு அவ பயப்படுறது தான் இன்னைக்கு அவ அண்ணா கிட்ட ரூடா பிஹேவ் பண்ணுனதுக்குக் காரணம்… அத அண்ணாவும் நானும் புரிஞ்சுகிட்டுத் தான் சைலண்டா இருந்தோம்… இவ்ளோ ஏன், அவ பேசுறப்போ எனக்கும் கோவம் வந்துச்சு… ஆனா அவளோட கோவம் ஐஸ்க்ரீமுக்கு அடம்பிடிக்கிற சின்னக்குழந்தையோட கோவம் மாதிரி… குழந்தை கேட்ட ஐஸ்க்ரீமை வாங்கிக் குடுத்துட்டா அது தானா சமாதானம் ஆகிருக்கும்… ஆனா நீ அவ கிட்ட கத்தி சிச்சுவேசனை இன்னும் சிக்கல் ஆக்கிட்ட… அவளுக்கு நீ பேசுனது எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும்?”

சித்தார்த் மனம் பொறுக்காது கொட்டித் தீர்த்துவிட்டான். தன்வி நீர் நிறைந்த விழிகளுடன் அவனை நோக்க விஸ்வஜித் அவளை ஆதரவாய் தட்டிக் கொடுத்தான்.

“சித்து! தனுவ திட்டாதடா! ப்ளீஸ்! நீ கொஞ்சம் ஷானுவ சமாதானப்படுத்துடா… தனா ப்ரோ ஆல்ரெடி பேசிட்டிருக்கிறாரு தானே! நீயும் பேசுடா”

காதலிக்காகத் தம்பியைச் சமாதான தூதுவராக ஷான்வியிடம் செல்லும்படி வற்புறுத்தினான் விஸ்வஜித்.

அவனும் சரியென்று தலையசைத்தவன் அவள் எதிரே உள்ள சோபாவில் அமர்ந்து கொள்ள தனஞ்செயன் சொல்வதை தீவிரமான முகபாவத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள் ஷான்வி.

“இன்னும் கோவமா இருக்கியாடா? தனு யாரு., உன்னோட அக்கா தானேம்மா! அவ இடத்துல யாரு இருந்திருந்தாலும் இப்பிடி தான் பேசிருப்பாங்க குட்டிம்மா”

“அப்போ சகோதரப்பாசத்த விட காதல் பெருசுனு சொல்லுறிங்களாண்ணா? எனக்குப் புரியல… கூடப் பிறந்த தங்கச்சிய இப்போ வந்த காதலுக்காக தூக்கிப் போடுறது அவ்ளோ ஈசியா அண்ணா?”

“அச்சோ! குழந்தை மாதிரி பேசக்கூடாதுடா… நீ என்னைக்குமே அவளோட செல்லமான தங்கச்சி தான்… ஆனா விஸ்வா தான் அவளோட எதிர்காலம் குட்டிம்மா! அவரும் தனு மேல உயிரையே வச்சிருக்காருடா… அதெல்லாம் விடு… இப்போ நீயே தேடுனாலும் உன் அக்காவுக்கு விஸ்வா மாதிரி மாப்பிள்ளை கிடைப்பாரா?”

தனஞ்செயன் சொல்லவும் தாரகேஷின் நினைவில் துணுக்குற்றாள் ஷான்வி. எப்பேர்ப்பட்ட கயவன்! வெறும் சில ஏக்கர் நிலங்களுக்காக தன்வியின் வாழ்க்கையை நாசம் செய்யத் துணிந்த கேவலமான பிறவி! இத்தனைக்கும் அப்பா உடன் பிறந்த சகோதரியின் மகன்!

விஸ்வஜித்துடன் ஒப்பிட்டுப் பார்க்குமளவுக்கு அவனுக்கு உயர்ந்த குணமோ, நல்லெண்ணமோ கிஞ்சித்தும் கிடையாது. அதை வைத்துப் பார்த்தால் விஸ்வஜித் மிக மிக நல்லவன். கண்ணியமான பார்வை, கலகலப்பான பேச்சு, வசீகரமான சிரிப்பு என எதிலும் குறை சொல்ல முடியாத மனிதன். உண்மையில் அவனைப் போல ஒருவனைத் தேடுவதும் கஷ்டம் தான்.

அவளது மூளை பலத்த ஆராய்ச்சிக்குப் பின்னர் விஸ்வஜித் – தன்வியின் காதலை ஏற்றுக் கொண்டது. தன்னெதிரே அமர்ந்திருந்த சித்தார்த்திடம்

“எதுக்கு நீ என்னை குறுகுறுனு பாக்குற சித்து? என் கோவம் எப்போவோ போயிடுச்சு… ஆனா என் கிட்ட இந்த விசயத்த எல்லாருமா சேர்ந்து மறைச்சது தான் கஷ்டமா இருக்கு” என்று சொல்ல அது அவனோடு மற்றவர்களையும் வருத்தியது.

“தனுவும் வீ.கே சாரும் லவ் பண்ணுறதில எனக்கு எந்த அப்ஜெக்சனும் இல்ல… அவங்க லவ் பண்ணட்டும், கல்யாணம் பண்ணட்டும்.. இனி எதுக்கும் நான் அவங்களுக்கு நோ சொல்ல மாட்டேன்… போதுமா?”

அவள் இவ்வாறு சொன்னதும் தன்வி முகம் மலர ஓடிவந்து சோபாவில் உட்கார்ந்திருந்தவளை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட ஷான்வி அவளை விலக்கி நிறுத்தியவள்

“நீ இப்போ ஹேப்பி தானே தனு? இனிமே உனக்கும் விஸ்வா சாருக்கும் இடையில நான் வரவே மாட்டேன்… ஒபீனியன் சொல்லவும் மாட்டேன்… எல்லா பிராப்ளமும் முடிஞ்சுது… இனிமேயாச்சும் நம்ம நியூ இயர் செலிப்ரேசனை ஸ்டார்ட் பண்ணலாமா?” என்று கேட்டபடி உற்சாகமாக எழுந்தாள்.

தன்விக்கும் விஸ்வஜித்துக்கும் அவளது பேச்சின் உள்ளர்த்தமும் அதிலிருந்த விலகலும் புரியாமலில்லை. ஆனால் இது காலப்போக்கில் சரியாகிவிடும் என்று எண்ணியவர்களாய் அவர்களும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள ஆரம்பித்தனர்.

“இங்க நானும் ஷானுக்காவும் தான் பேபிஸ்… சோ நாங்க தான் கேக் கட் பண்ணுவோம்” என்ற அனிகாவுக்கு ஹைஃபை கொடுத்துவிட்டு அவளுடன் சேர்ந்து கேக் வெட்டுவதில் ஷான்வி மும்முரமாகி விட அனைவரும் அவர்கள் அடித்த லூட்டியை ரசித்தபடி இனிப்புடன் புத்தாண்டை வரவேற்க தயாராயினர்.

அனைவரும் கேக் சாப்பிட்டுக் கொண்டிருக்க ஷான்வியிடம் வந்த சித்தார்த் வழக்கம் போல அவளைச் சீண்டத் தொடங்கினான்.

“சோ மேடம்கு கோவம் போயிடுச்சு? அப்பிடி தானே… ஆனா என்னால நீ சொல்லுறத நம்ப முடியல”

அவன் அவ்வாறு சொன்னதும் முப்பத்திரண்டு பற்களையும் இளித்து வைத்தாள் ஷான்வி.

“போதும்! ரொம்ப இளிக்காத ஆங்ரி பேர்ட்… வேண்டாவெறுப்பா பிள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேரு வச்ச மாதிரி இருக்கு உன் சிரிப்பு… சகிக்கல” என்றான் உஷ்ணக்குரலில். சொன்ன அடுத்த நிமிடமே தன் தலையில் அடித்துக் கொண்டான் அவன்.

“உன் கூட இன்னும் கொஞ்சநேரம் இருந்தா நானும் உன்னை மாதிரி முசுடா மாறிடுவேன்… நான் கிளம்புறேன் தெய்வமே!” என்றபடி கிளம்ப எத்தனித்தவனை தடுத்து நிறுத்தியது ஷான்வியின் சித்து என்ற அழைப்பு.

என்னவென்று நோக்கியவனிடம் என்றைக்குமில்லா சாந்தமான குரலில் “தேங்க்யூ சோ மச்… நான் மூட் ஆஃபா இருந்தப்போ என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணுனதுக்கு” என்று சொல்லிவிட்டுப் புன்னகைத்தாள் அவள்.

அவளது கோபத்தை மட்டுமே அறிந்திருந்தவனுக்கு இந்தச் சிரிப்பும் சாந்தமான பேச்சும் இதமான தென்றலாய் மாறி அவனை மெலிதாய் தாக்கிச் சென்றது.

“நானும் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும் ஷானு… இந்த புது வருசத்தோட பெஸ்ட் மொமண்டை குடுத்ததுக்கு” என்று சொன்னவனின் மனக்கண்ணில் சில மணித்துளிகளுக்கு முன்னர் தனது அணைப்பில் இருந்தபடி வாணவேடிக்கைகளை ரசித்துக் கொண்டிருந்தவளின் பூமுகம் வந்து செல்ல அவளது மெல்லியமேனியின் ஸ்பரிசத்தை இப்போதும் தன்னில் உணர்ந்தபடி அந்நினைவில் இலயிக்கத் தொடங்கிவிட்டான்.

ஷான்வி அவனை பொருள் விளங்கா பார்வை பார்த்து வைக்கவும் குறும்பாய் நகைத்தபடி அவளை நெருங்கியவன் அவள் காதுக்குள் “பை த வே, உன்னோட பெர்பியூம் என்ன ஃப்ராகிரன்ஸ்? ஐ லைக் இட்… இன்னும் அதோட வாசனை என் மேல ஒட்டிருக்கிற மாதிரி ஃபீல் ஆகுது” என்று சொல்லவும் அவனிடம் பதில் சொல்ல தெரியாது விதிர்விதிர்த்தவளாய் நின்றாள்.

சிலையாய் நின்றவளின் கூந்தலை காதோரமாய் ஒதுக்கிவிட்டு “அடிக்கடி இப்பிடி சிலையாட்டம் நிக்காத ஷானு… என் மேல சிலைய கடத்துன குத்தம் வந்துடப் போகுது” என்று ஹஸ்கி குரலில் முணுமுணுத்துவிட்டு அவள் கன்னத்தைச் செல்லமாய் தட்டினான் சித்தார்த்.

அவள் இமை தட்டாது விழிக்கையிலேயே நேரம் ஆகிவிட்டதால் அவரவர் வீட்டுக்குச் செல்லலாம் என்ற தனஞ்செயனின் அறிவுரையைக் கேட்டு அனைவரும் அஸ்வினியிடமும் அனிகாவிடமும் சொல்லிவிட்டு விடைபெற்றனர்.

ஷான்வி வேறு உலகில் பயணித்தவளைப் போல தன்வியின் கையைப் பற்றிக் கொண்டு காரில் ஏறி அமர்ந்தாள். எதேச்சையாக காரின் கண்ணாடி வழியே பார்த்தபோது விஸ்வஜித்தின் காரின் முன்னிருக்கையில் அமர்ந்து தன்னை நோக்கிக் கொண்டிருந்த சித்தார்த்தின் பார்வையைச் சந்திக்க நேரவும் திரும்ப எத்தனித்தவள் அவனது வழக்கமான கண் சிமிட்டலில் மெல்லியதாய் அதிர்ந்தாள்.

புத்தாண்டின் இரவு அவளுக்கு உறங்கா இரவாக நீண்டது.

அன்றைய தினத்துக்குப் பின்னர் ஷான்வி நிறையவே மாறிப் போனாள். தமக்கைக்கு விஸ்வஜித் போன்ற நல்ல மனிதன் வாழ்க்கைத்துணையாக கிடைத்ததில் மகிழ்ந்தவள் அவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள நேரம் கொடுப்பதற்காக தன்வியுடன் இருக்கும் நேரங்களை குறைத்துக் கொண்டாள்.

முதலில் தன்விக்கு இது தெரியவில்லை என்றாலும் விஸ்வஜித் அதைக் கவனித்துவிட்டான். அவனிடம்

“கம் ஆன் வீ.கே சார்! வெறுமெனே ஐ லவ் யூங்கிற வார்த்தைய ஆயிரம் தடவை சொல்லுறதால மட்டும் நீங்க லவ்வர்சா ஆகிட மாட்டிங்க… உங்களுக்குள்ள பாண்டிங் வரணும்னா கம்யூனிகேசன் ஸ்ட்ராங்கா இருக்கணும்… நீங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க உங்களுக்கு கிடைச்ச டைமை யூஸ் பண்ணுங்க… கல்யாணத்துக்கு அப்புறம் போயும் போயும் உன்னையா காதலிச்சிருக்கணும்ங்கிற எண்ணம் வந்துடக் கூடாதுனா அதுக்கு புரிதல் அவசியம் சார்” என்று தன் பக்க நியாயத்தைச் சொல்லிவிட்டாள்.

விஸ்வஜித்தும் அதற்கு பின்னர் ஷான்வியை வற்புறுத்துவதில்லை. ஷான்வியும் தனது பெரும்பாலான நேரங்களை தனஞ்செயன் அஸ்வினியுடன் கழிக்க ஆரம்பித்தாள். அவ்வபோது அந்நேரங்களில் அனிகாவும் சித்தார்த்தும் கூட அவளுடன் இருப்பர்.

சித்தார்த் புத்தாண்டு தினத்துக்குப் பின்னர் ஷான்வியைக் காணும் போதெல்லாம் ஏதோ வித்தியாசமாய் உணர்ந்தான். அந்த உணர்வுக்குப் பெயர் தான் காதல் என்று அவனுக்குப் புரிந்தாலும் அதை ஷான்வியிடம் எப்படி வெளியிடுவது என்று புரியவில்லை.

இவ்வாறு ஆளாளுக்கு ஒவ்வொரு விதமான சிந்தனையுடன் நாட்களைக் கடத்த, தன்வியின் ஃபால் செமஸ்டர் முடிவுக்கு வந்தது. அச்சமயத்தில் தான் விஸ்வஜித் இந்தியாவுக்குச் சென்று தன்வியின் குடும்பத்தில் நிலவுகிற பிரச்சனையை முடித்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

இரு பெண்களிடமும் இந்தியா கிளம்புமாறு சொல்ல ஷான்வி மறுத்து விட்டாள்.

“நீங்க எங்களோட பிராப்ளமை சால்வ் பண்ணனும்னு நினைக்கிறிங்க… ஆனா அந்த லேண்டும் சரி, சென்னைல உள்ள ஃப்ளாட்டும் சரி; தனுவோட நேம்ல தான் ரிஜிஸ்டர் ஆகிருக்கு… சோ அவ மட்டும் உங்க கூட வந்தா போதும்னு நான் நினைக்கிறேன்… நான் லீவ் போட்டுட்டா தனா அண்ணாவுக்குத் தான் சிரமம்… நீங்களும் தனுவும் இந்தியாவுக்குக் கிளம்புங்க சார்… அங்க எதும் பிரச்சனைனா சொல்லுங்க, நான் வர்றேன்”

பட்டு கத்தறித்தாற் போல பேச்சுவார்த்தையை முடித்துவிட்டுத் தன்னால் அவர்களுடன் வர முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டாள் ஷான்வி. கூடவே தன்வியை அழைத்துச் சென்றால் அவளை எப்போதும் தன் அத்தை குடும்பத்திடமோ சித்தப்பா குடும்பத்திடமோ தனித்துவிட்டு விட வேண்டாம் என்று விஸ்வஜித்துக்கு எச்சரிக்கை வேறு!

அவளது பதிலை விஸ்வஜித் தம்பியிடம் பகிர்ந்துகொள்ள, சித்தார்த்துக்கு ஷான்வி இந்தியாவுக்குச் செல்லவில்லை என்ற கொண்டாட்டம். அவள் பாட்டுக்கு இந்தியா சென்றுவிட்டால் பணி இடைவெளி நேரங்களில் தனஞ்செயனிடம் பேசுகிறேன் என்று சொல்லிக் கொண்டு கபேயின் சமையலறையில் அவன் யாரைக் கண்ணாற காண்பான்! அவனுக்கு ஷான்வியின் முடிவில் மிகுந்த மகிழ்ச்சி.

தனஞ்செயனுக்கு ஷான்வி தன் மேல் வைத்திருக்கும் பாசத்தை நினைத்து நெகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னும் விஸ்வஜித் தன்வியின் காதல் விவகாரத்தில் அவள் தாமரை இலை தண்ணீராக இருப்பது தான் வருத்தம்.

அஸ்வினிக்குமே ஷான்வி சொல்வதே சரியென்று பட நண்பர்கள் அனைவரும் வழியனுப்பிவிட தன்வியும் விஸ்வஜித்தும் இந்தியாவுக்கு விமானம் ஏறினர்.