💘கண்மணி 12💘

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

சாந்திவனம்

பவானி சிவசங்கரின் அறையின் பால்கனியில் உள்ள இருக்கையில் சிலை போல அமர்ந்திருந்தாள். அந்தப் பங்களாவைச் சுற்றியிருந்த நெடிதுயர்ந்த மரங்களின் கிளைகளைத் தழுவிய காற்று அவளையும் தழுவி அவள் உள்ளத்தின் வலியைக் குறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது.

மண்டபத்தில் இருந்து திரும்பியவர்களை லோகநாயகி ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்ல அரிஞ்சயன் அவர் பாட்டுக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட மற்றவர்கள் மனவருத்தத்துடன் அமைதியற்று இருந்தனர்.

அன்னபூரணி விம்மலுடன் பேச ஆரம்பிக்கவும் சுதாரித்த வானதி அவரையும் சுவாமிநாதனையும் அவர்கள் அறைக்கு அழைத்துச் சென்றுவிட செண்பகாதேவியும் பாகீரதியும் பவானியை சிவசங்கரின் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

முகம் இறுகி சோபாவில் அமர்ந்திருந்த சிவசங்கரை ஞானதேசிகனும் லோகநாயகியும் சமாதானம் செய்தனர்.

“விடு சிவா… இப்போ என்னாச்சு? எப்பிடியும் பவாகுட்டிய பிரிஞ்சு ஜெகாவால இருக்க முடியாதுடா” என்ற தந்தையை நிமிர்ந்து பார்த்த சிவசங்கர்

“நீங்க இன்னும் அந்த மனுசனைப் புரிஞ்சிக்கலப்பா… இவ்ளோ பெரிய வஞ்சத்தை மனசுல வச்சிக்கிட்டே தான் உங்க கூட சிரிச்சுப் பேசிருக்காரு… தொழில்ல தான் நேர்மை இல்ல, மத்தபடி பாசமானவர்னு தாத்தா சொன்னதை நான் கூட நம்புனேன்பா… ஆனா வறட்டுப் பிடிவாதத்துக்காகப் பெத்தப் பொண்ணை இவ்ளோ ஈசியா தூக்கிப் போட்டுட்டாரே, என்ன மனுசன்பா அவரு?” என்று வெகுண்டெழுந்தான்.

“ஜெகாண்ணன் ஏதோ கோவத்துல பேசிருப்பாரு… அதை பெருசா எடுத்துக்காதப்பா… அவரால பவாவ பாக்காம பேசாம இருக்க முடியாதுடா” என்று லோகநாயகி அவனை அமைதிப்படுத்தினார்.

அதே போல தான் அவரது மகளும் அங்கே முதியவர்களைச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள். அவர்கள் அமைதியடையாது தவிக்கவும்

“அட இப்போ என்ன? ஜெகா மாமா நம்ம குடும்பத்தோட சேர மாட்டாருனு தானே இவ்ளோ தூரம் ஃபீல் பண்ணுறிங்க… ஒன்னு பண்ணுவோமா? பேசாம நான் அந்த சிடுமூஞ்சி அருணை மேரேஜ் பண்ணிக்கிறேன்… அப்புறம் அவங்க வீட்டை என்னோட கன்ட்ரோலுக்குக் கொண்டு வந்து அத்தை மாமாவ நம்ம குடும்பத்தோட கனெக்ட் பண்ணி விட்டுடுறேன்… டீல் ஓகேவா?” என்று தன் மனதின் வலியை மறைத்துக்கொண்டு வினவ பெரியவர்களின் முகத்தில் புன்சிரிப்பு எட்டிப் பார்த்தது.

அவர்களை அதட்டி உருட்டி இரவுணவு உண்ண வைத்தவள் அவர்கள் நிம்மதியாய் கண் மூடிய பின்னர் ஹாலுக்கு வந்தாள்.

அங்கே செண்பகாதேவியும் பாகீரதியும் சோகவடிவாய் அமர்ந்திருக்க பாகீரதி “இன்னும் பவாவோட முகம் தெளியல… இருந்தாலும் பெரியப்பாவுக்கு இவ்ளோ ஆட்டிட்டியூட் ஆகாதுடி நதி… பாவம் அவ” என்று சொல்ல சின்னத்தையையும் அவர் பெற்ற மகளையும் சமாளித்து அவர்கள் அறைக்கு அனுப்பிவிட்டுத் தானும் தனது அறைக்குள் சரணடைந்தாள்.

அப்போது மொபைல் சிணுங்கவும் யாரென பார்த்தவள் அழைத்தவன் அருண் என்றதும் அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ சொல்லுங்க” என்றவளிடம்

“பவா எப்பிடி இருக்கா நதி?” என்று சோகமாய் வினவியது அருணின் குரல்.

“இப்போ தான் பாகியும் சின்னத்தையும் சேர்ந்து சமாதானம் பண்ணுனாங்க…. அண்ணாவும் பவாவோட தான் இருக்கான்.. சோ டோண்ட் ஒரி அபவுட் ஹெர்… நீங்க அத்தைய பத்திரமா பாத்துக்கோங்க” என்றவள் அழைப்பைத் துண்டிக்கப் போக அவசரமாய் இடை மறித்தது அவன் குரல்.

“கொஞ்சம் பொறு… பவாவ பத்திரமா பாத்துக்கோ… எதுவும் பிரச்சனைனா எனக்குக் கொஞ்சம் இன்ஃபார்ம் பண்ணு நதி”

“ம்ம்… சரி… நீங்களும் கொஞ்சம் மாமாவ சமாதானம் பண்ண டிரை பண்ணுங்க… எப்போவும் எல்லாரும் இதே திமிரோட அகம்பாவத்தோட இருந்துட முடியாது அருண்… எல்லாரும் ஒரு நாள் மண்ணுக்குள்ள போகத் தான் போறோம்… அது வரைக்கும் ஒன்னா ஒற்றுமையா வாழ்த்துட்டுப் போவோமே அருண்”

வானதி இன்றைய தினம் தோழியின் வருத்தத்தில் மனம் வெம்பியிருந்தவள் அருணிடம் அந்தச் சோகத்தை வார்த்தைகளாய் கொட்டிவிட்டாள்.

“நீ எதுக்கும் கவலைப்படாத நதி… நான் அப்பாவோட மனசை மாத்த டிரை பண்ணுறேன்… இப்போ போய் தூங்கு… ஆல்ரெடி லேட் ஆயிடுச்சு பாரு” என்றவன் இணைப்பைத் துண்டித்தான்.

வானதி பவானியும் அவள் சகோதரனைப் போல பரிதவிப்பாளோ என்று யோசித்தவள் அவளுடன் அண்ணன் இருப்பது நினைவில் வரவும் சற்று நிம்மதியடைந்தாள்.

அதே நேரம் பவானியின் அருகில் வந்து அமர்ந்தான் சிவசங்கர். அவள் அதை உணராதவளாய் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க உற்று நோக்கியவனுக்கு அவள் கன்னத்திலிருந்த கண்ணீர்க்கோடுகள் தென்படவும் வேகமாகத் துடைத்து விட்டான்.

அவனது விரல்களின் ஸ்பரிசத்தை உணர்ந்தவள் திடுக்கிட “வாட் ஹேப்பண்ட் பவா? ஆர் யூ ஆல்ரைட்?” என்று மென்மையாய் வினவவும் தந்தை தன்னிடம் பேசிய வார்த்தைகளும் தந்தையிடம் அவன் பேசிய வார்த்தைகளும் மாறி மாறி நினைவில் வர அவன் கையைத் தட்டிவிட்டாள் அவள்.

“ஐ அம் நாட் ஆல்ரைட் சிவா… நான் மட்டும் இல்ல, வைராக்கியம் பிடிச்ச அப்பாவும் பிடிவாதக்கார புருசனும் யாருக்கெல்லாம் வாய்ச்சிருக்காங்களோ அந்தப் பொண்ணுங்க யாருமே நிம்மதியா இருக்க முடியாது”

“வாட் ரப்பிஷ் ஆர் யூ டாக்கிங்? உன் அப்பாவோட வறட்டுப்பிடிவாதத்துக்கு நான் என்ன பண்ண முடியும்?”

“ஐயா சாமி… நீங்க எதுவும் பண்ண வேண்டாம்… என்னைக் கொஞ்சம் தனியா விடுங்க… எனக்கு இப்போ தனிமை தான் வேணும்”

“ம்ஹூம்! ரொம்ப தப்பாச்சே பவா… ஒரு பொண்ணு கல்யாணம் ஆன முதல் நாளே தனிமைல இருக்கணும்ங்கிறது கேக்குறதுக்கு நல்லாவா இருக்கு? இத்தனை நாள் நீ சிங்கிள்… ஆனா இப்போ நீ மிசஸ் சிவசங்கர்… என்னோட சரிபாதிம்மா நீ… உன்னை நான் தனியா விட முடியுமா என்ன? அதுலயும் இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் வேற”

என்றைக்கும் இல்லாத குறும்புடன் கண்ணைச் சிமிட்டியபடி அவளைத் தோளோடு அணைத்தவனை உறுத்து விழித்தவள் அவனது கையை விலக்க முயன்றபடியே

“ஐ ஹேவ் நோ ஐடியா அபவுட் அவர் ஃபர்ஸ்ட் நைட்… பட் நீங்க இப்போ கையை எடுக்கலனா உங்களுக்கு இது தான் லாஸ்ட் நைட்டா இருக்கும் மிஸ்டர் சிவசங்கர்” என்று வெகுண்டெழ

“எனக்கு இது லாஸ்ட் நைட்டானு எனக்குத் தெரியல… ஆனா ஃபர்ஸ்ட் நைட் அதுவுமா என் பொண்டாட்டி வருத்தப்பட்டா எனக்கு மனசு வலிக்குது” என்று நெஞ்சில் கை வைத்துச் சொல்லவும் பவானி தலையில் அடித்துக் கொண்டவள்

“உங்களுக்குப் பைத்தியம் பிடிச்சிடுச்சுனு நினைக்கேன்” என்று சொல்லிவிட்டு உதட்டைச் சுழித்து அழகு காட்டியபடி எழுந்தவள் விறுவிறுவென அறைக்குள் சென்றுவிட்டாள்.

அவளைத் தொடர்ந்து சிவசங்கரும் பின்னே வரவே, பவானி நின்றவள் “என்ன வேணும் உங்களுக்கு? எதுக்குப் பின்னாடியே வர்றிங்க?” என்று வேகமாய் கேட்க

“ஹலோ இது என் ரூம்… இங்க வர்றதுக்கு நான் யாரு கிட்ட கேக்கணும்?” என்று அவனும் பதிலுக்கு எகிற பவானி சற்று நிதானித்தாள்.

“ஓகே! இது உங்க ரூம் தான்… ஆனா ப்ளீஸ் கொஞ்சம் எனக்கு ஸ்பேஸ் குடுங்க சிவா… இன்னைக்கு நடந்த இன்சிடென்ஸ் எனக்குக் குடுத்த ஷாக் ரொம்பவே அதிகம்… மனசு ரொம்ப கனமா இருக்கு… நான் தூங்குறேன்… ப்ளீஸ்”

அவளது பேச்சில் இருந்த வலி அவனுக்குமே வருத்தத்தைக் கொடுக்க “சரி… நீ படுத்துத் தூங்கு… குட் நைட்” என்று சொல்ல பவானி சோகம் குறையாத முகத்துடன் படுத்தவள் சில நிமிடங்களில் உறங்கியும் போனாள்.

சிவசங்கர் விளக்கை அணைத்தவன் பால்கனிக்குச் சென்று அமர்ந்து யோசனையில் ஆழ்ந்தான்.

பவானி இன்று தந்தையின் பேச்சை நினைத்து வருந்துவாள் என்பதை அவன் எதிர்பார்த்திருந்தான். ஆனால் அவளது அழுகை அவனைக் கொஞ்சம் அசைத்துவிட்டது. என்ன தான் அவள் மீது அவனுக்கும் வருத்தம் இருந்தாலும் அவனால் பவானி அழுவதைப் பார்த்துக் கொண்டு கையைக் கட்டி வேடிக்கை பார்க்க முடியவில்லை.

அழுதவளைச் சிரிக்க வைக்கும் மந்திரம் அவனுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தான் சீண்டினால் அவள் கட்டாயம் பட்டாசாய் சீறுவாள் என்பது சமீபகாலங்களில் அவன் அனுபவத்தில் கண்டுவிட்டதால் தனது கேலிக்கிண்டலில் அவளை முடிந்தளவுக்கு இயல்பாக்க முயற்சி செய்து அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றுவிட்டான்.

அவனால் நம்பவே முடியாத ஒரு விசயம் ஜெகத்ரட்சகன் இப்படி மகளை ஒரேயடியாக ஒதுக்கி வைத்தது தான். இத்தனைக்கும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் செய்த பிழைக்காக தானே தாத்தா அவரைக் கண்டித்தார்.

ஆனால் செய்த பிழைக்காக வருந்தாது தங்களை எதிரியாய் பாவித்தவரின் உள்ளத்தில் உண்டான வைராக்கியம் இன்று சொந்தமகளையே தள்ளி வைக்கும் அளவுக்கு அவரை மாற்றி விட்டதே என்று எண்ணியவன் இனி அவர் மனம் மாறுவார் என்ற நம்பிக்கையை முற்றிலுமாக இழந்துவிட்டான்.

எப்போதும் போல ஜெகத்ரட்சகன் இப்போதும் அவனுக்கு மூன்றாவது மனிதர் தான். எனவே அவரைக் குறித்து யோசிப்பதை விட்டுவிட்டு தனது குடும்பத்தினரையும் மனைவியையும் பற்றி மட்டுமே இனி சிந்திக்க வேண்டுமென தனது மூளையின் சாம்பல் நிற செல்களுக்குக் கட்டளையிட்டுவிட்டுத் தானும் தூங்கலாம் என்ற முடிவுக்கு அவன் வரும் போது நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டிருந்தது.

பால்கனிக்குச் செல்வதற்கான கதவை மூடிவிட்டு அறைக்குள் வந்தவன் படுக்கையில் விழுந்து கண்களை இறுக மூடிக் கொண்டான். அவனுக்கு அருகில் படுத்திருந்த பவானி மூச்சு விடும் சத்தம் சீராய் அவன் காதில் விழ அதைக் கேட்டபடியே தானும் உறங்கிப் போனான்.

**************

அஞ்சனாவிலாசம்….

கொதித்துப் போயிருந்த அஞ்சனாதேவி கணவரிடம் வார்த்தைகளைத் தீக்கங்குகளாய் எறிந்து கொண்டிருந்தார். தான் ஆசையாய் பெற்று வளர்த்த மகளது நிலையைப் பற்றி சற்றும் யோசிக்காது என்னென்ன வார்த்தைகள் பேசிவிட்டார் இவர் என்ற ஆதங்கம் அவரை எரிமலையாய் மாற்றியிருந்தது.

அருண் அமைதியாய் நின்று கொண்டிருந்தாலும் அவன் மனதிலும் தந்தையின் செய்கையால் உண்டான கேள்விகள் நிறைந்திருந்தன. ஆனால் தாயாரைப் போல அவனால் தந்தையிடம் கோபப்பட முடியாது. அவரை எதிர்த்துப் பேசவும் வழியற்றவனாய் மனமெங்கும் ஆதங்கத்துடன் வாய் மூடி நின்றான்.

“யாரைக் கேட்டு என் பொண்ணுக்கும் இந்த வீட்டுக்கும் சம்பந்தமில்லனு சொன்னிங்க? பெத்தப் பொண்ணை இப்பிடி தலை முழுக உங்களுக்கு எப்பிடி மனசு வந்துச்சுங்க? சந்தோசமா கல்யாணம் பண்ணி வைக்குற மாதிரி நடிச்சு இப்பிடி என் பொண்ணு தலைல இடிய இறக்கிட்டிங்களே… இவ்ளோ கேள்வி கேக்குறேன்… அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? வாயைத் திறந்து பேசுங்க” என்று சொல்லவும் தலை நிமிர்ந்தார் ஜெகத்ரட்சகன்.

“என்ன சொல்லணும்? என்னோட நிழல் மாதிரினு நான் நினைச்ச பொண்ணு இப்பிடி என்னை விட அந்தச் சிவா தான் முக்கியம்னு பேசி என்னை உதறிட்டுப் போனப்போ எனக்கும் இப்பிடி தான் வலிச்சுது… அந்த வலி தான் நான் இப்பிடி ஒரு முடிவு எடுக்குறதுக்குக் காரணம்… ரெண்டு பேரும் நல்லா கேட்டுக்கோங்க… இனிமே அவளுக்கும் எனக்கும் சம்பந்தமில்ல… நான் இருக்குற வீட்டுக்கு அவளோ அவளோட புகுந்த வீட்டுக்காரங்களோ வரக்கூடாது… மத்தபடி நீங்க ரெண்டு பேரும் அவ கூட பேசுறதும் பேசாம இருக்கிறதும் உங்க இஷ்டம்” என்று சொல்லிவிட்டு இத்தோடு பேச்சுவார்த்தை முடிந்தது என்பது போல அவரது அறைக்குச் சென்றுவிட்டார்.

அஞ்சனாதேவியும் அருணும் திகைத்துப் போய் நின்றனர். அடுத்து என்ன சொல்வது என்று புரியாது கலங்கிப் போன தாயைத் தேற்றினான் அருண்.

“அழாதிங்கம்மா… நான் இப்போ தான் வானதி கிட்ட போன்ல பேசுனேன்… அவளும் பவாவ பாத்துக்கிறேனு சொல்லிட்டா… எல்லாத்துக்கும் மேல சிவா அவ கூட இருக்குறான்… அதனால நம்ம கவலைப்பட வேண்டாம்மா”

“உங்கப்பா ஏன்டா இப்பிடி இருக்கிறாரு?”

“அப்பாவால பவாகுட்டிய பிரிஞ்சு இருக்க முடியாதும்மா… விடுங்க… எல்லாம் சரியாயிடும்” என்று சொல்லவும் அவர் கொஞ்சம் மனம் தேறினார்.

தாயாரை அவரது அறைக்கு அனுப்பியவன் தனது அறைக்குள் புகுந்து கொண்டான். அனைத்தும் சரியாகி மீண்டும் தங்கையுடன் தந்தை ராசியாகிவிட வேண்டுமென ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டவன் விழி மூடி உறங்க முயன்றான். தனது வேண்டுதல் அவ்வளவு எளிதில் நிறைவேறப் போவதில்லை என்பதும் ஜெகத்ரட்சகன் மீண்டும் மனம் மாற வேண்டுமென்றால் அதற்கு மிகப்பெரிய விலையைக் கொடுத்தாக வேண்டும் என்பதும் அருணுக்கு அப்போது தெரியவில்லை.

தொடரும்💘💘💘