முன்பே காணாதது ஏனடா(டி) – 49

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

தங்கம் பேசிய வார்த்தையினால் வர துடித்த அழுகையை தனக்குள் விழுங்கியபடி நின்றாள் நர்மதா.

மகாவிற்கும் வள்ளிக்கும் கோபம் பலமடங்கு பெருக நேரடியாக தங்கம் இருக்கும் இடம் செல்ல முனைந்தனர்.

மொழி, “அம்மா…  எங்க போறீங்க ரெண்டு பேரும்”

“அந்த தங்கத்துக்கு நாக்கு இருந்தால் என்ன வேணும்னாலும் பேசுவாளா நாங்க போய் இரண்டு திட்டு திட்டிட்டு வந்தால் தான் மனசு ஆரும்”

“அத்தை பிளீஸ் பிரச்சனை வேண்டாம் அங்க பாருங்க உங்க புள்ளைய” என கைகாட்டினாள் நர்மதா.

அங்கே சுதாகரனுடன் ஏதோ பேசி சிரித்தபடி இருந்தான் செழியன்.

“எவ்வளவு சந்தோஷமா இருக்காரு பாருங்க. இப்போ நாம பிரச்சனைய ஆரம்பிச்சா இந்த சந்தோஷம் எல்லாம் காணாம போயிடும்.

வாழ்க்கையில நம்மள எல்லாரும் பேசிக்கிட்டே தான் இருப்பாங்க எல்லார் வாயையும் அடைச்சுட்டே இருக்க முடியாதே!  இதை இப்படியே விட்டுங்க அத்தை” என்றவள் வீட்டை நோக்கி சென்றாள்.

தன் அறைக்குள் வந்து கட்டிலில் படுத்து கொண்டாள். அவளது பார்வை அந்த குட்டி அறையின் மீதுபட்டது. அதனை பார்த்துக் கொண்டே இருந்தவள் அப்படியே கண் அமர்ந்துவிட்டாள்.

செழியன், “அம்மா நர்மதா எங்க?”

மகா,”அவளுக்கு தலை வலிக்குதாம் செழியா வீட்டுக்கு போய் இருக்கா”

‘தலை வலியா!’ என்று யோசித்தவன் “சரிமா நீங்க பொங்கல் பானைய கொண்டு போய் சாமி முன்னாடி வச்சுட்டு இருங்க. நான் போய் நர்மதாவ கூட்டிட்டு வரேன்”

வள்ளி, “அவள் ரெஸ்ட் எடுக்கடும் விடேன்டா”

“மாத்திரை மட்டும் வாங்கி கொடுத்துட்டு வரேன். கொஞ்ச நேரத்துல ஆரத்தி காட்ட ஆரம்பிசுடுவாங்க அதுக்குள்ள சரி ஆகிருச்சுனா வந்து சாமி மட்டும் கும்பிட்டுட்டு போகட்டும்”

“சரிடா அதுவும் சரிதான் போய்டு வா”

சரி என்பதாக தலை அசைத்தவன் வீட்டிற்கு புறப்பட்டான்.

……

குமரன் சென்னை வந்து இறங்கினான். தன் மொபைலை கையில் எடுத்தவன் சுமிக்கு அழைப்பு விடுத்தபடி கூட்டத்தில் இருந்து ஒதுங்கி ஒரு கடையின் முன் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

“ஹலோ…  சுமி”

“ஆ…  குமரன் வந்துட்டீங்களா?”

“ஆ…  வந்துட்டேன் அட்ரஸ் மட்டும் செண்ட் பண்ணுங்க நான் வரேன்”

“ஐயோ..  லேடிஸ் ஹாஸ்டல், வேண்டாம் நான் அவளை பார்க் கூட்டி வரேன்”

“சரி பார்க் அட்ரஸ் அனுப்பு டைம் என்னனு அனுப்பிரு. நான் ஹோட்டல் போய்டு ரெப்பிரஷ் ஆகிட்டு வரேன்”

“சரி குமரன்”

அழைப்பை துண்டித்த சுமி தங்களது அறைக்குள் நுழைந்தாள். மைத்ரி பெட்டில் சாய்ந்த வண்ணம் எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.

“மைத்ரி ஏன்டி வந்ததுல இருந்து இப்படியே உட்காந்து இருக்க கிளம்பு கொஞ்ச நேரம் வெளியை போயிட்டு வருவோம் ஒரு சேன்ஞ்சா இருக்கும்”

“இல்லடி நான் வரலை நீ போ”

“கொன்றுவேன் உனக்காக தான் இன்னைக்கு லீவ் போடுட்டேன் மரியாதையா கிளம்பு”

“சுமி” என அவள் ராகமிலுத்தவளின் கைகளை பற்றி இழுத்து சென்றாள்.

இருவரும் அவர்களது ஹாஸ்டலுக்கு அருகில் அமைந்திருக்கும் பூங்காவில் அமர்ந்து இருந்தனர்.

அங்கு வந்தும் வெகுநேரமாக அமைதியாகவே அமர்ந்து இருந்தாள் மைத்ரி.

“ஏய் என்னடி இங்க வந்தும் அமைதியா இருக்க”

மைத்ரியிடம் பதில் இல்லை. இலக்கின்றி எதையோ வெறித்திருந்தாள்.

அவளது நிலையை எண்ணி சலிப்புடன் பார்வையை திருப்பிய சுமியின் கண்ணில்பட்டான் குமரன்.

நுழைவு வாயிலின் அருகே நின்று யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தான். மைத்ரியிடம் இருந்து விலகி அவனிடம் சென்றாள்

“குமரன்”

சுமியை பார்த்தவன் அழைப்பை துண்டித்துவிட்டு அவள் புறம் திரும்பினான்.

“சுமி மைத்து எங்க?”

“அதோ இருக்கா” என அவள் அமர்ந்து இருக்கும் திசையை காட்டினாள்.

“சரி சுமி நான் பார்த்துகிறேன் நீ கிளம்பு”

“ஒகே ஆல் தி பெஸ்ட்” என்றவள் அவனிடம் இருந்து விடைபெற்று சென்றுவிட்டாள்.

குமரன் மைத்ரியின் அருகே சென்று அமர்ந்தான். அரவம் உணர்ந்து அருகில் திரும்பிய மைத்ரி குமரனை கண்டு ஷாக் ஒன்றும் ஆகவில்லை. அமைதியாக பார்வையை திருப்பிக் கொண்டாள்.

“மைத்து உங்கிட்ட கொஞ்சம் பேசணும்”

“பேசுங்க”

“தனியா பேசணும்”

“இங்க நீங்களும் நானும் மட்டும் தான் இருக்கோம் குமரன் நீங்க தாராளமா பேசலாம்”

“நான் உங்கிட்ட எல்லாத்தையும் மறைச்சதுக்கு மறுபடியும் ஒருமுறை சாரி கேட்டுக்கிறேன். அப்புறம் எனக்கு உன்னோட பாஸ்ட்ட பத்தி கவலை இல்ல. பாஸ்ட்னா உன்னோட எக்ஸ் லவ் பத்தியும் தான். எனக்கு அது தேவையில்லை ஒருவேளை இன்னும் உம்மனசுல அந்த லவ் இருந்தால் இங்கையே அதை புதச்சுட்டு வந்துரு”

மைத்ரிக்கு குமரன் கூற வருவது எதுவும் புரியவில்லை.

“நீ எனக்கு சொந்தம் மைத்ரி” என்றவன் தன் பையில் இருந்து அவளது டைரியை எடுத்து அவளது மடியில் வைத்தான். கூடவே தான் தற்போது தங்கியிருக்கும் ஹோட்டலின் முகவரியையும் ரூம் நம்பரையும் கொடுத்தான்.

“இந்த டைரிய இங்கையே போட்டுட்டு என் பொண்டாட்டியா மட்டும் வா” என்று கூறி எழுந்து சென்றுவிட்டான்.

சென்றவனின் முதுகை வெறித்தவள் சிறிது நேரம் கழித்து டைரியையும் கையில் எடுத்துக் கொண்டு அவன் கொடுத்த முகவரிக்கு சென்றாள்.

இன்றே அனைத்திற்கும் முடிவு கட்டிவிட வேண்டும் என்று உறுதி கொண்டாள்.

………….

வீட்டிற்கு வந்த செழியன் தங்களது அறைக்கு சென்றான். கட்டிலில் படுத்து உறங்கி கொண்டிருந்த மனைவியின் அருகில் சென்று அமர்ந்தான்

கணவன் வருகையை உணர்ந்த நர்மதா மெல்ல தலையை எடுத்து அவனது மடியில் வைத்துக் கொண்டாள்.

மெல்ல தலையை நீவியபடி “என்னாச்சு அம்மு” என்றான் பரிவாக

“ஒன்னும் இல்லை கொஞ்சம் தலை வலிச்சது”

அவளுக்கு தங்கத்தை பற்றி பேசி தங்களது நேரத்தை வீணாக்க விருப்பம் இல்லை. அதனால் பேச்சை மாற்றும் விதமாக “சரி அதை விடுங்க ஏன் வந்துட்டீங்க?” என்றாள்.

“உன்னை கூட்டிட்டு போக தான். கொஞ்ச நேரத்துல ஆரத்தி காட்ட ஆரம்பிப்பாங்க வந்து சாமி கும்பிட்டுட்டு திரும்ப தூங்கிக்கோ”

“ம் போகலாம் ஆனால் ஒரு பத்து நிமிஷம் இப்படியே இருங்க” என்றவள் வாகாக அவனது மடியில் படுத்துக் கொண்டாள்.

“மாமா அந்த குட்டி ரூம்ல என்னை இருக்கு?”

“அதை சொல்லனும்னா நீ ஒரு வேலை பண்ணனும்”

“என்ன பண்ணனும்!?” என கேட்டு வேகமாக எழுந்து அமர்ந்தாள்.

மனைவியை நமட்டு சிரிப்புடன் பார்த்தவன் “முத்தம் கொடுக்கனும் அதுவும் இங்க” என தன் உதட்டை தொட்டு காட்டினான்.

“ஐயோ அறிவு இருக்கா மாமா ஊருல காப்பு கட்டி சாமி கும்பிட்டு இருக்காங்க திருவிழா நேரத்துல இப்படி பேச கூடாது வாயில அடிங்க” என்றாள்.

“தப்புதான் மேடம் வாங்க கோவிலுக்கு போகலாம். ஆனால் நீ எப்போ நான் சொன்னபடி செய்றையோ அப்போ தான் உனக்கு அதை திறந்து காட்டுவேன்”

சரி என்பதாக தலை அசைத்தவள் கணவனுடன் கோவிலுக்கு சென்றாள்.

தொடரும்…