முன்பே காணாதது ஏனடா(டி) – 36

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

வீடு வந்த நால்வரும் தோட்டம் அமைப்பதற்கான பணிகளை செய்ய ஆரம்பித்தனர்.

நர்மதா அடிக்கொரு முறை செழியனின் முகத்தை பார்த்த வண்ணம் இருந்தாள்.

சுதாகரன்,”மொழி தோட்டத்து வீட்டுல சில விதைகள் எடுத்து வச்சேன். மறந்தே போச்சு நான் போய் எடுத்துட்டு வரேன்”

“சரி சீக்கிரம் போய்டு வா சுதா”

“ஏய் சுதா சொல்லாத டி”

“அப்படி தான் சொல்லுவேன் போடா”

“டேய் மாப்பிள்ளை அவள் என்ன மட்டு மரியாதை இல்லாம பேசுறா எதுனாச்சும் கேட்குறியா?”

“இரண்டு பேரும் புருசன் பொண்டாட்டி உங்க சண்டைக்கு இடையில நான் வரமாட்டேன் பா. நீங்களா தான் சமாளிச்சாகனும்”

“துரோகி” என அவனை பார்த்து திட்டிக் கொண்டு வாயிலுக்கு விரைந்தான்.

நர்மதா மண்வெட்டியை வைத்து வெட்ட தெரியாமல் படம் காட்டிக் கொண்டிருந்தாள்.

வேண்டும் என்றே மண்வெட்டியை காலில் போட்டுக் கொண்டு ஆ..  வென கத்தினாள்.

அப்படி செய்தால் ஆவது செழியன் என்ன ஏது என்று பதறி அவளிடம் நெருங்குவான் என எண்ணினாள்.

ஆனால் உன் எண்ணத்திற்கு நான் மசிபவன் இல்லை என வீம்பாக அவள் புறம் திரும்பாது இருந்தான் செழியன்.

“அண்ணி என்னாச்சு..” மொழி தான் அவளது கத்தலில் பதறி வந்தாள்.

நர்மதா மொழியின் கேள்விக்கு பதில் கூறாமல் செழியன் புறம் பார்த்துக் கொண்டு ஆ…  வலிக்குதே என கத்திக் கொண்டிருந்தாள்.

நர்மதாவின் முயற்சியை புரிந்து கொண்ட மொழி “அண்ணி நான் போய் குடிக்க காபி போட்டுக் கொண்டு வரேன் பயப்படாதீங்க சின்ன அடிதான் சீக்கிரம் குணமாகிரும்” என கூறி சமையல் அறை சென்றுவிட்டாள்.

உண்மையை கூற வேண்டும் என்றால் காலில் காயம் ஏதும் ஏற்படவில்லை. அதை செழியனும் அறிவான் மனைவி தன் மனநிலையை இலகுவாக்க தன் மன காயங்களை மறைத்துக் கொண்டு இதுபோல் நடந்து கொள்கிறாள் என எண்ணினான்.

அவள் தன்னைவிட அவளது மனதில் இருப்பவைக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அப்பொழுது தான் அவள் வாழ்வு சிறக்கும். தான் கண்டு கொள்ளாது இருந்தால் சில முயற்சியில சலிப்படைந்துவிடுவாள் என நம்பினான். அதனால் முக்த்தில் ஏதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் வேலையில் கவனமாக இருப்பது போல் காட்டிக் கொண்டான்.

சிறிது நேரத்தில் வெயிலினால் உண்டான வேர்வையில் அசௌகரியத்தை உணர்ந்த செழியன் தன் மேல் சட்டையை கழட்டிவிட்டு பணியை தொடர்ந்தான்.

கையில்லா பனியனுடன் அவனை பார்க்க கூச்சம் கொண்டவள் அதன் பிறகு அவனிடம் செல்லும் தன் பார்வையை கட்டுபடுத்திக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் மொழி தேநீர் குவளையுடன் வரவும் சசிதரன் விதைகளுடன் வீடுவந்து சேரவும் சரியாக இருந்தது.

கை கால்களை கழுவிவிட்டு தங்கையின் அருகில் அமர்ந்தான் செழியன்.

சுதாகரன் வந்ததும் விதையை அவனிடம் கொடுக்க அதில் இருந்து பாதி விதையை எடுத்து தனியாக வைத்தான்.

சுதா, “அதை ஏன்டா தனியா வைக்குற!”

“நம்ம தங்கம் இருக்குல இந்த பூவோட விதை வேனும்னு கேட்டு அடிக்கடி நம்ம தோட்டத்துக்கு வரும். அது வரும்போது  விதையே இருக்காது நானும் எடுத்து வைக்கனும்னு நினைப்பேன் மறந்து போயிரும் இன்னைக்கு கொண்டு போய் கொடுத்துடுறேன்.”

“சரிடா…”

இவர்களது உரையாடலை கவனித்த நர்மதா அவசரமாக மொழியின் புறம் திரும்பினாள்.

“மொழி உங்க அண்ணனுக்கு தங்கம் பத்தி தெரியுமா? தெரியாதா?”

“அண்ணனுக்கு இந்த விஷயம் தெரியாது அண்ணி. என் புருசனுக்கும் தெரியாது.”

“ஓ….”   என்றவள் செழியனின் கையில் இருந்த விதைகளை வெடுக்கென்று பிடுங்கினாள்.

அவளது திடீர் செயலில் அதிர்ந்து அவள் புறம் திரும்பிய செழியன் மனையாளை கேள்வியாய் நோக்கினான்.

“மொழி நீயே கொண்டு போய் அவரு சொல்ற பொண்ணுக்கிட்ட கொடுத்துடு” என்றாள்.

“ஆ…  சரி அண்ணி…”

செழியன் மனைவியின் முகத்தை இரண்டு நிமிடம் அழுத்தமாக பார்த்தவன் பின் தன் பார்வையை திருப்பிக் கொண்டான்.

மீண்டும் நால்வரும் சேர்ந்து தோட்டம் அமைக்கும் பணியை தொடர்ந்தனர்.

………

இரவு நேரம் தாமதமாக வீடு வந்தான் குமரன். அனைவரும் உறக்கத்தில் இருக்க சத்தம் இல்லாமல் உள்ளே நுழைந்தவன் கதவை தாழிட்டுவிட்டு திரும்ப மைத்ரி எதிரே நின்று இருந்தாள்.

மைத்ரி, “என்னாச்சு…  இன்னைக்கு வேலை ஜாஸ்தியா லேட்டா வர்றீங்க. சரி போய் பிரஸ் ஆகிட்டு வாங்க நான் சாப்பாடு எடுத்து வைக்குறேன்.”

அவளிடம் ஆமாம் சரி என எந்த பதிலும் அளிக்காமல் தன் அறை நுழைந்தான். கார்த்திக் கையில் புத்தகத்தை தாங்கியபடியே தூங்கியிருந்தான்.

அவனது கையில் இருந்து புத்தகத்தை எடுத்தவன் அருகே உள்ள டேபிலில் அதை வைத்தான்.

குளியலரை சென்று பிரஸ் ஆகி வந்தவன் தன் அறையில் இருக்கும் கண்ணாடியின் முன் நின்று அவனது முகத்தையே உற்றுப் பார்த்தான்.

அவன் மனதில் என்ன ஓடியதோ முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

மைத்ரி உணவை பறிமார இவன் வேறு ஒரு தட்டில் உணவை நிரப்பி உண்ண ஆரம்பித்தான்.

அவனது செயல் அவளுக்கு காயத்தை கொடுத்தது. முணுக்கென வரத்துடித்த கண்ணீரை கட்டுபடுத்தியவள் “என்னாச்சு குமரன் ஏன் இந்த மாதிரி நடந்துக்குறீங்க”

“நான் தப்பா எதுவும் பண்ணலையே. என் தேவைய நானே செஞ்சுக்கிறேன். ஒரு நாள் இருப்பீங்க அடுத்த நாள் கண்டுக்காம போயிடுவிங்க. அந்த நேரம் உங்கள எதிர்பார்த்து ஏமாற வேண்டிய அவசியம் இருக்காது பாருங்க”

அவனது சாடை பேச்சுகள் எதற்கென்று அவளுக்கு விளங்கவில்லை. அவள் யோசித்து கொண்டு நிற்கும் போதே உணவை முடித்துக் கொண்டு எழுந்து சென்றுவிட்டான்.

ஒரு வாரம் முடிந்தநிலையில் துள்ளலுடன் வீட்டிற்குள் நுழைந்தான் குமரன்.

“அம்மா…  அப்பா….  “

சுந்தரி, “என்ன குமரா எதுக்கு உள்ள வரும் போதே கத்திட்டு வர்ற”

“முதல அப்பாகிட்ட தான் சொல்லுவேன்”.

அதேநேரம் சரியாக வெளியே மெல்ல அடிவைத்து நடந்து வந்தார் மாரி

“என்னபா என்ன விஷயம்?”

“அப்பா” என அவனை கட்டிக்கொண்டவன் தன் கையில் இருந்த ஸ்வீட் பாக்ஸில் இருந்து இனிப்பை எடுத்து ஊட்டினான்.

“என்ன அண்ணா ஸ்வீட் எல்லாம் கொடுக்குற…” என கேட்டபடி உள்ளே நுழைந்தாள் சுஜி. அவளை தொடர்ந்து மைத்ரியும் வீட்டிற்குள் வந்தாள்.

சுஜிக்கு கல்லூரி முடியும் நேரம் மைத்ரியிடம் இருந்து அழைப்பு வந்தது.

“ஹலோ அண்ணி சொல்லுங்க”

“சுஜி என்ன வந்து பிக்கப் பண்ணிக்கிறியா?”

“ஆ…  வரேன் அண்ணி அதுக்குள்ள வேலை முடிஞ்சதா!”

“இல்ல கொஞ்சம் தலை வலி அதான் வந்து என்ன கூட்டிட்டு போ.  பஸ்ல மாறி வரனும்னா லேட் ஆகிரும் அதான் யோசிக்குறேன்”

“பஸ் எல்லாம் வேண்டாம் அண்ணி இதோ நானே வரேன்” என்றவள் அவளை சென்று கையோடு அழைத்து வந்தாள்.

சுஜி, “என்ன அண்ணா சொல்லு எதுக்கு திடீர்னு ஸ்வீட் எல்லாம்?”

மைத்ரியின் மீதிருந்த பார்வையை திருப்பி தங்கையின் கேள்விக்கான பதிலை தந்தையின் முகத்தை பார்த்து சொன்னான்.

“அப்பா….  நம்ம கம்பனியோட புது பிராஞ் திருச்சியில ஓப்பன் பண்ண போறோம்”

அதை கேட்ட அனைவர் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.

“வாவ்…  அண்ணா கங்கிராட்ஸ்”

“தாங்க்ஸ் சுஜி. இந்த பிராஞ் ஆரம்பிச்சதும் புது புராஜெக்ட் ஸ்டார்ட் பண்ண போறோம்.  அது சக்ஸஸ்புல்லா முடிஞ்சா தாராக்கு நாம கொடுக்க வேண்டிய செட்டில்மெண்ட் முடிஞ்சுரும்.”

சுந்தரி, “நிச்சயம் வெற்றி அடையும் குமரா”

“ம்…  அப்பா நீங்க எதுவுமே சொல்லல?”

“நான் சொல்ல என்னையா இருக்கு. ரொம்ப சந்தோசம் சொல்லப்போனா சந்தோஷத்துல வார்த்தையே வரல. உம்முகத்துல எப்பவும் இந்த சிரிப்பு நிலச்சு இருக்கனும் அது தான் என் ஆசை.  உன் முகத்துல இருக்குற பூரிப்பே சொல்லுது உனக்கு இந்த விஷயம் எவ்வளவு சந்தோஷத்த கொடுக்குதுனு சந்தோஷமா இரு”

தந்தை பார்த்து சிரித்தவனிடம் தன் வாழ்த்தை தெரிவித்தாள் மைத்ரி.

தாங்க்ஸ் என ஒட்டியும் ஒட்டாமல் சிரித்து அவளிடம் இருந்து நகர்ந்துவிட்டான்.

இரவு உணவை முடித்துவிட்டு மொட்டை மாடிக்கு சென்றான் குமரன். அவனை பின் தொடர்ந்து சென்றாள் மைத்ரி.

குடும்பத்தார் கண்டும் காணாமல் உறங்க சென்றனர். பிள்ளைகள் மீது சுந்தரிக்கும் மாரிக்கும் நிறைய நம்பிக்கை இருந்தது.

இருவரும் அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக எப்பவும் நடந்துகொள்வர் அதில் ஐயம் ஏதும் இல்லை.

வானத்தை பார்த்து நின்ற குமரனின் அருகில் சென்றவள் குமரன் என அழைக்க தாடை இறுக கண்களை மூடியவன் அவளைவிடுத்து நகரந்து கீழே செல்ல முனைந்தான்.

வேக எட்டுகளில் அவனை நெருங்கி கைகளை பற்றி அவனது செயலுக்கு தடைவிதித்தாள் மைத்ரி.

தொடரும்…