முன்பே காணாதது ஏனடா(டி) – 10

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

“அடடே…..  வாமா உனக்காக தான் காத்துட்டு இருந்தோம். இவதான் என் பொண்டாட்டி சுந்தரி..”

சுந்தரிக்கு மைத்ரியை பார்த்ததும் பிடித்துவிட்டது.  குமரனும் மைத்ரியும் மாலையும் கழுத்துமாக இருப்பது போல் எண்ணி பார்த்தாள். மனம் அதிக மகிழ்ச்சி கொண்டது. இதைபற்றி தன் கணவரிடம் பேச வேண்டும் என்று மனதில் குறித்து கொண்டார்.

அது ஏனோ இந்த தாய்மார்கள் தங்கள் பிள்ளை திருமண வயதை நெருங்கிவிட்டால் போதும் பார்க்கும் பெண்களை அவர்களோடு ஜோடி சேர்த்து பார்த்துவிடுவார்கள்.

“ஹாய் ஆன்டி….”

சுந்தரி, ” வாடாமா… “

“தினமும் உன்ன பத்திதா பேச்சு இவருக்கு” என்று கூறியவரிடம் சிறு சிரிப்பை பதிலாக கொடுத்தார்.

“உக்காருமா சாப்பிடலாம்….”

“ம்….. “

பாத்திரத்தில் இருந்தவற்றை தட்டில் மாற்றிவிட்டு உருண்டை பிடித்து கணவருக்கு நீட்டினார் சுந்தரி. அதனை ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்த மைத்ரியிடம் சிறு சிரிப்பை வழங்கிய சுந்தரி

“கல்யாண ஆன புதுசுல இப்படிதாமா வந்து சாப்பாடு புடுச்சு குடுப்பேன். அதுல இருந்து இப்படியே பழகிருச்சு” என்று கூறிக்கொண்டே உணவை மைத்ரியின் வாயருகே கொண்டு சென்றார்.  அவரின் செயலில் மைத்ரியின் கண்கள் இன்னும் சற்று விரிந்தது.

மேற்கொண்டு சுந்தரி, “வாங்கிகோடாமா” என்றார்.

உணவை வாங்கியவளின் கண்களை கண்ணீர் மறைத்தது. அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து யாரும் ஊட்டியதில்லை. அவளது கண்ணீரை துடைத்துவிட்ட சுந்தரி “உனக்கு நாங்க இருக்கோம்டாமா” என்றார்.

உணவு உண்டு முடித்தவுடன் மைத்ரியை பார்த்த சுந்தரி “கவலபடாதமா கடவுள் எல்லாருக்கும் துணைய படச்சுருக்கான் யாரும் இங்க அநாதை கிடையாது.”

அவளும் அவரை பார்த்து சரி என்று தலையாட்டினாள்.

“உனக்கு ஒன்னு சொல்லவா நான் கூட உன்ன மாதிரிதான் யாரும் கிடையாது. இதோ இவர் தான் எனக்காக எல்லாம் பாத்துகிட்டது. என்னோட அத்தை அதான் இவரோட அம்மா என்னை இவருக்காக தேர்ந்தெடுத்தப்போ சொந்தம் எல்லாம் வேண்டானு சொன்னாங்க. இவங்க அத கேக்கல இவதான் என்னோட மருமகனு சொல்லிட்டாங்க. சொந்தம் பந்தம் எல்லாம் ஒதுக்கிருச்சு. அந்த ஊருல இருந்தா எல்லாரும் என் மனசு கஷ்டபடுற மாதிரி பேசுவாங்கனு இங்க வந்துட்டோம்.”

மைத்ரிக்கு இவர்களை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. மைத்ரி எனும் பறவைக்கு அவர்களது கூட்டிற்குள் தானும் செல்ல வேண்டும் போல இருந்தது.

அறைக்கு வந்தவள் தனது கபோடில் இருந்த டையிரியில் இன்றைய நாளை பற்றி அதில் இருந்த காதலனிடம் கூறினாள்.  ஆம் காதலன் தான் பார்த்த மாத்திரத்தில் பிடித்துவிட்டது. ஏதோ இனகவர்ச்சி என தனது எண்ணத்தையும் உணர்ச்சியையும் புறக்கணிக்க முயற்சித்தாள். பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.  கண்களை மூடினாலும் வந்து நின்றான் அவள் அவனின் அழகன். அழகன் தான் அவனுக்கு அவள் வைத்த பெயரும் அதுவே..  அழகா..

அவள் அழகனோ நாளை பிரதோச தினத்தன்று வழக்கமாக அவளை சந்திக்கும் கோவிலில் தன் காதலை நர்மதாவிடம் எப்படி சொல்வதென்று தனக்குள் ஒத்திகை பார்த்து கொண்டிருந்தான்.

……..

அன்னபுறம் ஊரின் எல்லையில் இருந்தது அந்த நதி சிறிது தூரம் சென்றால் அடர்ந்த காட்டின் நடுவே ஆர்பரிக்கும் அந்த அருவி அதனை ஒட்டி பத்து அடி தொலைவில் இருந்தது. அந்த மண்டபம்.

அதன் மேல் அமர்ந்து அருவியை பார்த்து கொண்டிருந்தான் செழியன்.

மனம் நிலையில்லாமல் தவித்தது இப்படி தான் இந்த ஒரு மாத காலமும் நெஞ்சில் பாரம் கூடிக் கொண்டே இருந்தது.

பெரியம்மா தாய்க்கு நிகராக ஏன் அதற்கும் மேலும் அன்பை பொழிந்தாலும் ஏனோ தாய் மடியில் சிறிது நேரம் படுத்துக்கொள்ள மனம் ஏங்கியது. மனது ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்த தன் குடும்ப சூழ்நிலைக்கு ஏங்கியது.

அன்னபுறத்தில் பெரிய குடும்பம் என்றால் அது செழியனின் குடும்பமே.

ரத்தினம் சந்திரன் இருவரும் உடன் பிறந்தவர்கள்.

ரத்தினம்-வள்ளி தம்பதியின் ஒரே புதல்வன் கதிர்.

சந்திரன் – மகாலட்சுமி தம்பதிக்கு இரண்டு செல்வங்கள்.

மூத்தவன் செழியன்

இளையவள் அருள்மொழி.

கதிர் வள்ளியைவிட மகாவிடமே அதிகம் வளர்ந்தான். திருமணம் ஆகிய புதிதில் புது இடம் புது மக்கள் என்று மருண்ட மகாவிற்கு உற்ற துணையாக மாறி போனவன் இரண்டு வயதான கதிர்.

தன் மகவுகளைவிட கதிரே அவள் உயிர்.  அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாக மாறிவிடும் என்பது உண்மைதான் என்பதுபோல கதிரின் மீதான அன்பே அவளிடம் இருந்து அவனையும் உடன் தான் பெற்ற மகனின் விலகளையும் பரிசாக பெற்றுக்கொண்டார் மகா…

தன் தம்பி மகள் தன் வீட்டிற்கு மருமகளாக ஆக வேண்டும் என்று ஆசை கொண்ட மகா அதை தன் குடும்பத்தார் அனைவர் முன்பும் தெரிவித்தார்.

அதில் அனைவருக்கும் சம்மதமே. செழியனுக்கு சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை.

மகா, ” புள்ள இப்போத காலேஜ் சேர்ந்து ஆறு மாசம் ஆகுது நாம பரிசம் போட்டு வச்சுக்கலாம்.  அப்புறம் படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பத்தி முடிவு பண்ணிக்கலாம். நான் சொல்லுறது சரிதான மாமா.. “

ரத்தினம், ” உனக்கு விருப்பம் இருக்குனா நாங்க என்னடாம சொல்ல போறோம்.  உன்னோட விருப்பப்படியே பண்ணிறலாம்.”

இவர்கள் இவ்வாறாக பேசி கொண்டிருக்க இங்கே தன் பெரியம்மாவின் காதில் முனுமனுத்தான் செழியன்.

செழியன், “அண்ணே இருக்கும் போது எனக்கு என்ன அவசரம் பெரியம்மா “

வள்ளி, “டேய் சும்மா பேசி தாண்டா வைக்க போறோம். ஏதோ நாளைக்கே உனக்கு கல்யாணம்ற மாதிரி டயலாக் பேசுற பொறுமைடா மகனே”

செழியனுக்கோ அவரது வார்த்தையில் வெக்கம் பிடுங்கியது. முகம் முழுவதும் பரவிய செம்மை அவனது தாய் கூறிய வார்த்தையில் துடைத்து போட்டதுபோல் அழிந்துவிட்டது.

மகா, “சீக்கிரம் எல்லா ஏற்பாடும் பண்ணனும்ங்க “

சந்திரன், “பொறுமை மகா “

மகா, ” அட போங்க நான் எப்போ  மருமவளையும் என் மகன் கதிரையும் மாலையும் கழுத்துமா பாப்பேனு காத்துட்டு இருக்கேன். “

தொடரும்…