மயிலாப்பூரு மயிலே… ஒரு இறகு போடம்மா! 14.1

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 14.1

திருவிழா மூன்றாம் நாள்…

மல்லிக்கு ஏனோ தோழி கோவில் வராதது சரியாக படவில்லை. அவள் வைத்திருக்கும் ஒரு பழைய நோக்கியா போனிற்கு அழைத்து பார்த்துவிட்டாள், கால் செல்லவில்லை.

‘எதும் பிரச்சனையோ? கோவில் பக்கமே வரல?’ என கலக்கம் கொண்டு யோசித்தவாரு சுற்றியும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

இப்போதுதான் வீட்டிலிருந்து பூஜை தட்டை கோவிலுக்கு மேளதளம் முழங்க கொண்டு வந்தனர்.

வேண்டுதல் ஒரு பக்கம் நடக்க, கடைகளில் குழந்தைகள் பெரியவர்கள் என அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொண்டிருந்தனர்.

இவளுக்கு தேன்மொழி இல்லாமல் போர் அடித்தது. 

கதிர் பேசியது, வெற்றியிடம் கடிதம் கொடுத்தது எதும் மல்லி அறியவில்லை. இரண்டு நாட்கள் காய்ச்சலால் ஓய்வாக இருந்தவள் இன்றுதான் கோவிலே வருகிறாள்.

கோவிலே கதி என்று சுற்றுபவள் திருவிழா வராதது சந்தேகத்தை கொடுத்தது.

தலை வேறு வலிக்க, அங்கு நின்று கொண்டு தர்மா அவளை முறைத்துவிட்டு முகத்தை திருப்பியதும் சேர்த்து வலித்தது.

சிறிது நேரத்தில் அவள் அம்மா வர, அவருடன் நகர்ந்தாள்.

தர்மா சாதாரணமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அருகில் நின்றிருந்த அவன் நண்பன் சிவா நன்றாக சைட்டடித்துக் கொண்டிருந்தான்.

வெகுநேரம் அதை கண்டுக்காதது போல இருந்தவன் ஒரு கட்டத்தில், “எதுக்குடா இப்படி ஒரு பிள்ளையை விடாம பாத்து வைக்குற?” கடுப்பாக கேட்டான்.

“டேய்… இதுக்குத்தான முக்கியமா வந்தேன்.” என்றவனை கேவலமாக ஒரு லுக்கு விட, அதை தூசி போல தட்டி விட்டவன் தன் வேலையை தொடர்ந்தான்.

மனதுக்குள், ‘இவன் லவ் பண்றான். யாரையும் சைட் அடிக்கல அதுல நியாயம் இருக்கு. என்னையும் அப்டியே இருக்க சொன்னா?’ என சொல்லிக்கொண்டான்.

திருவிழாவிற்கு நண்பன் ஊர் வந்தவன், இரண்டு நாட்களாக தோட்ட வீட்டில் கொண்டாட்டமாக இருந்தாலும், தர்மா எதிலும் கலந்து கொள்ளவில்லை. 

அப்போதுதான் அந்த பக்கமிருந்து வந்த ஐவரை கண்டவனது கண்கள் இடுங்கியது.

பக்கத்திலிருப்பவனை உக்கிரமாக ஒரு பார்வை பார்க்க, அதில் பதறியவன்,

“டேய்…என்ன எதுக்கு மொறைக்கற? நிஜமா நான்லாம் அவனுங்கள வர சொல்லல. அதும் அவனுங்ககிட்ட நானும் இப்போல்லாம் அளந்துதான் பேசுறேன்.” என்றான்.

தர்மாவிற்கு அவன் உண்மை சொல்வது போலதான் இருந்தது. எனவே எதும் திட்டவில்லை.

அந்த ஐவரில் நான்கு பேர் சிவாவின் பள்ளி நண்பர்கள். அதில் ஒருவன் அவர்களுடைய நண்பன்.

அந்த ஒருவனால் தான் பிரச்சனையே…!

ரஞ்சன். அவர்களெல்லாம் கல்லூரி நண்பர்கள் போலும். கல்லூரி நாட்களிலிருந்தே தர்மா, சிவா மற்ற நால்வரும் இதேபோலதான் அந்த வீட்டில் திருவிழாவிற்கு வந்து தங்கி, கொண்டாடிவிட்டு செல்வர்.

போன முறை வரும்போது அவர்கள் அந்த புதியவனை அழைத்து வர, அவன் வந்து பண்ணிய கலாட்டாவில்தான் பல பிரச்சனை வந்தது.

எனவேதான் யாரையுமே இந்த முறை தர்மா அழைக்கவில்லை. சிவாவிற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாததால் மட்டுமே அவனை அழைத்தான்.

இவர்கள் ஏன் வந்தார்களென கோபம் வந்தாலும் போகவா சொல்ல முடியும்.

அதும் அவர்களருகில் வேறு நடுத்தர வயதில் திருவிழா பாதுகாப்புக்கென வந்த போலீஸ்காரர்கள் சொந்தம் போல நன்றாக பேசிக்கொண்டிருந்தனர்.

என்னவோ பிரச்சனை வர போகுது என தர்மாவிற்கு உள்ளுணர்வு சொல்ல, அவர்கள் மீது ஒரு கண்ணை வைத்தான்.

அப்போது பார்த்து கதிரும், பிரபாவும் ஏதோ பேசி சிரித்துக் கொண்டு அந்த பக்கம் நடந்து வந்தனர்.

ரஞ்சனை பார்த்த கதிருக்கு சிரிப்பு மறைந்து விட, முகம் அத்தனை கடுமையானது.

அதை கவனித்த பிரபா, ‘சண்டை போட்ற போறான்.’ என நகர்த்தி செல்ல பார்க்க, அவன் நகருவேனா என்பது போல முறைத்தவாரு நின்றிருந்தான்.

அதை கவனித்த ரஞ்சன், ‘இன்னைக்கு உன்னால என்ன ஒன்னும் பண்ண முடியாது.’ என்பது போல நக்கலாக ஒரு பார்வை பார்த்தான்.

பிரபா கஷ்டப்பட்டு அவனை இழுத்துக் கொண்டு போக அவனும் வேறு வழியின்றி நடந்தான்.

அதை கவனித்த சிவா, “எதுக்குடா அவனுக்கு இவ்ளோ கோவம் வருது?” சந்தேகம் கேட்க,

“அவன் அப்படித்தான்டா. கோவம்னா உடனே பொங்கிடுவான்.” என்றான் லேசாக புன்னகையுடன்…

====

இரவு நெருங்கியது. வானவேடிக்கை கண்ணைக் கவர, பலரும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவனையும் வெற்றியையும் வம்பிலுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகதான் அவன் இங்கு வந்திருந்தான்.

சண்டை வரும்போது கதிரை அவனுக்கு தெரிந்த போலீஸ்காரர் மூலம் அனைவரும் பார்க்க குறைந்தபட்சம் சில அடியாவது வாங்கி கொடுத்தே ஆகவேண்டும் என்றே இப்படி.

அதுவும் வெற்றியையும் சும்மா விடக்கூடாது என நினைத்தான்.

அன்றைய சண்டைக்குப் பின் வெற்றி தனியே சந்தித்து எச்சரித்தது இன்னுமே கோபத்தை கொடுத்தது.

‘இவனுக்கு எதுக்கு அவன் சப்போர்ட்க்கு வரான்?’ என நினைத்தவன் அவர்கள் குடும்ப விவகாரம் பற்றியும் அறிந்து வைத்திருந்தான்.

ஆனால் அதைவைத்து கிண்டல் பேசி அவன் முகரையை பெயர்த்துக் கொள்ள போவதை அப்போது அவன் அறியவில்லை.

கதிரின் கோபம் அன்றே பார்த்தும், தப்பான செயலை செய்கிறான் என  புரியும் சற்று நேரத்தில்…