உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 16

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

மறுநாள் காலை நான் எங்கிருக்கிறேன் என்ற நினைவில் தான் முழித்தாள் வேணி.
அத்தனை சோர்வு அவள் உடலில்.

கண்களை கசக்கி கசக்கி திறக்க முடியாது திறந்துப் பார்க்க, இளா கண்ணாடியின் முன் நின்று தலை சீவிக் கொண்டிருக்க மெதுவாய் எழுந்தமர்ந்தவள், “என்னடா விடியகாலைலயே குளிச்சி ரெடியாயிட்ட! இன்னிக்கு எங்கயாவது போறோமா?” என கேட்டாள்.

“என்னது விடியகாலைலயா? மணி ஒன்பது ஆகுதுடி என் தூங்குமூஞ்சு பொண்டாட்டி” என இளா கூறவும்,

“அய்யோ எங்க அம்மா என்னை ஒரு வழி பண்ணிடுவாங்களே… கல்யாணம் முடிஞ்சும் பொறுப்பு வரலைனு ஏகத்துக்கும் திட்ட ஆரம்பிச்சிடுவாங்களே” என அடித்து பிடித்து அவள் எழ முற்பட,

அவள் கை பற்றி அமரச் செய்தவன், “அடியேய் என் அறிவாளி பொண்டாட்டி நீ இருக்கிறது நம்ம வீட்டில” என அவள் தலையில் தட்டியவன்,

ஆனாலும் இன்னிக்கு மதியம் உங்க வீட்டுக்கு மறு வீட்டுக்கு அழைச்சிட்டுப் போக காலைலயே வந்துட்டாங்க உன் மொத்த குடும்பமும்.

“டேய் உங்க வீடுனாலும் என்னைய என்னடா நினைப்பாங்க?” என்றவள் குளிக்க செல்ல ஆயத்தமாக,

“என் வீடில்ல நம்ம வீடுனு சொல்லி பழகு” என்றான் இளா.

“நீயும் எங்க வீட்டு ஆளுங்கனு சொல்லாம நம்ம வீட்டு ஆளுங்கனு சொல்லி பழகு. நான் மட்டும் உங்க வீடு என் வீடுனு சொல்லனும். நீ சொல்லமாட்டியா?” என வேணி அவன் முன் கைகளை ஆட்டி ஆட்டி பேச,

குட்டீஸ் மாதிரியே பண்றடா அம்முகுட்டி என மனதில் அவளைக் கொஞ்சிக் கொண்டவன்,

அவளின் இரு கைகளையும் பிடித்து, “எல்லாரும் நம்ம ஆளுங்க தான். இரண்டுமே நம்ம வீடு தான். போதுமா… போய் குளிச்சிட்டு வா” எனக் கூறி அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

அவனை தள்ளிவிட்டவள், “போடா… காலைலயே ஷாக் அடிக்க வைக்கிற நீ” என புலம்பியவாறே அவள் குளியலறையின் கதவை திறந்து உள் செல்ல,

அக்கதவை தள்ளி பிடித்து நிறுத்தியவன், “ஆமா அதென்ன ஷாக் அடிக்க வைக்கிறது?” என தன் சந்தேகத்தை கேட்க,

“ம்ச் இப்ப இது ரொம்ப முக்கியம்?” என அவனை தள்ளிக்கொண்டே அவள் கேட்க,
“இப்ப இது தான் முக்கியம்” என அவளை தள்ளிக்கொண்டு அவன் கதவை திறந்து நிற்க,

இவன் சொல்லாமல் விடமாட்டான் என்பதை அறிந்தவள், தரையை பார்த்துக் கொண்டே உள்ளே போன குரலுடன் மெலிதாய், “நீ என்னை கிஸ் செய்றப்போலாம் ஷாக் அடிக்கிற மாதிரி இருக்கு. அதான் சொன்னேன்” என தலை கவிழ்ந்தவாறே அவள் கூற,

“எப்படி? இப்படியா ஷாக்கடிச்சிது?” என்றுரைத்துக் கொண்டே மீண்டும் அவளின் நெற்றியில் அவசரமாய் அவன் முத்தமிட,

அவள் அவனை அடிக்க கை ஓங்க சடாரென கதவை சாத்தியவன், “சீக்கிரம் குளிசீசிட்டு வா அம்ஸ். நீ இல்லாம நான் கீழே போக முடியாது. இரண்டு பேரும் சேர்ந்து தான் போகனும்” எனக் கூறிக் கொண்டே கட்டிலில் அமர்ந்துக் கொண்டான்.

இருவரும் கிளம்பிச் சென்று காலை உணவை உண்டதும் வேணியின் வீட்டிற்கு மதிய உணவிற்காய் செல்ல,

எத்தனையோ முறை நண்பனாய் அவளின் வீட்டிற்கு சென்றவன் ஆயினும் மாப்பிள்ளையாய் அவ்வீட்டிற்கு செல்வது சங்கடமாய் உணர்ந்தான்.

அவனின் அசௌகரியத்தை கண்டவள் தனது அறைக்கு அவனை அழைத்துச் சென்றாள்.

“என்னடா ஆச்சு? இங்க வர பிடிக்கலையா? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என அவன் முகம் பார்த்து அவள் கேட்க,

“இல்லை. தெரியலை அம்ஸ். என்னமோ அன்கம்பர்ட் ஃபீல். எல்லாரும் மாப்பிள்ளைனு ரொம்ப மரியாதை கொடுக்கிறனாலயா என்னனு தெரியலை” என்றவன் கூற,

“சரி நீ இங்கயே ரெஸ்ட் எடு. வெளில ஒன்னும் வர வேண்டாம். சாப்பாடு ரெடியானதும் நான் வந்து எழுப்புறேன்” எனக் கூறி கட்டிலை அவள் தயார் செய்ய,

அவளின் இக்கனிவில், தன் முகம் வைத்தே தன் நிலையை உணரும் அவளின் இப்பாசத்தில் மனம் நெகிழ்ந்தவன், “உனக்கு என்னை பிடிக்குமா அம்ஸ்?” எனக் கேட்டான்.

“என்னடா லூசு மாதிரி கேட்கிற? பிடிக்காம தான் கல்யாணம் செஞ்சிக்கிட்டேனா?” என்றவள் கேட்க,

“ம்ப்ச் எனக்கு நேரடியா பதில் தெரியனும்” என இளா கேட்க,

அவனருகில் சென்று அவன் மீசையை மென்மையாய் வருடியவள், “உன்னை விட உன் மீசைய ரொம்ப பிடிக்கும்டா” எனக் கூறி அவ்விடத்தை விட்டு ஓடினாள்.

“ஹ்ம்ம் என்னை விட நீ ரொம்ப கொடுத்து வச்சவன்டா” என தன் மீசையை தடவிக் கொண்டானவன்.

மதிய கறி விருந்து தயாரானப் பின் இளாவை வந்து எழுப்பிவிட்டு ஃப்ரஷ் அப் ஆகி வரச் சொல்லி விட்டு உணவறையில் உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் வேணி.

“மாப்பிள்ளை இன்னும் என்னமா பண்ணிட்டு இருக்காங்க? சாப்பாடு ஆறுது பாரு… சீக்கிரம் வரச்சொல்லுமா” என வேணியின் அம்மா கூற,

பழக்க தோஷத்தில் இருந்த இடத்திலிருந்தே, “இளா என்னடா பண்ற? சீக்கிரம் வா… சாப்பாடு ஆறுது பாரு” என்றவள் அழைத்த நொடி,

மண்டையில் நங்கென்று குட்டு வைத்திருந்தார் அவளின் அன்னை.

அந்நேரம் சரியாய் அங்கு வந்த இளா, “அய்யோ எதுக்கு அத்தை அவளை அடிச்சீங்க” எனக் கூறிக் கொண்டே அவளின் தலையை தடவினான்.

“பாருங்க தம்பி. இன்னும் உங்களை வாடா போடானு பேசிட்டு இருக்கா… புருஷன்கிற மரியாதை இல்லை” என அவள் அன்னை அவளை முறைத்துக் கொண்டே கூற,
வேணியும் அவளின் அன்னையை தான் முறைத்துக் கொண்டிருந்தாள் அப்போது.

“விடுங்க அத்தை. நான் அவகிட்ட சொல்றேன்” எனக் கூறியவன் வேணியை தன்னருகில் அமர்த்திக் கொண்டான்.

“இப்படி உன்னலாம் நான் மரியாதையா பேசனும்னு சொல்லிருந்தா நான் கல்யாணத்துக்கே ஒத்துட்டு இருக்க மாட்டேன்டா” என ஆத்திரமாய் அடிக்குரலில் இளாவிடம் அவள் உரைக்க,

“ஹா ஹா ஹா” என வாய் விட்டு சிரித்தவன்,

“அப்படி என்னடி கஷ்டம் என்னை மரியாதையா பேசுறதுல” என அவன் கேட்க,

“என் கஷ்டம் எனக்கு தானே தெரியும்” என முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“சரி சரி இதெல்லாம் பத்தி யோசிக்காம ஒழுங்கா சாப்பிடு. உனக்கு பிடிச்ச நடக்கிறது பறக்கிறது எல்லாம் உங்கம்மா செஞ்சி வச்சிருக்காங்க. வயிறு நிறைய சாப்பிடு” என்றுக் கூறி சாப்பாட்டில் கவனம் செலுத்தினான்.

அவர்கள் உண்டு முடித்து முகப்பறையில் அமர, அவர்களிடம் ஒரு கவரை நீட்டினார் வேணியின் அக்கா கணவர்.

“என்ன மாமா இது?” என கவரை பிரித்துக் கொண்டு வேணி கேட்க,

“உங்க கல்யாணத்துக்கு எங்களோட கிப்ட்” என்றாரவர்.

அக்கவரில் அடுத்த வாரம் அவர்கள் மூணாருக்கு செல்வதற்கான ஹனிமூன் டிக்கெட் இருந்தது.

ஹனிமூனுக்காஆஆஆஆ என வாயைப் பிளந்தாள் வேணி.

அவளின் முக பாவனையைப் பார்த்து சிரித்த இளா, “எதுக்கு அக்கா இப்ப இதெல்லாம்?” என வேணியின் அக்காவிடம் கேட்க,

“வேலை வேலைனு நீங்க கண்டிப்பா எங்கயும் போக மாட்டீங்கனு தெரியும். அதான் இந்த ஏற்பாடு. சந்தோஷமா என்ஜாய் பண்ணிட்டு வாங்க” என்று கூற,
வேணி இளாவிடம் கண் ஜாடைக் காட்டி ஏதோ கேட்க,

“உங்க பொண்டாட்டி உங்க கிட்ட ஏதோ ஜாடையா கேட்குறாக. என்னனு பேசுங்க மாப்பிள்ளை சார்” என கிண்டலாய் கூறி அவ்விடத்தை விட்டு அகன்றனர் அவர்கள்.

அவர்கள் சென்றதும் இளாவை தன் அறைக்கு அழைத்து சென்றவள்,  “என்ன இளா செய்றது?” என குழப்பமாய் அவள் கேட்க,

“எதுக்கு உனக்கு இந்த குழப்பம். உனக்குதான் ஊர் சுத்தி பார்க்கிறது ரொம்ப பிடிக்குமே. அந்த மாதிரி போய்ட்டு வருவோம்” என்றவன் கூறியதும் அவள் மனது சமன்பட சரியென ஒத்துக் கொண்டாள்.

இதே நேரம் அங்கே அலுவலகத்தில் இருந்த வாணி பெரிய எஸ்கலேஷனில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நின்றாள்.

ஐடியில் எஸ்கலேஷன் எனப்படுவது யாதெனில் தன்னாலோ அல்லது தன்னுடைய டீமின் வேலையாலோ க்ளைன்டிற்கு அல்லது ப்ராஜக்டிற்கு ஏதேனும் பிரச்சனை அல்லது சிக்கல் வரும்போது தவறு செய்தவறை எஸ்கலேட் செய்வான் அந்த க்ளைன்ட். அதாவது தவறு செய்தவரைப் பற்றி டீம் லீட் அல்லது மேனேஜரிடம்  முறையீடு செய்வான். போட்டு கொடுப்பானு கூட சொல்லலாம்.  க்ளைன்ட்டின் எஸ்கலேஷனுக்கு ஏற்றார் போல் தவறு செய்தவருக்கு மீட்டிங் வைத்து நன்றாக வறுத்தெடுப்பார் அந்த மேனேஜர்.
அந்த தவறை சரி செய்து க்ளைண்ட்டை சமாதானம் செய்வதும் மேனேஜரின் பொறுப்பே. மீண்டும் இவ்வாறு நடவாதவாறு வேலை செய்ய சொல்வார் தன் டீம் மக்களிடம்.

அவ்வாறான ஒரு எஸ்கலேஷனில் மாட்டிக் கொண்டாள் வாணி. எனினும் இந்த ப்ராஜக்ட் புதிது என்பதால் இவளுக்கு ஆதரவாய் க்ளைண்டிடம் பேசி சமாதானம் செய்த அவளின் மேனேஜர். அவளை தனியாய் மீட்டிங்கிற்கு அழைத்து நன்றாக அறிவுரைக் கூறி திருத்தமாய் வேலைப் பார்க்குமாறு கூறி அனுப்பினார்.

ஆயினும் தன் மீது தவறு இருந்தமையால் கண்ணை கரித்துக் கொண்டு வந்தது வாணிக்கு.

புதிய டீம் என்பதால் எவருடனும் பரிச்சயமாகாத நிலையில், வேணியும் மஹாவும் தங்களின் திருமண விடுப்பில் இருக்கின்ற நிலையில், தன் கவலையை பகிர்ந்துக்கொள்ள ஆளின்றி துக்கம் தொண்டையை அடைக்க அலுவலகத்தில் அரை நாள் விடுபெடுத்து தன் பிஜிக்கு கிளம்பினாள்.

ஆம் வாணி பிஜிக்கு மாறியிருந்தாள்.
அவர்களிருந்த வீட்டில் வேணி மஹா இருவருக்கும் திருமணமான பின் இவள் தனியே இருக்க எதற்கு ஒரு வீடென எண்ணியவள், இளா வேணி திருமணத்திற்கு பின் இவ்வீட்டில் தங்கிக்கொள்ளட்டுமென முடிவெடுத்து இவள் பிஜி வந்துவிட்டாள். மஹா மதியும் ஒரு வீடு பார்த்து வைத்திருந்தனர் தாங்கள் தங்கிக் கொள்ளவென.

அன்று காலை ஷிப்டிற்கு வேலை சென்றவள் மதியமே தன்னுடைய பிஜியை வந்தடைந்தவள், தன்னை தானே தேற்றிக் கொண்டு கட்டிலில் படுத்திருக்க வந்தது அழைப்பொலி அவளின் கைபேசியில்.
திரையில் ஆஷிக்கென பார்த்ததும் முகத்தில் மலர்ச்சி.

“ஹலோ ஆஷிக்” என அவள் அழைத்ததும்,

“என்ன கேபி, உடம்பு சரியில்லையா? குரல் ஒரு மாதிரி இருக்கு” எனறவன் கேட்க,

“எப்படிடா எனக்கு மனசு கஷ்டமா இருக்கும்போதெல்லாம் கரெக்ட்டா போன் செய்ற” என ஆனந்த அதிர்ச்சியாய் வாணி வினவ,

“ஹோ அப்படியா!!! தெரியலையே. சரி உனக்கு ஏன் மனசு சரியில்ல?” என்றவன் கேட்க, அன்று அலுவலகத்தில் நிகழ்ந்ததை கூறினாள்.

“யாருமே இல்ல என் கஷ்டத்தை ஷேர் செஞ்சிக்கனு ஃபீலிங்க்ஸ்ல இருந்தேன்டா. கரெக்ட்டா கால் பண்ணிட்ட! ஐம் சோ ஹேப்பி” என நெகிழ்ச்சியாய் அவளுரைக்க,

“அட நீ வேற… நான் உன்னை ஒரு வேலை செய்ய சொல்லலாம்னு கால் பண்ணேன். அது எதார்த்தமா இப்படி அமைஞ்சு போச்சு” என்றான் ஆஷிக்.

“அட போடா… எக்ஸைட்மெண்ட்னா என்னனு கேட்குற ஆளு நீ. எல்லாத்துக்கும் சைலண்ட்டா ஒரு லுக்கு இல்ல ஒரு வரில பதில் சொல்றது. உன்கிட்ட போய் பூரிச்சி பொங்கிட்டு இருக்கேன்ல என்னைய சொல்லனும்” என தலையிலடித்துக் கொண்டாள் வாணி.

“ஹா ஹா ஹா” என வாய்விட்டு சிரித்தவன்,

“சரி சொல்றதை கேளு. நீதான் ஃபோட்டோ கொலேஜ்(collage) நல்லா செய்வியே… எனக்கு ஒரு கொலேஜ் செஞ்சித்தா. அப்பா அம்மா 25th ஆனிவர்சரி வருது. இதை கிப்ட் பண்ணலாம்னு இருக்கேன்” என்றான்.

“ஹே சூப்பர்டா. சரி ஃபோட்டோஸ் அனுப்பு. நான் செஞ்சி அனுப்புறேன்” என்றாள்.

பின் சிறிது நேரம் அவனுடன் பேசி விட்டு அழைப்பை வைத்தவள் மனம் பாரமற்று இலகுவாய் தெரிய நிம்மதியாய்  உறங்கிப் போனாள்.

மறுவாரம் மதி மஹாவின் வரவேற்பு நிகழ்ந்த இடமான சென்னையில்.

இரு வீட்டினரும் வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருக்க, மேடையில் நின்றிருந்தனர் மஹாவும் மதியும்.
மெல்லிசை பாடல் கச்சேரியும் களைக்கட்டிக் கொண்டிருந்தது.

மதி ஷெர்வானி உடையில் குறுந்தாடியுடன் இருக்க மஹா பாவாடை சட்டை போன்ற சோலி மாடல் உடையில் அழகு தேவதையாய் அந்த அலங்கார மேடையில் நின்றிருந்தனர்.

இவர்களின் காலேஜ் நண்பர்கள் தோழிகள் குழாம் வந்திருக்க அனைவரும் இவர்களை கேக் வெட்ட செய்து ஊட்டி விட வைத்து கிண்டல் கேலியாய் பேசி இருவரையும் வெட்கப்பட வைத்தென கலவரப்படுத்தியிருந்தனர் அவ்விடத்தை.

ஆஷிக்கும் வாணியும் சென்னை என்பதால் வரவேற்பு நேரம் வந்து வாழ்த்துக் கூறிவிட்டு சென்றனர்.

இளா வேணி புதுமண தம்பதியானதால் இவ்வரவேற்பிற்கு வர இயலவில்லை.
வரவேற்பு முடியும் தருவாயில் நண்பர்கள் ஃபாஸ்ட் பீட் பாடல்களை டிஜேவில் போட வைத்து குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்க, மேடையிலிருந்த மணமக்களை கீழே வரவழைத்து அவர்களையும் ஆட்டம் போட உந்தினர்.
நண்பர்களின் ஆட்டத்திற்கு ஏற்றார்போல் இவர்களும் சற்றாய் குதியாட்டம் போட்டனர்.

பின் அனைவரும் உண்ணச் சென்றனர்.
மறுநாள் காலை திருமணமாகையால் மஹாவை மணமகள் அறைக்கு செல்ல சொல்லி அவளின் தாய் கூற,
அவளிடன் சிறிது நேரம் பேசிவிட்டு அனுப்பி வைப்பதாய் கூறினான் மதி.

மண்டபத்திலிருந்த மாடிக்கு அவளை அழைத்து சென்றவன், அங்கிருந்த திண்டில் கைகளை வைத்துக் கொண்டு வானத்தை பார்த்துக் கொண்டிருந்தானவன்.

அவனை இமைக்காது பார்த்தவள், “இந்த நிமிஷம் நீங்க என்ன நினைச்சீங்களோ அது கண்டிப்பா நடக்கும் மதி” என்றாள் அவனின் கைகளைப் பற்றிக்கொண்டு.

சட்டென அவளை நோக்கி திரும்பியவன் கலகலவென சிரித்தான்.

“நான் நினைச்சது நடக்கனும்னா அது உன் கைல தான் இருக்குது குட்டிம்மா” என்றவன் விஷமமாய் கூற,
அதையறியாத பெண்ணவளோ,

“என்னால முடியும்னா கண்டிப்பா எதுனாலும் உனக்காக செய்வேன் மதி” எனப் படு தீவிரமாய் உரைத்தாளிவள்.

“அப்படியா? அப்புறம் பேச்சு மாறமாட்டியே” என விஷம புன்னகையுடன் இவன் கேட்க,
இல்லையென வேகமாய் மண்டை ஆட்டினாள் அவள்.

அவளின் கன்னங்களை இரு கைகளிலும் தாங்கியவன், “எனக்கு என் குட்டிம்மாகிட்ட இருந்து கிஸ் வேணுமே” என்றவன் கூறிய நொடி திராட்சை பழமென விரிந்தது அவளின் கண்கள்.

இந்த கண்ணுக்குள் தான் விழுந்து விட
கூடாதா என தோன்றியது அவனுக்கு.
விரிந்த இமைகளை மென்மையாய் மூடிக்கொண்டாள்.

“ஓபன் யுவர் ஐஸ் மஹா. உன் ஐஸ் பேசுறத நான் பார்க்கனும்” என்ற நொடி அவள் விழி திறக்க, அழுத்தமாய் தன் இதழை பதித்திருந்தான் அவளின் கன்னத்தில்.

உடலெங்கும் பரவிய சிலீர் சுகத்தில் தன் கை கொண்டு தன் கன்னத்தை பற்றியிருந்த அவன் கைகளை பற்றிக் கொண்டாள்.

“இது போதும் இன்னிக்கு. மீதியெல்லாம் நாளைக்கு பாத்துக்கலாம்” என அவன் கண்ணடித்துக் கூற வெட்கத்தால் தலை கவிழ்ந்தாள்.

“வாவ் உனக்கு வெட்கம்லாம் வருதே மஹா” என்றவன் விசிலடிக்க,

தன்னை அந்த உணர்விலிருந்து மீட்டெடுதவள், “அய்யோ மானத்தை வாங்கதடா. இதுக்கு தான் என்னை அழைச்சுட்டு வந்தியா?” என்றவன் முதுகில் நாலு போட,

“ஹா ஹா ஹா” எனச் சிரித்தவன்,

“ஜஸ்ட் வாண்ட் டு ஃபீல் திஸ் மொமண்ட். அதுவும் உன் கூட இந்த தனிமை இந்த இரவு. இதை ஸ்பெஷலாக்க தான் அந்த கிஸ்” என்றவன் மீண்டும் கண்ணடிக்க,

“போடா நான் கீழே போறேன்” என்றவள் செல்ல,

“நாளைக்கு எங்கயும் ஓடிப்போக முடியாது குட்டிம்மா” என்றவாறே அவள் பின்னோடு சென்றான்.

மறுநாள் விமர்சையாய் திருமணம் முடிந்திருக்க அழகிய அந்த இரவும் வந்தது.
மதி மஹாவை தன் காரில் எங்கோ அழைத்துச் சென்றான்.

“எங்கடா போய்ட்டு இருக்கோம்?” எனக் கேட்டாள் மஹா.

“வெயிட் அண்ட் சீ குட்டிம்மா”
அவன் காரை பார்க் செய்திருந்தான் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில்.

“இங்க எதுக்கு மதி வந்திருக்கோம். யாரையும் மீட் செய்ய போறோமா?” என்றிவள் கேட்க,

“வா பாக்கத்தானே போற” என்றவளை அழைத்துசென்று ஒரு ப்ளாட்டின் முன் நிறுத்தி சாவியைக் கொடுத்து கதவைத் திறக்கக் கூறினான்.

கேள்வியாய் புருவத்தை சுருக்கியவள் கதவை திறந்த நொடி தன் கைகளில் அள்ளியிருந்தான் அவளை.

“வெல்கம் மை டார்லிங் டு அவர் நியூ ஹோம்” எனக் கூறிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தவன் அவளை இறக்கி விட்டான்.

வியப்பில் விழி விரிய அவ்வீட்டை சுற்றி சுற்றி பார்த்தவள் பால்கனியில் போய் நிற்க கதவை தாழ் போட்டு அவள் பின்னோடு போய் நின்றானிவன்.

பின்னிருந்து அவளை அணைத்தவன், “இது நம்ம வீடு மஹா. கொஞ்சம் சேவிங்க்ஸ் கொஞ்சம் லோன் போட்டிருக்கேன்” என்றவன் உரைத்ததும்,

அதிர்ச்சியாய் அவனை நோக்கியவள்
“எப்ப இதெல்லாம் நடந்துச்சு?… அதுக்கு தான் பெங்களூருல என் ப்ராஜக்ட்ல சென்னை டிரான்ஸ்பர் கேட்க சொன்னீங்களா?” என்று முன் திரும்பி அவன் முகம் நோக்கி வினவினாள் மஹா.

“இது நான் வேலைக்கு சேர்ந்தப்பிறகு ப்ளான் செஞ்சது. நம்ம ஆபிஸ்க்கு பக்கத்துல ஃப்ளாட் வாங்கினா உனக்கும் எனக்கும் ஈசியா இருக்குமேனு. அப்பறம் கிரகபிரவேஷம்லாம் நம்ம எங்கேஜ்மெண்ட் முன்னாடியே முடிஞ்சிட்டு. அப்பா அம்மாக்கு அங்க வேலை ரிட்டயர் ஆகுற வரை அந்த வீட்டுல இருப்பாங்க. அதுக்கப்புறம் நம்ம கூட வந்து தங்கிப்பாங்க. வீடு அம்மா பேருல தான் வாங்கினேன்டா குட்டிம்மா” என்றவன் கூறிய நொடி,

“எங்கேஜ்மெண்ட் முன்னாடியே கிரகபிரவேசம்னாஆஆஆஆ… வேலைக்கு சேர்ந்தப்பவே எனக்கும் சேர்த்து வீடு ப்ளானிங்க்ஆஆஆஆ” என அவள் வாயை பிளக்க,

கலகலவென சிரித்தவன், “அப்ப எப்ப நான் உன்னை லவ் பண்ணேனு யோசிக்கிறியா?” என்றவன் கேட்க,
ஆமென அவள் தலையை ஆட்ட,

“அதை இங்க வச்சி சொல்ல கூடாது. வா நம்ம ரூமுக்கு போவோம்” என்றவளை அவர்களின் அறைக்கு அழைத்து சென்றான்.

அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டவன் தன் காதல் கதையை மிகத் தீவிரமாய் அவன் சொல்லிக் கொண்டிருக்க, “அப்ப நீங்க நேத்துக் கொடுத்த கிஸ் ஃபர்ஸ்ட் கிஸ் இல்லயா? அச்சோ அது தான் ஃபர்ஸ்ட் கிஸ்னு நான் என் டைரில எழுதி வச்சிருக்கேன். அதெப்படி நான் அன்கான்ஸியஸ்ல இருக்கும்போது கிஸ் செய்யலாம். இப்ப பாருங்க டைரில தப்பா எழுதிருக்கேன்” என அவனிடம் அவள் சண்டைக்குப் போக,

“ஏன்டி ஒருத்தன் இரண்டு வருஷமா மாஞ்சி மாஞ்சி லவ் பண்ண கதைய சொன்னா உனக்கு ஃபர்ஸ்ட் கிஸ் டைரில தப்பா எழுதிட்டேன்றது தான் முக்கியமா போச்சு” என்று அவளை முறைத்தான்.

“ஹி ஹி ஹி” என அசடு வழிந்தவள்,

“உங்க லவ் டூ இயர்ஸ்னா. என் லவ் ஒன் இயர்யாக்கும்” என இல்லாத சட்டை காலரை தூக்கிவிட்டு அவள் கூற,

“ஆமா ஆமா ஒன் இயர் லவ் பண்ணவ தான் இன்னும் என் கிட்ட ஐ லவ் யூ சொல்லாம இருக்க?” என தன் மன ஆதங்கத்தை அவன் கூற,

“அதெல்லாம் கேட்டு வாங்க கூடாது மதிப்பா. தானா ஃபீலிங்ஸ் பொங்கி அதுவா வரனும்” என்றவள் உரைக்க,

“ஃபீலிங்க்ஸ் தானே பொங்க வச்சிருவோம்” என்ற விஷமமாய் கூறியவன், பதித்திருந்தான் தன் முத்திரையை அவளிதழில். அழகிய இல்லறம் தொடங்கியது அங்கே.

அதே நேரம் அங்கே மூணாரில் ஓர் அறையில் தங்கியிருந்தனர் இளாவும் வேணியும்.

— தொடரும்