IP 8

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

சாரல் 8

“அடியே உன்னோட பார்லருக்கு கஸ்டமர் வரவில்லைங்கறதுக்காக நான் தான் உனக்கு கிடைச்சேனா?” கட்டாயமாக நாற்காலியில் அவனை உட்கார வைத்துவிட்டு கையில் கத்திரிக்கோல், கத்தி, சீப்பு இதையெல்லாம் வைத்துக் கொண்டு நின்றிருந்த வருணாவை பார்த்துக் கேட்டான் ஆதவன்.

“யோவ் அழுக்கா இப்போ நீ அமைதியா உட்காரப் போறீயா இல்லையா?”

“என்னது அழுக்கனா?”

“ஆமாம், பின்ன எப்பவும் அழுக்கு ட்ரஸ், பரட்டை தலை, காடு மாதிரி தாடியை வளர்த்து சுத்திக்கிட்டு இருந்தா அப்படி தான் சொல்வாங்க,”

“என் வேலை அப்படி டீ, அதுதான் எனக்கு சோறு போடுது,”

“அதுக்காக எப்பவும் இப்படியே சுத்தணும்னு ஏதாச்சும் நேர்த்தி கடனா? ஒழுங்கா முடி வெட்டிக்கிட்டு தாடிய எடுத்துக்கிற,” என்று அவள் அருகில் வரவும் அவன் எழுந்திருக்க முயற்சி செய்தான். உடனே அவனை அமர வைத்து ஒரு காலை அவன் மடியில் வைத்தப்படியே அவன் முகம் நோக்கி குனிந்தவள், “அடம் பிடிக்காம ஒழுங்கா காட்டணும்,” என்றாள்.

முன்பெல்லாம் “இப்படியா முடியை செம்பட்டையா ஆக்கி வச்சிருப்பீங்க” என்று தினமும் அவள் தான் அவனுக்கு எண்ணெய் வைப்பாள். தலை சீவி விடுவாள். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்துவிட்டு குளிக்க சொல்வாள். வீட்டிலிருந்து போகும் போது நல்ல உடை அணிந்து செல்ல வேண்டும் என்று சொல்லி அவளே உடைகளை தேர்ந்தெடுத்து கொடுப்பாள். இப்போ எதுக்கு இதெல்லாம் என்று கேட்டால், “அந்த வேலை என்றால் இப்படி தான் போகணுமா? சுகுமார், முருகன் மட்டும் வீட்ல இருந்து நல்ல ட்ரஸ் போட்டுட்டு வர்றாங்கல்ல” என்று கேட்பாள்.

“அவங்க  சின்னப் பசங்க” என்று அவன் சொன்னால், “அப்போ நீங்க கிழவனா?” என்று கேட்டு அவனை அமைதியாக்கி விடுவாள். அவனுக்காக அவள் செய்வதெல்லாம் அவனுக்கு சுகமாக இருந்தது.  ஆனால் தாடி மட்டும் அவளுக்கு பிடிக்காமல் அடிக்கடி எடுக்க சொல்வாள். ஆனால் அவன் தான் வேண்டாம் என்று மறுத்துக் கொண்டிருந்தான். இப்போது அவளே தீவிரத்தோடு தாடியை எடுக்கும் வேலையில் இறங்குவாள் என்று எதிர்பார்க்கவில்லை.

அவளின் அருகாமை அவனை இம்சிக்க, “ஏண்டி முத்தம் கொடுக்கும் போது தாடி குத்துதான்னு கேட்டதுக்கு, இல்ல சுகமா இருக்குன்னு தான சொன்ன? அப்புறம் எதுக்குடி எடுக்கணும்?” என்று கேட்டப்படி அவளை அந்த நிலையிலேயே அணைத்ததில் அவன் மீது மொத்தமாய் வந்து விழுந்தாள். பின் விலக அவள் முயற்சி செய்யவில்லை. அந்த நிலையில் இருந்தப்படியே,

“ஆஹா ஐயா இதையே சாக்கா வச்சு அப்படியே ஓட்டிடலாம்னு பார்க்கிறீங்களா? நான் சொன்னா சொன்னது தான்” என்றாள்.

“தாடி எடுத்தா நான் அசிங்கமா இருப்பேன் டீ”

“அதுதான் எனக்கும் நல்லது, அப்போ தான என்னோட புருஷனை யாரும் சைட் அடிக்க மாட்டாங்க” என்று கண்ணடித்தாள்.

“நீயாவது என்னை கண்ணெடுத்து பார்க்கணுமில்ல நல்லா யோசிச்சுக்கோ” என்று அவன் பரிதாபமாக கூற,

“சரி அப்படின்னா ஹேர் கட் பண்ணிட்டு தாடியை ட்ரிம் செய்வோம்.” என்று சொல்லியும் அவன் முரண்டுபிடிக்க, அவன் காதில் ஏதோ ரகசியம் பேசினாள். அதில் கண்களை விரித்தவன்,

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“உண்மையாவா?” என்று கேட்டான்.

“நிஜமா தான் காட்டுவீங்களா? மாட்டீங்களா?” என்றதும் அவன் சரி என்று ஒத்துக் கொண்டான். அடுத்து அவன் மீதிருந்து எழுந்தவள், அவனை சரியாக உட்கார வைத்து, அவள் வேலையை ஆரம்பித்தாள்.  அவனுக்கோ இன்னும் கூட மனம் ஆறவில்லை. தாடியை எடுப்பது வருத்தம் கொள்ள வைப்பதாக முகபாவனையில் காட்டினான்.

“போதும் ரொம்ப சீன் போடாதீங்க,” என்று அவள் முறைக்க, பின் முக பாவனையை மாற்றிக் கொண்டான்.

பின் அவள் வேலை முடிந்ததும் அவனை கண்ணாடி முன் கொண்டு போய் நிறுத்தினாள். அவனின் தோற்றத்தை பார்த்து அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. 

“இது நானா நம்பவே முடியலையே வருணா,” என்றவன், “நீ சொன்ன விஷயத்துக்காக மட்டும் தான் இதுக்கு ஒத்துக்கிட்டேன். கண்டிப்பா அது உண்டுல்ல,” என்று கேட்டதும், 

“பார்த்துக்கலாம் பார்த்துக்கலாம்” என்று பட்டும்படாமல் சொல்லி, சரி டைம் ஆச்சு வாங்க வேலைக்கு போகணுமில்ல” என்று அவனை கிளப்பினாள்.

அந்த இரவுக்குப் பின் ஆதவன், வருணாவிற்கு இடையில் இந்த அன்னியோன்யம் வர கிட்டத்தட்ட இரண்டு மாதமாகியது. என்னவோ செய்யக் கூடாத குற்றத்தை செய்துவிட்டது போல் அவன் அவளிடமிருந்து விலகி விலகி போக அதில் கோபம் கொண்டவள், முதல் போல் தயக்கமில்லாமல் அவனிடமே கோபமாக சில கேள்விகளை கேட்டாள்.

“ஆமா என்னை உங்களுக்கு பிடிக்கலையா? அப்புறம் ஏன் என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க?”

“ஏன் வருணா இப்படியெல்லாம் பேசற? அப்படியெல்லாம் ஒன்னுமில்ல,”

“இல்ல இருக்கு, பாட்டி விருப்பம்னு மட்டும் தான் என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க? மத்தப்படி உங்களுக்கு என்ன பிடிக்கவேயில்ல, என்னை என்னவோ தீண்ட தகாதவளா நினைக்கிறிங்க? இங்க வீட்ல என்கூட உட்கார்ந்து சாப்பிட்டிருக்கீங்களா? இந்த கட்டிலில் உட்கார்ந்திருக்கீங்களா? என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? எங்க அண்ணன் பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்லி பாட்டி மனசை கஷ்டப்படுத்தவே தான், என்கிட்ட அந்த கோபத்தை காண்பிக்கிறீங்களா?  

வீட்ல இப்படியெல்லாம் நடந்துக்கிட்டு, வெளிய மட்டும் ரொம்ப என் மேல பாசமும் அக்கறையும் இருக்கற மாதிரி காட்டிக்கிறீங்க, ப்யூட்டி பார்லர் வச்சு கொடுக்கறதும், டெய்லி ட்ரைவர் ட்யூட்டி பார்க்கிறதும் இதெல்லாம் நான் கேட்டேனா? உங்களுக்கு என்னை பிடிக்காத போது, இதெல்லாம் மட்டும் எனக்கெதுக்கு, தேவையே இல்லை” என்று அதிரடியாக ஒரு போடு போட்டாள்.

“அய்யோ நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவுமில்ல வருணா, நீ இப்படியெல்லாம் பேசறது எனக்கு கஷ்டமா இருக்கு,” என்று அவன் சமாதானம் பேச ஆரம்பித்தாலும், அவள் சீக்கிரத்தில் இறங்கி வரவே இல்லை. உனக்கு சளைத்தவள் இல்லை நான் என்பது போல் அவள் நடந்து கொள்ள, அவளை இப்படி வருத்தப்பட வைத்துவிட்டோமே என்றிருந்தது அவனுக்கு

இப்போதே தன் பிரச்சனையை சொல்லிவிடலாமா? என்று அவன் நினைத்தான். ஆனால் இந்த சமயம் இதை  வேறு சொல்லி, அவள் ஒரேடியாக தன்னை விட்டு சென்றுவிட்டாள் என்ன செய்வது என்று பயந்தவன், அதை சொல்லவே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டான். அவளுக்கும் இந்த திருமணம் பிடித்திருக்கிறது. தன்னுடன் நல்லப்படியாக வாழத்தானே ஆசைப்படுகிறாள். பிறகும் இப்படி ஒதுங்கி சென்று வருணாவை இழந்துவிட அவன் விரும்பவில்லை. 

இப்போதோ அவள் அதிகமாக முறுக்கிக் கொண்டாள். அவனோடு பேசுவதை தவிர்த்தாள். அவளை சமாதானப்படுத்தி வழிக்கு கொண்டு வருவதற்குள் அவனுக்கு போதும் போதும் என்றானது. முன்போல் சாதாரண அக்கறை மட்டுமில்லாமல், அவள் மேல் அன்பையும் பொழிய ஆரம்பித்தான். அவள் திட்டமிட்டது போல கொஞ்சம் கொஞ்சமாக வழிக்கு வந்தவன், இன்று முழுமையாகவே அவள் தஞ்சம் அடைந்துவிட்டான்.

வீட்டிலிருந்து இருவரும் நேராக வொர்க்‌ஷாப் சென்றார்கள். ஆதவனின் தோற்றத்தை கண்டு முருகனும் சுகுமாரும் வாயைப் பிளந்தார்கள். “அண்ணி எத்தனை முறை அண்ணாக்கிட்ட தாடியை ட்ரிம் செய்ண்ணா, ரொம்ப வளர்ந்திருக்குன்னு சொல்லியிருக்கோம் தெரியுமா? காதுலயே வாங்கிக்காது. ஆனா நீங்க வந்து அண்ணனை சூப்பரா மாத்திட்டீங்க அண்ணி,” என்று மகிழ்ச்சியோடு கூறினர்.

“அண்ணா நீங்க மாறினதுக்கு கண்டிப்பா ட்ரீட் தரணும்,” என்று இருவரும் சேர்ந்து கூறினார்கள்.

“டேய் உங்க அண்ணி வந்ததுல இருந்து ரொம்ப செல்லம் கொஞ்ச ஆரம்பிச்சிட்டீங்கடா? நானே என் தாடி போச்சேன்னு வருத்தத்துல இருக்கேன். இதுல உங்களுக்கு ட்ரீட்டா?”

“ஹான் போதும் போதும், ரொம்ப சோக கீதம் பாடாதீங்க,” என்று அவனிடம் கூறியவள்,

“உங்களுக்கு ட்ரீட் தான வேணும், சீக்கிரம் வேலையை முடிங்க கண்டிப்பா ஈவ்னிங் ட்ரீட் உண்டு,” என்று முருகன், சுகுமாரிடம் சொல்லவும், மகிழ்ச்சியோடு வேலை செய்ய சென்றார்கள்.

மாலை நேரம் ஆனதும் பார்லரில் இருந்து வொர்க்‌ஷாப் வந்தவள், இரண்டுபேருக்கும் பணம் கொடுத்து தனியாக எங்கேயாவது வெளியில் சென்றுவிட்டு வருமாறு கூறினாள். இருவரும் அவளுக்கு நன்றி தெரிவித்தனர்.

“ஜாலியா எஞ்சாய் செய்ங்க, ஆனா சந்தோஷம்னு தப்பான எதையும் செஞ்சுடாதீங்க,” என்று எச்சரித்தாள்.

“அண்ணி, நாங்க அண்ணனோட இருக்கோம், தப்பான வழிக்கு போகமாட்டோம்,” என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினர். ஏற்கனவே அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு பக்கத்தில் இருந்த கடையில் பிட்ஸா வாங்கி தந்திருந்தாள்.

“என்ன அக்கா இன்னைக்கு சந்தோஷமா இருக்கீங்க? ஏதாச்சும் சம்திங் ஸ்பெஷலா?” என்று அந்த பெண் கேட்டாள்.

“இன்னைக்கும் மட்டும் என்ன ஸ்பெஷல் தினமும் சந்தோஷமான நாளாக தான் இருக்கிறது.” என்று மனதில் நினைத்துக் கொண்டவள், “அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே, சும்மா தான் வாங்கினேன்.” என்று சொல்லிவிட்டு வந்திருந்தாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“ஹப்பா, ட்ரீட்னு சொல்லி அவங்கக் கூட போலாம்னு, நீ எனக்கு கொடுக்க இருந்த ட்ரீட்டை மறந்திடுவன்னு நினைச்சு பயந்துட்டேன் டீ, சரி வீட்டுக்கு போலாமா?” என்று உற்சாகத்தோடு ஆதவன் வண்டியில் அமர்ந்தான்.

“ஹலோ, அவங்கக் கூட போலன்னா ட்ரீட் இல்லன்னு யார் சொன்னா? நாம இப்போ வெளியத்தான் போறோம். நான் சொல்ற இடத்துக்கெல்லாம் கூட்டிட்டுப் போறீங்க,” என்று வண்டியில் அமர்ந்தாள்.

“அப்போ நான் கேட்டது,”

“அதெல்லாம் வீட்டுக்கு போனதும் டையர்டா இல்லன்னா பார்த்துக்கலாம்”

“நீதானடி வாக்கு கொடுத்த, அதனால தான் நான் தாடி ட்ரிம் பண்ண ஒத்துக்கிட்டேன்.” என்று பாவமாக கூறியவன், “இன்னைக்கு உன்னை விட்றதா இல்ல,” என்று சொல்லியப்படியே வண்டியை இயக்கினான்.

நன்றாக ஊரை சுற்றி விட்டு இரவு அவர்கள் வீடு திரும்பும் போது மணி ஒன்பதை தாண்டியிருந்தது. வீட்டிற்குள் நுழைந்ததுமே ஊர் சுற்றிய களைப்பில் அப்படியே கட்டிலில் பக்கவாட்டில் காலை கீழே தொங்க போட்டப்படி வருணா மல்லாக்க படுத்துக் கொண்டாள். ஆதவனோ உடைகளை மாற்றிக் கொண்டு வெறும் லுங்கி பனியனோடு வந்தவன், அவள் அருகிலேயே அவள் பக்கம் ஒருக்களித்தப்படி கையை தலைக்கு முட்டுக் கொடுத்து படுத்தவன், அவளையே பார்த்திருந்தான். சாதாரணமாக கண்களை மூடி படுத்திருந்தவள், அவன் அருகில் படுத்திருந்ததை உணர்ந்து அவன் பக்கம் திரும்பி படுத்தாள்.

“வருணா, காலையில சொன்னதை மறந்துட்டியா? என்று அவள் முகத்தில் கைகளால் கோலம் போட்டப்படியே கேட்டான்.

“அது உங்களை ஒத்துக்க வைக்க சொன்னது, இப்போ பேசாம தூங்குங்க,” என்று திரும்ப கண்களை மூடிக் கொண்டாள். இப்படி பக்கவாட்டில் படுத்துக் கொண்டா தூங்குவது, அவளுக்கு தூங்குவதற்கான எண்ணம் இல்லை என்பதை உணர்ந்தவன், “வருணா செல்லம், இது என்னோட எத்தனை நாள் ஆசை. இன்னிக்கு நானாவா கேட்டேன். நீயா தான சொன்ன, தயவு செஞ்சு எனக்காக செய்யேன்” என்று அவள் உதடுகளை தன் விரல்களால் பிடித்து கெஞ்சிக் கொண்டிருந்தான். திரும்ப கண்களை திறந்து அவனை பார்த்தவள்,

“ம்ம் வேண்டாம்னு சொன்னா விடவா போறீங்க” என்று அவள் எழுந்திருக்க,

“சரி களைப்பா இருந்தா விடு,” என்று சொல்லிவிட்டு இப்போது அவன் மல்லாக்கப் படுத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டான். அவன் உயரத்திற்கு அவனது கால்கள் தரையில் இடித்தது.

“ம்ம் இப்படி படுத்துக் கொண்டா தூங்குவாங்க” என்று அவள் இப்போது நினைத்து சிரித்தவள், அவனின் கன்னங்கள் இரண்டையும் கிள்ளிவிட்டு எழுந்து டிவிடி ப்ளேயரை சென்று குடைந்து கொண்டிருந்தாள்.

ஆம் அவனின் ஆசையே அவள் அவனுக்கு நடனமாடி காட்ட வேண்டும் என்பது தான், முதன்முதலில் சில நிமிடங்கள் தான் அவளது ஆட்டத்தை பார்த்தான். அடுத்து ராஜூ திருமணத்தில் அவளது ஆட்டத்தை முழுமையாக பார்த்தாலும், அவள் நடனத்தை அருகில் இருந்து ரசித்து பார்க்க வேண்டும், அவள் தனக்காக ஆடவேண்டுமென்று நினைத்தான். ஆனால் அந்த காலக்கட்டத்தில் அவனால் அதை எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால் திருமணமான பின்பும் இப்படி சிலமுறை அவள் தனியாக இருக்கும் போது வீட்டில் ஆடுவதை பார்த்திருக்கிறான். அந்த நேரத்தில் அவன் எதைச்சேயாக வீட்டுக்கு வரும்போது அவள் ஆடுவதை நிறுத்திவிடுவாள். 

முன்பு அவர்களுக்குள் இந்த அன்னியோன்யம் இல்லாததால் அவனால் கேட்கமுடியாது. ஆனால் அதன்பின்னும்  அவன் வந்தால், அவள் ஆடுவதை நிறுத்தும் போது, “எனக்கு உன்னோட டான்ஸ் பார்க்கணும் போல இருக்கு ஆடேன்” என்பான். ஆனால் அவள் வெட்கத்தில் மறுத்துவிடுவாள். 

“நமக்குள்ள என்ன வெட்கம்,” என்றாலும் வேண்டாம் என்பது போல் தலையை மட்டும் ஆட்டுவாள். இப்படி அவன் அடிக்கடி கேட்பதுண்டு. அப்போதெல்லாம் தலையை ஆட்டி மறுத்தவள், இன்று அவளாகவே முன் வந்து அவன் ஆசையை நிறைவேற்றுவதாக கூறினாள்.

முறை தானா முகுந்தா

சரி தானா சனந்தா

முறை தானா முகுந்தா

சரி தானா சனந்தா

பூவையர் மீது கல் எய்வது முறையா

பாவையின் நெஞ்சில் தினம்

தேய்கின்ற பிறையா

போதுமே நீ கொஞ்சம் துயில் கொள்ளடா

கண்ணா நீ தூங்கடா என்

கண்ணா நீ தூங்கடா

என்று அவனை பார்த்தப்படியே முகத்தில் பாவனையை காட்டியப்படி அவள் ஆடிக்கொண்டிருக்க, அவளை இமைக்காமல் ரசித்தப்படி பார்த்துக் கொண்டிருந்தான். 

கண்ணா நீ  தூங்கடா

என்று அவள் ஆடி முடிக்கவும், அவளை தன்னோடு அணைத்து கட்டிலின் மீது விழுந்தான். இப்படி ஒரு ஆட்டத்தை பார்த்தப் பிறகும் தூக்கம் வருமா? என்றப்படியே அவள் இதழ்களை சிறை செய்தான். இருவருக்கும் அது உறங்காத இரவாக ஆனது.

றுநாள் மணி எட்டாகியும் அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். செவ்வாய் கிழமை அவள் அழகு நிலையத்திற்கு விடுமுறை. இருந்தும் ஆதவனுக்காக எழுபவள், இன்று உறங்கிக் கொண்டிருந்தாள். ஆதவனோ, காலையில் அவன் எப்போதும் செய்யும் வேலைகளை செய்தவன், அவளுக்கு ஹோட்டலில் டிஃபன் வாங்கி வந்து வைத்துவிட்டு,

“வருணா, டிஃபன் இருக்கு சாப்பிட்டு தூங்கி ரெஸ்ட் எடு, நான் மதியம் சாப்பாடு வாங்கிக்கிட்டு வந்துட்றேன்” என்று சொல்லிவிட்டு சென்றான்.

ஆனால் அவள், அவன் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் விழித்துக் கொண்டாள். மதிய உணவை அவளே சமைத்து இருவருக்கும் எடுத்துக் கொண்டு வொர்க்‌ஷாப் சென்றாள்.

“போன் செஞ்சா நானே வீட்டுக்கு வந்திருக்க போறேன். எதுக்கு வீண் அலைச்சல்” என்று கடிந்தப்படியே அவளுடன் சேர்ந்து சாப்பிட்டான். பின் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு செல்வதாக முடிவெடுத்து அங்கேயே நேரத்தை செலவிட்டாள்.

சர்வீஸ்க்காக விட்டிருந்த தன் காரை எடுக்க வந்த ஒருவன் அவளை பார்த்து, “நீ வருணா தானே?” என்று கேட்டான்.

“யார் இவன்? என்று புரியாமல் பார்த்தவள், பின் ஞாபகம் வந்தவளாக, “நீங்க தீப்தியோட அண்ணன் ராகேஷ் தானே, என்று தெரிந்து கொண்டவளாக கேட்டாள். பின் ஆதவனிடம், “தன் பள்ளித் தோழியின் அண்ணன்” என்று அவனை அறிமுகப்படுத்தியவள், பின் ஆதவனைக் காட்டி, “என் கணவன்” என்று அறிமுகப்படுத்தினாள்.

அதைக்கேட்டதும், “இவனா உன் கணவன்?” என்று கேட்பது போல் ராகேஷின் பார்வை இருந்தது. அதை ஆதவனும் வருணாவும் உணர்ந்திருந்தாலும், அதை கண்டும் காணாமல் அமைதியாக இருந்தனர். 

“தீப்தி எப்படி இருக்கா?” என்று தன் தோழியை பற்றிக் கேட்டாள்.

“ம்ம் நல்லா இருக்கா? தீப்திக்கு 10 டேஸ்ல மேரேஜ், இன்னும் 2 டேஸ்ல மேரேஜ் செலப்ரேஷன் நடக்க இருக்கு,” என்று கூறினான். அவர்கள் வட இந்தியாவை சேர்ந்தவர்கள், அவர்களுக்கு திருமண சடங்கு நிறைய உள்ளது.

“தீப்திக்கு ஒரு நல்ல ப்யூட்டிஷ்யனை தேடிட்டு இருக்கோம். அவ உன்னோட நேம் கூட சஜஸ்ட் பண்ணா, ஆனா உன் நம்பரை அவ மிஸ் பண்ணிட்டா, அதனால வேற ப்யூட்டிஷ்யன் பார்த்துட்டு இருந்தோம். இப்போ தான் உன்னை பார்த்தாச்சுல்ல, நீதான் தீப்திக்கு மேக்அப் போடணும்” என்று சொன்னான்.

“ம்ம் கண்டிப்பா, இங்க பக்கத்துல தான் என்னோட பார்லர் இருக்கு. இன்னிக்கு லீவ், அதனால தீப்திய பார்லருக்கு வரச் சொல்லுங்க, டீடெய்லா பேசுவோம்”

“இல்ல அவளை வெளிய விட மாட்டாங்க, வீட்டுக்கு வந்து செய்ற மாதிரி தான் பார்த்துட்டு இருக்கோம். இது தீப்தியோட நம்பர், டீடெய்லா அவக்கிட்ட பேசு,” என்றவன் கிளம்புவதாக கூறினான். பின் அவள் ஏன் இங்கு இருக்கிறாள் என்று விசாரித்தான். அவள் எதற்காக வந்தாள் என்ற விஷயத்தை கூறியதும், அவர்களின் இருப்பிடம் பற்றிக் கேட்டவன், அவனே அவளை அங்கு காரில் கூட்டிச் செல்வதாக கூறினான்.

வருணா வேண்டாமென்று மறுத்தாள். பின் அவனே ஆதவனிடம் அனுமதி கேட்டான். ராகேஷ் ஆதவனின் வழக்கமான வாடிக்கையாளன் என்பதாலும், வருணாவின் தோழிக்கு சகோதரன் என்பதாலும் ஆதவன் அதற்கு ஒத்துக் கொண்டான்.

இருவரும் காரில் பயணம் செய்தனர், அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்தப்படியே ராகேஷ் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தாலும் அவனுக்கு கேட்க தயக்கமாக இருந்தது. தன் தங்கை தீப்தியோடு நான்கைந்து முறை தான் பார்த்திருக்கிறான். ஆனாலும் தீப்தி வீட்டில் அடிக்கடி வருணா பற்றி பேசியிருக்கிறாள். இரண்டு நாள் முன்னர் கூட அவளைப் பற்றி பேசியிருக்கிறாள். அதனாலேயே வருணாவைப் பற்றி கேள்விப்பட்டவன், இப்போது அவளிடம் பேசும் எதிர்பார்ப்போடு இருந்தான். ஆனால் அது தெரிந்தும் அவள் அமைதியாக வந்தாள்.

அவள் இறங்க வேண்டிய இடம் வந்தது. அவர்கள் ஏரியாவிற்குள் கார் நுழையாது என்பதால், அவர்கள் ஏரியாவின் பக்கம் உள்ள சாலையிலேயே காரை நிறுத்த சொன்னாள். அவள் சொன்ன இடத்தில் நிறுத்தியவன்,  அந்த ஏரியாவில் தன் பார்வையை ஓட்டினான். அவனுக்கு அந்த இடம் பிடித்தமில்லாமல் இருந்தது. இப்படிப்பட்ட இடத்திலா வருணா இருக்கிறாள் என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டவன், பின் மனசில்லாமல்,

“உனக்கு இஷ்டமில்லாம கல்யாணம் செஞ்சு வச்சிட்டாங்களா வருணா. ஆதவன் உனக்கு ஏத்தவனே இல்ல, நீ இந்த இடத்துல இருக்க வேண்டியவளே இல்ல, அப்புறம் எப்படி இந்த கல்யாணம்?” என்று சொல்லிக் கொண்டே போனான்.

“இதை சொல்ல நீங்க யாரு? என்று கேட்டாள். அவன் அதிர்ச்சியாக பார்க்க,

“ஆதவன் எங்க ரிலேஷன் தான், எனக்கு பிடிச்சு தான் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நான் இந்த வாழ்க்கையை சந்தோஷமா தான் வாழறேன்” என்று கோபத்தோடு கூற,

“ஹே சாரி சாரி, தீப்தி உன்னைப் பத்தி உயர்வா பேசுவா, உங்க அண்ணா ஐடி கம்பெனில வொர்க் பண்றான். மெயின் ஏரியால ப்ளாட் வாங்கியிருக்கீங்கன்னு சொல்லியிருக்கா, அதை வச்சு தான் இப்படி பேசிட்டேன். உனக்கு பிடிச்ச லைஃப்னா ஓகே தான். ஓகே தீப்திக்கிட்ட போன்ல பேசிடு,” என்று அவன் விடைப்பெற்று சென்றான்.

வருணா ஒரு ஆடவனோடு காரில் வந்து இறங்கியதையும், அவனோடு சிறிது நேரம் நின்று பேசியதையும் அந்த ஏரியாவில் அவள் வீட்டிற்கு அருகிலிருப்பவர் சிலர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சாரல் வீசும்…