IP 5

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

சாரல் 5

பொன்னம்மா இருந்திருந்தால் எப்படி ஆதவனின் திருமணத்தை நடத்த நினைத்திருப்பாரோ, அதுபோலவே ஆதவன் அவனது திருமணத்தை நடத்தி முடித்திருந்தான். ஒரு நடுத்தர அளவிளான திருமண மண்டபம் எடுத்து, அவன் இருக்கும் ஏரியாவில் பொன்னம்மா யாரையெல்லாம் அழைத்திருப்பாரோ, அவர்களையெல்லாம் முறைப்படி அழைத்திருந்தான். செண்பகம் வீட்டினரை தவிர வேறு எந்த உறவுப் பற்றியும் அவனுக்கு சரியாக தெரியவில்லை. செண்பகத்தின் தந்தை தான் அவருக்கு ஓரளவுக்கு தெரிந்த ஆதவனின் தாத்தா வீட்டு சொந்தங்கள் சிலரைப்பற்றி அவனுக்கு தெரிவித்திருந்தார். அவர்களையும் அவன் நேரில் சென்று அழைத்திருந்தான்.

இங்கு வருணா வீட்டிலோ, இப்போதைக்கு ஆதவன் கொடுத்த பணத்தை வைத்து தான் அந்த தேவையற்ற கடனை அடைத்திருந்தனர். அதனால் இப்போது திருமண செலவிற்கான பணம் கையில் இல்லாததால், விக்னேஷ் திருமணத்தை கொஞ்ச காலம் தள்ளி வைக்க சொன்னான். பொன்னம்மா மறைவினால் ஒரு வருடம் கழித்து தான் திருமணம் வைக்க வேண்டும் என்றும் சிலர் சொல்லியிருந்தனர். ஆனால் சாவு வீட்டில் உடனே இன்னொரு நல்லது நடப்பதிலும் தவறில்லை என்ற சிலரின் கருத்தை தான் ஆதவன் கேட்டான்.

 தன் ஆயாவின் ஆசையை உடனே நிறைவேற்ற வேண்டும், அதில் கால தாமதம் வேண்டாம் என்றவன், திருமண செலவிலிருந்து, வருணாவிற்கான நகை, புடவை, இருவரும் குடித்தனம் நடத்துவதற்கான பாத்திர பண்டங்கள் அனைத்தையும் அவன் செலவிலேயே வாங்கினான். தன் தங்கையின் திருமணத்திற்காக செலவு செய்ய முடியாத தன் இயலாமையை நினைத்து ஒருபக்கம் விக்னேஷ் வருத்தப்பட்டாலும், இன்னொரு பக்கம் ஆதவன் பொறுப்பாய் அனைத்தும் எடுத்து நடத்துவதை பார்க்கவும், முன்பு ஆதவனுக்கு தன் தங்கை பொருத்தமில்லை என்ற நினைப்பு கொஞ்சம் மறைந்திருந்தது. இருந்தும் ஒரே ஒரு குறை, என்னவென்றால் அந்த ஏரியாவை விட்டுவிட்டு வேறு இடத்திற்கு வந்து குடி புக சொல்லி விக்னேஷ் சொன்னதை ஆதவன் கேட்கவில்லை. 

“அந்த வீட்ல தான் ஆயாவோட ஆத்மா இருக்கும், நாங்க வாழறத அது பார்க்கணும், அதனால நாங்க அந்த வீட்ல தான் இருக்கப்போகிறோம்” என்று முடிவாக கூறினான். விக்னேஷ் அதை நினைத்து கவலை கொண்ட போது, 

“அவன் சொன்ன மாதிரி அங்க இருக்கட்டும்ங்க, அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு வருணா சொன்னா கேட்டுப்பான், இப்போ நாள் பூரா அவன் வேலைக்கு போகும்போது அவ தனியா இருக்கணுமில்ல, அங்கன்னா பக்கத்துல கோமளா, இந்த பக்கத்து வீடு ராஜம் அக்கா எல்லாம் பார்த்துப்பாங்க, பயம் இருக்காது” என்றதில் அவன் கொஞ்சம் தெளிந்தான். இருந்தும் வருணா அங்கு பொருந்தி போக வேண்டுமே என்றும் இருந்தது.

குறிப்பிட்ட முகூர்த்தத்தில் இருவருக்கும் திருமணம் முடிந்தது. மணமக்கள் இருவரும் முதலில் சென்றது ஆதவன் வீட்டிற்கு தான், முதல் மாடியில் அவர்கள் வீடு இருந்தாலும், கீழே அந்த கட்டிடத்திற்கு முன்னரே இருவரையும் நிற்க வைத்து கோமளா இருவருக்கும் ஆரத்தி எடுத்தாள். அக்கம்பக்கத்து கட்டிடத்தில் உள்ளவர்கள், மாடியிலிருந்தப்படியும், கீழே அவர்களுக்கு அருகில் வந்து நின்றும் மணமக்களை வேடிக்கைப் பார்த்தப்படி இருந்தனர்.

“ஆதவனுக்கு சூப்பர் பொண்ணு தான் பொண்டாட்டியா கிடைச்சிருக்கு, பொன்னம்மா அத்தை இருந்தாக் கூட இப்படி ஒரு பொண்ணை பார்த்திருக்காது போல” என்று திருமணத்திற்கு வராத ஒருத்தர் கூற,

“உனக்கு தெரியாதாடி, பொன்னம்மா அக்கா தான் நம்ம ஆதவனுக்காக இந்த பொண்ணை பார்த்து வச்சிருந்துதாம், சொந்தக்கார பொண்ணு தான்,  என்ன பொன்னம்மா அக்கா, அது கண்ணால  இந்த கல்யாணத்தை பார்க்க முடியாம போய்டுச்சு” என்று உண்மையை கூறினார் இன்னொருவர். மணமக்கள் அங்கே நின்றிருந்த வரை இப்படி கிசுகிசுப்பான பேச்சுக்கள் சிலரிடையே இருந்தது.

இருவரையும் வீட்டுக்குள் உட்கார வைத்து செண்பகமும் கோமளாவும் பால், பழம் கொடுத்தனர். வருணா வீட்டை சுற்றி ஒரு பார்வை பார்த்தாள். ஏற்கனவே பொன்னம்மா பாட்டியின் இறுதி சடங்கன்று இந்த வீட்டுக்கு வந்திருந்தாள் தான், ஆனாலும் அப்போது பார்த்த வீட்டிற்கும், இப்போது இருந்த வீட்டிற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.

வெளிப்புற தோற்றம் அதே வீடு தான் என்றாலும், உள்ளே முழுக்க வீடு வேறு மாதிரி இருந்தது. தரையில் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு, வீட்டிற்கு அழகாய் வெள்ளை அடிக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் இருவரும் படுக்கக் கூடிய கொஞ்சம் பெரிய கட்டில் புதிதாக வாங்கி போடப்பட்டிருந்தது. அதில் தான் இருவரையும் உட்கார வைத்திருந்தனர். இவர்களுக்கு எதிரில் இருந்த குளியலறையும், அந்த குளியலறை உள்ளே இருந்த கழிவறைக்குமே டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. அதில் ஏற்கனவே இருந்த இரும்பு கதவு அடியில் ஈரம் பட்டு துருப்பிடித்து உதிர்ந்து போயிருந்தது. அது இப்போது மாற்றப்பட்டு புதிய ப்ளாஸ்டிக் கதவு பொருத்தப்பட்டிருந்தது. அருகில் உள்ள சிறிய அறையில் இருந்த ஒற்றைக் கட்டில் எடுக்கப்பட்டு, அங்கே புதிதாக கண்ணாடி வைத்த காட்ரேஜ் பீரோ வைக்கப்பட்டிருந்தது. 

முன்பு அந்த அறைக்கும் கதவில்லாமல் இருக்க, இப்போதோ அதற்கு கதவு புதிதாக மாட்டப்பட்டிருந்தது. அந்த பெரிய அறையில் இருந்த அந்த சிறிய தடுப்பு போன்ற அந்த சமையற்கட்டில் முன்பு இருந்த மண்ணெண்ணெய் அடுப்பு இல்லாமல், தற்போது புதிதாக கேஸ் அடுப்பு இருந்தது. புதிதாக பாத்திரங்களும் வாங்கி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த சிறிய அறைக்கும், சமையல் கட்டிற்கும் நடுவில் இருந்த அந்த சிறிய சுவரோர பகுதியில் புதிதாக குளிர்சாதனப்பெட்டி, அதன் அருகில் மாவரைக்கும் இயந்திரம் வாங்கி வைக்கப்பட்டிருந்தது.

வீட்டு நுழைவாயிலின் கதவருகே இருந்த சுவரோரம் புதிதாக எல்.ஈ.டி டிவி பொருத்தப்பட்டிருந்தது. கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தப்படி பார்க்கலாம், குளியலறையின் வெளிப்பக்க சுவரின் பக்கம் துணி துவைக்கும் இயந்திரமும், தொலைக்காட்சியும் துணி துவைக்கும் இயந்திரமும் இருந்த சுவர்கள் இரண்டும் இணையும் அந்த மூளைப் பகுதியில் சிறியதாக ஒரு மேசை வைத்து அங்கே ஒரு டிவிடிப்ளேயர் வைக்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் இத்தனை பொருட்களும் அந்த சிறிய வீட்டில் அதன் அதன் இடத்தை பிடித்திருக்க, மீதி இருவரும் அமர்ந்து சாப்பிட கூடிய அளவிற்கான இடம் தான் இருந்தது. அதிலும் வருணா தன் வீட்டில் டைனிங் டேபிள் மீதே அமர்ந்து சாப்பிட்டு பழகியதால், கட்டிலின் மேல் அமர்ந்து சாப்பிடுவதற்காக ஒரு சிறு ஸ்டூல் வாங்கி வைக்கப்பட்டிருந்தது.

இது அனைத்தையும் ஆதவன் தான் பார்த்து பார்த்து வருணாவுக்கு என்ன தேவை என்று வாங்கி வைத்திருந்தான். ஏற்கனவே தன் அண்ணி வாய் மொழி மூலம் இதையெல்லாம் அவள் கேள்விப்பட்டிருந்தாலும், இப்போது நேரில் பார்த்தபோது வாயில் ஈ நுழையாத குறை தான், முன்பு அவனைப்பற்றி எதையுமே அவள் அறிந்து வைத்திருக்கவில்லை. இப்போதோ அவனை மனதில் மெச்சிக் கொண்டாள். விக்னேஷும் வருணாவை போலவே வியப்பில் ஆழ்ந்தான். அவனும் பொன்னம்மா மறைவுக்கு பின் இப்போது தான் இங்கு வருகிறான். இப்போது வீடு இருக்கும் நிலை பார்த்து அவன் மனதிலும் நிறைவு வந்திருந்தது.

பால் பழ சடங்கு முடிந்ததும் அந்த சிறிய அறையில் காட்ரெஜ் பீரோக்கு பக்கத்தில் இருந்த சிறிய இடம் பூஜை அறையாக மாற்றப்பட்டிருக்க, பொன்னம்மாவின் பெரிய படமும், ஒரு சிறிய முருகர் படம் மட்டுமே அங்கே இடம் பிடித்திருந்தது. அங்கே தரையில் வைக்கப்பட்டிருந்த காமாட்சி அம்மன் விளக்கை வருணா ஏற்றினாள். பின் உப்பு, மிளகா, பருப்பு, புளியில் கை வைக்கும் சடங்கு முடிந்து இருவரும் மறு வீட்டிற்கென விக்னேஷ் வீட்டிற்குச் சென்றனர்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

முறைப்படி மூன்று நாட்களோ இல்லை ஐந்து நாட்களோ அங்கே தான் இருவரும் இருக்க வேண்டும். ஆனால் ஆதவன் அதெல்லாம் வேண்டாம் என்று விடவே, இன்றே சென்று இன்றே திரும்பி வருவதென முடிவு செய்யப்பட்டது. அதுப்படி இருவரும் விக்னேஷ் வீட்டில் மதிய உணவு முடித்து விட்டு இரவு நெருங்கும் வரை அங்கிருந்தவர்கள், திரும்ப வீடு வந்தனர். செண்பகமும் விக்னேஷும் அவர்களுடன் வந்தனர்.

வீடு வந்தவர்களை கோமளா நேராக அவள் வீட்டிற்கு அழைத்து சென்றாள். ஏன்? எதற்கு? என்று கேள்விக் கேட்டவனுக்கு எந்த பதிலும் கூறவில்லை. இருவருக்குமான இரவு உணவை கோமளா வீட்டிலேயே சாப்பிட்டனர். அடுத்து ஆதவனுக்கான வேஷ்டி சட்டையை அவனிடம் கொடுத்து வீட்டுக்குச் சென்று மாற்றிக் கொள்ள சொல்லி செண்பகம் அவனை அனுப்பிவிட்டு, கோமளா வீட்டிலேயே வருணாவை சாந்தி முகூர்த்தத்துக்காக தயார் செய்தனர்.

வீட்டுக்குள் வந்த ஆதவனுக்கு அப்போது தான் அவர்களை கோமளாவின் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போனதுக்கான காரணம் புரிந்தது.  அவர்கள் வீட்டுக்குள் இருந்த கட்டில் மலர்களால் அலங்கப்பட்டிருக்க, பக்கத்தில் இருந்த ஸ்டூலில் பாலும் பழமும் வைக்கப்பட்டிருந்தது. வீடு முழுவதும் மெல்லிய சென்ட் வாசனை.அந்த சூழ்நிலையே அவனது உணர்ச்சிகளை கிளறிவிட்டது.

ருணா படப்படப்போடு கட்டிலில் அமர்ந்திருந்தாள். வருணாவை வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு வந்து கட்டிலில் உட்கார வைத்தப்பபின், செண்பகமும் விக்னேஷும் வீட்டிற்கு கிளம்பினார்கள். அவர்களை கீழே வரை இறங்கி வந்து ஆதவன் வழி அனுப்பி வைத்தான். அவனது வரவை எதிர்பார்த்தப்படி அவள் அமர்ந்திருக்க, கதவை திறக்கும் சத்தமே அவன் வருகையை உணர்த்தியது. அது தெரிந்தும் அவள் தலையை நிமிர்த்தவே இல்லை.

இவர்கள் இருவருக்கும் திருமணம் என முடிவாகி, கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து தான் திருமணம் நடந்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் வருணாவும் ஆதவனும் பேசிக் கொண்டதே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பொன்னம்மா பாட்டி இருக்கும் போதாவது அவன் வீட்டிற்கு வரும் சமயங்களில் சில வார்த்தைகள் பேசியிருக்கிறாள். ஆனால் அதன்பின் அவன் வீடு வந்ததில்லை. திருமணம் பேசியிருந்தாலும் திருமணத்திற்கு முன் இரவு தான் நிச்சயம் செய்வதென முடிவு செய்திருந்ததால், அதுவரை அவனிடம் பேசும் தைரியமும் அவளுக்கு வந்திருக்கவில்லை. அவனாவது ஏதாவது பேசுவான் என இத்தனை நாட்களாய் காத்திருந்தவளுக்கும் ஏமாற்றம் தான், அதனாலேயே அவனுடன் இருக்கும் இந்த தனிமை அவளுக்கு படப்படப்பை கொடுத்தது. இந்த காலத்தில் இப்படி ஒரு திருமணம் என்றால், கண்டிப்பாக அது இவர்களது திருமணமாக தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.

“வருணா,” அவனது அழைப்பே அவளை ஏதோ செய்தது. மெதுவாக தலையை நிமிர்த்தி பார்த்தாள்.

“வருணா, இனி இது உன்னோட வீடு, எந்த தயக்கமோ, சங்கடமோ இல்லாம, ரிலாக்ஸா இரு. இப்படி புடவையோட படுத்தா தூக்கம் வருமா? ஏதாச்சும் ட்ரஸ் மாத்திக்கணும்னா மாத்திக்கிட்டு இந்த கட்டிலிலேயே படுத்துக்க, நான் அந்த ரூம்ல படுத்துக்கிறேன்.” என்றவன், அவளது பதிலை எதிர்பார்க்காமல்,  பக்கத்தில் இருந்த சிறிய அறைக்குள் நுழைந்து, கதவை லேசாக சாத்தியவன், அந்த மறைவிலேயே வேஷ்டி சட்டையை கலைந்து வெறும் லுங்கிக்கு மாறியவன், வெறும் கைப்பனியனோடு பாயை போட்டு படுத்துக் கொண்டான்.

அவனது செய்கை அவளுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. ஒருவிதத்தில் ஏமாற்றமாகவும் இருந்தது.  திருமணம் என்றால் அடுத்து என்ன என்பதை  புரிந்து கொள்ளாத சிறுபிள்ளை இல்லை அவள், அதற்காக அதை மனம் அதிகம் எதிர்பார்க்கிறது என்றும் இல்லை. ஒருவேளை திருமணம் நடந்த இன்றே இது எதுவும் வேண்டாம் என அவன் எதிர்பார்த்தால், அதை அவளிடம் வெளிப்படையாக சொல்வதெற்கென்ன? சாதாரணமாக கூட இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாமே, உடல் அசதி என்றால் அதை வெளிப்படையாக சொல்லிவிட்டு படுக்கலாமே, அதுவும் இதே கட்டிலில், அவளுக்கு அருகில், ஆனால் எதைக் கண்டோ ஒளிய நினைப்பது போல் இருந்தது அவனது செய்கை. என்னவென்பது புரியாமல் கொஞ்ச நேரம் யோசித்தப்படி அமர்ந்தவள், பின் அவனிடம் எந்த அசைவும் இல்லாததைப் பார்த்து அவன் உறங்கிவிட்டான் போல, என்று நினைத்து அந்த அறையிலேயே தன் உடையை மாற்றிக் கொண்டாள். பின் படுக்கையில் படுத்தவளை அசதியின் காரணமாக உறக்கம் வெகுவிரைவில் ஆட்கொண்டது.

றுநாள் காலை வருணா கண்விழித்தப்போது ஆதவன் அங்கு தென்படவில்லை. காலையிலேயே எங்கே சென்றான்? என்று சிந்தித்தப்படியே எழுந்து வாசற்கதவை திறந்து பார்த்தாள். வெளியிலும் அவனை காணவில்லை. சரி காலைக் கடன்களை முடிக்க குளியலறைக்குச் சென்றாள். குளியலறையில் இருந்த குழாயை திறந்தால் காற்றுக் கூட வரவில்லை. அந்த வீடு கட்டிக் கொடுத்த ஆரம்பத்தில் தான் பூமி தண்ணீரை எடுத்து எல்லா வீடுகளுக்கும் மேலே இருந்த தொட்டியின் மூலம் கொடுத்தனர். அதன்பின் வந்த காலங்களில் அந்த குழாய் இணைப்புகள் எல்லாம் அகற்றப்பட, தெருவில் அங்கங்கே இருந்த பொதுக் குழாய்களில் தான் அனைவரும் தங்களுக்கு தேவையான தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தை ஏற்கனவே செண்பகம் சொல்லியிருந்ததால், “இனி இந்த வேலைகளையெல்லாம் நான் தான் பார்க்க வேண்டும்,” என்று நினைத்தப்படி அங்கே இருந்த அண்டாவில் இருந்த தண்ணீரை எடுத்து உபயோகப்படுத்திக் கொண்டாள். தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. இதில் அப்படியே குளிக்க முடியாது போலயே என்று நினைத்தவள், அடுப்பில் சுடுதண்ணீர் வைத்து தான் குளிக்க வேண்டும் என்று நினைத்து வெளியே வந்த போது, சூடாக டீயும் பட்டர் பிஸ்கட்டும் அடுப்படியில் இருந்தது.

அவள் குளியலறைக்குள் இருந்த நேரத்தில் வாங்கி வைத்திருக்கிறான் போலும், அதற்காக தான் வெளியே சென்றானா? என்று யோசித்தப்படி டம்ளரில் டீயை ஊற்றியவள் பட்டர் பிஸ்கட்டை கையில் எடுத்துக் கொண்டு கட்டிலில் வந்து அமர்ந்தாள். “ஐயா பட்டர் பிஸ்கட் பார்ட்டியா?” என்று நினைத்து சிரித்தப்படி, திரும்ப எங்கே சென்றான்? என்று மனதில் எழுந்த கேள்வியோடு, பட்டர் பிஸ்கட்டை டீயில் தோய்த்து சாப்பிட்டாள்.

அவள் டீ குடித்துக் கொண்டிருக்கும் போதே, தோளில் தண்ணீர் நிரம்பிய குடத்தை தூக்கியப்படி ஆதவன் உள்ளே நுழைந்தான். அவனைப் பார்த்து அவள் உடனே எழுந்தாள். 

“வருணா, பாத்ரூம்ல இருக்கறது பழைய தண்ணி, ரெண்டுநாள் முன்ன பிடிச்சது, நான் தனியா இருந்ததால டெய்லி தண்ணி பிடிச்சு வைக்க மாட்டேன். ரெண்டுநாளா கல்யாண வேலையில சுத்தமா தண்ணி புடிச்சு வைக்கல, பழைய தண்ணில குளிக்க வேண்டாம். அப்புறம் சளி பிடிச்சிக்கும், அதனால இந்த தண்ணியில குளி” என்று சொன்னவன், குளியலறையில் இருந்த வாளியில் தண்ணீரை நிரப்பினான்.

சரி என்று தலையாட்டியவளோ, “நீங்க டீ குடிக்கலையா?” என்று கேட்டாள்.

“ம்ம் நான் குடிச்சிட்டு தான் உனக்கு வாங்கிட்டு வந்தேன்.” என்றவன், மீண்டும் தண்ணீர் குழாய்க்கு செல்ல, அவளும் டீ குடித்து முடித்ததும், இப்போது எடுத்து வந்த தண்ணீர் குளிப்பதற்கு ஏற்ப இருக்கவே, சுடு தண்ணீர் இல்லாமலேயே குளித்து முடித்து வந்தாள். பின் நேராக சாமிப்படத்தின் முன்னே சென்று விளக்கேற்றினாள். 

காலையில் இருந்து ஆதவன் வீட்டிலேயே இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தான். தண்ணீர் பிடித்து முடித்ததும் திரும்பவும் எங்கேயோ சென்றிருந்தான். அப்படி எங்கே தான் சென்றுவிட்டான் என்று இந்த முறை சலித்துக் கொண்டவள், அடுத்து காலை உணவு என்ன செய்யலாம் என்றப்படி சமயலறையில் உருட்டிக் கொண்டிருக்கும் போதே, ஆதவனோ காலை உணவை வெளியில் ஹோட்டலில் இருந்து வாங்கிக் கொண்டு வந்தான். அதை அவள் கையில் அவன் கொடுக்க, அந்த பைக்குள் பிரித்துப் பார்த்தவளோ ஒரே ஒரு பார்சல் இருக்கவே,

“உங்களுக்கு வாங்கலையா?” என்று கேட்டாள்.

“நான் வொர்க்‌ஷாப்க்கு தானே போறேன்.” அங்கேயே சாப்பிட்டுக்கிறேன். மதியம் வரும்போது உனக்கு சாப்பாடு வாங்கிட்டு வரேன்” என்றான்.

அவன் வொர்க்‌ஷாப்பிற்கு செல்கிறேன் என்ற வாக்கியமே அவளுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. திருமணம் ஆன மறுநாளே வேலைக்கு செல்பவன் இவனாக தான் இருப்பான் என்று நினைத்துக் கொண்டாள். ஒரு கோவிலுக்கு கூட அழைத்து செல்ல இவனுக்கு தோன்றாதா? என்று மனதோடு கேட்டுக் கொண்டாள்.

“ஹோட்டலில் எதுக்கு சாப்பாடு? எனக்கு சமைக்க தெரியும், நான் மதியம் வீட்லயே சமைச்சு வைக்கிறேன். நீங்க வீட்டுக்கு வந்து சாப்பிடுங்க, “

“நேத்து தான் கல்யாணம் ஆச்சு, வீட்டுக்கு வந்த மறுநாளே சமைக்கணுமா? இன்னிக்கு ஏதும் செய்ய வேண்டாம், வெளியவே வாங்கிப்போம்,”

“ஆமாம் இப்போ மட்டும் புதுசா கல்யாணம் ஆனது ஐயாவுக்கு ஞாபகம் வந்துடுச்சு போல” என்று மனதிற்குள் நொடித்துக் கொண்டாள்.

“எனக்கு அதுல ஒன்னும் கஷ்டமில்ல, நீங்க இங்க கடை எங்க இருக்குன்னு காட்டுங்க, நானே வாங்கிக்கிறேன்.”

“இல்ல, நீ கடைக்கெல்லாம் போக வேண்டாம், என்ன வேணும்னு சொல்லு, நானே வாங்கிட்டு வரேன்.”

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

 வீட்ல மளிகை சாமான் இருக்குல்ல, அதனால  காய்கறியும், ஒரு பாக்கெட் பாலும், அப்புறம் சாமிக்கும் பொன்னம்மா பாட்டி போட்டோக்கும் போட பூ வாங்கிட்டு வாங்க” என்றதும் சரி என்று தலையாட்டியவன், சிறிது நேரத்தில் வந்தான். வாங்கி வந்திருந்த பொருட்களோடு கொஞ்சம் பணமும் அவள் கையில் கொடுத்தவன்,

“வேற ஏதாச்சும் வாங்கணும்னா, நீ கடைக்கு போக வேண்டாம், பக்கத்துல கோமளா அக்காக்கிட்ட சொல்லி அனுப்பு வாங்கிக்கிட்டு வருவாங்க,” என்றவன் அவளிடம் விடைப் பெற்றுக் கொண்டு வொர்க்‌ஷாப் கிளம்பினான்.

ஐந்து நாட்களும் இவர்களின் பொழுது இப்படியே கழிந்தது. தேவைக்கு ஏற்ற பேச்சை தவிர அவளிடம் அவன் அதிகம் பேச மாட்டான். ஒருவேளை அவனது சுபாவாமே அதுதான் போல, என்று வருணா நினைத்துக் கொண்டாள். அன்று செண்பகத்தின் பிறந்த வீட்டில் இருவருக்கும் விருந்து.

அதனால் இருவரும் அதற்கு கிளம்பினர். வெளியில் வந்து ஆதவனோடு வண்டியில் ஏறும்போதே, சில பேர் இவர்களை வைத்த கண் மாறாமல் பார்த்தனர். “எதற்கு இப்படி பார்க்கிறார்கள்? என்று கேட்டுக் கொண்டவளுக்கோ, பின்னே திருமணம் ஆகி இந்த ஐந்து நாட்களில் இன்று தானே அவள் வெளியில் தலை காட்டுகிறாள் அதனால் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.

“கல்யாணம் ஆகி ஃபர்ஸ்ட் டைம் வெளிய போறோம், அதனால முதல்ல கோவிலுக்கு போயிட்டு, அப்புறம் மாமா வீட்டுக்கு போகலாம்” என்று வருணா வீட்டிலிருந்து கிளம்பும் போதே கூறியதால், முதலில் அவளை கோவிலுக்கு அழைத்து சென்றான். பின் இருவரும் செண்பகத்தின் பிறந்த வீட்டிற்கு சென்றனர்.

விக்னேஷ் வேலைக்கு சென்றுவிடவே செண்பகமும் அங்கே வந்திருந்தாள். பலமுறை செண்பகத்தோடு அந்த வீட்டிற்கு வருணாவும் சென்றுள்ளதால், அவளுக்கு அந்த வீடு பழக்கமானது தான், அதனால் அங்கிருப்பவர்களோடு வருணா சகஜமாகவே உரையாடினாள். ஆனால் ஆதவன் அந்த வீட்டில் ஒருவன் போலவே நடந்து கொண்டது தான் வருணாவிற்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. அவளை விட  ஆதவனுக்கு தான் அந்த வீட்டு உறுப்பினர்கள் உரிமையானவர்கள். ஆனால் ஆதவனின் சுபாவம் யாரோடும் இயல்பாக பேசமாட்டான் போல என்று அவள் நினைத்திருக்க, அவனோ அங்கே சகஜமாக பழகியதை பார்த்து, “அப்போ என்கிட்ட மட்டும் தான் இப்படியா?” என்று நினைத்துக் கொண்டவளுக்கு அவன் மீது கோபமும், அவன் தன்னிடம் இப்படி பேசுவதில்லையே, என்ற பொறாமையும் எழுந்தது.

சாரல் வீசும்…