IMK 20
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் 20
ஹோச்பிடலுக்கு வந்த அன்று மகனுக்கு படையல் போட்டு கும்புட இருப்பதால், அங்கே இருந்த வைத்தியரிடம் தேவி மன்றாடி கேட்டு, தமிழினியை வீட்டுக்கு அனுப்ப சம்மதம் பெற்று, கையுடனே வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தும் விட்டார்.
வந்தவருக்கு அருண்மொழி சொல்வதன் நியாயம் புரிந்தாலும், தன்னுடைய கணவன் பிற்போக்கு வாதி அவர் ஜெய்குமாருக்கு சொல்லி வளர்த்தே மகனும் இன்னும் பழைய காலமாக சிந்தித்து செயல்பட்டுக்கொண்டு இருந்தான்.
அப்படி பட்டவர் தமிழினிக்கு இன்னொரு திருமணம் செய்ய சம்மதம் சொல்வார் என்று நம்பிக்கையில்லை.
அருண்மொழி விடாப்பிடியாக இருக்க அதுவும் அவன் யாரையோ முடிவு செய்தது போல பேச்சில் அவனிடம் நூல்விட்டு விசயத்தை அறிய முயற்சி செய்தார்.
அவன் பிடிகொடுக்காமல் இருக்க, தேவி தனக்கு மசியாதவன் தாயிற்கு மசிவான் என எண்ணி சிவகாமியிடம் அருண்மொழியை கேட்க சொன்னார்.
சிவகாமியும் அருண்மொழியை உருட்டி வெருட்டி என்ன விசயம், யார் என்பது போல அறிய முற்பட, இப்பொழுது பெண்களின் காதுகளுக்கு விசயம் போனால் அது அவர்கள் கணவன்மாருக்கும் தெரியவந்துவிடும் அது இப்பொழுது அழுது சோர்ந்து காணப்படும் அக்காவிற்கு இன்னும் தலைவலியாகிவிடும் என உஷாராகி விடாக்கண்டனாக இருந்து கொண்டான்.
அவனிடம் கேட்டு கேட்டு அலுத்துப்போன தேவிக்கும், சிவகாமிக்கும், அவன் அந்த உஷார் தன்மையே அவன் யாரையோ தன் தமக்கைக்கு திருமணம் செய்வது என்று முடிவெடுத்து விட்டான் என்பதும், வீட்டில் இருப்பவர்கள் மறுத்தால் அவனே தன் தமக்கையை கூட்டிச் சென்று திருமணம் செய்து வைத்து விடுவான் என்பதுவும் புரிந்தது.
இப்பொழுது ஒரு இழப்பை சந்தித்த தேவிக்கு, தமிழினியின் நல் வாழ்விற்காக அந்த பிரிவையும் ஏற்க வேண்டும் என நினைக்கும் பொழுது இதயத்தில் கண்ணீர் அரும்பியது.
சிவகாமிக்கும் மகள் சாதியை விட்டு இன்னொருவரை திருமணம் செய்தால் தியாகராஜா தலைமுழுகிவிடுவார் என்று புரிந்தாலும், அவள் திருமண வாழ்க்கை முக்கியமாக பட்டதால் தேவியுடன் கூட்டணி சேர்ந்து கணவனுக்கு தெரியாமல் தமிழினி திருமணத்தை எப்படி நடத்தலாம் என திட்டமிட தொடங்கிவிட்டார்.
தேவிக்கும் மகன் இழந்த துக்கம் போய், மருமகளை எப்படி இந்த வீட்டிலிருந்து அனுப்புவது என சிந்திக்க ஆரம்பித்து விட்டார்.
வீட்டில் படையலுக்காக வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்தாலும் அவரின் சிந்தை முழுதும் தமிழினியின் திருமணத்திலேயே தேங்கி நின்றது.
அவருக்கு மகனில் ஒரு வித பாசம் என்றால் பெண்குழந்தை இல்லாத தாயாக மருமகளிலும் அதிக பாசம் தான்.
இப்படி இரு நல்ல உள்ளங்கள் தமிழினியை பற்றி கவலை பட, தமிழினி வேந்தன் பற்றிய சிந்தையே இல்லாது இறந்த ஜெயக்குமாரின் நிழற்பிரதியை வெறித்துக்கொண்டு இருந்தாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
ஜெயக்குமார் மீது காதல் என்ற உணர்வு தோன்ற விடினும், வேந்தன் இடையில் வராவிட்டால் அவனைத்தான் திருமணம் செய்து இருப்பாள்.
இப்பொழுது வேந்தன் அவளின் உள்ளதை எப்பொழுது ஆக்கிரமித்தான் எனத் தெரியாமல் நெஞ்சம் முழுதும் அவனே வியாபித்து இருக்க, அவனின் பால் தடுமாறி இருப்பவளுக்கு ஜெயக்குமார் உறவினனாகவே தெரிந்தான்.
வேந்தனை திருமணம் செய்து இருந்தாலும் ஜெயக்குமாரை உறவினன் என்ற வகையில் அந்த உறவை தொடர்ந்து இருக்கலாம். ஆனால் விதியின் கோலமாக அவனின் ஆயுள் இடையிலேயே பறிபோய்விட்டது.அதுக்கு அவளும் ஒரு காரணம் என நினைக்கும் பொழுது துக்கம் தொண்டையை பிடித்தது.
இதை யாரிடமும் கூறவேண்டாம் என வேந்தன் சொல்லியிருக்க மனத்துள் வைத்து துடித்துக்கொண்டு இருந்தவளுக்கு சுற்றமே உரைக்கவில்லை.
வீட்டுக்கு துக்கம் கேட்க வந்தவர்கள் எல்லாம் துணையை இழந்ததால்அதிக சோகத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என அவர்களே எண்ணி பலத்த அழுகையின் மூலம் தங்களின் ஆறுதல் மொழி கூற விளைய, முதலில் ஜெயக்குமார் இறந்ததை நினைத்து தன் உறவினர் தனக்கு நிச்சயிக்க பட்ட மாப்பிள்ளை என்ற ரீதியில் அழுது கொண்டு இருந்தவளுக்கு போகப் போக தமிழினியிடம் துக்கம் விசாரிப்பவர்கள் எல்லாம் கணவனை இழந்த மனைவி போலவே ஆறுதல் சொல்ல உள்ளே நெருட தொடங்கியது.
தேவிக்கும் தமிழினியை பார்க்கும் பொழுது சங்கடமாக இருக்க, இருமுறை அவளை ரூமினுள் சென்று இருக்குமாறு சொன்னார்.தமிழினியும் உள்ளே இருந்து கொண்டு காதை மட்டும் வெளியே விட்டுக்கொண்டு வந்தவர்களுக்கு குளிக்கிறாள், நித்திரை என்பது போல சொல்லிச் சமாளிக்க, தமிழினியும் அதை அப்படியே சொல்லி வைத்தாள்.
தமிழினி ரூமினுள் அடைந்து கிடப்பதை கண்ட தேவியின் கணவன், “அவாவை வெளியில் வந்து எல்லோருடனும் இருக்க சொல்லு, உள்ளேயிருந்தால் ஏதும் தப்பாக யோசிக்க போகிறா” என்றுசொல்லி அதற்கும் ஆப்புவைத்தார்.
தேவிக்கு” நீங்களே சொல்லிக்கொடுங்க” எனக் கடுப்பாக எண்ணினாலும், இவர் உடன்கட்டை ஏறணும் என்று எண்ணாமல் இருக்கிறாரே என்ற அளவிற்கு கணவனை கரித்து கொட்டவே முடிந்தது.
சிவகாமி வேலைகளை விட்டுவிட்டு மகளுக்கு பாதுகாப்பாக அருகிலே இருக்க முயற்சிக்க, எங்கே வந்த சனம் விட்டது. எல்லோரும் அது எங்கே?, இது எங்கே? காணோம் என்று நொடிக்கு ஒரு சாமானை கேட்க அது எடுத்துக்கொடுப்பதற்கு அவர்தான் எழுந்து செல்ல வேண்டி வந்தது.
தேவிக்கோ வருபவர்களை கட்டி அணைத்து அழ, அவர்களுடன் சிறிது கதைக்க என அவரின் நேரங்களை உறவினர்கள் ஆக்கிரமித்து கொண்டார்கள்.
தேவிக்கு மட்டும் இப்படி நடக்கும் என்று தெரிந்து இருந்தால் இன்னும் பத்து நாட்களுக்கு ஹோச்பிடலில் இருக்கட்டும் என்று வந்து இருப்பார். மகன் சம்பந்தப்பட்டதுக்கு தங்கள் வீட்டுப் பெண் இல்லாமல் எப்படி என அந்த வைத்தியரின் கையை காலை பிடித்துக் கெஞ்சி கூட்டிக்கொண்டு வந்தது வீணானது என நொகவே முடிந்தது.
தமிழினி எல்லோரின் வாயிலும் விழுந்து முழிபிதுங்கியவள், யாரும் தனக்கு சப்போட்டுக்கு வரமுடியாமல் அவதிப்படுவதை கண்டு,கடைசியாக அருண்மொழியை கண்டு காப்பாற்றுமாறு நோக்க, அவனுக்கும் உறவினர்களின் செய்கைகளால் ஒரு வித எரிச்சல் தோன்றியதால் உறவினர்களின் வாயிலிருந்து தமிழினியை காக்கவே மெனக்கெட வேண்டியிருந்தது.
அதுவும் வேந்தன் அவனிடம் பிரத்தேயேகமாக சொல்லிச் சென்று இருக்க, அக்காவை ஏதும் தவறான முடிவுக்கு தூண்டி விடுவார்களோ எனும் பயத்துடன் அக்காவின் மேல் கூடுதல் கண் தான், தமிழினியை நொடியும் தன் பார்வையிலிருந்து விலக்காமல் பார்த்துக்கொண்டான் என்றால் மிகையில்லை.
தமிழினிக்கு ஜெயக்குமார் இறந்ததே தன்னாலோ என்று குன்றி போயிருந்தவளுக்கு, வருபவர்கள் எல்லாம் அவளுக்கு ஆறுதல் மொழி சொல்கிறேன் என்று இனி தமிழினியின் வாழ்க்கை என்ன ஆகும் என்பது போல அழுக, அவளுக்கும் தன் எதிர்கால வாழ்கை என்ன ஆகுமோ என்ற பயம் வந்தது.
அவளுக்கு வேந்தனின் கைகளுக்குள் கோழிக்குஞ்சு போல பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. யாரும் இல்லாத பொழுது ஒன்றில் இந்த படையலுக்கு வேந்தன் வீட்டுக்கும் அழைப்பு சென்றுள்ளதா என அருண்மொழியிடம் விசாரிக்க இல்லை இது நம்ம சாதி சனம் மட்டும் தான் என்றான்.
அருண்மொழிக்கு தான் சீதாவிடம் நன்றி உரைக்காமல் வந்ததை எண்ணி சிறு குற்ற குறுகுறுப்பு. அதை தாயிடமும் உரைக்க “இப்ப ஆயிரத்தெட்டு வேலை இருக்கு. நேரம் கிடைக்கும் பொழுது தானும் வருகிறேன் போகலாம்” என்று சிவகாமி சொல்லிவிட்டார்.
அவனுக்கு மனம் கேட்க்காமல் மேகாவிடம் போன் நம்பரை வேண்டி போன் செய்ய, புதுநம்பரை கண்டு எடுக்காமல் விட்டு விட்டார்.
அவன் திரும்ப மேகாவிற்கே போன் செய்து அக்காவை நாங்கள் வீட்டுக்கு கூட்டிட்டு போகிறோம் அவர் ஹோச்பிடலுக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிடுங்க என்று சொல்லி வைத்து விட்டான்.
அருண்மொழியும் ஒரு தடவை முயற்சித்தவன், அதன் பின் தமிழினியை காக்க வேண்டிய வேலை அவனுக்கு இருக்க, தமிழினியின் கைவிரல்களை, தன் விரல்களோடு கோர்த்துக் அவளுக்கு தூணாக நின்று கொண்டான்.
இப்படியாக தமிழினிக்கு நாட்கள் நகர்ந்து கொண்டு இருக்க,..
தேவியின் கணவர் தமிழினியின் எதிர்கால பாதுகாப்பிற்காக தன்னிடம் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் தமிழினியின் பெயரில் மாற்ற போகிறேன்அதனால் தமிழினிக்கும் ஜெயகுமாரனுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது போல போலி ஆவணங்களை ரெடி செய்யவேண்டும் என்று தமிழினியிடம் கையொப்பம் கேட்டார்.
தியாகராஜா தன் அக்காவிற்கு தலையாட்டுவது போல அக்கா கணவனுக்கும் தலையை ஆட்டிக்கொண்டு இருக்க, அது வேறு தமிழினியின் வயிற்றிலும், அருண்மொழியின் வயிற்றிலும் புளியை கரைத்தது.
அவர்கள் எல்லோருமே தமிழினி தனித்து வாழ, அவளுக்கு பாதுகாப்பு தேவை என்பது போலத்தான் அவர்கள் எண்ணம் இருந்ததே ஒழிய, அவளுக்கு இன்னுமொரு வாழ்க்கையை அமைத்து கொடுக்க வேண்டும் என்பது போல எண்ணத்தை காணோம்.
தேவியின் கணவருக்கு இல்லாவிடினும் பெத்த மகளுக்கு எனும் பொழுது தியாகராஜாவிற்கு சிறிதாவது இரத்தம் துடிக்க வேண்டுமே அங்கேயும் முதல் சாதி அவர்களின் கோட்ப்பாடு அதற்கு பிறகே மகள் என்று அவர் இருக்க, பார்த்துக்கொண்டு இருந்த அருண்மொழிக்கு தான் இரத்தம் கொதித்தது.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
தேவியும் தன் கணவரிடம் அவசரப்படவேண்டாம் என்று எடுத்து சொல்ல முயற்சிக்க, அவர் கேட்க்கும் பாடாய் இல்லாமல் தன் பிடிவாதத்திலேயே நின்றார்.
இது தன் மகனின் மனைவி தமிழினி என்பது போல உறவை அங்கீகரித்தல் அதையே தேவியின் கணவனும் விரும்பினார்.
மகனிற்கு என்றவள் அவனுக்கு மட்டுமாகவே இருந்து கொள்ளட்டுமே என்று சாதி எனும் சாத்தான் அவரிற்கு வேதம் ஓதியது.
தாமரை மட்டும் ஒப்பம் ஈட்டு கொடுத்தால், தன் தலையில் மண்ணை கொட்டும் நிகழ்வு அதற்கு ஒரு போதும் உடன்படக் கூடாது எனும் வைராக்கியத்துடன் இருந்தான் அருண்மொழி.
தமிழினியை தேவியின் கணவர் கையொப்பமிடச் சொல்லி கட்டாயப்படுத்த அவளும் பேனையை எடுக்கவா வேண்டாமா என்று பெரும் யோசனையில் இருக்க,
அருண்மொழி கோப மிகுதியுடன் தமிழினிக்கு அருகே நடந்து வந்தவன், “போடாதடி..” என்று அங்கேயிருந்த பேனையை சுழட்டி சுவற்றிற்கு எறிந்தவனின் கோபத்தை கண்டு, தமிழினியே அரண்டு விட்டாள்.
“என்ன செய்கிறாய் அருண்..” என தியாகராஜா மகனை அதட்டினார்.
அருண்மொழியின் செய்கையால் தேவியின் கணவரின் முகத்திலும் கடுமை பரவியது.
சிவகாமி தமிழினியின் பக்கம் போக முடியாமல் இவ்வளவு நேரமும் கையை பிசைந்தபடி நின்றவர் கணவனின் கோபத்திலிருந்து மகனையும், மகளையும் காக்க வேண்டி அரணாக முன்னால் வந்து நின்றார்.
தேவியும் முன்னால் வந்து நின்றவர், இது கணவனுக்கு அடங்கி போகும் நேரம் இல்லை, எதிர்த்து நிற்க வேண்டிய நேரம், தான் இப்பொழுது அடங்கிப்போனால் ஒரு பெண்ணின் வாழ்வு மலராமலே கருகிவிடும் என்று வீறுகொண்ட சிங்கமாக நெஞ்சை நிமிர்த்தியபடி “அவ கையெழுத்து எல்லாம் போட மாட்டா” என்று கணவனையும், தம்பியையும் பார்த்து நிமிர்வாகவே உரைத்தார்.
“கையெழுத்து போடாவிட்டால் என் சொத்தில் சல்லி காசு கொடுக்கமாட்டேன்”என்று எதிர்க்காத மனைவி எதிர்க்க அந்த ஆவேசத்துடன் தேவியின் கணவரும் மொழிய,
“கொடுக்காதே… அவாவுக்கு சாப்பாட்டுக்கு காசு இல்லை என்று உன் வீட்டுக்கு வந்த மாதிரி” என்று மரியாதை எதுவுமற்று நக்கலாக உரைத்தார்.
காலம் காலமாக மனைவியை அடக்கும் முறையாக தேவியின் கணவர் “என்னடி..” என கையை ஓங்கிக்கொண்டு வர,
“அருண்மொழி அங்கேயிருக்கும் அரிவாளை எடு ஓங்கிற கையில் நச்சுன்னு ஒன்னு போடணும், எனக்கும் நிறைய நாளா ஆசை ” என்று அங்கே ஹாலில் அநாதரவாக இருந்த அரிவாளை காட்டி தேவி சாதாரணமாக கேட்க,
தியாகராஜாவே தன் அக்காவின் பேச்சில் திகைத்து நின்றுவிட்டார்.
அருணுக்கோ சபாஷ் என்று கையை தட்டும் ஆசை.. தமிழினி நடப்பதை நம்ப முடியாத திகைப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
பெண்கள் அடங்கி போவார்கள் என்றே ஆண்கள் அடக்கி அள நினைக்கிறார்கள். அவர்கள் முதுகெலும்போடு நிமிர்ந்து நிக்க தொடங்கினால் அவர்களின் ஆட்டம் ஆட்டம் கண்டுவிடும் இங்கேயும் அப்படி தான் தேவியும் அடங்கியிருக்கும் மட்டும் அடங்கி இருந்துவிட்டார். இப்பொழுது தமிழினிக்காக துணுந்து எதிர்த்தும் நின்று கொண்டார்.
“அருண் இந்த வீட்டில் ஒரே புழுக்கமாக இருக்கு, கொசுத் தொல்லை தாங்கலை.. வெளிக்கிடு ஒரு இடத்துக்கு போகணும், ஏகப்பட்ட வேலை கிடக்கு” என்று அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்த அருண்மொழியை பார்த்து சொன்னார்.
தேவியின் கணவருக்கு மகனை இழந்ததால் நட்டு ஏதும் கழண்டு விட்டதா என திகைப்பிலேயே தேவியை பார்த்துக்கொண்டு இருந்தார்.
இருக்காதா பின்னே திருமணம் ஆகி முப்பது வருடங்களாக தன் பேச்சிற்கு எதிர் பேச்சு பேசாமல் அமைதியாக இருந்தவர் எதிர்த்து கதைத்தால் பயம் வரும் தானே..
“அது எல்லாம் எங்களுக்கு நல்லா இருக்கு” என கணவனின் மைண்ட் வாய்சை கேட்ஸ் பிடித்து சொன்ன தேவி,
“டேய் இந்த வீட்டில் இருக்கிற அரிவாள் கொஞ்சம் மழுங்கிட்டுடா, சாணை பிடிச்சு வைக்கணும், வருங்காலத்தில் அதுக்கு நிறைய தேவையிருக்கும் போல இருக்கு” என்று கணவனையும், தம்பியையும் வெளிப்படையாக மிரட்ட,
தியாகராஜா எச்சிலை கூட்டி விழுங்கியபடி தமைக்கையை பயப்பார்வை பார்த்தார். தேவியின் கணவனுக்கு பேச்சே இல்லை.
அவர்கள் இருவரையும் பொருட்படுத்தாத தேவி, சிவகாமியை கண்டு, “ஏன்மா சிவகாமி… உனக்கும் ஏதும் பேய்யடிச்சிட்டா, வாம்மா வெளியில் போவோம், இந்த முட்டா பிசுங்களோட நமக்கு என்ன பேச்சு, இன்னைக்கு நமக்கு சோறு பொங்கிற வேலை இல்லை ” என்று சிவகாமியையும் உசுப்பியவர்,
“டேய் இப்படி பனைமாதிரி ஒரே இடத்தில் நிற்காதே, வண்டியை எடு.. இல்லை இங்கே அடிச்ச விபூதி தெளிச்சிடும்” என கணவனையும், தம்பியையும் நக்கல் பார்வை பார்த்தபடி, அருண்மொழியிடம் சொன்னவர் தமிழினியையும் கிளம்புமாறு கண்ணை காட்டினார்.
எல்லோரும் ஓடிப்போய் வரிசையாக காரில் ஏற, கடைசியாக தானும் வந்து வண்டியில் அமர்ந்த பின் வீட்டில் உள்ளே என்ன நிலைப்பாடு என்று பார்க்க உண்மையாகவே பேயடிச்ச பிலில் தேவியின் கணவரும், தியாகராஜாவும் தேவியை பயந்தபடி பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
அவர்களை பார்த்து “கமிங் சூன்” என்று கையை அசைத்து அவர்களுக்கு விடை கொடுத்தவர், அருண்மொழியிடம் திரும்பி “டேய் எவ்வளவு நேரம்டா நானும் ரவுடி ரேஞ்சில் பெரபோர்மன்ஸ் பண்ணுறது, உள்ளே பயந்து வருதுடா, அந்த எடுபட்டதுகள் பார்க்க போகுதுகள் வண்டியை எடு” என்று சின்ன குரலில் சொன்னார்.
அவரின் பாவனையின் புன்னகை எட்டிப்பார்க்க, சிரித்த முகத்துடன் வண்டியை எடுத்தான் அருண்மொழி.