23 – சிந்தையில் பதிந்த சித்திரமே (Final)

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 23

“நயனிமா கிளம்பிட்டியா?” என்று கேட்டபடி படுக்கையறைக்குள் நுழைந்தான் கதிர்நிலவன்.

“கிளம்பிட்டேன் கதிர், இதோ வர்றேன்…” என்ற நயனிகாவோ கிளம்பித் தயாராக இருந்தாலும் வெளியே செல்லாமல் ஜன்னல் அருகில் நின்று வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அங்கே என்ன பார்க்கிற? எக்ஸாமுக்கு லேட் ஆகுது…” என்றபடி அவள் அருகில் வந்து வெளியே எட்டிப் பார்த்தான்.

வெளியே யாருமில்லை. ஆனால் அவள் பார்வையோ எதிர்வீடான தன் அன்னையின் வீட்டுப் பக்கம் இருந்தது.

அவளின் பின்னால் நின்று அவள் தோளில் நாடியை வைத்து அழுத்தி அவளைப் போல் வெளியே பார்த்தான்.

அவளோ அவனைக் கண்டு கொள்ளாமல் வெளியே மட்டுமே தன் பார்வையை வைத்திருக்க, அவளின் கன்னத்தில் பச்சக்கென்று ஒரு முத்தத்தைப் பதித்தான்.

“ஷ்ஷ், சும்மா இருங்க கதிர்…” என்று சிணுங்கி கொண்டாள். இவள் இப்போதைக்கு இந்தப் பக்கம் திரும்ப மாட்டாள் என்று நினைத்து, அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பினான்.

“ஒரு நிமிஷம்… ஒரு நிமிஷம் கதிர். அதோ பாருங்க…” என்று வெளியே காட்டினாள்.

எட்டிப் பார்த்த கதிரின் உதடுகள் புன்னகையில் விரிந்தன.

“இன்னும் கொஞ்சம் லேட் ஆனால் உன்னோட அப்பாவுக்குப் பிபியே வந்திடும். பாவம் மனுஷன்! நீ வழக்கமா காலேஜ் போற நேரம் தாண்டவும் வாசலில் வந்து எட்டி எட்டிப் பார்த்துட்டுப் போறார். வா, வெளியே போவோம்…” என்றான்.

“இவ்வளவு பாசம் இருக்கிறவர் உங்ககிட்ட பேசினால் என்னவாம்? நம்ம கல்யாணம் முடிந்து ஒரு வருஷம் ஆகப் போகுது இன்னும் முறுக்கிட்டு இருக்கார்…” என்று சிணுங்கி கொண்டாள்.

“பாசம் உன் மேல தானே? அதுக்கு என்கிட்ட ஏன் பேசணுமாம்? நீ போய் அப்பான்னு ஒரு வார்த்தை பேசு. அடுத்த நிமிஷம் உன்கிட்ட பேச ஆரம்பிச்சுடுவார்…” என்றவனை முறைத்தாள்.

“என்கிட்ட மட்டும் அவர் பேசணும்னா நான் எப்பவோ பேசியிருக்க மாட்டேனா? அதுக்கு எதுக்கு நான் இத்தனை மாசம் காத்திருக்கணும்?” என்றாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“அவர் எப்ப பேசினால் என்ன? உன்கிட்ட பேசினால் போதாதா? நீயும் இறங்கி போக மாட்டீங்கிற. அவரும் இறங்கி வர மாட்டேங்கிறார். உங்க வீம்பு எப்போத்தான் குறையுமோ?” என்று அலுத்துக் கொண்டான்.

“அவர் உங்ககிட்ட பேசாம நான் இறங்கி போக மாட்டேன் போங்க…” என்றாள் கோபமாக.

“சரி விடு, அதைப் பத்தி இப்ப பேச நமக்கு நேரமில்லை. இன்னைக்கு உன்னோட கடைசி எக்ஸாம். அதை மட்டும் நினை. வா, இப்ப கிளம்பலாம்…” என்று மனைவியை அழைத்துக் கொண்டு கல்லூரிக்குக் கிளம்பினான்.

அவர்கள் கிளம்பி வெளியே வந்த போது சாதாரணமாக வெளியே வருவது போல் வாசலில் நின்று மகளின் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தார் ஞானசேகரன்.

தந்தை தன்னைப் பார்க்கிறார் என்று தெரிந்தும் நயனிகா அவரின் புறமே திரும்பவில்லை.

இது வழக்கமாக நடப்பது தான் என்பதால் தந்தை மகளைக் கண்டு கொள்ளாமல் வீட்டைப் பூட்டினான் கதிர்நிலவன்.

இருவரும் கிளம்பி செல்லும் வரை ஞானசேகரன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.

அவர்கள் சென்றதும் வேகமாக வீட்டிற்குள் சென்றவர், “அபிராமி… அபிராமி…” என்று பதட்டத்துடன் அழைத்தார்.

“என்னங்க, உங்க மகள் காலேஜ் கிளம்பிப் போயிட்டாளா?” என்று கேட்டபடி வந்தார் அபிராமி.

“கிளம்பிட்டாள். ஆனா என்னைக்கும் இல்லாம அவள் முகத்தில் ஒரு சோர்வு தெரியுது. ஒருவேளை அவங்களுக்குள் எதுவும் பிரச்சனையா இருக்குமோ?” என்று மனைவியிடம் பதட்டத்துடன் கேட்டார்.

“ஏங்க இத்தனை மாசத்தில் அவங்களுக்குள்ள என்ன பிரச்சனை வந்தது? நல்லாத்தானே இருக்காங்க. இன்னைக்கு மட்டும் எப்படிப் பிரச்சனை வந்திருக்கப் போகுது? பரீட்சை நடந்துட்டு இருக்கு. நைட் ரொம்ப நேரமா முழிச்சிருந்து படிச்சிருப்பாள். அதனால் அப்படி இருக்கும்…” என்றார்.

“இத்தனை நாளும் தான் பரீட்சை இருந்தது. அதுக்கும் அதானே படிச்சாள். அப்ப எல்லாம் அப்படி இல்லை. இன்னைக்குத் தான் அவள் முகத்தில் வித்தியாசம் இருக்கு. எனக்கு என்னவோ பயமா இருக்கு.

அவங்களுக்குள் தான் எதுவும் பிரச்சனை இருக்குமோ? நேத்துச் சாயந்தரம் கீழ் வீட்டம்மா பார்க்கிங்ல நின்னு அவள்கிட்ட ஏதோ பேசிட்டு இருந்தது. அந்த அம்மா எதுவும் சொல்லியிருக்குமோ?” என்றார் கவலையாக.

அவரின் கவலையைப் பார்த்த அபிராமி மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்தார்.

“நான் எவ்வளவு கவலைப்பட்டுட்டு இருக்கேன். நீ என்ன இவ்வளவு அமைதியா இருக்க?” என்று மனைவியிடம் சிடுசிடுத்தார்.

“என் கேள்விக்குப் பதில் சொல்லுங்க. வீட்டை விட்டு வெளியே வரும் போது மாப்பிள்ளையும் பொண்ணும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்காம தள்ளி தள்ளி நடந்து வந்தாங்களா?”

“இல்லை…”

“வெளியே வந்த பிறகும் எதுவும் அவங்களுக்குள்ள பேசிக்காம கீழே இறங்கி போனாங்களா?”

“இல்லையே… அவங்களுக்குள்ள ஏதோ சிரிச்சு பேசிட்டுப் போனாங்க…”

“அப்போ எந்தப் பிரச்சனையும் அவங்களுக்குள் இல்லை. கவலையை விடுங்க…” என்று இயல்பாகச் சொன்னார் அபிராமி.

“ஆனா அவள் சோர்வு?” அப்போதும் விடவில்லை அவர்.

“அது என்னன்னு அவள் காலேஜ் விட்டு வந்ததும் நானே என்னன்னு கேட்டு சொல்றேன். இப்ப வேலைக்குக் கிளம்புங்க…” என்றார்.

“ம்கூம், நான் இன்னைக்கு வேலைக்குப் போகலை. அவள் இன்னைக்கு மதியமே வந்திருவாள் தானே? நான் இருந்து என்னன்னு தெரிஞ்சிக்கணும். நீ போய் உன் வேலையைப் பார்…” என்று சோஃபாவில் சென்று அமர்ந்த கணவனை ஒரு தினுசாகப் பார்த்து விட்டுச் சென்றார் அபிராமி.

கதிர்நிலவன், நயனிகா திருமணம் முடிந்து சில மாதங்கள் கடந்திருந்தன.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

நயனிகா தன் முதுகலை படிப்பை தொடர்ந்து இன்று இறுதி தேர்வையும் நிறைவு செய்யப் போகிறாள்.

கதிர்நிலவன், நயனிகாவின் திருமண வாழ்வு, பாசமும், நேசமுமாக எந்தச் சுணக்கமும் இல்லாமல் இயல்பாகச் சென்று கொண்டிருந்தது.

அவர்களுக்கிடையே இருந்த காதல் நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிரக் குறையவே இல்லை.

கதிர்நிலவன் கவலைப்பட்டது போலவோ, ஞானசேகரன் பயம் கொண்டது போலவோ, கதிர்நிலவனின் கை குறைபாட்டால் அவர்களுக்குள் எந்தப் பிரச்சனையும் வந்தது இல்லை.

யாராவது அதைப் பற்றிப் பேசினாலும் இயல்பாக அவர்களைக் கடந்து விடுவாளே தவிர, ஒரு கை இல்லாதவனைத் திருமணம் செய்திருக்கிறோம் என்று ஒரு நாளும் அவள் நினைத்ததே இல்லை. அதுக்காகக் கவலைப்பட்டதும் இல்லை.

அவளின் அந்த இயல்பே கதிர்நிலவனை இன்னும் இன்னும் அவள் மேல் காதல் கொள்ள வைத்தது.

அவனுக்கு முடியாத போது அன்னையாக மடி தாங்கினாள். அவன் மனம் விட்டு பேசும் போது தோழியாகக் கேட்டுக் கொண்டாள். கலந்து ஆலோசிக்கும் போதும், ஒரு விஷயத்தைப் பற்றி முடிவு எடுக்கும் போதும் மனைவியாய் தன் கருத்தை பகிர்ந்து கொண்டாள். நேசம் வைப்பதில் காதலியாய் இருந்தாள். மொத்தத்தில் கதிர்நிலவனின் அனைத்துமாகிப் போனாள் நயனிகா.

கதிர்நிலவன் மீது இன்னும் ஞானசேகரனுக்குக் கோபமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மகள் எப்படி வாழ்வாளோ என்ற கவலையைத் தவிர மகளின் மீதோ, மருமகனின் மீதோ அவருக்கு எந்தக் கோபமோ, வருத்தமோ அவருக்கு இருக்கவில்லை.

ஆனாலும் மகள் ஒவ்வொரு நாளும் ஏதாவது கவலையில் இருக்கிறாளா என்று தெரிந்து கொள்ள, அவள் வீட்டை விட்டு வெளியே வரும் போதெல்லாம் அவளின் முகத்தையே ஆராய்ச்சியாகப் பார்ப்பார்.

அவளின் மலர்ந்த முகமே அவரின் அன்றைய நாளை உற்சாகமாக வைத்திருக்கும்.

அதே அவள் சோர்வாகத் தெரிந்தால் உடனே மனைவியை அனுப்பி என்னவென்று விசாரித்து விட்டு வரச் சொல்லுவார்.

அபிராமியும் தூதுவர் வேலையைச் செவ்வனே செய்வார்.

இவ்வளவு பாசம் உள்ளவர் சென்று பேசினால் என்ன கேள்விக்கு மட்டும் அவரிடமிருந்து பதில் வராது. இன்னும் ஏதோ ஒரு தயக்கம் அவரை ஆட்கொண்டிருந்தது.

இத்தனைக்கும் அவர்களின் சில நெருங்கிய சொந்தங்கள் நயனிகாவின் திருமணத்தைப் பற்றி விசாரிக்க வந்தவர்கள், கதிர்நிலவனைச் சென்று பார்த்து விட்டு வந்து நல்லவிதமாகவே ஞானசேகரனிடம் பேசினர்.

அதிலும் “இவ்வளவு நல்ல மாப்பிள்ளைக்கு நீயே திருமணத்தை முடித்துக் கொடுக்காமல் ஏன்பா இப்படி விட்ட?” என்று அவரைத்தான் குறை சொல்லிவிட்டுச் சென்றனர்.

சொந்தங்களிடம் நல்ல பெயர் வாங்கிவிட்ட கதிர்நிலவனை அதன் பிறகு அவரும் வெறுப்பாகப் பார்ப்பது இல்லை.

அதிலும் அவர்களின் வீட்டிற்குச் சென்று வரும் அபிராமியும், தயாவும் அவர்கள் வாழும் வாழ்வை பற்றிப் பெருமையாகப் பேசும் போது அவரின் மனம் பாசத்தில் கனிந்து விடும்.

ஆனாலும் தன் கண்ணால் மகளின் முக மாற்றத்தை காண்பதை மட்டும் இன்னும் அவர் நிறுத்தவில்லை.

இன்றும் அப்படிப் பார்க்கும் தந்தையிடம் விளையாடி பார்க்கவே காலையில் போக்கு காட்டிக் கொண்டிருந்தாள் நயனிகா.

கதிர்நிலவன் வர நேரமாகும் என்பதால், அன்று மதியம் கல்லூரி முடிந்ததுமே நயனிகா முதலில் வீடு வந்து சேர்ந்து விட்டாள்.

மகள் வந்ததும் வராததுமாக, மனைவியை உடனே அங்கே அனுப்பினார் ஞானசேகரன்.

“என்னமா, சமையல் எல்லாம் முடிச்சிட்டீங்களா?” என்று கேட்டுக் கொண்டே சோஃபாவில் தளர்ந்து அமர்ந்தாள் நயனிகா.

“அதெல்லாம் முடிஞ்சது. எடுத்துட்டு வர்றேன். சாப்பிடுறீயா?”

“இல்லம்மா, ஃப்ரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து காலேஜ் பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட பிளான் போட்டுருந்தோம். அவங்க கூடச் சாப்பிட்டு வந்துட்டேன்…” என்றாள்.

“அது சரி, உன் முகம் எல்லாம் ஏன் சோர்வா இருக்கு? நைட் ரொம்ப நேரம் முழிச்சிருந்து படிச்சீயா?” நேராக விஷயத்திற்கு வந்தார் அபிராமி.

“இல்லைமா. ஏற்கனவே படிச்ச பாடம் தான். அதோட கதிரும் நோட்ஸ் எடுத்துக் கொடுத்தார். ஈசியா படிச்சுட்டேன். வழக்கமான நேரத்தில் தூங்கவும் செய்தேன். ஆனாலும் உடம்பெல்லாம் கொஞ்சம் சோர்வாத்தான் இருக்கு. என்னன்னு தெரியலை…” என்றாள்.

மகளை யோசனையாகப் பார்த்தார் அபிராமி.

“குளிக்கிற நாள் சரியா குளிச்சியா நயனி?” என்று அவளின் மாதாந்திர நாட்களைப் பற்றி விசாரித்தார்.

“இல்லமா, இந்த மாசம் லேட் ஆகிடுச்சு. நானும் எக்ஸாம் இருந்ததால் கவனிக்கலை…” என்று அவள் சொன்னதும் அபிராமியின் முகம் மலர்ந்தது.

“எத்தனை நாள் ஆச்சு?” என்று அவர் கேட்டதும் அங்கிருந்த காலண்டரை பார்த்தாள்.

“நாற்பத்தி ஐந்து நாள் ஆச்சுமா. ஏன் இந்த முறை இவ்வளவு லேட் ஆச்சு?” என்று யோசனையுடன் அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே ஏதோ புரிந்த கொண்ட பாவனையில் விழிகளை விரித்தாள்.

“அம்மா…?”

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன். மாப்பிள்ளை வந்ததும் இரண்டு பேரும் ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்திடுங்க…” என்றார் அபிராமி.

“நான் சோர்வா இருப்பது அவ்வளவு வெளிப்படையாகத் தெரியுதாமா? வந்ததுமே கேட்டீங்க?” என்று கேட்டாள்.

“நீ சோர்வாக இருப்பதை நான் கண்டுபிடிக்கலை. உன் அப்பா தான் கண்டுபிடிச்சார்…”

“அப்பாவா?” ஆச்சரியமாகக் கேட்டாள்.

“ம்ம், காலையில் நீ வெளியே கிளம்பும் போதே கவனிச்சுட்டார். உனக்கு என்னவோ பிரச்சனைன்னு நினைச்சு அவருக்குக் கவலை. அதனால் உனக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சிக்காம வேலைக்குக் கூடப் போகமாட்டேன்னு லீவ் போட்டு வீட்டில் உட்கார்ந்திருக்கார். நான் போய் அவர்கிட்ட பிரச்சனை எதுவும் இல்லை. நல்ல விஷயம் தான்னு சொல்லிட்டு வர்றேன்…” என்று உற்சாகத்துடன் கிளம்பினார் அபிராமி.

தந்தையின் பாச உணர்வை உணர்ந்து நெக்குறுகி போனாள் நயனிகா.

மாலை கதிர்நிலவன் வந்ததும் அவனிடம் மெல்ல தன் சந்தேகத்தைச் சொன்னாள் நயனிகா.

கேட்டதும் மனம் பூரிக்க மனைவியை அணைத்துக் கொண்டவன், உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

மருத்துவரும் நயனிகா கர்ப்பம் தரித்திருக்கும் விஷயத்தைச் சொல்ல, கணவன் மனைவி இருவருமே சந்தோஷத்துடன் வீடு வந்து சேர்ந்தனர்.

உடனே அன்னைக்கு அழைத்து விஷயத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டாள் நயனிகா.

“ரொம்பச் சந்தோஷமா இருக்கு நயனிமா. என் வாழ்க்கையை, நம் வாழ்க்கையாக்கி, அதை மேலும் மேலும் அழகுபடுத்தும் தேவதையாக நீ கிடைத்தது இந்த ஜென்மத்தில் நான் செய்த பாக்கியம்…” என்று அன்று இரவு மனைவியின் மடியில் படுத்து காதலுடன் சொன்னவன், தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக அவளின் வயிற்றில் முத்தமிட்டான் கதிர்நிலவன்.

அவனின் நெற்றியில் நேசத்துடன் இதழ் பதித்துக் கணவனின் சந்தோஷத்தில் பங்கு கொண்டாள் நயனிகா.

இங்கே இவர்கள் மகிழ்வுடன் இருக்க, அங்கே விஷயம் கேள்விப்பட்டதும் ஞானசேகரனுக்கு முதலில் ஏற்பட்டது பயம் மட்டுமே!

“தேவையில்லாம பயப்படுறீங்க. சந்தோஷமா இருங்க…” என்று அபிராமி அவரைத் தேற்றியதை எல்லாம் அவர் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.

“அவங்க இரண்டு பேருமே அதைப் பத்தி கவலைப்படலை. நீங்க தான் நீங்களும் டென்ஷன் ஆகி என்னையும் டென்ஷன் ஆக்கிட்டு இருக்கீங்க…” என்று மனைவி கடிந்து கொண்டதையும் அவர் பொருட்படுத்தவில்லை.

மாதங்கள் செல்ல ஒவ்வொரு முறை ஸ்கேன் செய்த ரிப்போர்ட் வரும் போதும், “இங்கே நீங்களே பாருங்க. எந்தப் பிரச்சனையும் இல்லாமல் குழந்தை ஆரோக்கியமாகத் தான் இருக்கு…” என்று பரிசோதனை முடிவை கொண்டு வந்து காட்டினாலும் அவரிடம் சந்தோசம் என்பது வரவே இல்லை.

அவர் மனதில் இருந்ததெல்லாம் மகளுக்குக் குழந்தை குறை இல்லாமல் பிறக்க வேண்டும். அவள் காலமெல்லாம் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்பது மட்டுமே.

பிரசவ நாட்கள் நெருங்க நெருங்க, மனைவியை மகளின் வீட்டிலேயே தங்கவும் சொல்லிவிட்டார்.

மனைவியைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டான் கதிர்நிலவன்.

முன்பே அவளைப் பாசத்தில் குளிப்பாட்டுபவன், இப்போது இன்னும் கூடுதல் அக்கறையுடன் கவனித்துக் கொண்டான்.

அவனும் மாமனாரின் பயத்தைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.

அவரைப் போல் எல்லாம் அவனுக்குப் பயம் இல்லை. மருத்துவரிடம் ஏற்கனவே தெளிவாகப் பேசியிருந்தான்.

அவரும் இதுவரை எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட் படி எந்தக் குறையும் இல்லை என்றே சொல்லியிருந்தார். அதைச் சொல்லி தானே மாமியாரிடம் பரிசோதனை முடிவை கொடுத்து விளக்கம் சொல்ல சொல்லி அனுப்பியும் அவர் மாறவிலை என்பதைத் தெரிந்து கொண்டான்.

பிரசவ நாளும் நெருங்கியது. நயனிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

உடனே மருத்துவமனைக்கு விரைந்தார் ஞானசேகரன்.

உள்ளே நயனிகாவின் வலி குரல் கேட்க, வெளியே தவித்துப் போய் அமர்ந்திருந்தான் கதிர்நிலவன்.

மனைவியின் குரல் அவனைப் பதட்டமடைய வைத்திருந்தது.

நிலையாக அமர முடியாமல் தவித்தவன், இங்கும் அங்குமாக நடக்க ஆரம்பித்தான்.

“நீங்க டென்ஷன் ஆகாதீங்க தம்பி. அமைதியா உட்காருங்க…” என்றார் அபிராமி.

“இல்லைம்மா, அவளுக்கு ரொம்ப வலிக்குது போல. அவள் அங்கே அவ்வளவு வலியோட இருக்குறப்ப என்னால் உட்கார கூட முடியலை. மனசை ஏதோ பண்ணுது…” என்றவன் கண்கள் நீண்ட நெடு நாட்கள் கழித்துச் சட்டென்று கலங்கின.

அப்போது அவனின் தோளில் ஆறுதலுடன் ஒரு கரம் விழ, மெல்ல திரும்பிப் பார்த்தான்.

“கவலைப்படாதீங்க மாப்பிள்ளை. இன்னும் கொஞ்ச நேரம் தான். அப்புறம் நம்ம நயனிமா கூடக் குட்டி ஜூனியரையும் பார்க்கலாம்…” என்று சொல்லிய படி நின்று கொண்டிருந்தார் ஞானசேகரன்.

‘இவரா தன்னிடம் பேசினார்?’ என்று கதிர்நிலவன் விழிகள் விரித்துப் பார்க்க, அவனைப் பார்த்து லேசாகப் புன்முறுவல் புரிந்து ‘நானே தான்’ என்பதை உறுதிப்படுத்தினார் அவனின் மாமனார்.

“வாவ்! அப்பா மாமாகிட்ட பேசிட்டார்…” என்று உற்சாகமாகக் கூவினான் தயா.

அபிராமியும் நெகிழ்ந்த மனதுடன் அவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.

“இன்னைக்கு நம்ம எல்லாருக்கும் இரட்டிப்பு சந்தோஷமான நாள். ஒன்னு அப்பா, அக்கா மாமாவை ஏத்துக்கிட்டது. இன்னைக்கு நம்ம வீட்டுக்குப் புதுவரவு வரப்போவது. நான் போய் இப்பவே ஸ்வீட் வாங்கிட்டு வர்றேன்…” என்று மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்த தயா, அங்கிருந்து சென்றான்.

“டேய், குழந்தை பிறந்த பிறகு போடா…” என்ற அன்னையின் குரலை கேட்க அவன் அங்கே இருக்கவில்லை.

அவனின் செயலில் மாற்ற மூவருமே சிரித்துக் கொண்டனர்.

அப்போது வெளியே வந்த செவிலி ஒருவர், “பெண் குழந்தை பிறந்திருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்தில் நீங்க ரூமில் அவங்களைப் பார்க்கலாம்…” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

“வாழ்த்துகள் மாப்பிள்ளை…” என்றவர் “மாப்பிள்ளை குழந்தைக்கு எதுவும்…?” என்று ஞானசேகரன் தயக்கத்துடன் இழுக்க,

“குழந்தை நல்லா இருப்பாள் மாமா. நீங்களே இப்ப பார்க்கத்தானே போறீங்க…” என்றான் கதிர்நிலவன்.

நயனிகாவை அறைக்குள் மாற்றியதும் அபிராமி முதலில் கதிரை மட்டும் உள்ளே போகச் சொன்னார்.

ஆனால் அதற்கு மறுப்பாகத் தலையை அசைத்த கதிர், “நீங்க இரண்டு பேருமே வாங்கமா. முக்கியமா மாமா நீங்க தான் முன்னாடி போகணும்…” என்று இருவரையுமே உடன் அழைத்தான்.

அதற்குள் தயாவும் வந்து விட நால்வருமே உள்ளே சென்றனர்.

பிரசவ சோர்வில் விழி மூடி நயனிகா படுக்கையில் படுத்திருக்க, அருகில் இருந்த தொட்டிலில் குழந்தை இருந்தாள்.

கதிர் நேராக மனைவியின் அருகில் செல்ல, ஞானசேகரன் லேசான நடுக்கத்துடன் தொட்டில் அருகில் சென்றார்.

மனைவியின் அருகில் அமர்ந்த கதிர்நிலவன் அவளின் நெற்றியை லேசாகப் பரிவுடன் வருட ஆரம்பிக்க, நயனிகா மெல்ல விழிகளை மலர்த்திப் பார்த்தாள்.

“எப்படி இருக்க நயனிமா? வலி இருக்கா?” என்று மென்மையாகக் கேட்டான்.

‘இல்லை’ என்று தலையை அசைத்தவள் “பாப்பா எங்கே?” என்று மெதுவாகக் கேட்டாள்.

‘அங்கே பார்…’ என்று அவனின் கையை நீட்டிக் காட்ட, தன் தலையைத் திருப்பிப் பார்த்தாள்.

அங்கே லேசாகக் கைகள் நடுங்க, கண்கள் உணர்ச்சிவசத்தில் கலங்கியிருக்க, முகத்தில் பூரிப்பை தாங்கி தன் பேத்தியைக் கரங்களில் ஏந்தி நின்றிருந்த அப்பாவை கண்டதும் நயனிகாவின் நயன விழிகள் ஒரு நொடி சதிராட்டம் ஆடியது போல் உருண்டு விழித்தன.

“அப்பா…” என்று மெல்ல முனங்கினாள்.

“என் பேத்தி நயனிமா…” என்று கலங்கிய கண்களுடன் சொன்னவர், எந்தக் குறைபாடும் இல்லாமல் இருந்த குழந்தையின் கைகளையும், கால்களையும் மென்மையாக வருடிப் பார்த்தார்.

அவரின் மனநிலை புரிந்தவர்கள் போல் அனைவரும் அமைதியாக இருந்தனர்.

பரிதவித்த அத்தந்தை உள்ளம் இன்று குளிர்ந்து போயிருந்தது.

“என் மேலயும், இவர் மேலயும் இன்னும் கோபமாப்பா?” என்று நயனிகா கேட்க,

“இல்லம்மா. உங்க மேல எனக்கு எப்பவோ கோபம் போயிருச்சு. எனக்கு மனசுக்குள் ஒரு பயம். குழந்தை எப்படிப் பிறக்குமோ என்ற பயத்தில் மாப்பிள்ளைகிட்ட எங்கே என் பயத்தைக் கோபமாக வெளியிட்டு விடுவேனோ என்று. ஏற்கனவே மாப்பிள்ளையை நான் ரொம்பப் பேசிட்டேன்.

இப்ப என் மகளோட கணவனைக் கோபமா பேசி, எங்கே உன்னை வருந்த வைத்து விடுவேனோ என்று தான் இத்தனை நாட்களும் உங்ககிட்ட பேசாமல் விலகி இருந்தேன்…” என்றார் ஞானசேகரன்.

தந்தையின் காரணத்தைக் கேட்ட நயனிகாவின் கண்கள் கலங்கின.

தந்தையின் கண்டிப்பிலும், கோபத்திலும், வெறுப்பிலும், பயத்திலும் அனைத்திலும் இருந்தது அவரின் தன் மீதான பாசம் மட்டுமே என்ற உண்மை அப்பட்டமாகப் புரிந்தது.

“உங்க மனசை நான் கஷ்டப்படுத்தியிருந்தால் ஸாரிப்பா…” என்றாள்.

“விடுமா…” என்றார்.

அபிராமியும், தயாவும் குழந்தையைப் பார்த்து மகிழ்ந்தனர்.

நயனிகாவிடம் நலம் விசாரித்து விட்டு “நீ குழந்தையைப் பார் மா. நாங்க வெளியே இருக்கோம் மாப்பிள்ளை…” என்று மகளிடமும், மருமகனிடமும் சொல்லி விட்டு, மனைவியையும், மகனையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றார் ஞானசேகரன்.

அவர்கள் சென்றதும் “குழந்தையைத் தூக்கி என்கிட்ட காட்டுங்க கதிர்…” என்றாள் நயனிகா.

“என் இந்தக் கை குழந்தைக்கு உறுத்துமாடா?” என்று பயத்துடன் தன் வலது கையைக் காட்டி மனைவியிடம் கேட்டான்.

“அவள் உங்க பொண்ணு கதிர்…” என்று மட்டும் நயனிகா சொல்ல,

கதிர்நிலவன் தயக்கத்துடன் குழந்தையைக் கையில் பூ போல் தூக்கினான்.

குழந்தை தன் தந்தையின் கரங்களை உணர்ந்தது போல் அமைதியாக இருக்க, கதிர்நிலவனின் முகம் மலர்ந்தது.

மெல்ல குழந்தையை ஏந்திக் கொண்டு மனைவியின் அருகில் வந்தான் கதிர்நிலவன்.

குழந்தையை இருவரும் ஆசையுடன் பார்த்தனர்.

“நாம அப்பா, அம்மா ஆகிட்டோம் கதிர்…” என்றாள் நெகிழ்வுடன்.

“ஆமாடா நயனிமா…”

“சந்தோஷமா கதிர்?”

“ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்…”

“நானும்…”

“எல்லாத்துக்கும் காரணம் நீ தான் நயனிமா! உன் காதல் தான்!

கருப்பு வெள்ளையாக இருந்த என் வாழ்க்கையில் வண்ணம் கொண்டு வந்து, குழந்தை, மாமனார், மாமியார், மைத்துனன்னு அருமையான உறவுகளையும் கொடுத்து ஓர் அற்புதமான சித்திரமாகத் தீட்டி அழகாக்கி இருக்க.

நீ இல்லாமல் என்னோட இந்தச் சந்தோஷத்துக்கு வாய்ப்பேயில்லை. லவ் யூ நயனிமா…” என்றவன் அவளின் நெற்றியில் காதலுடன் இதழ் பதித்தான் கதிர்நிலவன்.

கணவனின் காதலில் முகம் மலர்ந்து சிரித்தாள் நயனிகா.

அன்பு!
உறவுகள் கொடுக்கும்!
உயிர்ப்பைக் கொடுக்கும்!
உன்னதத்தையும் கொடுக்கும்!

அன்பிற்கு உயிர் கொடுக்க உலகத்தில் உயிர்கள் இருக்கும் வரை, அன்பு என்றும் அநாதை ஆவதில்லை!

***சுபம்***