மதுவின் மாறன் 9, 10 & 11

அத்தியாயம் 9:

தன் குரலை செருமிக் கொண்டு உள் நுழைந்தான் மாறன்.

மாறன் சட்டென உள் நுழைந்ததில், தான் கூறியதை தவறாய் எண்ணியிருப்பாரோ என்று சற்று கலங்கிப் போனான் மருதன்.

தன்னால் தன் தோழியின் வாழ்வில் எவ்வித தீங்கும் நேர்ந்துவிட கூடாது என்கின்ற எச்சரிக்கையின் விளைவினால் தோழியின் மீதிருந்த பாசத்தினால் வந்த கலக்கமது.

“வா மருதா.  எப்படி இருக்க??” என்று இயல்பாய் கை குலுக்கி நலம் விசாரித்தான் மாறன்.

“நல்லா இருக்கேன் மாறன்.  நீங்க எப்படி இருக்கீங்க?? மதுரா பொண்ணு உங்களுக்கு ஒழுங்கா சமைச்சு போடுறாளா இல்லையா?? ஒரு வாரத்துல ஒரு கிலோ எடை குறைஞ்ச மாதிரி இருக்கீங்களே” என வாணியை கிண்டலடித்து மாறனிடம் சிரிப்பாய் அவன் கேட்க,

“அட நீங்க வேற,  நல்லா ஊட்டி ஊட்டி வளக்குறா என்னை” என அவள் காலையில் ஊட்டி விட்டதை இவ்வாறாய் மாறன் கூற,

“ம்ப்ச் என்ன பேச்சு இது” என்று மாறனின் தோள் பையை வாங்கும் சாக்கில் கையை கிள்ளினாள் மது.

அதை கண்டுகொண்ட மருதன் வாய்விட்டு சிரித்தான்.

அவனின் சிரிப்பில் அச்சோ வென மாறனின் தோளிலேயே சாய்ந்து அசட்டு புன்னகை சிந்தியவள்,

“நான் காபி போட்டுட்டு வரேன். நீங்க பேசிட்டு இருங்க” எனக் கூறி சமையலறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் மாறன்” என்றான் மருதன்.

“ஹ்ம்ம்..  எனக்கும் உன்கிட்ட கேட்க வேண்டிய கேள்விகள் கொஞ்சம் இருக்கு” என்றான் மாறன்.

“அன்னிக்கு நீங்க வீட்டுக்கு வந்தப்பவே உங்க முகம் சரியில்ல. மது உங்களை விட்டு கொடுத்து பேசிட்டதா நீங்க நினைச்சிட்டீங்கனு எனக்கு புரிஞ்சிது. நானும் அவளை ஓவரா தூக்கி வச்சி பேசினது உங்களுக்கு ஹர்ட் ஆகியிருக்குமோனு தோணுட்டு. அதான் க்ளாரிஃபை செஞ்சிடலாம்னு நினைச்சேன்” என்றவன் கூற,

மேற்கொண்டு கூறு என்பது போல் பார்த்திருந்தான் மாறன்.

“வாணிய நான் எங்க எப்ப பார்த்தேன் தெரியுமா மாறன்” கேட்டான் மருதன்.

“லண்டன்ல உங்களை மீட் செஞ்சதா சொல்லிருக்கா மருதா.  மத்த எதுவும் நாங்க உன்னை பத்தி பெரிசா பேசிக்கல”  என்றான் மாறன்

“லண்டன்ல நான் மதுராவ முதன் முதல்லா பார்க்கும் போது, “இந்த பொண்ணுலாம் எப்படி ஆன்சைட்க்கு அனுப்பினாங்கனு தான்” நினைச்சேன். ஏன்னா அப்ப நான் அப்பியரன்ஸ்க்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பேன். கொஞ்சம் மார்டனா இருக்க பொண்ணுங்க தான் பிடிக்கும். அப்படி இருக்க பொண்ணுங்க கிட்ட தான் பேசுவேன்” என்றிவன் கூறிய நொடி,

அதிர்ச்சியில் ஆழ்ந்தான் மாறன்.
தன்னை போலவே முதல் பார்வையில் மதுவை இவனும் குறைவாய் தாழ்வாய்  எண்ணியுள்ளானே என்றெண்ணி அதிர்ந்தான் மாறன். மருதன் மீது சிறிது கோபமும் வந்தது.  அது தன் மீதான கோபமும் கூட. 

இளமை பருவம், கண்ணுக்கு அழகாய் தோற்றமளிப்பதே உயர்வானதாய் எண்ண வைக்கும் வயதது. சற்று முதிர்ச்சியாய் சிந்தித்தால் வாழ்நாளுக்கும் தேவை குணமும் அன்பும் என உரைத்திருக்கும்.

ஆனால் அனுபவம் என்ற ஒன்று சிறிது காலம் தாழ்த்தினாலும் வாழ்க்கைக்கு தேவை எது என்பதை வலிக்க வலிக்க உணர்த்திவிட்டு தான் செல்கிறது.

இருவரும் அவ்வாறோர் அனுபவத்தின் மூலமே வாணியின் உன்னதமான குணத்தை கண்டு அவளின் அன்பிற்கு சரணடைந்தனர்.

இது அவளிடம் எவ்வாறு  கூறுவதென அறியாமல் தான், தங்களது முதல் சந்திப்பை வாணியிடம் கூறாமல் இருக்கிறான் மாறன்.  இதற்கு வாணியின் எதிர்வினை எவ்வாறு இருக்குமென யூகிக்க முடியாமல் தான் அதனை கூறாமல் இருக்கிறான் மாறன்.

முதல் சந்திப்பில் இவ்வாறு எண்ணியவன், பின் எவ்வாறு தன் பொக்கிஷம் என மருதன் அவளை கூறினான். எவ்வாறு அந்நிலைக்கு அவளை உயர்வாய் அவள் எண்ண வைத்தாள் என பல கேள்விகள் மாறனின் சிந்தையில் சுழன்றது.

அத்தியாயம் 10

சில வருடங்களுக்கு முன்பு…

வெள்ளை மனிதர்களும் வெளீர் பனி குளுமையும் சூழ்ந்த லண்டன் மாநகரத்தின் ஈஸ்ட் ஹம் பகுதியிலிருந்த அவ்வீட்டின் கதவை தட்டிக் கொண்டிருந்தாள் வாணி.

கதவை திறந்த அவ்வீட்டின் உரிமையாளரினருகில் நின்றிருந்தாள் சஹானா.

நைட் பேண்ட்டும் டீ ஷர்ட்டுமாக அதன் மேல் ஜர்கினுமாக அப்பொழுது தான் தூங்கி எழுந்த முகமாய் நின்றிருந்தாலும் அவளின் ஃபெதர் கட் ஹேர் ஸ்டைலில் முகம் முன் விழுந்த முடியை கோதி பால் நிறத்தில் மிளிர்ந்து சிரித்த முகமாய் நின்றிருந்தவளைக் கண்டதும், “செம்ம அழகுல” என்று தான் வாணிக்கு தோன்றியது.

“வாங்க வாணி” என வாசலில் நின்றிருந்தவளை உள்ளுக்குள் அழைத்த சஹானா,

“வாணி, இவங்க தான் ஹரி அங்கிள். இந்த வீட்டோட ஓனர்.” என அறிமுகம் செய்து வைத்தாள்.

பரஸ்பர அறிமுகத்திற்கு பின் வாணியை தனது அறைக்கு அழைத்து சென்றாள் சஹானா.

“இது தான் நம்ம ரூம்.  இது தான் உங்க பெட்.  ரிஃபெரஷ் செஞ்சிட்டு வாங்க… க்ரீன் டீ குடிக்கலாம்”  என சஹானா கூற,

ரிப்ரெஷ் ஆகி வந்த வாணி,”தேங்க்ஸ்  சஹானா.  நான் வரதுக்கு முன்னாடியே இங்க எல்லா ஏற்பாடும் செஞ்சி வச்சதுக்கு” என நன்றியுரைத்தாள்.

“நான் என்ன பெரிசா செஞ்சேன். ஏற்கனவே இங்க இருந்த உங்க கலீக் பதிலா தானே நீங்க வந்திருக்கீங்க.  அதனால அப்படியே உங்களுக்கு அலக்கேட் பண்ணிட்டாங்க. ஆக்ட்யுவலி நான் சாரி கேட்கனும். உங்களை  ரீசவ் பண்ண நீங்க ஏர்போர்ட் வர சொல்லியும், வராம இருந்ததுக்கு ரொம்ப சாரி. எல்லாம் இந்த இளானால வந்தது.” என்றவள் கூறிய நொடி,

“என்னது இளாவாஆஆஆஆ” என்று வாணி வாயை பிளக்க,

“உங்களுக்கு இளாவ முன்னாடியே தெரியுமா??” என்றாள் சஹானா.

“இல்ல இளாங்கிற பேர்ல ஒருத்தரை தெரியும். அதனால அதே பேர்ல இங்கயும் இருக்காங்களானு கேட்டு ஷாக்காயிட்டேன். என் ஃப்ரண்ட் வேணியோட ஹஸ்பண்ட் பேரு இளா தான்” என்றாளவள்.

“ஓ இவன் பேரு இளமருதன். இங்க தான் பக்கத்து ரூம்ல  தான் தங்கியிருக்கான்” என்று சஹானா கூறியதும்,

“என்னது இங்க ஜென்ட்ஸ் லேடிஸ் ஒரே பிஜில இருப்பாங்களா??” என ஆச்சரியமாய் வாணி கேட்க,

வாணியின் முகபாவனையில் சிரித்த சஹானா, “ஆக்ட்யுவலி இங்க பிஜி மாதிரி லாம் கிடையாது.  இது வீடு தான்.  ஒரு வீட்டுக்கு மூனு பெட்ரூம்னு வச்சிருப்பாங்க.  ஒரு பெட்ரூம்க்கு இரண்டு பெட்னு  இரண்டு பேரு ரெண்ட்க்கு விடுவாங்க.  சோ லேடீஸ் மட்டும் தான் ஜென்ட்ஸ் மட்டும் தான்னு கிடையாது. இங்க இண்டியன்ஸ் தான் அதிகமா இருக்காங்க. இண்டியால இருந்து இங்க வந்து செட்டில் ஆனவங்க தான் இப்படி வீடு வச்சி வாடகைக்கு விட்டுட்டு இருக்காங்க” என்று கூறினாள்.

“இளாவும் நம்ம ஆபிஸ் தான்.  நான் இங்க வந்தப்ப ரொம்ப லோன்லியா ஃபீல் செஞ்சேன்.  அவன் தான் என்னை கேர் பண்ணி பாத்துக்கிட்டது. நான் இங்க வந்து த்ரீ மன்த்ஸ் ஆகுது.  அவன் வந்து ஒன் இயர் ஆகுது” என்றாள் சஹானா.

சஹானாவின் பேச்சில் இளமருதன் மீது நல்ல அபிப்ராயம் வந்தது வாணிக்கு.  பேசும் சஹானாவின் வதனத்தையே பார்த்திருந்த வாணி, “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க”  என்றாள்.

வாணியின் வார்த்தையில் சிரித்தவள், “யு ஆல்சோ லுக்ஸ் ப்ரிட்டி. காஜ்ஜியஸ் ஐஸ் யு ஹேவ்(u also looks pretty.  Gorgeous eyes u have)” என்றாள்.

நிஜமாவா என்பது போல் வாணி பார்க்க,

மீண்டும் சிரித்த சஹானா, ” வாணி,  உங்களை விட உங்க கண்ணு ரொம்ப பேசுதுங்க” என்றாள்.

“இன்னிக்கு சண்டேனால நானும் இளாவும் வெளில போகலாம்னு ப்ளான் செஞ்சிருந்தோம்.  நீங்க ரெஸ்ட் எடுக்குறீங்களா இல்ல சுத்தி பார்க்க வர்றீங்களா??” என்று க்ரீன் டீ குடித்துக் கொண்டே இருவரும் பேசிக் கொண்டிருந்த நேரம், அவர்களின் அறை கதவை எவரோ தட்டும் ஓசை கேட்க, சஹானா சென்று கதவை திறந்தாள்.

“ஹை பியூட்டி”  என்று சஹானா பார்த்து சிரித்துக் கொண்டு நின்றிருந்தான் இளமருதன்.

உள் நுழைந்தவன் வாணியை பார்த்து யாரது என்பது போல் நோக்க,

“இளா நான் நேத்து சொன்னேன்ல மதுரவாணினு ஒருத்தங்க வர்றாங்கனு. இவங்க தான்” என்று சஹானா கூறியதும்,

“ஓ ஹை” என்று வாணியை பார்த்து சற்றாய் சிரித்தவன்,

“கிளம்பு சஹா, வெளில எங்கயாவது போய்டு வரலாம்… சன்டேவும் ரூம்ல இருந்தா ரொம்ப கடுப்பா இருக்கு”  என்றுரைத்த நொடி,

“நீங்களும் வாங்க வாணி.  இங்க தனியா என்ன செய்வீங்க?”  என்றாள் சஹானா.

அவங்கள எதுக்கு கூப்பிடுற என்பது போல் சஹானாவை மருதன் முறைத்து பார்க்க, “அவங்க இங்க தனியா தானே இருக்கனும் இளா” என்று சஹானா ஏதோ கூற விழைந்த நொடி,

“இல்ல எனக்கு டயர்ட்டா இருக்கு.  ரெஸ்ட் எடுக்கனும்.  இங்க நல்லபடியா வந்துட்டேனு அப்பா அம்மா ப்ரண்ட்ஸ்குலாம் சொல்லனும். அதனால நீங்க போய்ட்டு வாங்க”  என்று கூறி விட்டாள் வாணி.

ஹப்பாடா என்றொரு ஆசுவாசம் மருதனின் முகத்தில்.

சங்கடமாய் வாணியின் முகத்தையும் கடும் எதிர்ப்பாய் மருதனின் முகத்தையும் பார்த்திருந்த சஹானா, “சரி போ இளா.  நான் கிளம்பி வர்றேன்.” என்று மருதனை அவ்விடத்தை விட்டு துரத்தினாள்.

வாணிக்கு மருதன் மீது ஏற்பட்டிருந்த நல்ல அபிப்ராயத்தை, அவனின் ஹை பியூட்டி என்ற அழைப்பில் நலிந்து அதன் பிறகான அவனது ஒட்டுதல் இல்லாத ஒதுக்கமான பேச்சில் முற்றாய் முறிக்க செய்தது.

“என்னமோ இவன் கூட போக நம்ம விருப்பபடுறா மாதிரி ஓவரா தான் பிகு பண்ணிக்கிறான்.  இவங்க இரண்டு பேரு எங்க ஒன்னா போனாலும்  நம்ம கூட போக கூடாது” என மனதில் நினைத்துக் கொண்டாள் வாணி.

ஆனால் விதியோ அவளை தினமும் அவர்கள் இருவருடனும் சேர்ந்து தான் அலுவலகத்திற்கு பயணிக்க வைத்தது.

அங்கே இரயிலை டியூப் என்றே விளிப்பர். இரண்டு நிமிடத்திற்கு ஒரு டியூப் என வந்த வண்ணமே இருக்கும்.  மூவருமே ஒரே அலுவலகமாகையால் சேர்ந்தே செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் வாணி.

அலுவலகத்திலிருந்து சரியான நேரத்திற்கு சஹானா கிளம்பிடுவாளாகையால் அவளுடனே தானும் கிளம்பி சென்றிடுவான் மருதன்.

வாணி சற்று நேரம் இருந்து தனது பணிகளை முடித்துவிட்டே கிளம்புவாள்.
வாணி இரவு அலுவலகத்தில் இருந்து தாமதமாய் வந்த போதும் அவளின் பாதுகாப்பை பற்றியெல்லாம் மருதன் கேட்டுக் கொண்டதுமில்லை. கவனித்ததுமில்லை .  ஆனால் சஹானாவிற்கு அனைத்தையும் செய்துக் கொண்டு அவளின் பின்னேயே சுற்றிக் கொண்டிருந்தான்.

மருதனின் அழகை பார்த்து பழகும் தன்மையை அவனுடனான இரண்டாம் முறை சந்திப்பிலேயே கண்டு கொண்ட வாணி,  முழு முற்றாய் வெறுத்தாள் அவனை. சஹானாவிற்காக ஹை பை ரேஞ்சில் அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

மருதனின் இக்குணத்தை அறிந்தும் அவனிடம் நட்பு பாராட்டும் சஹானாவையுமே சற்று பிடிக்கவில்லை தான் வாணிக்கு.  தன் அழகுக்காகவே தன் மீது அக்கறை எடுத்து பார்த்துக் கொள்கிறான்  என அறிந்தும் அவனை அவள் தோழனாய் ஏற்றுக் கொண்டது பிடிக்கவில்லை வாணிக்கு.

பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி வேலை பார்க்குமிடங்களிலும் சரி இவ்வாறான ஆண்கள் இன்றும் இருக்க தான் செய்கிறார்கள்.  அழகான பெண் தனக்கு தோழியாய் இருந்தால் போதும், அதுவே அவர்களுக்கு ஒரு பெருமிதத்தை கர்வத்தை அளிப்பதாய் எண்ணுகிறார்கள்.  அதற்காக அவர்களின் நட்போ அன்போ தவறானது என்று இல்லை.  அவர்கள் அப்பெண் மீது வைத்திருக்கும் அன்பு நட்பு தூய்மையானது தான்.  ஆனால் அவற்றின் ஆரம்ப புள்ளி இப்படியான கர்வமும் பெருமிதத்திற்காக ஆரம்பித்த ஒன்றாக தான் இருக்கும்.  அப்பெண் அழகுடன் கூடிய பண்புடையவளாய் இருப்பின் இவர்கள் தப்பித்து விடுகிறார்கள்.  அவ்வாறில்லாத பெண்களிடம் தோழமை வைத்து மன வலியை பெற்று வாழ்பவர்களும் உண்டு.

இதில் தாங்கள் அழகில்லை என்ற தாழ்மை மனப்பான்மைக்கு மற்ற பெண்களை தள்ளிக் கொண்டிருக்கிறோம் என்றும் பலருக்கு புரிவதில்லை.

ஆக நட்போ  காதலோ எத்தகைய உறவிற்கும் அடிப்படை அன்பும் பண்பும் மட்டுமாய் இருக்க வேண்டுமே தவிற அங்கே அழகு ஒரு பொருட்டாய் இருத்தல் கூடாது.

இளமருதன் அத்தகைய தவறினை தான் செய்து கொண்டிருந்தான்.

நட்பாய் சென்றுக் கொண்டிருந்த அவனின் பயணம் அவளிடம் காதலாய் உருமாற அது புகட்டி சென்ற பாடம் தான் வாழ்க்கையின் நிதர்சனத்தை மருதனுக்கு உணர்த்தியது.

முகப்பறையில் நிகழ்ந்துக் கொண்டிருந்த மருதன் மாறனின் உரையாடலில்,  சமையலறையில் காபி கலக்கி கொண்டிருந்த வாணியின் எண்ணங்கள் இவ்வாறாய் பயணித்துக் கொண்டிருக்க,

மாறன் வந்து பின்னின்று அணைக்க,  நிகழுலகுக்கு வந்தாள் வாணி.

“என்ன பெருத்த யோசனைல இருக்கு என் மதுக்குட்டி”  எனக் கூறி பின்னின்று அணைத்திருந்தவன் அவளுயரத்திற்கு குனிந்து அவளின் முகத்தினருகே தன் முகத்தை வைத்து கன்னத்தில் இதழ் பதித்தான்.

“யோசனைலாம் ஒன்னும் இல்லப்பா” என்று இவள் ஏதோ கூற வர,

தன்னை நோக்கி அவளை திருப்பியவன்  தன்னுயரத்திற்கு அவளை தூக்கி தலையில் முட்டி,

“ஹால்ல இருந்துட்டு உன்னை நான் மூனு நேரம் கூப்டேன் என் அருமை பொண்டாட்டி.  நீதான் ரெஸ்பான்ஸே பண்ணல.  அதான்  என்னாச்சுனு பார்க்க வந்தேன். காபி போட இவ்ளோ நேரமா மதுரா பொண்ணுனு உன் ஃப்ரண்டும் உன்னை கிண்டலடிச்சிட்டு இருக்கான் அங்க.  சீக்கிரம் வா” என  நெற்றியில் இதழ் பதித்து இறக்கி விட,
திடீரென்ற இவனின் அதிரடியில் அவள் பே வென முழித்து நிற்க,

“அந்த கண்ணை ரொம்ப தான் உருட்டி முழிச்சு என்னை உசுப்பேத்துற மதுக்குட்டி” என கண்ணிலும் இதழ் பதித்தே விட்டு சென்றான்.

இவள் இங்கு சமையலறையில்  எண்ணங்களை பின்னோக்கி செலுத்திக் கொண்டிருந்த நேரம்,  முகப்பறையில் மருதன் தன் காதல் கதையையும் வாணியை தான் கவனியாது இருந்ததையும் கூறி முடித்திருந்தான்.

அடுத்து மருதன் எவ்வாறு வாணி மீது இத்தகைய அன்பு வந்தது என்று கூற தொடங்கிய நொடி தான், மாறன் வாணி வரட்டும் அதன் பிறகு இக்கதையை கூற சொல்லிவிட்டான்.  அதன் பின்னரே வாணியை அழைத்தனர் இருவரும்.

மதுவின் மாறன் 11

வாணியின் உருவ தோற்றம் பெரிதாய் ஈர்ப்பதாய் இல்லாத காரணத்தினால் அவளை ஒதுக்கி வைத்து பழகிய மருதனின் மீது கோபம் வந்த போதும், 
அந்த ஒதுக்கம் எவ்வாறு பிற்காலத்தில் நெருக்கமாய் மாறியது என்றறிய மாறன் மிகுந்த ஆவலாய் இருந்த போதும், அவனுக்கு வாணியின் மனநிலை அறிய வேண்டியிருந்தது.

அந்த ஒதுக்கத்தில் அவள் தன்னை தாழ்வாய் எண்ணி தாழ்வு மனப்பான்மையில் சிக்கி தவித்திருப்பாளோ?? தானும் முதல் சந்திப்பில் அவ்வாறு எண்ணியதாய் கூறினால் அவளின் மனநிலை என்னவாய் இருக்கும் என்று இந்த சூழல் வைத்து கணிக்க எண்ணினான்.

வாணி முகப்பறை வந்து அவர்களுக்கு காபியை கொடுத்துவிட்டு மாறன் அருகில் வந்தமர்ந்தாள்.

“மருதன் அப்படி உன்னை இக்னோர் செஞ்சது ஹர்ட் ஆகலையா மது??” என்று மாறன் கேட்க,

மருதன் மதுவிடம் பின் நாட்களில் இக்கேள்வியை கேட்டு விடையறிந்திருந்ததால், மாறனின் இக்கேள்வியில்  வாய்விட்டு சிரித்தான் மருதன்.

அவனின் சிரிப்பில் மாறன் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்த,

“அவ இப்ப என்னைய டேமேஜ் பண்ணுவா பாருங்க”  சிரிப்பினூடே கூறினான் மருதன்.

“கண்டிப்பா இல்லப்பா!! எனக்கு இப்படி கொஞ்சம் மார்டன் ஆட்கள் பார்த்தாலே, நமக்கு இவங்க செட் ஆக மாட்டாங்கனு ஒதுங்கி போய்டுவேன்.  இதுல இவனே என்னைய மதிக்காம கண்டுகாம சுத்திட்டு இருக்கும் போது அப்படி ஒரு ஆளு என் கூட இருக்குறதாவே நான் நினைக்கல”  என்று வாணி கூறியதும்,

ஹா ஹா ஹா வென சிரித்த மாறன், “இப்ப புரியுது அந்த டேமேஜ்” என்றான்.

“உண்மைய சொல்லனும்னா அவனாவே வந்து பேசியிருந்தாலும் நான் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் செஞ்சிருப்பேன்.  எனக்கு இந்த சீன் பார்ட்டிங்கனாலே அலர்ஜி. சுத்தமா ஒத்து வராது” என்று அவள் மருதனை தீண்ட தகாதவனை போல் கூறிக் கொண்டிருக்க,

“போதும்மா சாமி.  அவர் ஒரு கேள்வி தான் கேட்டாரு. அதுக்கு என்னைய எவ்ளோ வச்சி செய்யனுமோ செஞ்சாஞ்சு. இதோட நிறுத்திக்கலாம்.  உன் கோட்ட தாண்டி நானும் வர மாட்டேன். என் கோட்ட தாண்டி நீயும் வரக் கூடாது. என்னா அடி” என வடிவேலு பாணியில் முகத்தை வைத்துக் கொண்டு மருதன் பேச,

மாறனும் வாணியும் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்திருந்தனர்.

“எனக்கு லண்டன்ல ரொம்ப வேலை அதிகமா இருந்துச்சுப்பா.  க்ளைன்ட் எந்த இஷ்யூனாலும் என் பக்கத்துலேயே வந்து உட்கார்ந்து உடனே சால்வ் பண்ணுனு செம்ம டார்ச்சர்.  அதனால நான் வேலைய தவிற வேற எதையும் கவனத்துல வச்சிகல அப்ப”  என்றாள் வாணி.

சஹானாவை மருதன் எந்தளவு நேசித்தான், அவளுக்காக அவன் என்னவெல்லாம் செய்தான். எவ்வாறு அவளின் நட்பு காதலாய் அவனுள் உருமாறியது என்பதை மட்டுமே மருதன் மாறனிடம் கூறியிருந்தான்.

“சஹானா உங்களை லவ் பண்றேனு சொல்லி ஏமாத்திட்டாங்களா மருதன்” என்று கேட்டான் மாறன்.

“அதென்ன எப்ப பார்த்தாலும் பொண்ணுங்க தான் பசங்களை ஏமாத்துற மாதிரி பேசுறீங்க.  அதுவும் அழகான மார்டன் பொண்ணுனா தப்பு அவ மேல தான்னு உடனே முடிவு செஞ்சிட வேண்டியது. ஐ அப்ஜெக்ட் திஸ் யுவர் ஆனர்.” என்று ஆவேசமாய் கூறி தன் இருக்கையிலிருந்து வாணி எழுந்து நிற்க,

“நீ சும்மா கோவப்பட்டாலே உன் கோவ பழ முகம் பார்த்து எனக்கு லவ்ஸ் வரும்.  இதுல ஆவேசமா கோவப்பட்டீனா ஓவர் லவ்ஸ் ஆகி மருதன் முன்னாடியே உன்னை கடிச்சி வச்சிட போறேன் மதுக்குட்டி” அவளின்  காதோரம் மாறன் கூற, 

“ம்ப்ச் நான் சீரியஸா பேசிட்டிருக்கும் போது என்ன விளையாட்டு” என அவளும் அவன் காதில் கூறி அவனருகே அமர,

இவர்களின் சம்பாஷனை சற்றாய் மருதனின் காதில் கேட்க, இளநகை புரிந்தான்.

வாணி அமர்ந்ததும், “ஆமா மது,  சஹானா மேல தப்பில்லைனா…. மருதன் என்ன ப்ளேபாயா??” என்று யோசனையாய் மாறன் கேட்க,

“அட நீங்க வேற!!  அதுக்கெல்லாம் இவன் சரிபட்டு வர மாட்டான்”  என்று தீவிரமாய் வாணி கூற,

தன் இருக்கை விட்டே எழுந்துவிட்ட மருதன், கை எடுத்து கும்பிட்டு “நான் லவ்வே பண்ணலை.  எனக்கு லவ் ஃபெய்லியரே இல்லை.  புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து என்னைய வச்சி செஞ்சது போதும்” என்றவன் “போதும் வலிக்கிது அழுதுடுவேன்” என்ற வடிவேலின் பாவனையில் கூற,

அவன் குரலின் பாவனையிலும் பாவமான முக குறியீட்டிலும் மாறனும் மதுவும் வாய் விட்டு சிரித்தனர்.

“ஹா ஹா ஹா… உட்காரு மருதா… எனக்கு தெரிஞ்சி இவன் லவ் பண்ண ஒன் அண்ட் ஒன்லி கேர்ள் அவ தான். இவன் பார்க்க தான்ங்க மார்டன். மனசால அப்படியே நம்ம சவுத் இந்தியன் பையன். ஒருத்திய தான் லவ் பண்ணி கட்டிப்பேங்கிற எண்ணத்துல வேற இருந்தான் போல” என்ற வாணி,

“சஹானா இவனை ஃப்ரண்டா தான்ங்க நினைச்சு பழகியிருக்கா! இவன் தான் அவளை லவ் பண்றேனு சொல்லி அவ ஒத்துக்காம இருந்து கடைசியில விசா முடிஞ்சி போய்ட்டா!. இவன் சூப் பாயா சுத்திட்டு இருந்தான். அதுக்கு அப்புறம்  இது வரை அவளை நான் எங்கேயுமே பார்க்கல வெற்றிப்பா.  சோஷியல் நெட்வர்க்ல கூட அவ இல்ல” என்றாள் வாணி.

“இல்ல அவ என்னை லவ் பண்ணா மதுரா… நான் அதை அவகிட்ட ஃபீல் செஞ்சிருக்கேன்…  அவ வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க அது இதுனு பலதும் நினைச்சு தான் என்னை வேண்டாம்னு சொல்லிருப்பா” என்று வேதனை கலந்த குரலில் கூறியவன்,

“நான் ஒன்ஸ் பார்த்தேன் மதுரா… பெங்களுர்ல மாருதி நகர்ல ஒரு ஷாப்ல பார்த்தேன்.  ஆனா போய் பேசலை.  அவ்ளோ தைரியம் எனக்கில்ல. ஹஸ்பண்ட் அண்ட் ஒரு குட்டி பொண்ணோட வந்திருந்தா… எப்படியோ அவ சந்தோஷமா வாழ்ந்தா போதும் எனக்கு. அதை பார்த்துட்டேன்” என்று பெருமூச்சு விட,

அவனை திசை திருப்பும் பொருட்டு,
“அப்படி அழகான பொண்ணுங்க மட்டுமே ஃப்ரண்ட்டா வச்சுகிட்டு சுத்துற ஆளு… இந்த மதுரா பொண்ணு மாதிரி சாதாரண பொண்ண எப்படி ப்ரண்ட்டா பின்னாடி அக்செக்ப்ட் செஞ்சீங்க”  என்று மாறன் கேட்ட நொடி,

மாறனின் முதுகில் நாலு அடி வைத்திருந்தாள் வாணி.

“நான் சாதாரணமா தான் உங்க கண்ணுக்கு தெரியுறேனா??” என கோபமாய் கேட்டவள்,  அவனின் கன்னம் கைகள் என கைக்கு எட்டிய இடத்திலெல்லாம் கிள்ளி வைத்தாள்.

இதை கண்டு மருதன் சிரித்திருக்க,

“அய்யோ மது…  நான்  மருதனோட மனநிலைல இருந்து கேள்வி கேட்டேன். இது என்னோட எண்ணம் இல்ல”  என்று அவள் அடியிலிருந்து கிடைத்த இடைவெளியில் அவன் அலறலாய் கூற,

அதன் பிறகே வாணி அமைதியாய் அமர்ந்தாள்.

“அய்யோ இவளை ஃபர்ஸ்ட் மீட் பண்ணும் போது நாம எண்ணலாம் நினைச்சோம்னு தெரிஞ்சா என்ன செய்வானு தெரியலையே” என்று அவளின் இவ்வடியில் மாறனின் மனம் பீதியடைந்தது.

சத்தமாய் சிரித்திருந்த மருதன், “நான் எங்க அவளை ஃப்ரண்டா அக்செப்ட் செய்றது.  என்னை ஃப்ரண்டா ஏத்துக்கோமா நான் தான் அவகிட்ட கெஞ்சிட்டு இருந்தேன். அவ தான் என்னைய அக்செப்ட் செய்யாம சுத்திட்டு இருந்தா. இப்பவாவது அவ மனசுக்கு நெருக்கமான ஃப்ரண்ட் லிஸ்ட்ல நான் இருக்கேனானு தெரியலை. ஆனா எப்பவுமே என் மனசுக்கு நெருக்கமான தோழிகள்ல இவளும் ஒருத்தி. மதுரா பொண்ணு எப்பவுமே சந்தோஷமா வாழனும்.” என்று நெகிழ்ச்சியாய் உரைத்தான் மருதன்.

அவனின் பதிலில் குழம்பிய மாறன்,  “என்னங்கய்யா இரண்டு பேரும் என்னைய குழப்பு குழப்புனு குழப்புறீங்க. நீங்க நேரடியாவே பதில் சொல்ல மாட்டீங்களா?” என்று மாறன் இருவரையும் முறைக்க,

நான் சொல்றேன் வெற்றிப்பா என்றாள் வாணி.

“சஹானா என் கூட இருந்த வரைக்கும் இவங்களோட இந்த ஃப்ரண்ட்ஷிப் லவ் பத்திலாம் எனக்கு தெரியாதுப்பா.  சஹானா போன பிறகு அவ இடத்துல வேற பொண்ணு வந்து தங்கிட்டு.  அந்த பொண்ணுகிட்டேயும் ரூம்மெட்ங்கிற அளவுல தான் பேச்சு.
சஹானா போன ஒரு வாரத்துல திடீர்னு ஒரு நாள் ஹவுஸ் ஓனர் ஹரி அங்கிள் என்னைய கூப்டு உன் ஃப்ரண்ட் உடம்பு சரியில்லாம இருக்கானே… நீ பார்க்குறது இல்லையானு கேட்டாரு”

“எனக்கு முதல்ல ஒன்னும் புரியலை. எனக்கு யாரு இங்க ஃப்ரண்டுனு தான் தோணுச்சு.  அப்புறம் தான் சஹானா இவன் கூட ஆபிஸ் போகும் போது நானும் கூட போவேன்ல… அதனால எனக்கும் இவன் ஃப்ரண்ட்டுனு இவர் நினைச்சிட்டாருனு புரிஞ்சுது. ஆனா இதெல்லாம் அவருக்கு விளக்குறத விட அவனுக்கு என்ன உடம்புக்குனு கேட்கனும்னு தான் தோணுச்சு”

“ஜூரத்துல நேத்து நைட் கிச்சன்ல மயக்கம் போட்டு விழுந்துட்டான்மா… ஃப்ரண்ட்ஸ்குள்ள சண்டைனா இப்படியா பார்க்காம பேசாம இருப்பீங்க. பக்கத்து ரூம் தானேனு அவரா ஏதேதோ கற்பனை செஞ்சிட்டு பேசிட்டே போனாரு. சரி அங்கிள் நான் பார்த்துக்கிறேனு போய் பார்த்தா செம்ம ஜூரத்துல அனத்திக்கிட்டே தூங்கிட்டு  இருந்தான்.  அவன் கூட தங்கயிருந்த பையன் அன்னிக்கு இந்தியா கிளம்புறதா இருந்தான் போல.  ஒன் மன்த் லீவ்ல போறேன்.  மருதனை பார்த்துக்க யார்கிட்ட சொல்றதுனு யோசிட்டே இருந்தேன். நல்லவேளை நீங்க வந்தீங்கனு பொறுப்பை என் கிட்ட ஒப்படைச்சிட்டு போய்ட்டான்.  அதுக்கப்புறம் தினமும் கஞ்சி காய்ச்சு கொடுத்து எப்படியோ அவன் உடம்பை தேத்தியாச்சு.  அந்த அனத்தல்ல தான் தெரிஞ்சிது இது லவ் ஃபெய்லியர்ல வந்த ஜூரம்னு” என்றாள் வாணி.

“இதுக்கு மேல நான் சொல்றேன் மாறன்” என்ற மருதன்,

“கண்டிப்பா அந்த அஞ்சு நாள் அவ என்னைய பார்த்துக்கிட்டதுல வாணிக்கிட்ட என்  அம்மாவ பார்த்தேன் மாறன். எனக்காக வர்க் ஃப்ரம் ஹோம் போட்டு மூனு வேளை வெளி சாப்பாடு வேணாம்னு சமைச்சு கொடுத்து,  தலைவலிக்கு தைலம் தேய்ச்சு…  நிறைய நேரம் அவ பராமரிப்புல கண் கலங்கி தூங்கியிருக்கேன் மாறன்.  அவளோட கேரிங்கல அப்பியரன்ஸ்லாம் மறஞ்சி போய்ட்டு. எப்படி இப்படி யோசிச்சோம்னு எனக்கே ரொம்ப அவமானமா ஃபீல் ஆயிட்டு.  இப்படி அப்பியரன்ஸ் வச்சி அழகு தான் பெரிசுனு நினைச்சு எத்தனை பேரை ஹர்ட் பண்ணேனோ… எத்தனை நல்ல உள்ளங்கள் என்னை விட்டு ஒதுங்கி போனாங்களோனு நினைச்சு மனசு ரொம்ப வலிக்க ஆரம்பிச்சிட்டு.

இப்படி ஒரு பொண்ணை ஒதுக்கிவச்சி பழகிட்டோமேனு என் மனசாட்சி என்னை குத்தாத நாளில்லை மாறன்.  அதுக்கெல்லாம் சேர்த்து வச்சி அவ இந்தியா போகுற வரை நல்லா பார்த்துக்கனும் அவளுக்கு நல்ல தோழனா இருக்கனும்னு முடிவு செஞ்சி அவ கூடவே ஆபிஸ் போய்,  எவ்ளோ லேட் ஆனாலும் அவ கூடவே இருந்து கிளம்பினு அவகிட்ட நிறைய பேசி பழகுற சந்தர்ப்பமும் கிடைச்சிது.  அதுல அவளை பத்தி அவளோட பெங்களுர் டேஸ் பத்தி நிறைய தெரிஞ்சிக்கிட்டேன்.  அந்த ஆஷிக் ப்ளேஸ் அவ ஃலைப் நான் பிடிச்சிடனுங்கிறது தான் என் ஃலைப் டைம் கோல்னுலாம் அவகிட்ட சொல்லிருக்கேன்” என்று சிரித்தவன்,

“ஆனா அவளை நான் எந்தளவுக்கு நெருங்கிய தோழியா உணர்ந்தேனோ, அந்தளவுக்கு அவ உணர்லனு சொன்னா…  அவளுக்கு நான் ஒரு நல்ல ஃப்ரண்ட் அவ்ளோ தான். இந்தியா வந்தப்ப அவ என்கிட்ட சொல்லிட்டு போன வார்த்தை இது. அதுக்கப்புறம் அவ மேரேஜ்க்கு தான் எனக்கு போன் பண்ணா” என்று மருதன் வருத்தமாய் கூற,

“அது என்ன ஃப்ரண்டுக்கும் க்ளோஸ் ஃப்ரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருந்திட போகுது” என்று மாறன் கேட்க,

“என்ன மாறன் சார்…  உங்க பொண்டாட்டிய பத்தி உங்களுக்கு தெரியாதா…” என்று சிரித்த மருதன்,

“மத்தவங்க கிட்ட இரண்டுத்துக்கும் வித்தியாசம் இருக்கோ இல்லையோ… மதுரா பொண்ணுகிட்ட உண்டு.  அவங்ககிட்ட இவ காமிக்குற அன்பு பார்த்து நான் பல முறை பொறாமைபட்டுறுக்கேன். எனக்கு இவ இப்படி ஒரு ஃப்ரண்டா வேணும்னுலாம் ஆசைபட்டுறுக்கேன்.  ஆசை ஆசையாவே போய்ட்டு” என்றான் மருதன்.

அவனின் வருத்தமான வார்த்தையில் கவலையுற்ற மாறன்,  “ஏன் மது அப்படி சொன்ன??”  என்று கேட்க,

“மருதன் எனக்கு கண்டிப்பா நல்ல ஃப்ரண்டுப்பா…  உங்களுக்கு தான் தெரியுமே நான் டக்குனு யாரையும் மனசுல எடுத்து வச்சிக்க மாட்டேனு. அதை தான் நான் சொன்னேன்.  அந்த அளவுக்கு க்ளோஸா இவன் நட்பை என் மனசு உணரலை. அதுக்காக  அவனை என்னிக்குமே நான் ஹர்ட் பண்றா மாதிரி நடந்துக்கலப்பா. அவன் என் மேல காமிக்குற அன்புக்கு ஏத்தது போல தான் நடந்துக்கிட்டேன்” என்றாள்  வாணி.

“இப்பவும் அப்படி தானா மதுரா பொண்ணு” என்று கேட்டான் மருதன்.

“எத்தனையோ பேர் பொண்ணுங்க கிட்ட காதலை வேண்டி தவம் கிடக்கிறாங்க. இவன் என்னடானா நட்பை வேண்டி நிக்கிறானே” என்று பூரிப்பாய் எண்ணியது மாறனின் மனது.

“ஆமா இந்த மதுரா பேரு எப்பலருந்து எங்கேயிருந்து வந்தது”  என்று மாறன் கேள்வியாய் கேட்க,

“ஹா ஹா ஹா அதுவா…  அது மருதன் மதுரா ரைமிங்கா இருக்குனு நான் தான் அப்படி கூப்பிடறேனு சொல்லி அப்படியே பழக்கிட்டேன்” என்றான் மருதன்.

“மதுரா பொண்ணோட முழு அன்பு கிடைச்சவங்க கிப்டட் மாறன்.  இதை நான் அவ பக்கத்துல இருந்து வாழும் போது உணர்ந்தது மாறன்.” என்று மருதன் பூரிப்பாய் கூற,

“அந்த அன்புனால அவ எவ்ளோ வச்சி செய்வானு தெரியாம பயபுள்ள உருகுதே” என்று மாறனின்  மைண்ட் வாய்ஸ் பேசினாலும்,

“அவளோட பொஸஸிவ்னஸ் சண்டைனு எல்லாத்தையுமே சமாளிக்கனும் தான். ஆனா அதுக்கும் அந்த அன்பு காமிச்சா போதும் அவளுக்கு.  அவ காமிக்கிற அதே அளவு அன்பை எக்ஸ்பெக்ட் செய்வா…  அது என்ன பெரிய குத்தமா”   என்று அவள் மீது பெருங்காதல் கொண்ட மாறனின் மனம் அவளுக்காக பரிந்து கொண்டு பேச,

தன் காதலை நினைத்து தானே நெகிழ்ந்துக் கொண்டான் மாறன்.

மதிய உணவு உண்டுவிட்டு  மருதன் கிளம்ப தயாராகி நிற்க, “நீங்க என்னிக்குமே நல்ல ஃப்ரண்டா மது மனசுல இருப்பீங்க மருதன்.  சீக்கிரமே மேரேஜ் இன்வைட்டோட எங்களை கூப்பிடுங்க. ஆல் த பெஸ்ட்” என்று வாழ்த்து கூறினான் மாறன்.

“அவர் சொன்னது தான் நானும் சொல்ல போறேன்.  உன்னைய பார்த்ததுல உன்கிட்ட பேசினதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்.  அதுவும் உன்னோட மெமரீஸ்ல நான் இன்னும் பசுமையா இருக்கேங்கிறதுல நிச்சயமா நீ என்னையவே ஸ்பெஷலா ஃபீல் செய்ய வச்சிட்ட மருதா.  பீ இன் டச்.  சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ” என்று வாசல் வரை சென்று விடைக்கொடுத்து வழியனுப்பினர் மருதனை.

வாசலிலிருந்து வீட்டிற்குள் நுழைந்த மதுவை கைகளில் ஏந்தியிருந்தான் மாறன்.

“என் மதுக்குட்டி என்னைய இன்னிக்கு ரொம்பவே பெருமையா ஃபீல் செய்ய வச்சிட்டு”  என பூரிப்பில் அவள் முகம் முழுவதும் முத்தமழை பொழிய,

“அய்யோ விடுங்க.  ஒன்னுமில்லாத விஷயத்துக்கு பூரிச்சு போய்இஇஇ…” என்று அவள் முடிக்குமுன் அவளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்திருந்தான் மாறன்.

— நர்மதா சுப்ரமணியம்