காற்று 18

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிட்ட அன்று நிழலியைக் கண்டவன், அதன் பின் அவளை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இன்று பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிட்டு இருந்தனர்.

காலையில் இருந்தே சாகரனின் குடும்பம் மொத்தமும்  பரபரப்பாகவே  இருந்தது. சாகரனும் தான். ஆனால் அவர்களது பரபரப்பு பொது தேர்வு  மதிப்பெண்களை எண்ணி இருக்க, இவனது பரபரப்போ  ‘அவள் இன்றாவது வருவாளா? ‘ என்று தான் இருந்தது.

சங்கரன், ஊருக்கு வெளியே, பிரவுசிங் சென்டரில் சாகரனின் மதிப்பெண்ணைக் காணச் சென்றான். சாகரன்,  அவனுடன் செல்ல வில்லை, தந்தையோடு, அவருக்கு உதவச் சென்றான்.

‘அவள் காலையில் வந்து விட்டால் பார்க்க முடியாமல் போய்விடும் ‘ என்று இன்னொரு பக்கமும் யோசித்தவன் வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவு தடுத்தும் அவரோடு சென்றான்.

தந்தையுடன் இருந்தாலும் வாசலை பார்த்த வண்ணம் தான் நின்றான். கவனம் அங்கே இருந்தாலும் வரதராஜனுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து கொண்டு தான் இருந்தான்.

அவரும் அவனது செயலைக் கண்டு, அவனை எதுவும் சொல்ல வில்லை மதிப்பெண்களை  எண்ணி தான் அவனுக்கு இந்த எதிர்பார்ப்பு, பரபரப்பு என்று நினைத்து கொண்டார். ஆனால் அவன்  எதிர்பார்ப்பதோ மனதில்  இருக்கும் பெண்ணை என்று அவரறியவில்லை

சங்கரனும் மதிப்பெண்களை பார்த்து வந்து விட்டான். ஆயிரத்து நூற்று   தொண்ணுறுக்கு மேலே வாங்கி பள்ளியில் முதல் இடத்தை பிடித்திருந்தான் சாகரன்.

சாகரனை தேடி வந்த சங்கரன், அவனை கட்டிப்பிடித்து முத்தம் வைத்தான்.  வரதராஜனிடம் மதிப்பெண்ணை சொல்ல , மகனை எண்ணி பெருமைப்பட்டவர், மற்றவர்களிடம் சொல்லி சந்தோஷப்பட்டார். அவனை அழைத்துக்  கொண்டு பள்ளிக்கு விரைந்தான் சங்கரன். ஆனால் சாகரனோ கடைசி வரை ‘அவள் வருக்கிறாளா ?’ என்று பார்த்துக் கொண்டே அவன் பின்  சென்றான்.

பள்ளியில், அவனுக்கு வாழ்த்து சொல்லி  இனிப்புகளை வழங்கினார்  தலைமை ஆசிரியர். பின் ஆசிரியர்களும் மாணவர்களும் அவனை வாழ்த்தினர்.

எல்லாரிடமும் நன்றியை சொல்லிவிட்டு வீட்டுக்கு  வந்தான். வெளியே சிரித்த படி உள்ளே அவளை எண்ணி வருந்திய படியே இருந்தான்.
இருந்தும்,’ மாலையில் வரலாம்’ என்ற நம்பிக்கையோடு காத்திருந்தான்.

வீட்டில் தடபுடலாக விருந்தை போல சாகரனுக்காக சமைத்திருக்க, ஆனால் அவனோ மனமில்லாமல் உணவை கொறித்து விட்டு எழுந்தான். மத்தியான வேளையில் சிறிது நேரம் அனைவரும் கண்ணசைக்க, இவனுக்கு தான் உறக்கம் தூரமானது.

‘சாய்ந்தரமாவது வருவாளா?’ தன் மனதிடம் கேட்க, அதுவோ கேலியாக சிரித்தது, ” ஏன் சிரிக்கற?” எனக் கேட்டு சலிப்புற்றான்.

“இல்ல அவா வந்தால் மட்டும் என்ன செஞ்சிட போற நீ? தூண் கிட்ட நின்னு மறைஞ்சு அவா போற  வரைக்கும் பார்ப்ப. அப்றம் அவா போயிடுவா ! நீயும் பெரு மூச்ச இழுத்து விட்டுண்டு அடுத்த சனிக்கிழமைக்காக காத்திண்டு இருப்ப ! வேற என்ன செய்வ? இதுக்கு பருத்தி மூட்டை குடனோன்லே இருந்துட்டு போகட்டுமே !” எனக் கேலி செய்ய,

“செத்த அடங்கறீயா,  விட்டா பேசிண்டே போறீயே நீ ! நானும் அவகிட்ட பேசலாம் நினைப்பேன், ஆனால் சட்டுனு பயம் வந்து தொலைக்குது, நேக்கு என்ன பண்றதுனே தெரியல” என அப்பாவியாய் உதட்டை பிதுக்க, “ஆங்… இன்னைக்கு வந்தால் மட்டும் என்ன செய்ய போற? இப்படியே பயந்துட்டு நிக்க தான போற? அதுக்கு எதுக்கு நீ அவாளை எதிர்பார்க்கற?”

“இல்ல இந்த முறை, அவா வந்தால், விட போறதில்ல, எப்படியாவது பேசி அவாளோட நட்பாயிடனும், கண்டிப்பா இந்த முறை வந்தால் மிஸ் பண்ண மாட்டேன்” என்று உறுதியாக சொல்லிக்கொண்டான். அவன் மனமும் ‘பார்ப்போம்’ என்றது. ஆனால் அவள் தான் வரபோறதில்லை என்று இருவரிடமும் எப்படி சொல்ல?”

இங்கோ மத்தியான நேரம் குடும்பத்தோடு  ஹோட்டலுக்கு  சென்று அங்கே உணவரிந்து விட்டு இல்லம் திரும்பி இருந்தனர்.

“அப்றம் நிழலி மா, அடுத்து என்ன படிக்கலாம் இருக்க?” எனக் கிருஷ்ணன் கேட்க, ” மாமா , நான் லாயருக்கு படிக்கலாம் இருக்கேன்.அதுவும் சிவில் லாயராக போறேன் ” என்றாள்.

“என்னடி வாழ்க்கை முழுக்க கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்ற நினைப்பா உனக்கு ! நீ வக்கிலுக்கு  எல்லாம் படிக்க வேணாம், பி.எஸ் .சி இல்ல பி .ஏ எடுத்து படி போதும்” எனவும் நிழலிக்கு கோபம் சுர்ரென்று வந்தது

“நான் கஷ்டப்பட்டு தௌஷண்ட்  ஹண்ட்ரட் எயிட்டி எடுத்தது வெறும் பி.ஏ பி.எஸ்.சி படிக்க வா ! முடியாது எனக்கு கல்யாணம் ஆகிலேன்னாலும் பரவாயில்ல நான் லாயருக்கு தான் படிப்பேன்” விடாப்பிடியாக நின்றாள்.

“அதான என்னைக்கு தான் நீ என் பேச்சை கேட்டிருக்க? எல்லாமே உன் இஷ்டம் தான இங்க ! இது  உன்னை எந்தளவுக்கு விட போதுன்னு தெரியல ! அம்மா சொன்னால் கேளு, பொம்பள பிள்ளைக்கு  இந்த வக்கீல் படிப்பெல்லாம் செட்டாகாது.  சட்டம் பேசற பொண்ணை எவன் கட்டிப்பான்? மருமகளா யாரு  ஏத்துப்பா ? ஒழுங்கா நான் சொல்ற படிப்ப படி போதும் !” என்றிட, அவர் தாயென்பதால் விட்டு வைத்திருக்கிறாள், இல்லை வேறொருவர் என்றால் கிழித்து தொங்க விட்டிருப்பாள். இப்பவும் மூக்கு  முட்ட  கோவம் அவளுக்கு வருகிறது தான். ஆனால் அன்னை என்பதால் அடக்கி வைத்திருக்கிறாள்.

“அக்கா என்ன பேசற நீ? பொண்ணுங்க இந்த படிப்பை தான் படிக்கணும் ரூல்ஸ் எதுவும் இங்க இல்லை. இன்னும் அந்தக் காலத்து கிழவி மாதிரி பேசாம இந்தக் காலத்து அம்மா மாதிரி பேசு ! பொண்ணுங்க படிக்க அனுப்பறது எதுக்கு? பேருக்கு பின்னால்  டிகிரி போட்டுக்கவா, இல்ல, அவங்களுக்கு தன்னம்பிக்கையும்  தைரியத்தையும் வரவழைக்க தான். சுயமா யோசித்து யாரையும் எந்தக் காலத்திலும்
சார்ந்து  இருக்க கூடாதுனு தான். ஆனால் நீங்க, அவங்க வெறும் டிகிரிக்காக படிக்க வச்சிட்டு இன்னும் அந்தக் காலம் மாதிரி குடும்பம்  குட்டினு கதியேன் வாழனும் நினைக்கறீங்க ! அடுப்படி ஞானமும் கட்டிலறை ஞானமும் மட்டும் தெரிஞ்சு கிட்டு புருசனை சந்தோஷ படுத்தினா போதுன்ற மெண்டலிட்டில இருந்து முதல்ல வெளிய வா நீ ! அவ என்ன படிக்க ஆசைப்படுறாளோ அதை படிக்க வைக்க நான் இருக்கேன் மாமா இருக்கார் படிக்க வைப்போம் அந்த விஷயத்தில யாரும் தலையிட  கூடாது” என்று தன் வீட்டு பெண்களைப் பார்த்து கூறினார்.

“சரியா சொன்ன கிருஷ்ணா, என்ன சொல்லு உன் அக்கா புத்தி மாறவே மாட்டிகிது ! இனி இப்படி பேசுனா நீயே  உன் வீட்டுல கொண்டு வச்சுக்கோ ! ” என பானுமதியை பார்த்து நக்கலாக மொழிந்தவர் மகளை அணைத்து,

” பி.எல் படிக்கணும்மா அதுக்கு  முன்னாடி ஒரு டிகிரி முடிக்கணும் டா மா !அது தான் டா நல்லது.  முதல்ல ஒரு டிகிரி முடி அப்றம் உன்னை அப்பா பி.எல் சேர்த்து விடுறேன். முதல் என்ன படிக்கலாம் இருக்க?”எனவும் யோசிக்க, “அப்போ பி.ஈ படிக்கறேன் பா” என்றாள். பானுமதி ஏதோ வாயை திறக்க, அவளை அடக்கினாள் வெண்மதி.
“சும்மா இருக்கா, மாமா எதாவது சொல்லிட போறாரு !” எனவும் சலித்து கொண்டு வாயை மூடிக் கொண்டார்.

அங்கே பெண்கள் பேச்சு எடுபட வில்லை. கிருஷ்ணன் ,  வினோதன் , நிழலியின் பேச்சு மட்டும்தான் .

மாலையும் வர, வேக வேகமாக  வரத ராஜனுக்கு முன்பே கிளம்பி நின்றான் சாகரன்.  இருவரும்  கோயிலுக்கு சென்றனர்.

இருவரும் கடவுளை அலங்கரித்தனர். பக்தர்களும் வர தனது வேலையை செவ்வனே செய்தாலும் கண்கள் வாசலை தான் தழுவிச் சென்றன. வெகு நேரம் எதிர்பார்த்து ஏமாந்து தான் போனான் கதவை சாத்தும் வரை.

மனம் எதிர்பாராத சோர்வை கொண்டிருக்க, வீட்டுக்கு வந்தவன் இரவு உணவை தவிர்த்து விட்டு அறைக்குள் அடைந்தான். அவளது நகலை எடுத்து பார்த்து முத்தமிட்டவன், அம்பக நீரை விட, ‘என்னை ஏமாத்திட்டேல ! என்கிட்ட ஏன் அந்தக் கேள்வி கேட்ட?  நான் நானா தான இருந்தேன் . ஏன்  என் கண்ணுல பட்ட, இப்போ ஏன் ஓடி ஒழியிற? என்ன வேணும் உனக்கு ஏன் என்னை படுத்தற?  கண்ணுக்கு முன்னாடி வராம ஏன் விளையாடுற? அந்தப் பெருமாளுக்கும் உனக்கு  எந்த வித்தயாசமும் இல்ல ! அவா கஷ்டம் மட்டுமே குடுப்பா !  உன்ன போல !” என்றவன் நெஞ்சோடு அணைத்து கொண்டு கண்ணீரோடு கரைந்தான்.

அடுத்து வந்த நாட்கள் எல்லாம் கல்லூரியில் சேரவே பரபரப்பாக சென்றன.கவுன்சிலிங்க் மூலம் இருவரும் ஒரே கல்லூரியை தான் தேர்ந்தெடுத்திருந்தனர் அதுவும் ஒரே குரூப் தான் ஆனால் இருவரும் ஒருவரை  ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. சீட்டும் கிடைக்க, கல்லூரியில்  வரதராஜனோடு வந்து பணத்தை கட்டி சேர்ந்து கொண்டான்.

நிழலியும் வினோதனுடன் வந்து பணத்தை கட்டிவிட்டிச் சென்றாள்., மதுரையில் இருவருக்கும் சீட்டு கிடைத்ததை எண்ணி இருகுடும்பமும் நிம்மதியுற்றன.

கல்லூரியும் தொடங்கிட, முதலில்  தன் தந்தையின் காலில் விழுந்து வணங்கியவன் கண்ணம்மாவின் காலிலும் விழுந்து வணங்கி ஆசிப் பெற்று கல்லூரிக்கு சென்றான்.

வினோதனுடன் கல்லூரியில் வந்து  இறங்கியவள், தந்தையை அணைத்து விட்டு,  கல்லூரி வளாகத்தில் நடந்து வந்தாள்.

சாகரன், சிவல் பிளாக்கை கண்டுபிடித்து  முன்னே செல்ல அவளும் பிளாக்கை கண்டு பிடித்து பின்னே சென்றாள்.

“நம்ம டிப்பார்மெண்ட்டிலையும் கேர்ள்ஸ் இருப்பாங்க தான டா.  மெக்கானிக் டிப்பார்மெண்ட்ல சீனியர்ஸ் கூட  கேர்ள்ஸ் இல்லையாம். நமக்கும் அப்படி எதுவும் ஆகுமாடா !” ராக்கேஷ்  வருத்தத்தோடு கேட்க,

“ஆமாம்டா எனக்கும் அதே கவலை தான். ஸ்கூல் வரைக்கும் கேர்ள்ஸ் கூட படிச்சிட்டு வந்த நமக்கு இப்போ பாயிஸோட படிக்கனும்ன்னா உவப்பா இருக்குமே டா ! எதுவும்  காத்து கருப்பு அண்டிருச்சுன்னா?  எனக்கெல்லாம் பசங்களோட மட்டும் படிச்சா  சேராதுப்பா நானெல்லாம் வேற டிப்பார்மெண்ட்  போயிடுவேன் ” என சீரியஸ்ஸாக பேசி நகைத்து கொண்டிருந்தான் அனிருத்.

“டேய் நம்ம கிளாஸ் பொண்ணுங்களும் படிப்பாங்க டா ! ஏன் நம்ம நிழலியும் சீவில் தான டா ! அப்புறம் என்ன?”என ஆதர்ஷன் கேட்க, ” ங்க ” என இருவர்களுடன் மேலும் உடனிருந்த மாணவர்கள் விழிக்க,

“என்னடா ?” அவர்களை பார்த்து கேட்டான் ஆதர்ஷன்.

“ஐய்ய ! நீ வேணா அவள பொண்ணுன்னு சொல்லிக்க, எங்களுக்கு எல்லாம் அவ ஆம்பள தான்” என அனி கூற, ஆதர்ஷன் சிரித்து விட்டான் .

“என்னைக்கு டா அவ பொண்ணா நடந்திருக்கா சொல்லு. அடிக்கறதும் உதைக்கறதும் கடிக்கறதுமா இருந்தா என்னத்த சொல்ல ! இன்னைக்கு வந்து யார காவு வாங்க போறாளோ !” எனப் புல்மபினான் ராக்கேஷ்.

“அவளை புகழ்ந்தது போதும்  மச்சி ரொம்ப போராடிக்குது ஏதாவது இன்டெர்ஸ்டா பண்ணுவோம் டா”

“அப்ப வா ராக் பண்ணுவோம். நமக்கு அதை விட்டா, என்ன தெரியும் சொல்லு? நம்ம கிளாஸ் முன்னாடி உட்கார்ந்து ஃபர்ஸ்ட் இயர் கிளாஸ் குள்ள நுழையற பொண்ணையும் பையனையும் கூப்ட்டு  கலாய் போப்போம் டா வா! ” அனி அவர்களை  வெளியே அழைத்தவன் வகுப்பறைக்கு வெளியே கிடந்த கதிரையில் அமர்ந்து பேசிய படியே வரும் முதலாமாண்டு மாணவர்களை  சீனியர்ஸ் போலவே கலாய்ந்தனர்.

முதல் இரண்டு பேரை கலாய்த்து அனுப்ப,  மூன்றாவதாக சாகரன் வந்தான். ” மச்சி, சோக்கா மாட்டிருக்கு டா ! நாலு வருஷத்துக்கான என்டர்டைனர் அதோ வரான் பாருடா !” என சாகரனை காட்டினான் அனி.

பின்னே குடும்பியிட்டு, முன்னே நெற்றியில் நாமமிட்டு  சாத்ஸாத் அந்நியன் பட  அம்பி, விக்ரமை  போலவே வந்தான். சங்கரன் எவ்வளவு சொல்லியும் குடும்பியை வெட்டாது அப்படியே கல்லூரிக்கு வந்தான்.
முதல்வர் அவனிடம், “இந்தக் குடும்பியோட தான் வருவீயா தம்பி?”எனக் கேட்க, ” எஸ் சார்” என்றான் தைரியமாக.

“இந்தா அம்பி சத்த வரேளா?” அனி அழைக்க, தன்னை தான் அழைக்கிறார்கள் என்றரிந்தவன் பயத்தில் எச்சில விழுங்கிய படி அருகே சென்றான்.

“சொல்லுங்கோ” என்றான்.

அவனை மேலிருந்து ஆராய்ந்தவன், “டேய் பார்க்க நெய் குழந்தை போல  இருக்கானே , இந்த அமுல் பேபி பின்னாடி பொண்ணுங்க சுத்தும் நினைக்கற ?” என அனி,  ராகேஷ் காதில் கிசுகிசுக்க, ” இருக்கலாம் டா  முதல் அம்பியா வருவானுங்க , அப்றம்  ரெமோவ போல ஸ்டைலா மாறிடுவானுங்க. ஆனா நாம, பிரகாஷ்ராஜ் மாதிரி ‘ பின்றீயே டா ‘ கமெண்ட்ஸ் குடுக்கனும். எதற்கும் இவன் கிட்ட இருந்தது கொஞ்சம் கேர்ஃபுல் இருக்கணும் காய்ஸ்”என்றான் தீவிரமாக,

“ஆமா, நீ அம்பியா, இல்ல மாமியா , இல்ல ரெண்டுங்கெட்டானா?” என அனி கேட்க, அவனுக்கு புரியல, ”  நேக்கு நீங்க கேக்கறது புரியல?” என்றான்.

“நீ ஆணா? இல்ல பொண்ணா ?இல்ல ரெண்டும் சேர்ந்ததானு கேக்குறேன் இப்போ புரியறதா?” என அவன் விளக்க,

“பெருமாளே !” வாயில் கைவைத்து நிக்க, கேட்டவனின் கன்னம் அங்கே பழுத்து காந்தியது.

“ஸ்ஸ் ஆஆஆ” என முணங்கிய படி திரும்பி பார்க்க,  சத்தம் கேட்டு அனைவரும் திரும்பி பார்த்தனர்.
அங்கே சின்ன விழிகளில் சீறி பாயும்சீற்றத்தோடு நின்றாள் நிழலி.

“ஏன்  ஆணா இருந்தா கூட்டாளியாக்க போறீயா பொண்ணா இருந்தா லவ் பண்ண போறீயா? இல்ல **********” என கேட்க அவர்கள் காதை பொத்த சாகரனோ அவனை கண்ட நொடியே உடல் ஸ்தம்பித்து  உணர்வுகள் ஸ்தம்பித்து அருங்காட்சியத்தில் வைக்க பட்ட  மெழுகு சிலைப் போல நின்றான்.

“நீ கிண்டல் பண்ணது இவனன்றனால இந்த அடியோட போறேன். இந்த இடத்தில பொண்ணுங்க இருந்துச்சு மவனே ! நீ காலி தான். ஒழுக்கமா நடந்துக்க !” என மிரட்டி விட்டு, ” வா”  என சாகரனை பார்த்து அழைத்து விட்டு முன்னே போக, மந்திரம்  போட்டது போல பின்னே சென்றான்.

‘வா’ என்ற சொல்லை தவிர, மத்த சொற்கள் எல்லாம் செவி உள்ளே அனுமதிக்கவில்லை. இரண்டு வருடங்களாக இந்த தரிசனத்திற்காக தானே தனியாக புலம்பி, அழுது,  திட்டி  என்னென்னமோ செய்தான்.
இன்று தன் தேவதையே கண்டதும் இல்லாமல் அவள் அழைப்பிற்கு அவள்  பின்னே செல்வதலாம் நடந்து கொண்டே ‘கனவெதும் காண்கிறேனோ ‘ என்று எண்ணி இருப்பான். யார் கண்டா?

‘ பெருமாளே ! இந்த சப்ரைஸை  எதிர்பார்க்கவே இல்ல ரொம்ப நன்றி !’ தனக்குள்ள நன்றியை நவில, ‘ நேக்கு சேர் வேண்டிய நெய்விளக்க ஏத்திடுறா அம்பி !’ என்று அவன் முன் பெருமாளும் தோன்றி மறைய,  சிறு புன்னகையோடு அவளுடன் நடக்க, அவர்கள் இருவரையும் ஆதர்ஷின் கண்கள் எரித்து விடுவது போல பார்த்தன.

“ம்ம்… அவங்க கிண்டல் பண்ணா, இப்படியா நிக்கறது ? தைரியமா எதிர்த்து பேச வேணாமா? என்ன மனுஷன்  நீ !” என கடிந்திட,

“பேசிக்காவே, நான் கொஞ்சம் சை டைப். பயந்த சுபாவம் உள்ளவன். அவா அப்படி கேட்டதும்  நேக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியல” என அவன் தலைகுனிய

“இட்ஸ் ஒகே , இனி இது போல,  நாய் வாயில  எல்லாம் விழ வேண்டியது இருக்கும். ஸோ இதே ரீசனை  சொல்லாம சேஞ்சு யூர் செல்ஃப் மேன்” என்றவள் ” ஐயம் நிழலி !” என தன்னை அறிமுகம் செய்து  கையை நீட்ட, அதனை அதிசயம் போல கண்டு நின்றான்.

“ஹலோ, கைக்கூட குடுக்க கூடாதா? ” எனக் கேட்டதெல்லாம் காதில் விழவில்லை, அவன் கவனம்  நீட்டிய கையிலே இருக்க, ” யோவ் ஐயங்கார் ! ” எனவும் சட்டென நினைவு வந்தவன், “என்ன சொன்னேள்?” என்றான்.

” யோவ் ஐயங்கார்னு  சொன்னேன். என்ன ஆச்சு உனக்கு? கை நீட்டி எவ்வளவு நேரமாகுது கனவு கண்டுட்டு இருக்க “

“ஓ சாரி ஐ யம் சாகரன் ” என்றான்.

“உன்னை எங்கயோ பார்த்து போல இருக்கு பட் வெர்  தான் தெரியல?” என்று உதட்டை பிதுக்க, ‘ஓ தெரியாமலே தான்  வந்து பேசறீயா ? இனி கொஞ்சம் கொஞ்சமா, உனக்கு நியாபகப் படுத்திடுறேன்’ என்றெண்ணி கொண்டவன் சிரிப்பை பதிலாய் அளிக்க, அதில் லயித்து போனவள், ” நீ ரொம்ப அழகா சிரிக்கற? பார்க்க பால்கோவா போல இருக்க” என கன்னத்தை கிள்ள,

“ஸ்ஸ்ஸ்ஸா ஆஆஆ” என்றவன் பின்னே நகர்ந்து அவளை முறைக்க சிரித்துவிட்டாள். இருவரும் பேசிய படியே வகுப்பறைக்குள் நுழைந்தனர். பின் அனைவரும் வர முதல் நாள் என்பதால் பாடம் எடுக்க வில்லை அறிமுகப்படலமே நடந்தது. அவரவர் தங்களை பற்றி கூறிச் சென்றனர்.

அடுத்தடுத்து ஆசிரியர்கள் வந்து பேசி விட்டு செல்ல, நேரம் சென்று  உணவு இடைவேளை வர, தனியாக சாப்பிட சென்ற சாகரனுக்கு  துணையாக சாப்பிட அமர்ந்து கண்ணம்மாவின்  கைப்பக்குவத்தை ருசித்தவள் என்ன  நினைத்தாளோ சட்டென அவனிடம், ” என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா  ஐயன்கார்?” எனக் கேட்டு புரையேற செய்தாள் நிழலி.

காற்று வீசும்