உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 21

“அழறியா அம்ஸ்?” என்றவன் கேட்க,

“இல்ல இல்ல இளா” என்றவள் கூறினாலும் அவளின் குரல் அவனுக்கு காட்டிக்கொடுக்க,

அவளை சரி செய்ய எண்ணியவன்,
“பொய் சொல்லாத. அழுதுட்டு தானே இருக்க. உன் குரலே காட்டிக்கொடுக்குதே. எப்படி உன் புருஷன் இங்கிருந்தே அங்க நீ என்ன செய்றேனு சொன்னேன் பாரு. அதுக்கெல்லாம் தனி திறமை வேணும். அது என் மக்கு பொண்டாட்டிக்கிட்ட கொஞ்சம் கூட இல்லையே” என்று அவளை அவன் சீண்ட,

கண்களை துடைத்துக் கொண்டவள், அவனின் மக்கு என்ற வார்த்தையில் சிலிர்த்துக் கொண்டு, “யார்டா யாரடா மக்கு சொன்ன. நீ தான்டா மக்கு கோவக்காய்” என்றவள் கூறியதும் தன்னை மறந்து சிரித்தான்.

அவனின் சிரிப்பில் இணைந்துக் கொண்டு இவளும் சிரிக்க, “ஃபீல் செய்யாத அம்ஸ். ஒரு மாசம் தான். சட்டுனு போய்டும்” என்றான் இளா.

“உன்னை எப்படா நேர்ல பார்ப்போம்னு இருக்குடா இளா. இங்க ஒவ்வொரு நிமிஷமும் உன்னை மிஸ் செய்றேன்டா” என கவலைக்குரலில் அவள் கூறும் போதே விழிகளில் மீண்டும் நீர் கோர்க்க,

“இதுவரை நீ எனக்கு எத்தனை மிஸ் யூ அனுப்பிருக்க தெரியுமா அம்முகுட்டி?” என இளா கேட்க,

தன்னை சிறிது தேற்றிக்கொண்டு குரலை சீர்செய்தவள், “தெரியலை இளா” என்றாள்.

“எழுபத்தி இரண்டு” என்றான் இளா.

“ஹே இதுக்கெல்லாம் கவுண்ட் வச்சிருக்கியா இளா” என ஆச்சரியமாய் அவள் கேட்க,

“எப்பலாம் நீ எனக்கு மிஸ் யூ அனுப்புவ சொல்லு?” என்றவன் கேட்க,

“மோஸ்ட்லி என் மனசு நீ பக்கத்துல இல்லையேனு ஃபீல் செய்ற நேரம். உன் நினைவு என்னை வலிக்க செய்யும் ரசிக்கசெய்யும் நேரம் எல்லாம் அனுப்பிருக்கேன்டா” என்றவள் கூற,

“அது தான் எனக்கு பொக்கிஷ நிமிடங்கள் அம்முகுட்டி. லவ் யூவை விட உன்னோட ஒவ்வொரு மிஸ் யூலையும் உன் காதலை உணர்ந்தேன் அம்ஸ். அதான் சேவ் செஞ்சி வச்சேன்” என்றவன் மனம் நெகிழப் பேச,

“லவ் யூ இளா” என்றாளவள்.

“லவ் யூடி செல்லம்” என்றானவன்.

மீண்டும் கண்ணீர் அவள் விழிகளை நிறைக்க, “போடா உன்னால வர வர ரொம்ப அழுமூஞ்சி ஆயிட்டேன். உன்னை நினைச்சாலே கண்ல தண்ணீர் வருது. இடம் பொருள் பார்க்காம அழுதுடுறேன். என்னை என்னடா செஞ்ச” என்றவள் கவலையுடன் புலம்ப,

“என் அம்முகுட்டி கண்ணீர் கடல்ல நீந்தி காதல் கரையை அடைய போராடிட்டு இருக்கா” என்றவன் கூறி முடித்ததும்,

“ஹே அம்மு இது தான் லவ் பண்ணா கவிதையா கொட்டும்னு சொல்றதா?” என ஆச்சரியமாய் தான் கூறிய கவி வரிகளை எண்ணிக் கொண்டே பேசியவன்,

“அச்சோ அம்ஸ் அந்த வரியை மறந்துட்டேனே, என்ன சொன்னேன்? என்ன சொன்னேன்? காதல் கடல் கண்ணீர் கரையாஆஆஆஆ… அய்யோ வரமாட்டேங்குதே வரமாட்டேங்குதே” என்றவன் தான் கூறிய கவிதையை திரும்ப கூற எண்ணி நினைவில் மீட்க முடியாமல் போராடிக்கொண்டிருக்க,
அங்கு அவன் செய்யும் அசைவுகளை எண்ணி இங்கே சிரித்துக் கொண்டிருந்தவள்,

“அச்சோ வரமாட்டேங்குதே வரமாட்டேங்குதேனு சொல்லி குழந்தை மாதிரி காலை உதச்சிட்டு தானே இருக்க அங்க?” என்றவள் சிரிப்பாய் கேட்க,
அங்கு சட்டென தன் காலை உதைப்பதை நிறுத்தியவன், “என் பொண்டாட்டி மக்கில்லை. அறிவாளினு நிரூப்பிக்கிறடா” என்றான் மெச்சுதலுடன்.

“சொல்ல மறந்துட்டேன் இளா. நாளைக்கு டீம் அவுட்டிங்காக எல்லாரும் குதிரைமுக் போகலாம்னு ப்ளான் பண்ணிருக்காங்க. நானும் வாணியும் போகலாம்னு இருக்கோம். நீ என்ன சொல்ற?” என்றவள் கேட்டதும்,

“ஹ்ம்ம் கண்டிப்பா போய்ட்டு வாடா. இப்ப உனக்கு இருக்க மனநிலைக்கு இது ரொம்ப தேவை தான். நல்லா என்ஜாய் பண்ணிட்டு வா” என்றானவன்.

பின் சிறிது நேரம் பேசிவிட்டு ஃபோனை வைத்தனர் இருவரும்.

காலை ஷிப்டிற்கு அலுவலகம் சென்று மாலை வீடு வந்த வேணியும் வாணியும் மறுநாள் தாங்கள் செல்லவிருக்கும் சுற்றுலா பயணத்திற்கு தேவையான உடைமைகளை அவரவர் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தனர்.

வேணியின் மனதில் இளாவை பற்றிய நினைவு சிறிது ஒதுங்கியிருந்தது இந்த சுற்றுலா பயணம் பற்றிய எண்ணங்களில்.

அன்றிரவு முகப்பறையிலேயே வாணியும் வேணியும் அன்றைய நிகழ்வுகளை பேசிக் கொண்டே தரையில் படுத்திருந்தினர்.

பேசிக்கொண்டிருந்த சிறிது நேரத்துலேயே வாணி உறங்கிவிட, வேணி இளாவை பற்றிய நினைவில் மூழ்கிப் போனாள்.

அவன் வெளிநாடு சென்ற நாளிலிருந்து இரவு தூக்கம் வராமல் புரளும் சமயம் இளாவுடனான இத்தனை மாத வாழ்வின் நிகழ்வுகளை எண்ணிக்கொண்டே அவனின் நினைவிலேயே உறங்கிப்போவாள்.

இன்றும் அவ்வாறு அவளின் மூளையின் இடுக்கில் பதிந்திருந்த அந்நிகழ்வு அவள் மனதில் உலாவரத் தொடங்கியது.

அவர்கள் திருமணம் முடிந்து இரண்டு மாதகாலம் முடிந்திருந்த நாட்களது.

அன்று வந்த வாரயிறுதி நாளில் இளாவின் ஊருக்கு சென்றிருந்தனர் இளாவும் வேணியும்.

இவ்வாறு வரும் நாட்களில் தன் மாமியாரிடம் சமையல் கற்றுக்கொள்வாள் வேணி.

இளாவின் தாய் தந்தைக்கு, திருமணத்திற்கு முன்பே வேணி நன்கு பரிச்சயம் என்பதால் அவளுடன் நல்ல உறவு நிலையில் பழகினர் இருவரும்.

அன்று அந்த வாரயிறுதி நாளில் வேணி மிளகு சிக்கன் செய்கிறேனென சமயலறையை ரணக்களப்படுத்தி ஒரு கை பார்த்து அவள் மதிய உணவை  செய்து முடித்த சமயம் வந்திருந்தார் அவளின் மாமனாரின் தூரத்து உறவுமுறையில் உள்ள தங்கை(அதாவது இளாவின் அத்தை) அவர்களின் வீட்டிற்கு.

இளா வேணி திருமணத்தின் போது அவர் தன் மகனுடன் ஆஸ்திரேலியாவில் இருந்ததாலும் திடீரென்று இளாவின் திருமணம் நிச்சயமானதால் அவரால் அத்திருமணத்தில் கலந்துக்கொள்ள இயலவில்லை. ஆகையால் அங்கிருந்து வந்ததும் இளா வேணியை காண அவ்வாரயிறுதி நாளில் வந்திருந்தாரவர்.

ஆனால் அவர் ஏன் வந்தாரென தான் எண்ணினர் அனைவரும் வேணியை தவிற. ஏனென்றால் வேணியை தவிர மற்றைய அனைவருக்கும் குத்தி காயப்படுத்தி பேசும் அவரின் பேச்சின் வன்மை நன்றாக தெரியுமே. ஆக விருப்பமின்றியே வரவேற்றனர் அவரை.

மதிய உணவு வேளையில் அனைவரும் ஒன்றாய் உண்ணுவதற்கு அமர, வேணியும் இளாவின் அம்மாவும் பரிமாறினர் அனைவருக்கும்.

வேணி தற்சமயம் ஒரு மாதமாக தான் சமையல் செய்ய பழகுவதால் உணவு மிகவும் ருசியாக இல்லாவிட்டாலும் உண்ணுவது போல் தான் சமைப்பாளவள்.

ஆனால் அதை குறையாக எண்ணியதில்லை இளாவின் வீட்டில்.
உணவை ஒரு வாய் எடுத்து வைத்த அந்த அத்தை, “என்னண்ணா இப்படி சமச்சி போட தான் இந்த பொண்ணை அவசர அவசரமா நம்ம இளங்கோக்கு கட்டி வச்சியா??” எனக் காட்டமாய் கேட்க,
வேணியின் முகம் வாடிப்போனது.

“சாப்பாட்டுக்கு என்னம்மா? நல்லா தானே இருக்கு” என்றார் இளாவின் தந்தை முத்து.
“என்ன நல்லா இருக்கு. உப்பு இல்லை உரப்பு இல்ல. நம்ம இளா அதான் கல்யாணம் ஆகியும் இப்படி தேஞ்சிக்கிட்டே போறானா?? இந்த மருமகளுக்காக தான் நீ சொந்தம் வரலனாலும் பரவாயில்லைனு எல்லாரையும் பகைச்சிக்கிட்டு கல்யாணம் செஞ்சி வச்சியா??” என்று எகத்தாளமாய் அவர் பேச,

வேணி தன் இதழை கடித்து அழுகையை அடக்கிக்கொண்டிருந்தாள்.

கோபம் தலைக்கு ஏற இளா ஏதோ சொல்ல வாயைத் திறக்க, இளாவின் தந்தை முத்து அருகிலிருந்த இளாவை கையமர்த்தி கண்கள் காண்பித்து அமைதியாய் இருக்கக் கூறினாரவர்.

வேணியின் முக வாடலில் இளாவின் மனம் சுணங்கிப் போனது.

“என் மருமகளை குறை சொல்றதா இருந்தா இங்க யாரும் வர வேண்டாமென” உரைத்துவிட்டாரவர்.

அதில் கோபம் கொண்ட அந்த அத்தை, “உங்களுக்கு எங்களை விட நேத்து வந்தவ பெரிசா போய்ட்டாளா?? மருமகளா வந்த உடனே குடும்பத்தை பிரிச்சிட்டல. நல்லாயிருடியம்மா நல்லாயிரு” என்றுரைத்துவிட்டு பாதி உணவிலேயே கிளம்பிச் சென்றுவிட்டார்.

அனைவரும் பாதி உணவிலேயே எழுந்து விட்டனர். போனவரை எவரும் தடுக்கவும் இல்லை.

வேணி வீட்டின் பின்கட்டிலுள்ள தோட்டத்திற்கு சென்று அங்குள்ள திட்டில் அமர்ந்தவள் தன் அழுகையை வெளிவராமல் கட்டுக்குள் கொண்டுவர பெருமுயற்சி செய்துக் கொண்டிருந்தாள்.

இளாவிடம் வேணியை சமாதானம் செய்யக் கூறிவிட்டு அங்கிருந்து தங்களின் வேலையைப் பார்க்கச் சென்றனர் இளாவின் அன்னையும் தந்தையும்.

தோட்டத்திற்கு சென்ற இளா வேணியின் கலங்கிய முகத்தை பார்த்தவன் மனம் வலிக்க, “அம்முகுட்டி” என்றழைத்து அவளருகில் அவன் அமரவும்,
இதுவரை கட்டுக்குள் வைத்திருந்த அழுகையை மடை திறந்த வெள்ளமாய் கொட்டினாள் அவன் தோளில்.

“என்னடா அம்முக்குட்டி, அதான் அப்பா அவங்க பேசினதுக்கு திருப்பி பேசி அனுப்பிட்டாங்கல. அப்புறம் எதுக்கு இந்த அழுகை. அவங்க எப்பவுமே அப்படி தான். அவங்களைலாம் கேட்காம அப்பாவே மேரேஜை ஃபிக்ஸ் பண்ணிட்டாங்கனு அவங்களுக்கு கோபம். அதை ஏதாவது ஒரு விதத்தில காமிக்கணும்னு இப்படி காமிக்க வந்திருக்காங்க. நீ அதை யோசிச்சி கஷ்டப்படாத” என்று கவலையாய் இளா கூற,

பின் அவனை நோக்கி, “அவ்ளோ மோசமாவா இளா என் சமையல் இருந்துச்சு” என்று பாவமாய் அவள் கேட்க,
“இது வரை வயித்துல எந்த பிரச்சனையும் வரல. எதுக்கும் நைட் வரைக்கும் வெயிட் பண்ணி பார்த்துட்டு சொல்றேன்” என்றவன் கிண்டலாய் கூற,

முதலில் அவன் கூற வருவதன் அர்த்தம் புரியாது விழித்தவள், புரிந்தப்பின் அவன் முதுகில் நாலு அடி வைத்தாள்.

“பெரியவங்க முன்ன பின்ன அப்படி தான் இருப்பாங்க இளா. நம்ம தான் அட்ஜெஸ்ட் பண்ணிட்டு போகனும். ஆனாலும் மனசு கஷ்டமா போச்சுடா. மாமா அப்படி பேசினது ரொம்ப கஷ்டமா போச்சு. பாவம் வயசானவங்க அப்படி பாதி சாப்பாடுல அனுப்பிருக்க வேண்டாம்” என்றவள் அந்த அத்தைக்கு பரிந்துப்பேச,

“எனக்கு உன்னை கஷ்டபடுத்துற யாரும் என் ஃலைப்ல வேண்டாம் அம்ஸ். என் அம்மா, அப்பா என்னிக்கும் உன்னை கஷ்டப்படுத்த மாட்டாங்க. உன்னை வேதனை படுத்துற எந்த உறவும் எனக்கு தேவையில்லை. நீ கஷ்டப்பட்டா என் மனசு தாங்காது அம்ஸ்” என்றவன் கூறிய நொடி,
அவன் தோள் சாய்ந்து அவனின் இடையை பற்றியிருந்தவள் முகம் நிமிர்த்தி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“என்னை அவ்ளோ பிடிக்குமா இளா?” என்று ஆவலுடன் அவன் முகம் பார்த்து அவள் கேட்க,

“இப்ப உனக்கு அவங்க உன்னை திட்டினது பிரச்சனை இல்ல. எனக்கு உன்னை எவ்ளோ பிடிக்கும்ன்றது தான் பிரச்சனை?” என்றவன் சிரித்துக் கொண்டே கேட்க,

“ம்ப்ச் அதெல்லாம் விடு. அவங்கலாம் பாஸிங் க்ளௌட்ஸ்(passing clouds). நீ மட்டும் தான் என் வாழ்க்கையின் நிஜம். சொல்லு சொல்லு உனக்கு என்னை எவ்ளோ பிடிக்கும்?” என்றவள் அவனின் சட்டை பொத்தானை திருக,

“இவ்ளோ பேசிறியே. உனக்கு என் மேல இன்னும் லவ் வரலையா அம்ஸ்” என்றவன் கேட்க,

சட்டென ஒதுங்கி அமர்ந்தவள், “அதெல்லாம் ஒன்னும் வரலை” என்றாள்.

அவளின் விலகலில் கோபமுற்றவன்,
“என் மேல லவ் இல்லாதவங்க கிட்ட நான் ஏன்டி லவ் சொல்லனும். அதெல்லாம் சொல்ல முடியாது போடி” என்றுரைத்து விட்டு அங்கிருந்து அவன் நகர முற்பட,

அவன் கையை பற்றியவள், “ப்ளீஸ்டா இப்படி மூஞ்சை திருப்பிட்டு மட்டும் போகாதடா. அவங்க திட்டும் போது வலிச்சதை விட, இப்ப தான் ரொம்ப மனசு வலிக்குது” எனக் கண்ணில் வேதனையுடன் அவன் கையை தன் கைகளுக்குள் பொதிந்துக் கொண்டு அவள் கூற,

தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்து சட்டென அமர்ந்துவிட்டான்.

அவன் முகத்தை தன் கைகளில் தாங்கியவள், “உன்னை ரொம்ப பிடிக்கும் இளா. எனக்கு கொஞ்சம் டைம் கொடேன் ப்ளீஸ். என்னமோ என்னை தடுக்குதுடா. அந்த லவ் நான் உணரலைனு தோணுது” என்றவள் ஏதேதோ பேசிக்கொண்டே போக,

அவளை தன் இறுகிய அணைப்பிற்குள் கொண்டு வந்தான்.

“நீ இப்படி என் கைகுள்ள இருந்தா மட்டும் போதும் அம்ஸ். வேற எதுவும் வேணாம். உன்னை எவ்ளோ பிடிக்கும்னு கேட்டல. நீ மட்டுமே உலகம்னு வாழுற அளவுக்கு உன்னை பிடிக்கும் அம்முக்குட்டி. உன்னை மட்டும் தான் அவ்ளோ பிடிக்கும்” என்றவளை இறுக அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.

இங்கே அந்நிகழ்வுகளை அசைப்போட்டவளின் மனம் தானாய் குமுறியது. “ஐ லவ் யூ இளா. உன் காதலை உணர்ந்துட்டேன்டா. உன்னை மட்டும் தான்டா எனக்கும் பிடிக்கும். உன் கிஸ் வேணும். நீ காலைல பாசமா குடுக்குற அந்த கிஸ் வேணும். அம்முகுட்டினு என்னை நீ இறுகி அணைச்சுக்கிற அந்த அணைப்பு வேணும். இப்ப எல்லாத்துக்கும் ஏங்கி தவிச்சிட்டு இருக்கேன்டா” என முகத்தை தலையணையில் புதைத்துக் கொண்டு கண்ணீர் வழிய முனகிக் கொண்டவள், “மிஸ் யூ இளாப்பா” என்றொரு குறுஞ்செய்தி அனுப்பிருந்தாள் அவனுக்கு.

பின் தன்னை தேற்றிக்கொண்டு அன்று பேருந்தில் குளிருக்காக அவன் அணிவித்த அவனின் சட்டையை வைத்திருந்தவள் அதை அணிந்துக்கொண்டு அவனின் ஸ்பரிசத்தின் உணர்வுடனேயே உறங்கிப்போனாள்.

மறுநாள் விடியற்காலை நான்கு மணியளவில் சுற்றுலா செல்வதெற்கென பரபரப்பாய் கிளம்பிக் கொண்டிருந்தனர் வாணியும் வேணியும்.

பயணத்திற்கு ஏதுவாய் ஜீன்ஸ் குர்தி அணிந்துக் கொண்டனர் இருவரும்.
ஒரு பேருந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆகவே அனைவரையும் அவரவர் இல்லத்தினருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் வந்து அழைத்து செல்வதாய் உரைத்திருந்தனர் அச்சுற்றுலா ஏற்பாட்டாளர்களான சகப்பணியாளர்கள்.

விடியற்காலைப் பொழுதில் அனைவரையும் அவரவர் நிறுத்தத்திற்கு சென்று அழைத்துக் கொண்டு செல்வதே அவர்களின் திட்டம். வாணியின் கைபேசிக்கு அழைத்து நிறுத்தத்திற்கு வந்துவிடுமாறும் பத்து நிமிடத்தில் அவர்கள் அவ்விடத்தை அடைந்து விடுவர் என்றும் உரைத்தனர் அப்பணியாளர்கள்.

எனவே வாணியும் வேணியும் துரிதமாய் தங்களின் பைக்களை எடுத்துக் கொண்டு கிளம்பி கதவைத் திறந்த நேரம், திகைத்து விழித்தனர் இருவரும் அக்கதவினருகில் நின்றிருந்தவனைக் கண்டு.

“ஹே நிஜமாவே எனக்கு பைத்தியம் முத்திப்போச்சிடி. எங்கே பார்த்தாலும் அவனாவே தெரியுறான்டி” என வாணியின் காதில் கிசுகிசுத்தாள் வேணி.

“அடியேய் நிஜமாவே இளாண்ணா வந்திருக்காங்கடி” என்றாள் வாணி.
அதிர்ச்சியின் விளிம்பில் இருந்தாள் வேணி.

“இளாண்ணா, வாட் எ சப்ரைஸ்!! எப்பண்ணா வந்தீங்க? ஏன் இங்கயே நின்னுட்டீங்க?” என்றிவள் கேட்ட நொடி மீண்டும் வாணியின் கைபேசி அப்பணியாளர்களின் வருகை தெரிவித்து அதிர,

“அய்யோ அண்ணா அவங்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. உடனே போகனும்” என்றுரைத்துவிட்டு வேணியை பார்த்தவள்,

“அண்ணா வேணி இருக்கட்டும். நான் கிளம்புறேன்… இரண்டு நாள் டிரிப்ண்ணா சோ இரண்டு நாள் கழிச்சி தான் வருவேன்” என அவசர அவசமாய் அவள் நகர்ந்து செல்ல,

“ஹே வாணிம்மா தனியா இருந்துப்பியா? உனக்கு கூட கம்பெனிக்கு ஆளு இருக்கா?” எனக் கேட்டான் இளா.

“அதெல்லாம் டீம்ல பொண்ணுங்க இருங்காங்கண்ணா. நான் சமாளிச்சிப்பேன். நோ ப்ராப்ளம்” என்றாள் வாணி.

“பாத்து பத்திரம் வாணி. எந்த டைம்ல என்ன பிரச்சனைனாலும் எனக்கோ இல்ல அம்ஸ்க்கோ கண்டிப்பா கால் பண்ணு. ஹேவ் எ சேப் ஜர்னி” என்றான் இளா.

“தேங்க்ஸ்ண்ணா பை” என்றுரைத்து விட்டு பறந்தோடிப் போனாள் வாணி.

அவளிடம் பேசிவிட்டு வேணியின் பக்கம் திரும்பிய இளா, சுவற்றோடு ஒட்டி நின்று திகைப்பில் தன்னையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்த வேணியையே கண்டான்.

“அம்முக்குட்டி” என விளித்து அவளருகில் இவன் போக,

சுவற்றோடு ஒட்டி தன் முட்டியை மடக்கி அமர்ந்தவள் விம்மி அழவாரம்பித்தாள்.

நேற்று அவன் தனதருகில் இல்லை என்ற ஏக்கம் அவளின் மனதை அழுத்தியிருக்க இன்றைய இந்த எதிர்பாரா அதிர்ச்சி அவ்வலியை போக்கியிருக்க அவை அழுகையாய் வெளிப்பட்டு கரைந்துக் கொண்டிருந்தது.

“என்னடா அம்முகுட்டி, நான் சப்ரைஸா வந்தா நீ சந்தோஷப்படுவேனு பார்த்தா… இப்படி அழுதுட்டு இருக்க” என்றவளருகில் மண்டியிட்டமர்ந்து அவளின் முகத்தை தன் கைகளில் ஏந்திக் கொண்டு அவன் கேட்க,
அவள் அழுகையின் விம்மிலுடனே அவனைத் தாவி அணைத்தாள். அவளின் அதிரடியில் மண்டியிட்டவன் பின்னால் சாய அவளும் அவனோடு சேர்ந்து சாய்ந்தாள். சாய்ந்தவன் அவள் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதிக்க,

அவள் கன்னத்தில் இறங்கிய கண்ணீரின் உவர் நீர் அவனுள்ளும் இறங்க, கலங்கிப் போனான் இளா.

அவன் அணைப்பை விடாது அவன் மார்பில் சாய்ந்தவள், அழுகையினூடே “இனி என்னை விட்டு எங்கேயும் போகாத இளா… என்னால நீ இல்லாம இருக்க முடியாதுடா” என்றவள் கூற,

“என்ன அம்முகுட்டி சின்னபிள்ளை மாதிரி பேசுற. நான் திரும்ப போய் தான் ஆகனும். ஒரு மாசம் பொறுத்துக்க முடியாதா அம்ஸ்” என்றவன் கூறிய நொடி அவன் மீதிருந்து எழுந்தவள் படுக்கையறை சென்று அவர்களின் கட்டிலில் முகம் புதைத்து அழவாரம்பித்தாள்.

தங்கள் வீட்டின் கதவை பூட்டி விட்டு படுக்கையறைச் சென்று அவளை எழுப்பியவன் அவளருகில் அமர்ந்து கைகளைப் பற்றிக்கொள்ளப் போக, அவன் கையை தட்டிவிட்டு கண்ணில் நீருடன் கோபமாய் அவனை பார்த்தவள், “நீ ஒன்னும் என் கிட்ட பேச வேண்டாம். இன்னிக்கே கூட கிளம்பு. நான் உன்னை மிஸ் செஞ்ச அளவுக்கு நீ என்னை மிஸ் செய்யலைல… இல்லனா இப்படி அசால்டா பேசுவியா? நான் தான் இளா இளானு இங்க மறுகிட்டு இருந்திருக்கேன். நீ அங்க என் நினைப்பே இல்லாம ஜாலியா இருந்திருக்க… நீ என்கிட்ட ஐ லவ் யூ சொன்னதெல்லாம் சும்மா தான்” என்றவள் கோபத்தில் பேசிக்கொண்டே போக,

அதுவரை அவளின் மனக்குமுறலை பொறுமையாய் கேட்டவன், ஐ லவ் யூனு சும்மா தான் சொன்ன என்ற வார்த்தையில் கோபம் தலைக்கேற “வேணி” எனக் கத்தினான் இளா.

அவனின் கத்தலில் அமைதியானவள், கட்டிலின் மறுபுறம் சென்று படுத்துக் கொண்டாள்.

“நான் உண்டு என் வேலை உண்டுனு இருந்தவளை லவ் பண்ண வச்சிட்டு இப்ப போறானாம். போகட்டும். எனக்கென்ன வந்துச்சு?.. எங்க வேணா போ… எப்படி வேணா போ… எனக்கென்ன வந்துச்சு? நான் தான் இளானு பைத்தியமா அலைறேன்” என மனதிற்குள் புலம்பிக் கொண்டே விம்மிக் கொண்டிருந்தாள்.

கட்டிலில் அமர்ந்திருந்தவன் எழுந்து நின்று கைகளைக் கட்டிக் கொண்டு படுத்திருந்த அவளின் முதுகையே வெறித்து நோக்கினான்.

அவளின் ஒரு மனமோ அவனிடம் போவென்று அவளை உந்த, மறு மனமோ அவனே வரட்டும் என முரண்டுப் பிடிக்க, இந்த மனதின் அலைப்புறுதலை தாங்கவியலாது, சிறிது நேரம் கூட அவனை காணாமல் இருக்க இயலாது என உணர்ந்தவள், கட்டிலை விட்டு எழுந்து ஓடிச்சென்று அவனை அணைத்துக் கொண்டாள்.

அழுகையின் விசும்பலில் “ப்ளீஸ் என்னை விட்டு எங்கேயும் போகாதடா…. ஐ லவ் யூ சோ மச் இளா” என்ற நொடி அவளிதழில் தன்னிதழை பதித்திருந்தான்.

எந்த வார்த்தைக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தானோ அவ்வார்த்தை அவள் வாயிலிருந்து வந்த நொடி தன் இத்தனை நாள் தவிப்பு, ஏக்கம் அவள் மீதான தன் காதல் என அனைத்தையும் அந்த இதழொற்றலில் அவளை உணரச்செய்தானவன்.

அவற்றை அவள் உணர்ந்தப் போதும், அவனின் முகத்தை தன்னிதழிலிருந்து தட்டிவிட்டவள், “எனக்கு இதெல்லாம் வேணாம். நீ தான் வேணும். நீ என் கூடவே இருக்கனும்” என அவன் தோளில் சாய்ந்துக் கொண்டு கண்ணீருடன் கூற,

அவள் நெற்றியில் இதழ் பதித்து சிரித்தவன், “உன்னையும் என் கூட கூட்டிட்டு தான் போகப் போறேன். உனக்கு டிபண்டென்ட் விசா கிடைச்சிடுச்சி” என்றவன் கூறிய நொடி வியப்பில் விழி விரித்தவள், மறுநொடி அவனை அடிக்கத் தொடங்கினாள்.

“பொய் சொன்னியா நீ? பொய் சொன்னியா?” என அவன் புஜங்களில் தலையில் என அவள் அடிக்க, அவளை அலேக்காக தன் கைகளில் அவன் தூக்க,

“ஹே விழுந்திடப் போறேன்டா” எனக் கூறி அவன் கழுத்தினை மாலையாய் அவள் வளைத்துக் கொள்ள,

அவளை கட்டிலில் சாய்த்தவன், “புருஷனை அடிச்சதுக்கு கண்டிப்பா பனிஷ்மெண்ட் உண்டு அம்முக்குட்டி” எனக் கூறி அவளின் ஒவ்வொரு அடியையும் கூறி ஒவ்வொரு முத்தம் அவன் பதிக்க அவனுள் உறைந்துக் கரைந்துக் கொண்டிருந்தாள் வேணி.

காதலால் கசிந்துருகி நீயெல்லாமல் நானில்லை என்கின்ற தங்களின் காதலின் நிலையில் இருவரும் ஒன்றாய் கலந்து தங்களின் வாழ்க்கை பயணத்தை தொடங்கினர்.

“இந்த நிமிஷம் நீங்க என்ன வேண்டிக்கிட்டீங்களோ. அது கண்டிப்பா நடக்கும் மதிப்பா” ஹோசூரிலுள்ள சாய் பாபா கோவிலில் மதி கண் மூடி அமர்ந்திருக்க, அவனருகிலிருந்த மஹா இவ்வாறு கூற, மனம் விட்டு சிரித்தானவன்.

“இப்ப நான் வேண்டிக்கிட்டது நிறைவேறனும்னா என் குட்டிம்மா அதுக்கு ஒத்துழைக்கனுமே” என்றவன் கூறியதும்,

“அய்யய்யோ ஏதோ வில்லங்கமா வேண்டிக்கிட்டு இருந்திருப்பீங்க போலயே. நான் தான் வாண்டட்டா வந்து சிக்கிக் கிட்டேன் போலயே” என முழித்துக் கொண்டே அவள் கூற,

“பெரிசா ஒன்னும் இல்லடா… எனக்கு குட்டியா ஒரு குட்டி குட்டிமா பெத்துக் கொடு குட்டிம்மா” என கண் சிமிட்டி அவன் கூற,
“இல்ல இல்ல குட்டி மதி தான். நோ குட்டிம்மா” என்றாளவள்.

“ஏன் ஏன் அப்படி?” என்றவன் கேட்க,

“போங்க… பொண்ணு பிறந்துட்டா என்னை இப்படி கொஞ்சுற மாதிரிலாம் கொஞ்ச மாட்டீங்க… எல்லாம் உங்க பொண்ணுக்கு தான் போகும். சோ நோ பொண்ணு ஒன்லி பையன் மட்டும் தான்” எனத் தீவிரமாய் மஹா கூற,

“அடிப்பாவி இப்படி ஒரு நினைப்பிருக்கா உனக்கு” என சிரித்தானவன்.

பின் அவள் ஆணோ பெண்ணோ எதுவாயினும் தனக்கு சம்மதம் என்றும் ஆனால் இன்னும் ஒரு வருடம் வீட்டுக் கடன் எல்லாம் தீரட்டுமெனக் கூற ஆமோதிப்பாய் தலையசைத்தான்.

இளா வேணியை சிங்கப்பூருக்கும் வாணியை லண்டனுக்கும் பெங்களுர் விமான நிலையத்தில் வழியனுப்பி வைக்க வந்தனர் மதியும் மஹாவும்.

முந்தைய இரவு அவர்களை வழியனுப்பி வைத்து விட்டு மறுநாள் தங்களின் திருமணத்திற்காக தாங்கள்  வேண்டுதல் வைத்த அனைத்து கோவில்களுக்கும் சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல, வேணி தன் ப்ராஜக்டில் நீண்ட விடுப்பு சொல்லி விட்டு சென்றவள், இளாவிற்கு சிங்கப்பூரிலேயே ஒரு வருடம் அவன் ப்ராஜக்ட் மேனேஜர் வேலையை நீட்டிக்க, தன் வேலையை ராஜினாமா செய்தாள் வேணி.

ஒரு வருடம் லண்டனிலிருந்து தன் பணியை தொடர்ந்த வாணி தனியாய் வாழ்வை எதிர்கொள்ளும் தைரியமும் துணிவும் பெற்று தன்னை தானே கவனித்துக்கொள்ளும் அளவு தெளிவும் பெற்றிருந்தாள்.

அனைவரும் ஒன்றாய் சேர்ந்து தொடங்கிய அவர்களின் அலுவல் பயணம் வருடங்கள் கடக்க வாழ்வின் பல நிதர்சனங்களைப் புரிய செய்து அனுபவப்பாடத்தினை வழங்கி மன முதிர்ச்சியை அளித்திருந்தது.

— நாளை இறுதி அத்தியாயத்துடன் நிறைவு பெறும்