அவ(ன்)ள் 15

“அம்மா நீங்களாச்சும் அவளுக்கு சொல்லுங்கம்மா…. எப்போ பார்த்தாலும் வேலை வீடுன்னு இருக்கா… குழந்தையோட பார்த்டே செலிப்ரேஷனுக்கு வர சொன்னா கூட வாரமாட்டுறா!!…” என்று மகேஷ்வரியிடம் முறையிட்டு கொண்டிருந்தாள் அஞ்சலி.

“ஏன் பிருந்தா இப்படி பண்ற?.. அஞ்சலிதான் கூப்பிடுறா இல்ல குழந்தைக்காகவாவது போயிட்டு வரலாம்ல…?” என்று மகேஷ்வரி எடுத்து கூறிட

“பச் நீங்க வேறம்மா… ஆகுற வேலைய பாருங்க… உங்கள எப்படி தனியா விட்டு போறது?… விஷ்ணு கூட அன்னைக்கு ஏதோ வேலை இருக்குன்னு சொல்லிட்டு இருந்தான்”. என்று விழாவிற்கு வரமாட்டேன் என மறைமுகமாக மறுப்பை தெருவிக்க

“மரியாதையா வர… இல்லைன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது….” என்று அவள் காதில் முனுமுனுத்த அஞ்சலி மகேஷ்வரியின் முன் “நீங்களே சொல்லுங்கமா…” என்றாள் சிரித்தபடி

“மிரட்டுறியா… முடியாது போடி…” என்று அவளைப் போலவே அஞ்சலியின் காதில் முனுமுனுத்தவள் தாயின் முன் அமைதியாக இருந்தாள்.

“பாருங்கமா எது சொன்னாலும் சைலன்ட்டா இருக்கா…” என்று அஞ்சலி பாவமாக முகத்தை வைத்துக் கொள்ள

“நீ கவலைப்படாம போ அஞ்சலி… உன்‌ பிரெண்டு கண்டிப்பா அன்னைக்கு வருவா‌, நான்‌ அனுப்பி வைக்கிறேன்…” என்று‌ மகேஷ்வரி உறுதி அளிக்கவும் “சரிதான் போடி‌ எனக்கு அங்கேயே பர்மிஷன் கிடைச்சிடுச்சி, ஒழுங்கா கிளம்பி வர்ற வழியை பாரு…” என்று அவளுக்கு அழகு காட்டியவள் பிருந்தாவின் கன்னத்தை கிள்ளிவிட்டு சென்றாள்.

……
காற்றில் கரையும் கற்பூரம் போல இரு வாரங்களும் காலண்டரில் இருந்து காணாமல் போயிருந்தது…

“ஏங்க… அங்க பாருங்க… கிருஷ்ணாவோட அம்மா வர்றாங்க… போய் கூப்பிட்டுங்க நான் குழந்தைய கொடுத்துட்டு வர்றேன்”. என்று‌ அஞ்சலி கணவனிடம் பொறுப்பை ஒப்படைக்க.

“வாங்க ஆண்டி”.. என்று அழைத்துச் சென்ற அஞ்சலியின் கணவன் நீரஜ் செண்பகத்தை அஞ்சலியிடம் விட்டுவிட்டு மற்றவர்களை அழைக்க சென்று விட்டான்.

சிரித்தபடியே வந்த அஞ்சலி “வாங்கம்மா.. என்று செண்பகத்தை வரவேற்றவள் அப்பா வரலையா?” என்றாள்.

“அவரு கடைய விட்டு வந்துட்டாலும்…” என்று நொடித்த‌ செண்பகம் குழந்தையை கொஞ்சி விட்டு “எங்க அந்த பொண்ணு வந்துட்டாளா?” என்றார் சத்தமில்லாது.

“பொண்ணா?!!.. எந்த பொண்ணும்மா…?”

“தெரியாத மாதிரியே கேளு‌!… அதான் கிருஷ்ணா சொல்லிட்டு இருந்தானே‌‌ அந்த பொண்ணு‌”

“அட‌ மருமகளை பார்க்க அவ்வளவு ஆர்வமா?” என்று கிண்டலடிக்க

“முதல்ல அந்த பொண்ணை காட்டு… என்ன கொழுப்பு இருந்தா என் பையனை வேண்டாம்னு சொல்லி இருப்பா..?. அவளை நான் பார்த்து எனக்கு சரின்னுப்பட்டா தான் மத்தது எல்லாம்…” என்று கறாராய் பேசுவது போல் இருந்தாலும் அதில் பிருந்தாவை பார்க்க வேண்டும் என்ற‌ ஆவலும் இருந்தது.

“ஓ…. இப்போ அதான் உங்க பிரச்சினையா? ஒகே உங்க மருமக” என்றவளை செண்பகம் செல்லமாய் முறைக்க “சரி… சரி… பிருந்தா வந்ததும் உங்களுக்கு சொல்றேன்” என்று அவரது கன்னம் கிள்ளி கூறியவள் மற்றவர்களை பார்க்க சென்றாள்.

பிருந்தாவிற்கு அங்கு செல்லவே ஒரு மாதிரியாக இருந்தது அதுவும் கிருஷ்ணாவை காண நேருமே என்ற தயக்கத்துடம் அஞ்சலி கூறிய ஹோட்டலுக்கு சென்றாள்.

அவள் நிறத்தை மேலும் தூக்கி காட்டும் மெஜந்தா நிற அழகிய டிசைனர் சேலையில் மெல்லிய ஒப்பனையுடன் இடைவரை இருந்த கூந்தலை தளர பின்னியிருக்க மின்விளக்குளின் ஒளியில் தேவதையாய் வந்தவளை கண்ட அஞ்சலி “அம்மா அதோ பாருங்க உங்க மாருமக… சாரி சாரி பிருந்தா வர்றா” என்று செண்பகத்திடம் கூறிவிட்டு அவசரமாக அவளிடம் சென்றாள்.

“ஹேய் பிந்து… செம அழகா இருக்கடி… எங்க வராம போய்டுவியோன்னு பயந்துட்டேன்… நல்ல வேளை வந்துட்ட… இல்ல நாளைக்கே வீடு தேடி வந்து உன்னை உதச்சி இருப்பேன்…” என்று அவள் கைபிடித்து வளவளத்தபடி பிருந்தாவை உள்ளே அழைத்து வந்திருந்தாள் அஞ்சலி.

அஞ்சிலியின் கலகலப்பான பேச்சில் தயக்கங்கள் நீங்கியவளாக உள்ளே வந்தவளுக்கு கிருஷ்ணாவை நினைத்து இப்போது பதட்டம் ஒட்டிக்கொண்டது.

‘அவன் இங்கு இருப்பானே… பார்த்தா எப்படி ரியக்ட் பண்றது… நமக்கு எதுக்கு வம்பு தெரியாத மாதிரியே இருந்துட்டு போயிடுவோம்…’ என்று மனதிற்குள் பலவாறாக பேசிக்கொண்டவள் வெளியே அஞ்சலியின் பேச்சுக்களை கேட்டபடியே நடக்க செண்பகத்தின் அருகில் வந்திருந்திருந்தனர் இருவரும்.

“சரி பிந்து… நீ இங்கயே இரு” என்று ஒரு கூல்டிரிங்சை கையில் கொடுத்து “இதோ இவங்க கிருஷ்ணாவோட அம்மா” என்று செண்பத்தை அறிமுகப்படுத்தி வைத்தவள் “அம்மா இது பிருந்தா என் பிரெண்டு” என்று கூறிவிட்டு “நான் பாப்பவை பார்த்துட்டு வந்துடுறேன்… நீங்க பேசிட்டு இருங்க… இப்போ கிரியும் அவன் பேமிலியும் வந்துடுவாங்க” என்று கூறிவிட்டு சென்றாள்.

பிருந்தாவிற்கு கிருஷ்ணா என்ற பெயரை கேட்டவுடன் குளிரூட்டப்பட்ட அந்த இடத்திலும் வியர்த்து விழிந்தது… “கடவுளே!… நல்லா மாட்டி விட்டு போயிருக்கா!” என்று அஞ்சலியை மனதில் திட்டியவள் செண்பகத்தின் முன் எந்த உணர்வையும் காட்ட முடியாது கடமையே என்று சிரித்து வைத்தவளின் கைகள் சில்லிட்டிருந்தது.

செண்பகத்திற்கு மகனின் தேர்வு எப்படி இருக்குமோ என்று நினைத்து வந்தார். ஆனால் பிருந்தாவை பார்த்த முதல் பார்வையிலேயே பிடித்து விட்டது. அவளின் அமைதியும் ஆர்பாட்டமில்லா அழகையும் கண்டவருக்கு தன் மகனுக்கு ஏற்ற பெண் தான் என் தோன்றியது. இருந்தும் மனதின் ஓரம் சிறு நெருடல் இருக்கவே அவளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார்.

அதுவும் கிருஷ்ணாவின் பெயரை கேட்ட மாத்திரத்தில் அவள் படபடப்பையும் அங்குமிங்கும் சுழலும் விழிகளையும் கண்டவருக்கு மகன் இவளிடத்தில் காதலை சொல்லியதில் வந்த விளைவு என்று புரிய சற்றே இளகியவர் “என்னம்மா என்ன பண்ணுது” என்றார் கரிசனமாக

“ஆங்… ஒ… ஒன்னுமில்ல ஆண்டி” என்றவள் கைகுட்டையை எடுத்து நெற்றியில் வழிந்த வியர்வையை ஒற்றிக் கொண்டு சற்றே இதழ் விரித்து சிரித்தாள். முடிந்த மட்டில் அவர் முன் சாதரணமாக இருக்க முயன்றாள்.

“ஆனாலும் உனக்கு இப்படி வேர்க்குதே… பயப்படாம நல்ல ப்ரியா இரு” என்றவர்… “உன் பேரு என்னம்மோ சொன்னாளே அஞ்சலி” என்று செண்பகம் யோசிக்க

“என் பெயர் பிருந்தா.…” என்றவள் இதற்குமேலும் அங்கிருக்க முடியாமல் “நா.. நான் அஞ்சலிக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமான்னு கேட்டுட்டு வறேன்” என்று அங்கிருந்து எழுந்துக் கொண்டாள்.

அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்த செண்பகமோ “அங்கப்பாரு… எவ்வளவு பேரு இருக்காங்கன்னு… அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க… கிருஷ்ணா வேற இன்னைக்கு வரல… நீ இப்படி உட்காரு… நாம பேசுவோம்… நீயும் என்னை தனியா விட்டுட்டு போயிடாத” என்று பிருந்தாவின் கையை பிடித்து பக்கத்தில் இருத்திக்கொண்டர்.

கிருஷ்ணா வரவில்லையே என்ற நிம்மதி இருந்தாலும் செண்பகத்துடன் இருப்பது அவளுக்கு முள்ளின் மேல் நிற்பதைப் போன்று அவஸ்தையாய் இருந்தது. இழுத்து வைத்த புன்னகையுடன் கடனே என்று அவர் பக்கத்தில் மீண்டும் அமர்ந்தாள்.

“அப்புறம்… என்ன பண்ற பிருந்தா?” என்ற கேள்வியுடன் செண்பகம் பேச்சினை தொடங்க

“ஒரு பிரேவேட் கன்சல்ல வொர்க் பண்றேன் மா” என்றாள்.

“ஓ.. சரி வீடு எங்க?”

“இங்க தான்.. காந்தி நகர்..” .

” அம்மா அப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா?”

“ம் நல்லா இருக்காங்க…” என்று கூறிக்கொண்டே வந்தவளுக்கு மனதில் மட்டும் ‘அஞ்சலி நீ கையில மாட்டுன அவ்வளவு தான்’ என்று பற்களை கடித்து தனக்குள்ளயே கூறிக்கொண்டவளை காப்பாற்ற வந்தது கிரியின் குடும்பம்.

“ஹேய் பிருந்தா… நீ வந்துட்டியா?” என்று ஆர்ப்பாட்டமாய் வந்த கிரி செண்பகத்தை பார்த்ததும் “நீங்க எப்போ மா வந்திங்க?” என்றான் முகமன்னாக…

“இப்போ தான் பா” என்று பதிலை அளித்த செண்பகம் அவனின் மனைவியிடம் பேசினார்.

“பிருந்தா இது என் வைப்… பேரு யாத்ரா.. இவ என் குட்டி பொண்ணு” என்று தன் குடும்பத்தை பிருந்தாவிடம் அறிமுகப்படுத்தி வைத்த கிரி பேச்சில் அவர்களோடு இணைந்துக் கொண்டான்.

‘எல்லாரும் வந்துட்டாங்க ஆனா இவர் மட்டும் ஏன் வரலை?… ஒருவேளை நான் வந்து இருப்பேன்னு, அவர் வரலையோ!!’ என்று யோசித்தவளுக்கு அவனை பற்றி யாரிடமும் கேட்க மனது இடம் கொடுக்கவில்லை…

கிருஷ்ணா வரவில்லை என்ற நிம்மதி பிறந்தாலும் தன்னை ஒதுக்குகின்றானோ என்ற எண்ணம் இல்லாமல் இல்லை… அதே மனநிலையுடன் இருந்தவளுக்கு தன்னை யாரோ வெகு நேரம் பார்ப்பது போன்ற உள்ளுணர்வு உண்டாக சுற்றிலும் பார்வையை சுழல விட்டவளுக்கு நீரஜிடம் பேசிக்கெண்டிருந்த கிருஷ்ணாவின் காதல் பார்வை பிருந்தாவை தடுமாற வைத்தது.

‘வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற அவஸ்தையில் அவன் பார்வையை எதிர்க் கொள்ள முடியாது கண்களை வேறுப்பக்கம் திருப்பியவளுக்கு இன்னுமே அவன் பார்வை தன்னை தொடர்வதை போல உணர்வுதான்.

இவர் எப்ப இங்க வந்தாரு…!! இவரோட அம்மா இவரு இங்க வரமாட்டாருன்னு தானே சொன்னாங்க…!! ஹ்ம்ம் கரெக்டா தான் கிருஷ்ணான்னு பேர வச்சி இருக்காங்க… எப்போ எங்க இருப்பான்னு சொல்ல முடியல எங்க பார்த்தாலும் என்னையே பார்க்கரா மாதிரி இருக்கு அய்யோ கடவுளே‌ என்னை காப்பாத்தேன்’ என்று மனதிற்குள்ளேயே அவனை திட்டிக் கொண்டும் கடவுளை வேண்டிக்கொண்டும் இருந்தவளின் சிந்தனையை கலைத்தது செண்பகத்தின் குரல்.

“பிருந்தா… பிருந்தா…”

“எ… என்னங்க ஆண்டி?”

” கேக் வெட்ட நேரமாகிடுச்சுன்னு அஞ்சலி ரொம்ப நேரமா உன்னை அங்கிருந்து கூப்பிட்டுட்டு இருக்கா…… வா போவோம்” என்று கூறியபடி அவளை தன்னுடன் கூட்டிச் சென்றார் செண்பகம்.

பிருந்தாவை சுற்றியே வட்டமிட்டது கிருஷ்ணாவின் பார்வை… இன்று அவனுக்கு முக்கியமான ஆப்ரேஷன் என்பதால் அதை முடித்துக் கொண்டு தாமதமாகத்தான் விழாவிற்கு வந்தான். பலநாள் பட்டினி கிடந்தவன் கண்களுக்கு பிருந்தாவின் எழில் தரிசனம் கிடைக்கவே ரசனையுடன் அவளை தொடர்ந்து அவன் விழிகள். தன்னை கண்டதும் எங்கே மாயமாகி விடுவாளோ என்ற எண்ணத்தில் மறைவாகவே அவளை ரசித்தான். இருந்தும் அவளிடம் மாட்டிக்கொண்டான்.

அவன் விழிவீச்சை தாங்க இயலாதவளோ அங்கிருந்து விரைவாகவே செல்ல வேண்டும் என முனைப்போடு நடந்தவள் கீழே சிந்தி இருந்த ஐஸ்கிரீமில் காலை வைத்து விட அது டைல்ஸ் தரையானதால் பிடிமானமின்றி கால் இடறி விழப்போனவளை பூக்குவியலாய்த் தாங்கியது கிருஷ்ணாவின் கரங்கள்.

கிருஷ்ணாவின் மென் கரங்கள் அவள் வெற்றிடையினை தாங்க படபடவென அடித்து கொண்டது பிருந்தாவின் இதயம். அவன் காதல் சொல்லும் மாய விழிகளை சந்திக்க முடியாமல் பார்வையை தழைத்தவள் தேங்கஸ் என்றபடி நேராய் நிற்க முயன்றாள்.

அதற்குள் என்னவோ ஏதோவென்று செண்பகம் அங்கு விரைந்து வந்துவிட்டார். அஞ்சலி கிரி இன்னும் சிலர் கூடியிருந்தனர்.

“என்ன கிருஷ்ணா…பிருந்தாவுக்கு என்ன ஆச்சு…”என்று கேட்ட செண்பகத்திடம் ” ஒன்னும் ஆகலை ஆண்டி…லேஸா கால் ஸ்லிப் ஆகிடுச்சு…” என்று அவனை நெருங்கி நின்றிருந்த பிருந்தா சட்டென்று அவனிடமிருந்து விலகி “நான் கிளம்புறேன்” என்று ஒரு எட்டு வைத்தவளுக்கு காலில் ஏற்பட்ட வலியில் முகம் மாறியது.

அவள் முகமாற்றத்தை கவனித்த கிருஷ்ணா “முதல்ல இப்படி வந்து உட்காரு…” என்று அதிகாரமாக பிருந்தாவின் கையை பிடித்து ஒரு சேரில் அமர வைத்தவன் அவள் மாவிலை பாதங்களை கையிலெடுத்து தன் மடி மீது வைத்தான்.

சுற்றிலும் பார்வையை சுழற்றியவள் எல்லோரும் தங்களை பார்ப்பதை போலவே இருக்க, சங்கடமாக அவன் கைகளை விலக்கியவாறே “எனக்கு ஒன்னுமில்ல கிருஷ்ணா … நான் நான்… நல்லா தான் இருக்கேன்… நீங்க ஏன் கால் எல்லாம் பிடிக்கிறிங்க” என்று எழுந்துக்கொள்ள முயல

“அட நீ உட்காரும் மா அவன்‌ டாக்டரு தானே.. காலை பிடிச்சா தப்பில்ல” என்று செண்பகம் பிருந்தாவின் தோளை பிடித்து அமர வைத்தார்.

அவன் தொடுகையில் நெளிந்தபடி காலை இழுத்தவளிடம் ” பிருந்தா… அஸ் எ டாக்டரா உன்னை பாக்க வேண்டியது என்னோட கடமை… அதை கொஞ்சம் செய்ய விடுறியா? ப்ளீஸ்… ” என்று சிரித்தபடியே கூறி யாரும் அறியா வண்ணம் கண்ணடித்துவிட்டு ஒன்றுமே அறியாதது போல் கிருஷ்ணா தன் வேலையை தொடர பேயறைந்தது போல திருதிருவென விழித்தாள் பிருந்தா.

கால் இடறியதில் கொஞ்சம் தசை பிசகி வீக்கமாக இருக்க‌ மெல்லமாக பாதத்தினை தரையில் வைத்தவன் . இரண்டு கைகளையும் தட்டிவிட்டு “வெல் நீ சொன்னது கரெக்ட் தான் பிருந்தா… கால்ல அடிபடல ஆனா தசை பிசகி இருக்கு… இப்போதைக்கு நடக்க கொஞ்சம் சிரமமா தான் இருக்கும்”. என்றவன் அவள் அறியாதவாறு அஞ்சலியிடம் கண்ஜாடை காட்டினான்..

“அச்சோ இப்போ என்ன பண்றது கிருஷ்ணா… இவளை தனியா எல்லாம் அனுப்ப முடியாது” என்று அஞ்சலி கைகளை பிசைந்து ஒரு அக்கப்போரை தொடங்க

அடுத்து என்ன நடக்கும் என யூகித்த பிருந்தா சட்டென சுதாரித்து “அஞ்சு நீ நினைக்கிற மாதிரி எல்லாம் பெரிய வலி இல்லை… ஜஸ்ட் கொஞ்சமாதான் இருக்கு… நான் கேப்ல போய்டுவேன்… நீ எதுக்கு இதை பெருசாக்குற” என்றபடி அவள் போனை எடுத்தாள்.

இவர்களின் நாடகத்தை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த செண்பகம் “கிருஷ்ணா ஒன்னு செய்யேன் நீயே பிருத்தாவை கொண்டு போய் விட்டுல விட்டுட்டு வந்துடுடேன்.” என்றார் சட்டென. மகன் இதற்குத்தான் அடிப்போடுகிறான் என்று‌ சில நிமிடங்களிலேயே கண்டுபிடித்த செண்பகம் தன் பங்கிற்கு சிறப்பாய் செய்ய

கிருஷ்ணாவிற்கு கொண்டட்டம் தான் ஆனால் பிருந்தாவிற்கு தான் தலையே சுற்றியது… ‘ என்னடா இது இவங்க புள்ளைய பத்தி தெரிஞ்சி தான் சொல்றாங்களா? இல்லை தெரியாம சொல்றாங்களா?” என்று கடுப்பானவள்

“பரவாயில்லை ஆண்டி நானே என்னும் போதே இடைமறைத்தவர் “என்னமா நீ… கால் பாரு… வீக்கம் அதிகாமகுதே தவிர,குறையல.. இதுக்கு வைத்தியம் செய்யாம உன்னால ஒரு அடி கூட நடக்க முடியாது… அப்படி இருக்க, உன்னை எப்படி தனியா விடுறது… ” என்று உரிமையாக அதட்டியவர் அவளின் பதிலை கூட எதிர் பார்க்காமல் “கிருஷ்ணா பிருந்தாவை கூட்டிட்டு வா” என்றார் கட்டளை போல

இனி இவர்களிடம் தான் என்ன கூறினாலும் எடுபடாது என தெரிந்துவிட அவன் தன்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கும் முன்னே சட்டென அஞ்சலியின் கையை பற்றிக்கொண்டு கண்ணை மூடி வலியை பொறுத்து வண்டியில் ஏறி அமர்ந்துவிட்டாள் பிருந்தா , அவள் அவசரத்தை கண்டு சிரித்தபடியே வண்டியில் ஏறியவன் செண்பகத்தையும் அழைத்துக்கொண்டு சென்றான்.

வரும் வழியிலேயே அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து கூட்டி வந்தவன் வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான்.

“இறங்கு கிருஷ்ணா பிருந்தாவை கூட்டிட்டு போகனும் இல்ல” என்று செண்பகம் கூறியதும்

சட்டென “இல்ல இல்ல ஆண்டி நான் விஷ்ணுக்கு கால் பண்றேன் இருங்க” என்று விஷ்ணுவிற்கு அழைத்தாள்.

‘ஓ.. மேடமுக்கு நான் தொடுறது பிடிக்கல… ஓகே… ஒகே… இன்னைக்கு எத்தனை மணி‌ ஆனாலும் உன் தம்பி வரமாட்டானே!!! என்ன பண்ண போற?” என்று உள்ளுக்குள்‌ சிரித்த கிருஷ்ணா ஸ்டியரிங்கில் தாளமிட்டபடி அவளை கவனித்தான்.

அதற்கு ஏற்றார் போலவே “அக்கா நான் வந்துக்கிட்டே இருக்கேன்… ஒரு அரைமணி நேரத்துல வந்துடுவேன்” என்று விஷ்ணு‌ இடியை இறக்க

ஒற்றை புருவத்தை தூக்கி என்ன என்றவனை பல்லை கடித்து முறைத்தாள் பிருந்தா. “டேய் சதிகாரங்களா… எல்லாரும் ஒரே நாள்ல சதி பண்றிங்கடா” என்று முனுமுனுத்தவளின் அருகே வந்தவன் “என்னமா?? என்ன சொன்ன? ஒன்னும் கேக்கல” என்றான்.

அவன் மா என்ற அழைப்பில் குப்பென்று வியர்க்கவும் உப் என்று ஊதி காற்றை வெளியேற்றி “ஒன்னுமே சொல்லல” ‌‌‌‌என்று அழுத்தமாக கூறியவள் “நீ… நீங்க ஆண்டி கூட வாங்க… நானே மேல ஏறிடுவேன்” என்று காரிலிருந்து காலை கீழே வைக்க அவளுக்கு வலியில் கண்கள் கலங்கி நடக்க முடியாமல் தடுமாறினாள்.

அவளின் தடுமாற்றத்தை கவனித்தவன் “உனக்கு இப்போ நான் தொடுறது பிடிக்கலனாலும் பரவாயில்லை பிருந்தா… பல்லை கடிச்சி பொறுத்துக்க… வேற வழி எனக்கு தெரியல…. என்று அவளை இருபுறமும் இறுக பற்றியவன் மெல்ல அவள் நடப்பதற்கு உதவி செய்து மேலே அழைத்து சென்றான். அவளுக்குத்தான் கிருஷ்ணாவின் தொடுகை அவஸ்தையை கொடுத்தது.

இவையனைத்தும் செண்பகமும் கவனித்துக்கொண்டு தான் வந்தார் இவர்களுடைய விஷயத்தில் அரைமனதாக இருந்தவருக்கு கிருஷ்ணாவின் பாசமும் பிருந்தாவின் விலகலும் அவரை ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருந்தது.

வாசலில் கார் சத்தம் கேட்கவும் வெளியே வந்த பர்வதத்தின் கண்களில் இந்த காட்சிகள் பளிச்சென பட.

ஏய் பிருந்தா என்ன இது? யார் இவன்? இரெண்டு பேரும் இப்படி தான் உரசிக்கிட்டு போவிங்களா..? சே பாக்கவே கண்றாவியா இருக்கு” என்று வார்த்தைகள் நாராசமாய் வந்தது.

“பெரியம்மா” என்று பிருந்தா கோவத்தில் பற்களை கடிக்க கிருஷ்ணாவின் முகம் இறுகியது.

இதை கேட்ட செண்பகத்திற்கோ கோவம் வர “முதல்ல நீ யார் மா இவ்வளவு கேவலமா பேசுற??… ஒரு பொம்பள புள்ளைய இப்படிதான் அசிங்கமா கேட்பியா?” என்றார் காட்டமாக

“நீங்க உங்க பசங்களா கேட்காமா இருக்கலாம்… எங்க வீட்டு பொண்ணு இப்படி வந்தா கேட்கத்தானே செய்வோம்” என்று பர்வதம் வரிந்துக் கட்டிக் கொண்டு வந்தார்.