மதுவின் மாறன் 15 & 16

அத்தியாயம் 15
லண்டனில் தன் ஆன்சைட் வேலை முடிந்து வாணி பெங்களூர் வந்திருந்த நேரம் அது. அவள் தோழமைகள் அனைவரும் அவரவர் வாழ்வில் படு பிசியாய் இருந்த வேளை, எவரும் பெங்களூரில் இல்லாது சென்னை மற்றும் ஆன்சைட்டில் தங்கியிருந்ததால் தனித்து விடப்பட்டாள் வாணி.
பெங்களூரில் தன்னுடன் பணிபுரியும் ஒரு பெண்ணின் அறையே காலியாய் இருப்பதாய் உரைக்க, அவ்விறையிலேயே அப்பெண்ணுடனேயே தங்கியிருந்தாள் வாணி.
அன்று வாரயிறுதி நாளில் வாணியுடன் தங்கியிருந்தப் பெண் அவளது ஊருக்கு சென்றிருக்க, அலுவலக வேலை இருந்தமையால் சென்னைக்கு செல்லாது அவளது அறையில் தனித்திருந்தாள் வாணி.
சனிக்கிழமை காலை ஷிப்ட் பார்க்க செல்லும் போதே சிறிது காய்ச்சலாய் உணர்நதவளின் உடல் சாயங்காலம் வீடு திரும்பும் வேளை கொதிநிலையில் இருந்தது. அதன் காரணத்தால் கம்பெனி வண்டியிலிருந்து இறங்கி தனதறைக்கு நடந்து செல்லும் வழியிலேயே மயங்கி விழுந்திருந்தாள்.
அவள் மயங்கி விழுந்திருந்தது மருத்துவமனையின் அருகிலேயே என்பதால் அவளை அங்கேயே அனுமதித்திருந்தனர் அந்நேரம் அச்சாலையை கடந்த சில பேர்.
மருத்துவமனையில் ஒரு அறையில் தங்க வைத்து அவளுக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளித்து டிரிப்ஸ் ஏற்றியிருந்தார் மருத்துவர்.
அவளின் கைபையை துழாவி எவருக்கு தெரிவிக்கலாமென நர்ஸ் பார்த்துக் கொண்டிருக்க, அதில் அவளின் கைபேசி நம்பர் லாக் முறையில் பூட்டப்பட்டிருந்தாலும் முன் பக்க டிஸ்பிளேவில் எமர்ஜென்சி நம்பரென அப்பா என போட்டு ஒரு நம்பர் இருப்பதை பார்த்தவர் அந்நம்பருக்கு அழைத்து தகவல் தெரிவித்திருந்தார்.
மறுபக்கம் கேட்டிருந்த வாணியின் தந்தை செல்வத்திற்கு மினி ஹார்ட் அட்டாக்கே வந்த நிலை. தன் பிள்ளைக்கு சிறு பிரச்சனை என்றாலும் சென்னையிலிருந்து பெங்களூருக்கு ஓடோடி வரும் செல்வம், இன்று தன் மகள் எவரும் கவனிக்க ஆளின்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்கும் நிலை அவரின் இதயத்தை வெகுவாய் வலிக்க செய்தது. அவரை மீறி அவரின் கைகள் நடுக்கமுற்றது.
உடனே கிளம்பி வருவதாகவும் அதுவரை வாணியை அருகிலிருந்து கவனித்துக் கொள்ளுமாறு அந்த நர்ஸிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டவர் உடனே சென்னை கிளம்ப ஆயத்தமானார்.
அவருக்கு இந்த அழைப்பு வந்த நேரம் அவர் வேலை விஷயமாய் வெளியில் இருந்தமையால் வாணியின் தாய் நீலாமதியிடம் விவரத்தை கூறாது, வாணிக்கு தீடீரென இரண்டு நாட்கள் விடுப்பு அளித்திருப்பதாகவும் ஆகையால் அவள் சென்னை வர விரும்புவதாகவும், தான் சென்று அவளை அழைத்து வரப்போவதாகவும் உரைத்தார் அவர். இது வழமையாய் நிகழும் நிகழ்வாதலால் நீலாமதியும் பெரிதும் கேள்விகள் கேட்காது செல்வத்தை பெங்களூருக்கு அனுப்பி வைத்தார்.
அங்கு பெங்களுரில் வாணி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை அறையானது இரு படுக்கை கொண்டது. ஆனால் இரு படுக்கைக்கும் இடையில் தடுப்பு இருந்தது. இங்கிருப்பவர் அங்கிருப்பவரை காணவியலாது.
மற்றொரு மெத்தையில் ஒரு வயதானவர் வயிற்று பிரச்சனைக்காக ஒரு நாள் சிகிச்சைக்காக தங்கியிருந்தார்.
நர்ஸ் வெளியில் வந்து செல்வத்திடம் கைபேசியில் உரைத்துவிட்டு வாணியை ஒரு எட்டு பார்த்து நகர்ந்துவிட, சிறிது நேரத்தில் வாணியின் மயக்கம் சற்றாய் தெளிய, அரை மயக்கத்தில் இருந்தவள் “அப்பா.. அப்பா… ” என முனங்கவாரம்பித்தாள்.
காய்ச்சலால் ஏற்பட்ட தலைவலியும் உடல் வலியும் உண்ணாது வேலை பார்த்திருந்த நிலையும் அவளை முழுதாய் தெளியவிடாமல் தடுக்க,
வலியின் காரணமாய் கண்ணில் வழிந்த நீருடன் அரை மயக்கத்தில் முனங்கிக் கொண்டிருந்தாள் அவள்.
இதை மறுபுறம் வயதானவருடன் அமர்ந்திருந்த அவரின் மகனுக்கு கேட்க, “யாருப்பா அது? அங்கே இருக்குறது?” எனக் கேட்டு அவன் அம்மெத்தையை பார்க்க எழ,
“அது ஒரு சின்ன பொண்ணுப்பா… இப்ப நீ டாக்டர் பார்க்க போனப்ப மயக்க நிலையிலே வந்துச்சு” என்றவனின் தந்தை உரைத்ததை காதில் வாங்கிக் கொண்டே தடுப்பை தாண்டி அந்த மெத்தைக்கு சென்றான்.
அம்மெத்தையில் அவளை கண்ணுற்ற நொடி அவன் மனம் துடிப்பது பன்மடங்காக்கியது.
அவளை இதற்கு முன் கண்ட நாட்கள் நினைவிலாடியது அவனுக்கு.
ஆனால் அவளின் ஊர், அவளின் பெயர், அவளின் உற்றார் உறவினர்கள் என எவரையும் தெரியாது அவனுக்கு.
சில நிமிடங்கள் தான் அவளை கண்டிருந்தான் அவனின் முந்தைய சந்திப்பில். “மறக்க கூடிய நாட்களா அது” எண்ணிக் கொண்டான் மனதில்.
அதன் பிறகு அவளை இவன் நினைக்காத நாளில்லை என்று தான் கூற வேண்டும். அவளை பிரிதொரு நேரம் காண நேர்ந்தால் அவளிடம் மன்னிப்பும் நன்றியும் கேட்க வேண்டும் என பல நாட்கள் எண்ணியிருக்கிறான்.
அவளின் விழி நீர், அவள் வலியில் செய்யும் முணங்கல், அப்பா அப்பா என்ற அவளின் பிதற்றல்… ஏனோ அவனின் அடிவயிறு வரை ஓர் வலியை உண்டு செய்தது.
அவளை இந்நிலையில் காணயியலவில்லை அவனால்.
அவள் தனக்கு வெகு நாட்களாய் பரிச்சயம் என்பது போன்றதொரு எண்ணம். நீண்ட நாட்கள் தேடிக் கிடைத்த பொக்கிஷம் போன்றதொரு பரவசம். தனக்கு அவள் மனதிற்கு நெருக்கமான ஓர் உறவு என்றொரு ஆழமான நேசமிகுந்த உணர்வு என அவனை கலவையாய் தாக்கியது அவளை கண்ட நொடி.
இக்கலவையான உணர்வு அவனை நிற்கவிடாமல் கால்களை வலுவிழக்கச் செய்ய, அந்த மெத்தையின் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டான்.
அவள் முகத்தை உற்று நோக்கினான். சாதாரண அழகு!! அதுவும் மருந்தின் தாக்கத்தில் வலியின் மிகுதியில் சோர்ந்து இருந்த அந்த முகம் தன்னை ஏன் வெகுவாய் கவர்கிறது?? என விளங்கிக் கொள்ள முடியவில்லை அவனால்.
அவளின் கைபற்றி அவள் வலி போக்க அவ்வலிக்கு மருந்தாக பரபரத்தது அவனுக்கு. சரியாய் அந்நேரம் மெத்தையின் அருகில் இருந்த அவன் கையின் மீது அவளின் டிரிப்ஸ் ஏறிய கைகள் பட, தன் கைகளுக்குள் அக்கையை பொதித்துக் கொண்டான். அவனையும் மீறிய செயலது.
அவளின் கையை தன் கைக்குள் வைத்த நொடி, “அப்பா” என்றுரைத்திருந்தாள் அவள். சிறு சிரிப்பு அவளின் இதழில்.
அவனின் ஸ்பரிசம் அவளின் தந்தையின் ஸ்பரிசமாய் அவளுக்கு தோன்ற, ஆழ் நிம்மதி அவளின் முகத்தை நிறைக்க அரை மயக்க நிலையிலிருந்தவள் முழு தூக்க நிலைக்கு சென்றாள்.
அவளின் நிம்மதி ஏனோ இவனையும் தாக்க சிறிது சமன்பட ஆரம்பித்தது இவனின் மனது. ஆனால் அவளை விட்டு செல்ல மட்டும் மனம் வரவில்லை அவனுக்கு.
“வெற்றி” அழைத்தார் அவன் தந்தை.
மனமில்லாது அவள் கையிலிருந்து தன் கையை பிரித்தெடுத்து சென்றான்.
அதன் பின் தன் தந்தைக்கு தேவையானதை கவனித்தவன், இந்த பெண்ணிடம் தன் மனம் விசித்திரமாய் நடந்துக் கொள்வதை எண்ணி தன்னையே திட்டிக் கொண்டவன் அவள் பக்கம் செல்லாதிருந்தான்.
அன்றிரவு அவனின் தந்தை டிஸ்சார்ஜ் ஆக ரெடியான நேரம் ஒரு முறையேனும் அவளை கண்டுவிட்டு செல்லேன் என அவன் மனம் பரபரக்க, தன் தந்தையை வரவேற்பறையில் அமர வைத்தவன், “இங்க உட்காருங்க இதோ இப்ப வரேன்ப்பா” என்றுரைத்து அவளை காண சென்றான்.
அவன் அவளின் மெத்தையினருகில் நின்று அமைதியாய் உறங்கும் அவள் முகத்தையே பார்த்திருந்த நொடி நுழைந்தார் வாணியின் தந்தை செல்வம்.
உள்நுழைந்தவர் கண்கள் வாணியை மட்டுமே நோக்கியிருக்க, வாணியினருகில் சென்று அவள் முகத்தை வருடி பார்த்திருந்தவர், அவளுக்கு ஒன்றுமில்லை என அவளை முழுதாய் பார்த்து உணர்ந்து மனது சமன்பட்டவுடன் கண்களை சுற்றிப் பார்க்க, அங்கே மாறன் நிற்கவும்,
“நீங்க யாரு?? நீங்க தான் என் பெண்ணை ஹாஸ்பிட்டல்ல சேர்த்தீங்களா??” என்று கேட்க,
அது வரை அவர் யாரென யோசித்திருந்து அவரின் செயலை ஓர் பொஸஸிவ் உணர்வுடன் பார்த்திருந்தான் மாறன்.
ஆம் பொஸஸிவ் உணர்வு, “யார் இவர்?? இவள் மீது என்ன அவ்வளவு உரிமையா இவர்க்கு?? அவர் கண்ணுல அவளோ பாசம் தெரியுதே” என பலவகையான எண்ணங்கள் மாறன் மனதில் ஓடிட, “ம்ப்ச் எனக்கு ஏன் இவர் அந்த பொண்ணை அன்பா தொட்டு உணர்ந்து பார்க்கிறது அப்படி கடுப்பை ஏத்தது” என யோசித்திருந்தவன் அவரின் என் பொண்ணு என்ற பதத்தில் “ஓ அவளோட அப்பாவா” என்று ஆசுவாசமானான்.
அவரின் கேள்விக்கு பதிலுரைப்பதற்கு வாய் திறந்தவன், அவளை சில நொடிகள் பார்த்து விட்டு, “உங்க பொண்ணை எனக்கு கட்டி கொடுக்குறீங்களா??” என்று கேட்டிருந்தான்.
அத்தியாயம் 16
இங்கே கதையை கூறிக் கொண்டிருந்த வாணியிடம்,
“என்னது… பாரத்ததும் உங்கப்பா கிட்ட பொண்ணு கேட்டுட்டாரா??” என அதிர்ச்சியாய் ஆஷிக் கேட்க,
“நிஜமாவாடி” என மஹாவும் அம்முவும் கேட்க,
“சீரியஸ்ஸா அவங்க அப்பாட்ட அப்படி கேட்டீங்களா மாறன்” என ஆச்சரியமாய் கேட்டான் இளா.
“அய்யோ அங்கிள் ஒரு வழி பண்ணியிருப்பாரே உங்களை… என்னைய ஃப்ரண்ட்னு ஏத்துக்க வைக்கவே கேபி படாதபாடு பட்டாளே” என ஆஷிக் பேச,
“அதானே!! அங்கிள் எப்படி ரியாக்ட் பண்ணாங்க??” என மஹா கேட்க,
“மாறனுக்கு செமத்தியா அடி விழுந்துச்சோ… காதல்ல இதெல்லாம் சகஜமப்பானு தூசு தட்டி விட்டுட்டீங்களோ” என சிரிப்பாய் இளா வினவ,
“ஷ்ப்பா என்னைய பேச விடுங்க எல்லாரும். நீங்களே கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு போனா… நாங்க எப்படி பதில் சொல்றது” என கூறிய வாணி,
“எனக்கு இதெல்லாம் வெற்றி சொல்லி தான் தெரியும். நான் அப்ப தான் அரை மயக்கம் பாதி தூக்கம்னு இருந்தேனே” என்ற வாணி,
“அப்புறம் என்ன நடந்துச்சுனு என்னவர் சொல்லுவார்” என்று கேலி புன்னகையுடன் வாணி கூற,
“ஆஹா வாணி ரியாக்ஷன் பார்த்தா அப்ப கண்டிப்பா அடி விழுந்திருக்கும் போலயே” என ஆஷிக் கிண்டலடிக்க,
அனைவரும் சிரித்திருக்க,
மாறன் பேச்சை தொடங்க அவனை பார்த்திருந்தினர்.
வாணி தந்தையின் எதிர்வினையை கூறலானான் மாறன்.
அன்று…
“எனக்கு உங்க பொண்ணை கட்டிக் கொடுக்கறீங்களா??” என மாறன் கேட்ட அடுத்த நொடி,
ஒரு நிமிடம் அதிர்ந்து உறைந்து போனார் செல்வம்.
“யார் இந்த பையன்?? திடீர்னு ஏன் இப்படி கேட்கிறான்?? ஒரு வேளை நம்ம பொண்ணை லவ் பண்றானோ?? நம்ம பொண்ணும் இவனை லவ் பண்ணுதோ??” இவ்வாறு எண்ணும் போதே அவரின் மனம் வேகமாய் துடிக்க,
“சே சே என் பொண்ணு கண்டிப்பா என்னை மீறி எனக்கு பிடிக்காத விஷயம் எதுவும் செய்ய மாட்டா. நான் என் பொண்ணை பத்தி இப்படி யோசிக்கிறதே தப்பு” என பலவகையான எண்ணங்கள் அவரை சுழன்றடிக்க, மாறன் முகத்தையே எரிப்பது போல் கடுமையாய் பார்த்திருந்தார் செல்வம்.
அவரின் பார்வையின் காட்டத்தில், “தான் கேட்டது எவ்வளவு அபத்தமானது” என்று உணர்ந்தான் மாறன்.
அவரின் பார்வையில் அப்பெண்ணை அவர் தவறாய் ஏதும் எண்ணிவிட்டாரோ அதனால் அவளுக்கு ஏதும் தீங்கு நிகழ்ந்திடுமோ என பதறிய மாறன்,
“சாரி சார். உங்க பொண்ணு பேரு கூட எனக்கு தெரியாது. அவங்க என்னை லவ் பண்றாங்களோனுலாம் எதுவும் நினைச்சிடாதீங்க. அவங்களுக்கு நீங்கனா உயிர். உங்க வார்த்தை மீறி எந்த விஷயத்தையும் செயல்படுத்தனும்னு கூட அவங்க நினைக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு அவங்க ஒரு அப்பா பொண்ணு”
என அவளை காப்பாற்றுவதாய் எண்ணி மாறன் மீண்டும் குழப்பத்தை விளைவிக்க,
“ஹலோ முதல்ல நிறுத்துங்க. நீங்க யார்னே எனக்கு தெரியாது. உங்க பேச்சை கேட்டு என் பொண்ணை தப்பா நினைக்கிறதுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்லை. முதல்ல என்ன தைரியத்துல என்கிட்ட இப்படி கேட்டீங்க. என் பொண்ணு பேரு தெரியாதுனு சொல்றீங்க. ஆனா அவளுக்கு என்னைய ரொம்ப பிடிக்கும் அப்பா பொண்ணுனு சொல்றீங்க… என்ன அவளை லவ் பண்றேனு அவ பின்னாடி சுத்திட்டு இருக்கீங்களா??” என தன் கோபத்தை இழுத்து பிடித்து கடுமையான குரலில் அதட்டி செல்வம் கேட்க,
சற்று வெலவெலத்து தான் போனான் மாறன்.
செல்வத்தின் உடல்வாகு சற்று ஆஜானுபாகுவாய் பார்க்கும் எவரையும் மிரட்சியடைய செய்யும். அவ்வாறு இருப்பவரிடம் நட்பாய் பழகும் வாணியின் தோழமைகளே பேச தயங்குவர். இதில் மாறன் பயம் கொள்ளாது இவ்வாறு கேட்டதே அவருக்கு ஆச்சரியமளிக்க, ஏனோ அவரின் உள்ளுணர்வு மாறனை நல்லவனாய் அவருக்கு உணர வைக்க, தன் கோபத்தை கட்டுபடுத்தி உரையாற்றிக் கொண்டிருந்தார் செல்வம்.
“கொஞ்சம் வெளில வாங்க அங்கிள். நான் தெளிவா உங்ககிட்ட சொல்றேன். இங்க பேசினா அவங்களுக்கு டிஸ்டபெண்சா இருக்கும்” என்று மாறன் கூற,
மாறனின் சார் என்ற விளிப்பு அங்கிள் ஆனதையும் வாணியின் நலன் கருதி சற்று தள்ளி நின்று பேசலாம் என்ற அவனின் அக்கரையையும் குறித்துக் கொண்டவர் அவனுடன் அறைக்கு வெளியே செல்லலானார்.
வெளியில் சென்று மேஜையில் அவர் அமர்ந்ததும், “ஆமா உங்க பொண்ணு பேர் என்ன அங்கிள்” என மாறன் கேட்க,
அவனை முடிந்த மட்டும் நன்றாய் முறைத்தவர், “மதுரவாணி” என்றார்.
“இப்ப இங்க என் அப்பா ட்ரீட்மென்ட்காக வந்தேன் அங்கிள். அப்ப தான் பக்கத்து பெட்ல மதுவ பார்த்தேன்” என்று மாறன் கூற,
“என்னது பார்த்ததும் காதலா??” என்று ஜெர்க் ஆன செல்வம், அவனின் மது என்ற விளிப்பில் எரிச்சலானார்.
ஏனென்றால் மது என்று வாணியை அழைப்பது அவர் மட்டுமே. அவரறியாதது அலுவலகத்தில் சிலர் அவளை அவ்வாறு அழைப்பது. ஆக அவரை பொறுத்த வரை அந்த அழைப்பு அவருக்கு மட்டுமே உரியது. மற்றவர்களுக்கு அவள் வாணி மட்டுமே.
“அவளை நீங்க வாணினு சொல்லலாம்” என கோபமாய் அவர் உரைக்க,
“இல்ல அங்கிள் மது தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அப்படியே கூப்பிட்டுக்கிறேனே” என கண்களை சுருக்கி கெஞ்சுவது போல் அவன் கேட்க,
“ஆமா இங்க ஒருத்தன் உன் பொண்ணை பொண்ணு கேட்டுட்டு நிக்கிறான். நீ பெயர் உரிமை போராட்டம் பண்ணிட்டிருக்க… சட்டு புட்டுனு பேசி முடிப்பியா” என செல்வத்தின் மைண்ட் வாய்ஸ் அவரை ஏகமாய் கடிந்துரைக்க,
“சரி நீங்க முதல்ல விஷயத்தை சொல்லுங்க” என்றார் செல்வம்.
“இதுக்கு முன்னாடி இரண்டு நேரம் மதுவ பார்த்திருக்கேன். ஆனா தூரமா அவங்க பேசுறதை தான் கேட்டுருக்கேன். ஆனா அதுவும் சில நிமிஷங்கள் தான். அதனால அவங்களுக்கு என்னைய தெரியாது.
இப்ப மதுவ பார்த்துட்டு இருந்த இந்த நொடி தான் அவங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவு செஞ்சேன்” என்று மதுவின் மீதான தன் எண்ணங்களை தனது முந்தைய சந்திப்பின் நிகழ்வுகளை என மாறன் செல்வத்திடம் உரைத்திருந்தான்.
இன்று…
“அன்னிக்கு அப்பா கிட்ட சொல்லிட்டு மதுவ பார்க்க போனேன்ல. அவ முகத்தை பார்த்தேன். அவளை விட்டு போக மனசேயில்லை. அவ கூடவே இருந்துடனும் போல தோணுச்சு. ஒரு வார்த்தை நேருக்கு நேர் பேசினதில்ல. இது என்ன இப்படி ஒரு உணர்வுனு விளங்க முடியாம தான் பார்த்துட்டு இருந்தேன். என் வாழ்க்கை முழுசுக்கும் அவ கூடவே வேணும்னு மனசு சொல்லிச்சு. ஆனா எப்ப அவ அப்பாவின் செயல்லயே எனக்கு பொஸஸிவ்னஸ் வந்துச்சோ…. இவளை விட்டுறாதா மாறானு மனசு கூவிச்சு. இப்ப அப்படியே விட்டு போய்டேனா அவ்ளோ தான், அவ என்னைய விட்டு போய்டுவாளோனு மனசு வலிக்க ஆரம்பிச்சிடுச்சு. அவளுக்காக என் மனசு ஏங்கி தவிக்குதுனு புரிஞ்சிக்கிட்டேன். இப்படி நிமிஷத்துல என் மனசுல நடந்த உணர்வுகளின் போராட்டம் தான் மாமாகிட்ட என்னைய அப்படி கேட்க வச்சிது” என்று மாறன் தன்னிலையை விளக்கி கொண்டிருந்தான்.
“எப்படி இப்படி நம்பவே முடியலை மாறன். ஆனா உங்க ஃபீலிங்க்ஸ் எங்களுக்கு புரியுது” என ஆஷிக் உரைக்க,
“சரி அங்கிள் என்ன சொன்னாங்க அணணா” என்று கேட்டாள் அம்மு.
அன்று…
வெற்றியின் பேச்சை பொறுமையாய் கேட்டிருந்த செல்வத்திற்கு இது மாறன் மதுவை பார்த்ததும் வந்த காதலல்ல என்றும், வெகு நாட்களாய் அவன் மனதின் தேடல் கிடைத்துவிட்ட ஆசுவாசத்தில் உணர்ந்திட்ட நேசமாய் இருக்கலாம் என எண்ணிய செல்வம்,
“சரி தம்பி. நீங்க சொல்றதெல்லாம் சரி. என் கண்டஷனுக்கு நீங்க ஒத்து வந்தா உங்களுக்கு என் பொண்ணை கட்டி தரேன்” என்றார் செல்வம்.
மாறனுக்கு இது பெரும் அதிர்வாய் இல்லை. இப்படி திடீரென்று பெண் கேட்டவனை உதைக்காமல் அவர் இவ்வாறு தன்மையாய் பேசுவதே ஆசுவாசத்தை தந்தது.
“நீங்க எந்தளவுக்கு என் பொண்ணை கட்டிக்கிறதுல உண்மையா இருக்கீங்கனு எனக்கு தெரியலை. ஏற்கனவே ஒரு ஏமாற்றத்தை சந்திச்சிருக்கீங்க வாழ்க்கைல. அது உங்களை பக்குவபடுத்தியிருக்கும்னு நினைக்கிறேன். இப்ப நடந்த எதுவும் என் பெண்ணுக்கு தெரிய கூடாது. இரண்டு வருஷம் இப்படியே உங்க வாழ்க்கைய பார்த்துட்டு இருங்க. என் பொண்ணும் அவ வாழ்க்கைய வாழட்டும். இந்த இரண்டு வருஷம் கழிச்சு இன்னும் என் பொண்ணை தான் கட்டிக்கனுங்கிற எண்ணம் உங்க மனசுல இருந்துச்சுனா அப்ப வந்து என்கிட்ட பேசுங்க. அப்ப முடிவு பண்ணிக்கலாம். அது வரை என் பொண்ணை தொந்தரவு செய்ய மாட்டீங்கனு நம்புறேன்” என்று அவர் பேசிக் கொண்டிருந்த நேரம் மாறனை தேடி அவனின் தந்தையே வந்துவிட்டார்.
“எவ்வளவு நேரம்டா உனக்காக அங்கேயே உட்கார்ந்துட்டு இருக்கிறது.” என்று அவனின் தந்தை கேட்க,
“அப்பா இவங்க தான் நம்ம பக்கத்து பெட்ல இருந்த பொண்ணோட அப்பா. இவர்கிட்ட பேசிட்டு இருந்தேன். நீங்க போய் கார்ல உட்காருங்க, நான் இதோ வந்துடுறேன்” என்று தனது கார் சாவியை தந்தையிடம் வழங்கி அவரை அவ்விடம் விட்டு அகலசெய்ய அவன் முனைய,
அவரோ மதுவின் தந்தையிடம் நலம் விசாரித்து கொண்டிருந்தார்.
இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்த பின் தன் தந்தையை அனுப்பிய மாறன்,
“நீங்க சொல்றது புரியுது அங்கிள். கண்டிப்பா நான் காத்திருந்து வருவேன் என் மதுக்காக. ஆனா கண்டிப்பா முறையா பொண்ணு பார்க்கிற அன்னிக்கு தான் மதுகிட்ட பேசுவேன். அதுக்கு முன்னாடி அதுக்கான எந்த முயற்சியும் நான் எடுக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டான் மாறன்.
செல்வத்தை பொறுத்தவரை அவன் திரும்ப வர மாட்டான் என்றே எண்ணினார். ஆயினும் தன் மகளுக்கு போதைய பாதுகாப்பு தேவை என்றெண்ணியவர் அவளை சென்னைக்கு அழைத்து சென்றுவிட்டார்.
அவளின் உடல்நிலையை கூறி கேட்டவுடன் அலுவலகத்திலும் அவளின் இட மாறுதலுக்கு ஒத்துக் கொண்டனர்.
இங்கே…
ஆஆஆஆ வென ஆச்சரியமாய் மாறன் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்த தோழமைகள் அனைவரும் அடுத்து அடுத்து மாறன் மேல் கேள்விகளாய் தொடுக்க ஆரம்பித்தனர்.
“அங்கிள் அப்படி விட்டுட்டு போற ஆளு இல்ல மாறன். எனக்கு தெரிஞ்சு கண்டிப்பா அடுத்து உங்களை பத்தி முழுசா பேக்ரவுண்ட் வெரிபிகேஷன் பண்ணியிருக்கனும்” என்று ஆஷிக் கூற,
“வாவ் ஆஷிக்கு… செம்மயா புரிஞ்சி வச்சிருக்கடா அப்பாவ” என குதூகலித்தாள் வாணி.
“ஆமா எங்க மேரேஜ் முடிஞ்ச பிறகு தான் இவர் இந்த கதைய என்கிட்ட சொன்னாரு. அப்ப நான் அப்பாகிட்ட கேட்டேன். அப்ப சொன்னாங்க… சென்னை வந்ததும் இவரை பத்தின முழு டீடைல்ஸூம் டிடெக்டிவ் வச்சி வாங்கிட்டாங்களாம்.
“இந்த காலத்துல இப்படி ஒருத்தன் வந்து சொல்லும் போது எப்படிமா நம்புறது. இதனால உனக்கு என்ன பிரச்சனைலாம் வருமோனு தான் பயமா இருந்துச்சு. அங்கே மாப்பிள்ளை தம்பி அப்படி சொல்லும் போது அமைதியா இருந்த காரணம், நம்ம இருந்தது வேற ஊருல. அங்க இருந்து எகிறி குதிச்சு பேசி சண்டை போடுறது நமக்கு சேஃப் இல்ல. அவருக்கு அங்க பெரிய ஆளுங்கலாம் கூட்டு இருக்கலாம். அதனால எதுனாலும் நம்ம ஊருல வச்சி பார்த்துக்கலாம்னு தான் உன்னை இங்க என் பார்வைக்கு கூட்டிட்டு வந்தேன். அதுக்கு அப்புறம் தான் அவரை பத்தி விசாரிச்சேன். உன்னைய வச்சி எதுவும் தப்பா ப்ளான் செஞ்சியிருந்தா ஒரு வழி ஆக்கிடனும்னு நினைச்சி தான் விசாரிக்க என் சிஐடி ஆபிஸரா இருக்க ஃப்ரண்ட் கிட்ட சொன்னேன். அவர் தான் டிடெக்டிவ் வச்சி டீடெய்ல்ஸ் கலெக்ட் செஞ்சி கொடுத்தாருனு” அப்பா சொன்னாங்க என்றாள் வாணி.
“அண்ணா இரண்டு வருஷம் அதுக்கப்புறம் வாணிக்காக காத்திருத்தீங்களா?? அதுவரை அவளை பார்க்காம இருந்தீங்களா?? அவளுக்கு மேரேஜ் முடிவாகுற வரைக்கும் உங்களை பத்தி எதுவும் தெரியாம இருந்திருக்கே” என வியப்பாய் வேணி கேட்க,
மென்மையாய் சிரித்த மாறன், “அன்னிக்கு பிறகு மதுவ பத்தின விபரங்கள் சேகரிக்க ஆரம்பிச்சேன். மதுவோட எஃப் பி ஐடி மட்டும் வாங்கிட்டா எல்லா தெரிஞ்சிடும்னு நினைச்சா, அது கண்டுபிடிக்க வழியே இல்லாம இருக்க, வேற வழியில்லாம் மாமாவோட எஃப் பி அக்கவுண்ட்கே ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து அவ எஃப் பி குள்ள போகலாம்னு பார்த்தா, மேடம் அவங்க அப்பா வோட மியூசுவல் ப்ரண்ட்டா இருந்தா கண்டிப்பா அந்த ரெக்வெஸ்ட் அக்செப்ட் பண்றதில்லனு ஒரு பாலிசி வச்சிருந்தாங்க போல. ஏன்னா அவங்க அப்பா யாரு ரெக்வெஸ்ட் கொடுத்தாலும் ஊருகாரங்கனா அவங்க சாமி கும்பிடுறவங்கனா அக்செப்ட் பண்ணிடுவாங்களாம். கடுப்பாகி இவ தான் நமக்குனா இவளை பத்தி தானாவே தெரிய வரும்னு விட்டுட்டேன். அப்ப தான் இவ கூட படிச்ச பையன் ஒரு கம்பெனி மீட்டிங்ல தானாவே எனக்கு ப்ரண்ட்டாகி ஏதோ பேசும் போது அவனாவே இவ பேரை சொல்ல, அன்னிக்கு எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவேயில்ல. இவ தான் என் மனைவினு நான் தீர்க்கமா முடிவு செஞ்சா நாள் அது. இப்படி நம்ம எதிர்பார்க்காத சமயம் தானாவே எல்லாம் நடந்து நம்ம தேடினது நம்ம கை தேடி வருதுனா நம்ம தேடல் சரியானதுனு தானே அர்த்தம்.”
“தூரமா இருந்து எஃப் பி மூலமா அவளோட ஆக்டிவிடிஸ் மட்டும் பார்த்துகிட்டு இருந்தேன். உண்மைய சொல்லனும்னா நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமா அவ மேல எனக்கு காதல் மலர்ந்து வளர்ந்துட்டு இருந்த காலங்கள் அது” என மாறன் அன்றைய நாளுக்கே சென்று தன் நினைவுகளை பூரிப்பாய் ரசித்துணர்ந்து உரைத்திருக்க,
எதிரில் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் வாணி.
“என்கிட்ட கூட இவர் இவ்ளோ ஃபீல் பண்ணி சொல்லலைப்பா” என அவளின் தோழமைகளிடம் கூறி அவனை பார்த்திருக்க,
“இதுக்கு தான் இப்படி ஒரு நட்பு கூட்டம் வேணுங்கிறது” என்றான் ஆஷிக்.
அந்த சமயம் ஹோட்டலின் ஆட்கள் வந்து நேரமாகிவிட்டது இடத்தை காலி பண்ணுங்க என்று நிற்க,
அனைவரின் மனதிலும் சுகமான நினைவுகளுடன் பிரிவின் பாரமும் ஏறிக் கொண்டது.
“அங்கே ரஹாவும் என் பையனும் எனக்காக காத்துட்டு இருப்பாங்க. எப்பவும் ஈவ்னிங் போனதும் அவங்களோட பார்க்ல ஒரு வாக் போவேன்.” என ஆஷிக் கூற,
“மதி சாப்பிட்டாரோ இல்லையோ… கொஞ்ச நாளா வேலை அதிகம்னு வீட்டுக்கு வந்தப்புறமும் லாகின் பண்ணிட்டு இருக்காரு. போய் அவருக்கு ஏதாவது வேணுமானு பார்த்து செஞ்சி கொடுக்கனும்” என்று கூறிய மஹா, “வாங்க யாழி செல்லம் அம்மாகிட்ட வாங்க” என மாறனிடம் இருந்த தன் மகளை வாங்கினாள்.
“எப்படி இருந்தோம்ல பெங்களூர்ல. இப்ப அவங்கவங்க வாழ்க்கை கணவன் குடும்பம் குழந்தைகள்னு அதுலயே ஒன்றி வாழ்க்கை போடுற பாதைல போய்ட்டு இருக்கோம்ல” என வாணி மனதில் தோன்றியதை உணர்ந்து கூற,
அனைவரும் அமைதியாய் தலை அசைத்து புன்னகைத்து அவரவர் இடத்திலிருந்து எழுந்திரித்தனர்.
இளாவிடமிருந்த தங்களது மகனை வேணி கையில் வாங்க முற்பட, “நீ ரிலாக்ஸ்ட்டா வா அம்ஸ். அவன் அழுதானா நானே உன் கிட்ட கொடுக்குறேன்” என கூற,
இதை பார்த்திருந்த வாணி, “அதே லவ்ஸ் இன்னும் கண்டின்யூ ஆகுது போல இளா அண்ணா. உங்க லவ்ஸ் முழுசா கூட இருந்து பார்த்த ஒரே ஆளு நானு பெருமையா சொல்லிப்பேன்” என இல்லாத காலரை தூக்கிவிட்டபடி வாணி கூற,
“அடியேய் மானத்தை வாங்காதடி” என வாணியின் கையை கிள்ளியிருந்தாள் வேணி.
“ஸ்ஸ்ஸ்ஆஆ… ஏன்டி கிள்ளுற!! உண்மைய தான சொன்னேன்” என்ற வாணி,
“எப்ப குட்டி மதி அரைவ் ஆவாங்க மஹா” என வாணி மஹாவை சீண்ட,
“அண்ணாஆஆஆ நல்லா வளர்த்து வச்சிருக்கீங்கண்ணா அவளை” என மாறனிடம் மஹாவும் வேணியும் ஒரு சேர கூறினார்.
பேசி கொண்டே அனைவரும் ஹோட்டலின் வெளியே வந்திருந்தனர்.
“சரி வாங்க எல்லாரும் சேர்ந்து போட்டோ எடுப்போமென” அழைத்த மாறன் ஒரு க்ரூப்பி எடுத்து இந்நிகழ்வினை பசுமையான நினைவாய் புகைப்படுத்தில் பதித்துக் கொண்டான்.
ஆஷிக் மஹாவை டிராப் செய்துவிட்டு செல்வதாய் உரைத்து கூறிக் கொண்டிருந்த நேரம், அவர்களின் முன் ஒரு கார் வந்து நின்றது.
“அச்சச்சோ என்னைய தேடியே வந்துட்டாரு போலயே” என மஹா கூற,
காரிலிருந்து இறங்கினான் மதி.
“ஹை ஆல். ஹௌ ஆர் யூ? ” என அனைவரையும் பார்த்து கை அசைத்தவன் அருகில் வந்ததும் அனைவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.
“மேடம் ப்ரண்ட்ஸ்ஸ பார்த்ததும் என்னைய மறந்துட்டீங்களா? போன் பண்ணா கூட எடுக்கலை. நான் என்னாச்சோ ஏதாச்சோனு செஞ்ச வேலைய விட்டு பதறி போய் வந்திருக்கேன்” எனக் கூறி மதி மஹாவை முறைக்க,
“நீ மாறவே இல்லடி” என கூறி வாணி சிரித்தாள்.
மதுவை முறைத்த மாறன், “அவங்க எவ்ளோ பயந்து வந்திருக்காங்க நீ காமெடி பண்ணிட்டிருக்க” என கூற,
அமைதியாகி போனாள் வாணி.
பின் மதியும் மஹாவும் பேசிக் கொண்டே விடைபெற்று செல்ல,
அனைவரும் மீண்டும் சந்திப்போமென கூறி அவரவர் இல்லத்திற்கு சென்றனர்.
காரில் ஏறிய வாணி மாறனிடம் பேசாது மௌனமாகவே வர, அவன் அவள் கைபற்ற முற்பட அவள் உதறி தள்ள, “திரும்பவும் ஆரம்பிச்சிட்டாடா… இப்ப சொன்னதுக்கு தான் கோப பட்டுறுப்பாங்க மேடம். வீட்டுக்கு போனதும் சரி பண்ணிடலாம்” என எண்ணிக் கொண்டே காரை இயக்கினான்.
ஆனால் வீட்டில் இதை விட பெரும் பூகம்பம் வெடிக்கப் போவதை அறியவில்லை மாறன்.
— நர்மதா சுப்ரமணியம்