நனிமதுர நங்கை 30 (எபிலாக்)

ஐந்து வருடங்களுக்கு பிறகு

ஜெர்மனி வரதராஜ பெருமாள் முன்பு அமர்ந்திருந்தாள் நங்கை.

என்றும் சிரித்த முகமாய் இருக்கும் பெருமாளின் வதனத்தையே பார்த்திருந்த நங்கை, “உங்களுக்கு பெரிய நன்றி சொல்லனும்” என்றாள்.

“சுந்தர் என்னை காதலிக்கிறது தெரிஞ்சதும் உங்ககிட்ட தான் வந்து என்ன செய்றதுனு கேட்டானாமே! நீங்க தான் என் மூலமா பூ கொடுக்க வச்சி அவனுக்கு நம்பிக்கை கொடுத்தீங்கனு சொல்லுவான். நீங்க அந்த நம்பிக்கையை கொடுக்கலைனா என்னை காதலிச்சிருக்க மாட்டானாம்! என்னை விட்டு விலகி போய்ருப்பான்னு சொல்லுவான். அவனுக்கு அந்த நம்பிக்கையை கொடுத்ததுக்கு நன்றி! எங்களை சேர்த்து வச்சதுக்கு நன்றி!

நேர்ல வந்து தான் நன்றி சொல்லனும்னு இத்தனை வருஷமா காத்திருந்தேன். சுந்தரை நான் கேட்காமலே எனக்கு கொடுத்தீங்களே இப்ப நான் கேட்குறதை கொடுப்பீங்களா?” கெஞ்சும் பார்வையுடன் கேட்டிருந்தாள் நங்கை.

அதே புன்சிரிப்புடன் அவர் நின்றிருக்க,
“எப்ப எது கேட்டாலும் அதே சிரிப்பு தான் உங்களுக்கு. அதுக்கான அர்த்தம் ஆமாவா இல்லையானு நாங்க தான் குழம்பனும்! அப்படி தானே!” என்றவள்,

“என் புருஷன் என்னை எப்படி மாத்தி வச்சிருக்கான் பாருங்க! அவனை மாதிரியே உங்ககிட்ட புலம்பிட்டு இருக்கேன்!” என்று சிரித்தவளின் மேல் மழைத்துளி சரசரவென விழ, சட்டென அங்கிருந்து எழுந்து பெருமாளின் பாதத்தை வணங்கிவிட்டு கோவிலின் உள்ளே செல்ல, மறுபுற கோவில் வாசல் வழியாக சிலர் உள்ளே நுழைந்தனர்.

காமாட்சி அம்மனின் சந்நதி முன்பு தனது மூன்று வயது மகளான நந்திதாவை மடியில் அமர்த்தி விளையாட்டு காண்பித்தப்படி அமர்ந்திருந்த தனது கணவன் சுந்தரராஜன் அருகே சென்றாள் மதுரநங்கை.

“என்ன, வேண்டுதல்லாம் பெருமாள்கிட்ட சொல்லியாச்சா?” என்று சிரித்தபடி கேட்டான் ராஜன்.

“ஹ்ம்ம் எங்க! முழுசா சொல்றதுக்குள்ள மழை வந்து கெடுத்துடுச்சு” என்றவளை சிரிப்புடன் பார்த்தவன், “அந்த வேண்டுதலே வேண்டாம்னு நான் சொல்லிட்டு இருக்கேன். நீ தான் வேணும்னு கேட்டுட்டு இருக்க! பெருமாள் பாவம் புருஷன் விருப்பப்படி செய்றதா இல்ல பொண்டாட்டி விருப்பப்படி செய்றதானு குழம்பி போய்ருப்பாரு” என்று சிரித்தான்.

“நீதான் என் ஆசைக்கு முட்டுக்கட்டை போடுற! வரம் கொடுக்க நினைக்கிற பெருமாளையும் ஏன்டா தடுக்குற” என்று முறைத்தவள்,

“பொண்டாட்டியும் புருஷனும் ஒரு மனசா வேண்டிக்கிட்டா தான் கடவுள் வேண்டுதலை நிறைவேத்துவாராம்! அதனால என்ன செய்வியோ தெரியாது நீயும் இதுக்கு ஒத்துக்கிற சொல்லிட்டேன்” இது தான் முடிவு என்பது போல் கூறியவள், தனது மகளை தூக்க முனைய, குழந்தையோ தந்தையின் சட்டையை பிடித்துக் கொண்டு வர மாட்டேனென அடம் பிடிக்க, “சரியான அப்பா கோந்து!” என்று மகளையும் தந்தையையும் முறைத்தவாறு எழுந்து நின்றாள்‌.

ஹா ஹா ஹா என சிரித்த ராஜனும் மகளை தூக்கி கொண்டு எழும்ப, குடும்பமாய் காமாட்சி அம்மனை தரிசித்து விட்டு, கோவிலை சுற்றி வந்த போது ஆங்காங்கே படப்பிடிப்பு சாதனங்களுடன் அமர்ந்திருந்தவர்களை கண்டனர்.

“சுந்தர் ஏதோ தமிழ் படம் ஷூட்டிங் போலடா” அவர்களை பார்த்தவாறு சொன்னாள் நங்கை‌.

மகளை முன்னே நடக்கவிட்டு அவளை கண்காணித்தவாறே மனைவியுடன் நடந்து வந்துக் கொண்டிருந்த ராஜன், அப்பொழுது தான் சுற்றத்தை கவனித்தான்.

“ஆமா! இங்க தான் ஷூட்டிங் நடக்குது போல! மழைக்காக ஒதுங்க உள்ளே வந்திருக்காங்க. ஹீரோ யாராவது வந்திருக்காங்களா என்ன?” எனக் கேட்டான்.

“தெரியலையே” என்றவாறு பிரகாரத்தை சுற்றி நின்றிருந்தவர்களை பார்த்தவள், முன்னே சென்றிருந்த தனது மகளை ஒருவன் தூக்கி கொஞ்சி கொண்டிருப்பதை பார்த்து, ராஜனின் கையினில் இடித்தாள்.

“நம்ம பாப்பாவை யாரோ தூக்கி கொஞ்சிட்டு இருக்காங்க பாரு” என்றவள், ‌

“இந்த ஆளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குல! இவர் தான் ஹீரோவா இருக்குமோ?” எனக் கேட்டாள்.

“உங்க ஸ்டைலிஷ் தமிழச்சி வாட்ஸ் க்ரூப்ல ஆணிமாவும் அன்னமும் நீயும் எல்லா சீரியலை பத்தியும் சீரியசா டிஸ்கஸ் செஞ்சி சிரிப்பீங்களே, உனக்கே சீரியல்ல நடிக்கிற இந்த பையனை தெரியலையா?” எனக் கிண்டல் செய்தான் ராஜன்.

“என்னது சீரியல்ல நடக்கிற பையனா?” என்று அவனை நோக்கி நடந்தவாறே கேட்டவள், “என்ன தான் இருந்தாலும் டிவில பார்க்கிறதுக்கும் நேர்ல பார்க்கிறதுக்கும் வித்தியாசம் இருக்க தான் செய்யுதுல சுந்தர்” என்றாள்.

தங்களது மகளை தூக்கி கொஞ்சியவாறு நின்றிருந்த அந்த சின்னத்திரை நடிகர் அருகே ராஜன் சென்றதும், குழந்தை அவனிடம் தாவினாள்‌.

“உங்க குழந்தையா? க்யூட் பாப்பா! பாப்பா பேரு என்ன?” என்றவாறு குழந்தையை ராஜனிடம் கொடுத்தான் அந்த நடிகர்.

“நந்திதா” என்றவாறு வாங்கி கொண்டான் ராஜன்.

“நைஸ் நேம்” என்றவனை நோக்கி கை நீட்டியபடி, “ஐம் சுந்தரராஜன்” என்று ராஜன் தன்னை அறிமுகப்படுத்தியதும், “ஐம் சிவா” என்றான் அவன்.

“தெரியும்ங்க சீரியல்ல பார்த்திருக்கோம்! இங்க என்ன மூவி ஷூட்டிங்கா சார்” எனக் கேட்டாள் நங்கை.

“ஆமாங்க” என்றவன், “நீங்க என்ன ஜெர்மனி செட்டில்டா” எனக் கேட்டான்.

“இல்லங்க வேகேஷனுக்கு வந்திருக்கோம். கொஞ்சம் வருஷம் முன்னாடி இங்க தான் நாங்க ஐடி கம்பெனில வேலை பார்த்துட்டு இருந்தோம்” என்றான் ராஜன்.

சில நிமிடங்கள் பேசிவிட்டு சிவாவிடம் இருந்து விடைப்பெற்றனர் ராஜன் குடும்பத்தினர்.

மழை நின்று குளிரை பரப்பிவிட்டிருந்தது‌.

கோவிலில் இருந்து வெளியே வந்து வரதராஜ பெருமாளை பார்த்த ராஜன், “என் பொண்டாட்டி கேட்டதை கொடுத்துடுங்க பெருமாளே! ஆனா அவளை ரொம்ப கஷ்டப்படுத்தாம கொடுங்க! அவ வலியை தாங்கிடுவா, என்னால தான் அவ கஷ்டப்படுறதை தாங்கிக்க முடியாது! அவ கேட்ட மாதிரி பையனாவே கொடுத்துடுங்க‌! அதுக்கான ஆயத்த பணியில் நான் இறங்குறேன்” அதுவரை ரசனையாய் அவனை பார்த்திருந்தவள், அவனின் ஆயத்த பணி என்ற சொல்லில் கையில் இடித்து, “சாமிக்கிட்ட போய் என்ன பேச்சு? பாப்பா வேற கைல இருக்கா” என்று முறைத்தாள்‌.

“பின்ன பிள்ளை வேணும்னா தானா வந்துடுமாடி! நான் ஓவர் டைம் வேலை பார்க்க வேணாமா” என்றவன் கூறி முடிப்பதற்குள், “பெருமாளே!” என்று அவன் வாயை தனது கைக்கொண்டு மூடியவள், “போதும் கிளம்புவோம்! வரோம் பெருமாளே” என்றவாறு அவனை கோவிலின் வெளியே தள்ளிக்கொண்டு சென்றாள்‌.

அவன் கையில் இருந்த நந்திதாவும் தாயின் செயலைக் கண்டு தானும் இணைந்து தந்தையின் வாயை தனது கைக்கொண்டு மூட, குட்டிப்பெண்ணின் செயலில் சிரித்திருந்தனர்  இருவரும்‌.

வாழ்வின் நிகழ்வுகளை அறிந்தவராய் அதே புன்சிரிப்புடன் இவர்களை வழியனுப்பி வைத்திருந்தார் வரதராஜ பெருமாள்.

இருவரும் தாங்கள் தங்கியிருந்த வாடகை அறையை நோக்கி இரயிலில் பயணித்திருந்தனர்.

மெட்ரோ ரயில் போன்றிருந்த அந்த ரயிலில் அங்குமிங்குமாக ஓடி விளையாடிய மகளை கையில் தூக்கி வைத்துக் கொண்டு ராஜனின் அருகில் நங்கை அமர, உடனே தந்தையிடம் தாவினாள் குட்டிப்பெண்.

“பாப்பா இதெல்லாம் டூ மச் சொல்லிட்டேன்! பத்து மாசம் என்கிட்ட தான் இருந்த நீ! இப்ப என்னமோ அப்பா அப்பான்னு அவன்கிட்டயே தாவுற” என்று முறைத்தாள்.

“ஏன்டா பப்ளிமாஸ் குழந்தைக்கிட்ட கூடவா சண்டை போடுவ?” என்று கேலியாய் சிரித்தான்.

அவன் கேலியில் முகத்தை சுளித்தாள் இவள்.

ராஜன் குழந்தையை கைக்குள் வைத்து தட்டிக்கொடுக்க உறங்க ஆரம்பித்திருந்தாள் நந்திதா.

“சுந்தர், நான் ஒரு தடவை ஒரு கதை சொன்னேன் ஞாபகம் இருக்கா! ஒரு பையன் அப்பாக்கு சர்ப்ரைஸ்ஸா இருக்கனும்னு அவர்கிட்ட போன்ல பேசாம பிசினு சொல்லி டான்ஸ் பிராக்ட்டிஸ் செஞ்சிட்டு, டான்ஸ் ஷோ டிவில வர்றப்ப அவர் இறந்துட்டாருனு ஒரு பையன் கதை சொன்னேன்ல அந்த பையன் இந்த சிவா தான்” என்றாள் நங்கை.

“அப்படியா” என்று ராஜன் ஆச்சரியமாய் கேட்க, “ஆமா சுந்தர்! நம்மளை விட சின்ன வயசு தான்! நாலு அஞ்சு வயசு சின்ன பையன்னு நினைக்கிறேன்” என்றாள்.

“அப்ப டீன்ஏஜ்லயே மீடியாக்குள்ள வந்துட்டானா?” என்றான் ராஜன்.

“ஹ்ம்ம் ஆமா அப்படி தான் இருக்கனும். அப்ப பதினெட்டு இருபது வயசு இருக்கும்னு நினைக்கிறேன். இப்ப முப்பது வயசுக்கிட்ட இருக்கும்ல! ஆனா இன்னும் கல்யாணம் செஞ்சிக்கலை போல” என்றாள் நங்கை.

“ஓ சூப்பர்ல நங்கை! அப்படி டான்ஸ் ஷோல ஆரம்பிச்சி இப்ப சின்னத்திரை ஹீரோவா வளர்ந்திருக்கானே பெரிய விஷயம் தான்!” என்று மனதாரப் பாராட்டிப் பேசினான் ராஜன்.

“ஆமாமா இந்த போராட்ட உலகத்துல ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் அச்சீவ்மெண்ட் தான்” என்று நங்கை கூற,

“இதுக்கு தான் ஓவரா மாமா பேச்சை கேட்காதனு சொன்னேன்” என்றவன் கிண்டல் செய்யவும்,

“ஓய் என்ன வயசானவங்க பேசுறவங்க மாதிரி தத்துவம் பேசுறேன்னு கிண்டல் செய்றியா?” என்று முறைத்தாள்.

அவளின் முறைப்பில் சிரித்தான் ராஜன்.

ஜெர்மனியில் முன்பு ராஜன் தங்கியிருந்த அதே வீட்டில், இப்பொழுது குடும்பத்துடன் தங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு அறையை வாடகைக்கு எடுத்திருந்தனர்‌.

வீட்டை அடைந்ததும் தூங்கிக் கொண்டிருந்த மகளை படுக்கையில் கிடத்தி, போர்வையை போர்த்தி விட்டு ஓய்வறைக்குள் சென்றான் ராஜன்.

அச்சமயம் அவனின் கைபேசி அலற, எடுத்து பார்த்த நங்கை, அதில் ஒளிர்ந்த உளவாளி என்ற பெயரை பார்த்து சிரித்தாள்.

சிக்னல் இல்லாமல் கைபேசி ஒலிர்ந்து அடங்க, ஓய்வறையில் இருந்து வெளியே வந்த ராஜன் யார் அழைத்தது எனக் கேட்டான்.

“இந்தியாலருந்து வாட்ஸ்அப் கால்! உன் உளவாளி தான்” என்றாள்.

இவன் அழைப்பு வந்த எண்ணிற்கு மீண்டுமாய் அழைப்புவிடுக்க,

“அந்த பொண்ணுக்கு எவ்ளோ அழகான பேரு இருக்கு! இப்படி உளவாளினு போட்டு வச்சிருக்கியே” எனக் கேட்டாள் நங்கை‌.

“நல்லா கேளுங்கக்கா” ராஜன் அழைப்பை ஏற்றதும், அலைபேசி வாயிலாக நங்கையின் குரலை கேட்டவள் கூறினாள்‌. ராஜன் உடனே ஸ்பீக்கரில் ஃபோனை வைத்தான்.

“திவ்யானு தமிழ்நாட்டுல கால்வாசி பேராவது இருப்பாங்க. ஆனா உளவாளினு யாராவது இருப்பாங்களா! எவ்ளோ தனித்துவமான ஒரு பெயரை உனக்கு வச்சிருக்கேன்னு நீ பெருமைப்படனும் திவ்யா” என்று சிரித்தான் ராஜன்.

“அண்ணி உங்க கூட சேர்ந்து அண்ணனுக்கு ரொம்ப வாயாகிப்போச்சு! அண்ணா இப்படிலாம் கிண்டல் செய்ற ஆளே இல்லை” என்றாள் திவ்யா.

“அடியேய் நீ என்னை புகழ்றியா இல்லை திட்டுறியா? இது என்ன வஞ்சப்புகழ்ச்சியா? உனக்காக என் புருசன் கிட்ட பரிஞ்சி பேசினேன்ல என்னை சொல்லனும்” என்று நங்கை கூறவும், சிரித்திருந்தனர் ராஜனும் திவ்யாவும்.

அப்பொழுது தான் திவ்யாவின் அறைக்குள் நுழைந்த திவ்யாவின் கணவனான பிரேம் கைபேசியில் கேட்ட நங்கை ராஜனின் குரலில், “அக்கா அண்ணா எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டான்.

“நல்லா இருக்கோம்டா! யு எஸ் டிரிப் எப்படி போச்சுடா! நானே உனக்கு கால் செய்யனும்னு நினைச்சேன்” என்றான் ராஜன்‌.

“நல்லா போச்சுண்ணா! நீங்க வேகேஷன் முடிச்சிட்டு வந்து பேசுங்க. இப்ப லீவ்வை என்ஜாய் பண்ணுங்க” என்ற பிரேம்,

“எதுக்கு இப்ப அவங்களுக்கு போன் செஞ்சி டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்க?” எனக் கேட்டான்.

“முக்கியமான விஷயம் சொல்லத்தான் ஃபோன் செஞ்சேன்” என்ற திவ்யா,

“மீனாட்சி சுந்தரேஸ்வரர் யூ டியூப் சேனலை டார்க்கெட் செஞ்சி ஏதாவது இஷ்யூவை கிளப்பி கடை சேல்ஸ்ஸை குறைக்க பிளான் நடக்குதுனு ஈஸ்வர் அண்ணா ஐடி டீம்கிட்ட சொல்லி கேர்புல்லா வாட்ச் பண்ண சொன்னாங்க. அதான் உங்ககிட்ட சொல்லலாம்னு கால் செஞ்சேன்” என்றாள் திவ்யா.

திவ்யா பிரேமை காதலிப்பதை அறிந்ததும் அவளிடம் சண்டையிட்டு இருந்த அவளின் பெற்றோர் அவளது வேலையை ராஜினாமா செய்ய வைத்து அவளை இந்தியாவிற்கு வரவழைத்திருந்தனர்.

திவ்யாவிற்காக ஜெர்மனி வேலையை ராஜினாமா செய்து மதுரையில் ஒரு ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த பிரேம், அங்கிருந்தே திவ்யாவின் குடும்பத்தினருடன் போராடி சம்மதம் பெற்று திவ்யாவை மணம் புரிந்து கொண்டான்.

பிரேம் மதுரையிலுள்ள ஐடி அலுவலகத்தில் பணியில் சேர்ந்த சமயம் ராஜன் சென்னையில் சுரேந்தருடன் தங்கியிருந்தான்.

பிரேமின் குடும்பத்தினர் திவ்யா வீட்டினரின் விருப்பப்படி மதுரையிலேயே திருமணம் வைக்க ஒப்புக்கொண்டனர்.

திருமணம் முடிந்ததும் ஹைதராபாத்திற்கு பணியிட மாற்றம் வேண்டி அலுவலகத்தில் கேட்டிருந்தான் பிரேம். ஆனால் அது கிடைக்க ஒரு வருடமாகும் எனக் கூறியதால், ஹைதராபாத்தில் வேறு வேலை தேடிக் கொண்டிருந்தான். அந்நிலையில் தான் ஈஸ்வரனின் நிறுவனத்தில் ஐடி பணிக்கான நேர்முக தேர்வு நடப்பதை பற்றி அறிந்து கொண்டான்.

ஏற்கனவே ஈஸ்வரன் அங்கு நன்கு பரிச்சயமான வளர்ந்து கொண்டிருக்கும் தொழிலபதிராக பலரால் அறியப்பட்டிருக்க, திவ்யாவை அந்த பணியில் சேர வலியுறுத்தினான்.

திவ்யாவின் படிப்பையும் பணியின் முன் அனுபவத்தையும் அறிந்த ஈஸ்வரன், தனது நிறுவனத்திலேயே அவளுக்கு ஐடி துறையில் வேலையை அளித்தான்.

ஜெர்மனியில் கடைசியாக பிரேமை சந்தித்த ராஜன், அதன் பிறகு அவனை மதுரையில் தான் சந்தித்தான். ஈஸ்வரனுக்காக வரன் பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது! அப்பொழுது தான்‌ திவ்யா ஈஸ்வரனிடம் வேலை செய்வதை பற்றி அறிந்தவன், ஈஸ்வரனின் வியாபார பிரச்சனைகள் குறித்த விவகாரங்களை தீரன் மூலமாக அறிந்துக் கொள்ள முடியாத சமயங்களில் அவளிடம் கேட்டான். அதுவே தொடர்ந்து அங்கு ஏதேனும் பிரச்சனை போல் தோன்றினால் திவ்யாவே முன் வந்து ராஜனிடம் கூற தொடங்கினாள். தீரனிடம் பேசும் போது பேச்சுக்காக உளவாளி என்றவன் அதையே அவளை கேலி செய்ய பயன்படுத்திக் கொண்டான்.

பணி நிமித்தமாக பிரேமுடன் திவ்யா மதுரையில் இருந்து ஹைதராபாத்திற்கு இடம் மாற நேர்ந்த போதும் ஈஸ்வரன் திவ்யாவை தனது இணையத்தளம் சார்ந்த பணிகளை கவனித்துக் கொள்ள கூறிவிட்டான். ஹைதராபாத் சென்ற பிறகும் ஈஸ்வரனுக்கும் அவனது தொழிலுக்கு நேரிடப்போவதாக கணிக்கப்படும் விவகாரங்களை ராஜனிடம் தெரிவித்து விடுவாள் திவ்யா.

இன்றும் அவ்வாறு ஈஸ்வரன் மூலம் தான் அறிந்துக் கொண்ட செய்தியை ராஜனிடம் கூறியிருந்தாள்.

இப்பொழுது திவ்யா கூறியதை கேட்ட ராஜன், ‘ஏன் இன்னும் இந்த அண்ணா அவங்களோட பிரச்சனையை என்கிட்ட சொல்ல மாட்டேங்கிறாரு?’ என மனதோடு புலம்பியவன்,

“ஓ அப்படியா! சைட் ரிலேடட் செக்யூரிட்டிலாம் செக் பண்ணிக்கோம்மா! அண்ணன் சொன்னா கண்டிப்பா யார் மேலயோ அவருக்கு சந்தேகம் வந்திருக்குனு அர்த்தம்! நானும் கிளோஸா வாட்ச் பண்றேன்” என்றான்.

அதன் பிறகு நால்வரும் அவரவர் பணி, குடும்பம், வாழ்வு என சில நிமிடங்கள் பேசிவிட்டே கைபேசியை வைத்தனர்.

****
அன்று மாலை மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பாத்திரக்கடையில் தனது அறையில் மாலை படம்பிடிக்க வேண்டிய காணொளிக்கான குறிப்புக்களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மீனாட்சியிடம் வந்த ஈஸ்வரன், “ஆல் ஓகேவா?” எனக் கேட்டான்.

“ஆமாங்க! இன்னிக்கு கிளியரன்ஸ் சேல்ஸ் பத்தி தானே பேசப்போறோம். எந்தெந்த பிராடக்ட்டுக்கு எவ்ளோ ஒரிஜினல் பிரைஸ் எவ்ளோ ஆஃபர் பிரைஸ் அண்ட் ஒவ்வொரு பிராடக்ட்டும் எவ்ளோ பீஸ் இருக்குனும் எழுதியிருக்கேன். நீங்க ஒரு தடவை வெரிஃபை செஞ்சிக்கோங்க” என அவனிடம் தான் குறிப்பெடுத்து வைத்திருந்த தாளை கொடுத்தாள்.

தினமும் சுந்தரேஸ்வரன் மீனாட்சி இருவரும் இணைந்தே காணொளியில் பங்குபெற்று தங்களது பெருட்களை பற்றி பேசினர். இருவருமே மதுரையில் பிரபலமான முகங்களாய் மாறியிருந்தனர்.

அவளளித்த தாள் மீது கண் இருந்தாலும், ஏதோ சிந்தனையில் இருந்த ஈஸ்வரனின் தோளை தொட்டு உலுக்கியவள், “என்னப்பா? என்ன யோசனைல இருக்கீங்க? ரஞ்சுவை வீட்டுல டிராப் பண்ணிட்டு வந்துட்டீங்க தானே” எனக் கேட்டாள்.

“ஹான் ஆமா ஸ்கூல்ல இருந்து பிக்அப் பண்ணி வீட்டுல அம்மாகிட்ட விட்டுட்டு வந்துட்டேன்” என்றவனிடம், “அப்ப இதை நீங்க சரி பார்த்துட்டீங்கனா நாமளும் வீட்டுக்கு போய் குழந்தைகிட்ட கொஞ்சம் நேரம் டைம் ஸ்பெண்ட் செஞ்சிட்டு டீ குடிச்சிட்டு கிளம்பி வரலாம்” என்றாள் மீனாட்சி.

“ஆமா வா நீ கிளம்பு! டீ குடிச்சிட்டு வந்து நாம இதை பார்க்கலாம்” என்றவன் அவளுடன் மகிழுந்தில் ஏறி வீட்டை நோக்கி வண்டியை ஓட்டினான்.

மீனாட்சி தனது முகநூலை பார்த்தவாறே அவனுடன் வண்டியில் பயணித்திருந்தவள், அதில் வந்திருந்த ஒரு பதிவை பார்த்து பக்கென சிரித்து விட்டாள்.

அவளின் சிரிப்பில் மென்னகை புரிந்தவனாய், “என்னாச்சு பச்சக்கிளி?” எனக் கேட்டான்.

“இந்த அன்னம் பொண்ணுக்கிருக்க லொல்லு இருக்கே!” என்று மீண்டுமாய் சிரித்தவள், அந்த பதிவை வாசித்தாள்.

“பத்து வருடங்களாய் இந்த பிராஜக்ட்டில் இதே மேனேஜருடன் குப்பை கொட்டும் நீங்கள் எனக்கு காவியமாக தெரிகிறீர்கள்னு அவளோட சீனியருக்கு மீம்ஸ் போட்டுருக்கா” என்று சிரித்தவாறு ஈஸ்வரனிடம் அந்த மீம்ஸ்ஸை காண்பித்தாள். ஈஸ்வரனும் அதை பார்த்து வாய்விட்டு சிரித்திருந்தான்.

அன்னத்தின் முகநூல் பிரோபைலுக்குள் சென்று அங்குள்ள மற்ற பதிவுகளை பார்த்தவள், ஒவ்வொன்றாக வாசித்தாள்.

“நாலு மணி நேரம் ஸ்டேட்ஸ் மீட்டிங் வச்சி பேசி தள்ளிட்டு, அடுத்த நாலு மணி நேரத்துல எட்டு மணி நேர வேலையை செய்ய சொல்றீங்க பாருங்க! நீங்களாம் மனுசங்களே இல்லங்க” என்று வாசித்து விட்டு சிரித்தவள், “அய்யோ நான் வேலை செய்யும் போது என் மனசுல தோணினதுலாம் அப்படியே சொல்றாளே! இவ என் கூட வேலைக்கு சேராம போய்ட்டாளே! நம்ம சுந்தரை ஒரு வழியாக்கிருப்பா” என்று சிரித்தாள் மீனாட்சி.

“ஆமா யாரு இவளோட டி எல்? பாவம் தான் அவரு” என்று ஈஸ்வரன் கூற,

“ஆமா யாருனு தெரியலையே! ஃபேஸ்புக்ல இவளோட ஃப்ரண்ட் லிஸ்ட்ல இருக்க வாய்ப்பு இல்லை. அவரை வச்சிட்டே இப்படி போஸ்ட் போடுவாளா என்ன? அவ ஃபோன் செய்யும் போது அவகிட்டயே கேட்கிறேன் யாரந்த பாவப்பட்ட ஜீவன்னு” என்று சிரித்தவாறு உரைத்த மீனாட்சி,

“உன் டி எல் பேர் என்ன?” என்று   அன்னத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் தனது கணிணி முன்னமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த அன்னம், தனது அலைபேசியில் வந்த குறுஞ்செய்தி ஓசையில் அதனை எடுத்து பார்த்தாள்.

குறுஞ்செய்தியை படித்தவளின் முகம் யோசனையில் சுருங்க, “இவ எதுக்கு இப்ப என் டி எல் பேரை கேட்குறா? ஒரு வேளை இவளுக்கு நம்ம மேட்டர் தெரிஞ்சிருக்குமோ?” யோசித்தவாறே,

“இன்பா” என்று அனுப்பியவள்,

அடுத்ததாய் இரண்டு மூன்று முறை டைப் செய்து அழித்து என வேறு எதையோ அனுப்ப எண்ணி தடுமாறியவள்,

‘இவகிட்ட உண்மையை சொல்லிடுவோமா’ என்று யோசித்துக்கொண்டே இருக்க,

அன்னத்தின் முகநூலில் தான் பார்த்த டீம் லன்ச் போட்டோவை அனுப்பி, “இதுல யாருடி உன் டி எல்” எனக் கேட்டாள் மீனாட்சி.

அதனை பார்த்து பெருமூச்செறிந்தவளாய், “மீனு நான் ஒருத்தரை காதலிக்கிறேன்னு சொன்னேன்ல அவரும் இந்த பிக்ல தான் இருக்காரு” என்று அன்னம் அனுப்பிய செய்தியை படித்த மீனாட்சி,

“உனக்கு எப்பவுமே விளையாட்டு தான்டி! லவ் பண்ற மூஞ்சியை பாரு! நீ லவ் பண்றேன்னு சொன்னதையே நான் நம்பலை இதுல நீ லவ் பண்றவரு இந்த போட்டோல வேற இருக்காரா! இப்படி நீ விளையாடுறது தெரிஞ்சாலே ஆச்சி உன்னை சூப் வச்சிடுவாங்க!” என்று வாய்விட்டு சிரிக்கும் ஸ்மைலிக்களை அனுப்பிய மீனாட்சி,

ஈஸ்வரனிடம், “இந்த அன்னத்துக்கு சீக்கிரம் மாப்பிள்ள பார்க்க சொல்லனும். எப்ப பார்த்தாலும் ஒரே விளையாட்டு தான்” என்றவாறு அவனுடன் வீட்டின் உள்ளே சென்றாள்.

******

ஜெர்மனியில் மாலை நேரம் சிலுசிலுவென மழை வெளியே தூறிக்கொண்டிருக்க, ராஜன் தனது மகளை பார்த்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அவள்.

நங்கை ஓய்வறையில் இருந்து இலகுவான உடையை மாற்றி விட்டு வெளியே வர, அவளை கைகளில் அள்ளியவன், கட்டிலில் அவளுடன் சேர்ந்து சாய்ந்தான்.

“டேய் பகல் நேரத்துல என்ன வேலை பார்க்கிற” என்று நங்கை அவனை முறைக்க, “அப்புறம் பெருமாள் கிட்ட வச்ச வேண்டுதலை நிறைவேத்த வேண்டாமா! நான் தானே அதுக்கு ஓவர் டைம் வேலை பார்க்கனும்” என்று அவள் முகத்தோடு அவன் மீசை உரச, ஒலித்தது நங்கையின் கைபேசி.

“யார்டா அது கரடி இந்த நேரத்துல” என்று ராஜன் கடுப்பாய் எடுத்து பார்க்க, அன்னம் தான் அழைத்திருந்தாள்.

சிரித்தவாறு அவனை தள்ளிவிட்டு எழுந்த நங்கை கைபேசியை எடுத்து பேசினாள். சில நிமிடங்கள் பேசிவிட்டு கைபேசியை வைத்தவளின் முகம் யோசனையில் இருக்க, “என்னாச்சு? எனிதிங்க் சீரியஸ்?” எனக் கேட்டான்.

ஒன்னுமில்லை என்றவள், அமைதியாய் எதையோ சிந்தித்தவண்ணம் அமர்ந்திருக்க, ராஜன் தன்னையே வெறித்து பார்ப்பதை பார்த்தவள்,

“ஒன்னுமில்லடா! நீ ஏன் இவ்வளோ சீரியஸா என்னை பார்க்கிற? அவ யாரையோ லவ் பண்றாளாம்! நாம தான் அவ வீட்டுல பேசி ஒத்துக்க வைக்கணும்னு சொன்னா! யாரு? எந்த பையனை லவ் பண்றானு தெரியாம நான் எப்படி நம்பிக்கையா அவகிட்ட பேசுறது! ஊருக்கு வந்ததும் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டேன்”  என்றவள் சொன்னதும்,

“ஹப்பா இதுக்கு தான் இவ்வளோ யோசனையா!” என்று ராஜன் கேட்க,

“ஆமா தப்பானவனை லவ் பண்ணிட கூடாதேனு பயமா வருது! துருதுருனு வாழ்க்கையோட நல்லது கெட்டது எதுவும் தெரியாத வெள்ளந்தியான பொண்ணு! இப்ப தான் வேலைக்கு சேர்ந்து ஆறேழு மாசம் ஆகப்போகுது. அதுக்குள்ள லவ் பண்றேன்னு வந்து நிக்கிறாளேனு யோசனையா இருக்கு! நான் லவ் பண்றேன்னு சொல்லும் போது அம்மாவுக்கும் இப்படி தானே இருந்திருக்கும்” என்று நங்கை ராஜனின் முகத்தை பார்த்தவாறு கூற, அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.

“உதை வாங்க போற பாரு! நீ எதுக்கு இப்ப தேவையில்லாததுலாம் யோசிக்கிற?” என்று அவளை அவன் கண்டிக்க, “நீ ஏன்டா முதல்லயே என்னை லவ் பண்ணாம போய்ட்ட!” என்று கேட்டவாறு அவனை இறுக அணைத்துக் கொண்டாள் அவள்.

அவள் வாழ்வின் வலியான நாட்கள் அவளுள் அவ்வப்பொழுது எழுவதை தவிர்க்க முடியாமல் பேசி விடுபவள், அவனிடமே சரணடைந்திடுவாள்.

அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டவனின் ஆளுகைக்குள் விரும்பியே தன்னை கொடுத்தவள் சுற்றம் மறந்து இவ்வுலகம் மறந்து அவனின் காதலுக்குள் உருகி கரைந்திருந்தாள். உருகச் செய்திருந்தான் அவன்.

தேடலின் நிறைவில் முகம் நிறைந்த பொலிவுடனும் வெட்கச்சிரிப்புடனும் மார்போடு சாய்ந்திருந்தவளை அவன் வருடியவாறு இருக்க, “எப்படியாவது என்னை மயக்கிடுறடா நீ!” என்று அவனது கன்னத்தை வருடியவள் சிரிக்க, வெட்கச்சிரிப்பை உதிர்த்தான் அவன்.

மற்றொரு படுக்கையில் படுத்திருந்த குழந்தையின் சிணுங்கலில் மோன நிலை கலைய, குழந்தையை தூக்க நங்கை எழுந்திருக்க, “இரு நான் பார்க்கிறேன்” என்று எழுந்து அவன் குழந்தையினருகே செல்ல, ஓய்வறை சென்றாள் அவள்.

“நந்துக்குட்டி முழிச்சிட்டீங்களா! வாங்க! வாங்க! அப்பாக்கிட்ட வாங்க” என குழந்தையை சுற்றி வைத்திருந்த தலையணைகளை தள்ளி வைத்து, குழந்தையை தூக்கி தோளில் போட்டு தட்டிக் கொடுக்க, முகத்தை அவனது கழுத்தில் தேய்த்த குட்டிப்பெண் அப்படியே தலையை சாய்த்து கொண்டாள்.

ராஜன் கட்டிலில் சாய்ந்தவாறு அமர்ந்து குழந்தையை தனது மார்பில் படுக்க வைத்து தட்டிக்கொடுக்க, ஓய்வறையில் இருந்து வந்த நங்கை, கணவனின் தோளோடு சாய்ந்து ஒட்டியவாறு அமர்ந்தவள், மகளின் முதுகை வருடிக்கொடுத்தாள்.

இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே

நங்கையின் காதோடு மெல்லமாய் பாடியவன், காதலாய் தன்னை திரும்பி பார்த்தவளின் நெற்றியோடு முட்டியவாறு சிரித்தான். கடவுள் அளித்த பொக்கிஷமான வாழ்வை எண்ணி மனம் நெகிழ சிரித்திருந்தாள் அவளும்.

— அடுத்த பாகமான அழகிய அன்னமே கதையுடன் விரைவில் சந்திக்கிறேன்

இந்த தொடர்கதையை தொடர்ந்து வாசித்து கருத்திட்டு ஊக்குவித்த வாசக தோழமைகள் அனைவருக்கும் பேரன்புகள் 🙏❤️