சொக்கனின் மீனாள் 14 (Final)

மீனாட்சி சுந்தரேஸ்வரரின் வரவேற்பு நிகழ்ச்சி நிறைவாகி, ஒரு வாரம் சென்னைக்கு சென்று விட்டு வந்த பிறகு, ஒரு நாள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் விதத்தில் மதுரை வீட்டில் இருந்தே அலுவலக வேலையை செய்து கொண்டிருந்தாள் மீனாட்சி.
இவ்வாறு மீனாட்சி வீட்டில் இருந்து வேலை செய்யும் நாட்களில் எல்லாம், மாலை வேளையில் கல்லூரி விட்டு வந்ததும் கல்யாணி மீனாட்சியுடன் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருப்பாள். இருவருக்கும் அந்த நேரங்கள் மகிழ்வானதாய் கழியும்.
அன்று அவர்களின் உரையாடல் இரவு வரை சென்று கொண்டிருக்க, அச்சமயம் அவசர அலுவல் வேலை ஒன்றை பற்றி பேசுவதற்காக மீனாட்சியை அழைத்தான் ராஜன்.
அவள் கைபேசியை எடுத்ததும், “மீனாட்சி, நம்ம ரிலீஸ் செஞ்ச கோட்ல இஷ்யூனு சொன்னாங்க! அதை நான் கொஞ்சம் சேஞ்ச் பண்ணிருக்கேன். நீங்க டெஸ்ட் செஞ்சி தர முடியுமா?” எனக் கேட்டான்.
“ஓகே சுந்தர்” என்று இவள் சொன்னதும்,
மீனாட்சி ராஜனிடம் தான் பேசுகிறாள் என்பதை அறிந்த கல்யாணி, அழைப்பை ஸ்பீக்கரில் போட சொல்லி, அதை கேட்டவாறு அருகில் அமர்ந்தவள்,
“என்ன நீ! அண்ணியை பேர் சொல்லி கூப்பிடுற!” எனக் கேட்டிருந்தாள்.
கல்யாணியின் குரலை கேட்டவன், “ஹே ஆணிமா! இங்க தான் இருக்கியா நீ” எனக் கேட்டான்.
“ஆமாமா! என்ன இந்த நேரத்துல வேலை வாங்கிட்டு இருக்க நீ! அண்ணி உன்னை பத்தி சொன்னது தப்பே இல்ல போலயே” என்று மீனாட்சியின் கைபேசியை கையில் வாங்கியவாறு அவள் அவனிடம் பேச,
மீனாட்சி அய்யோ என மனதிற்குள் அலறியவளாய், ‘அதெல்லாம் எதுவும் சொல்லிடாதீங்க’ என வாயை அசைத்தாள்.
“நீங்க என்ன அண்ணி! பேப்பர் போட்டுட்டு உங்க லீட் கிட்ட இப்படி பயந்துட்டு இருக்கீங்க” என சத்தமாகவே கூறிய கல்யாணி,
“நம்ம அண்ணி, கல்யாணம் செஞ்சிக்கலாம்னு முடிவு செஞ்சதே உன்னால தானாம் தெரியுமா” எனக் கேட்டாள்.
“என்னாலயா?” என கேள்வியாய் கேட்டான் ராஜன்.
“ஆமா நீ இப்படி சிடுமூஞ்சி டி எல்லாய் அவங்களை வேலை வாங்கி கடுப்பேத்தினதால, உன்கிட்ட இருந்து எஸ்கேப் ஆக தான் கல்யாணம் செஞ்சி வைக்க சொல்லி அவங்க அப்பாகிட்ட சொன்னாங்களாம். பார்த்தா அவங்க அப்பா உன்னையே மாப்பிள்ளையாய் கொண்டு வந்து நிறுத்திருக்காங்களேனு உன்னை பார்த்துட்டு அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வராத குறையாம்!” எனக் கூறி அட்டகாசமாய் சிரித்தாள் கல்யாணி.
“அடப்பாவிங்களா என்னைய வச்சி காமெடி பண்ணிட்டு இருக்கீங்களா இரண்டு பேரும்” என ராஜன் அவள் கூறியதை நம்பாது சிரிப்புடன் கேட்க,
“அட உன்னால தான், ஈஸ்வரன் அண்ணாக்கு மீனாட்சி அண்ணி கிடைச்சாங்கனு புகழ்ந்து சொல்லிட்டு இருக்கேன்! காமெடி செய்றேன்னு சொல்ற! பாரு நீ செஞ்ச நல்லதை சொன்னா உன்னாலயே நம்ப முடியலை” என சிரித்தவாறு கல்யாணி ராஜனை மீண்டுமாய் கேலி செய்ய,
அறையின் வாயிலில் நின்று கேட்டு கொண்டிருந்த ஈஸ்வரனின் இதழ்களும் சிரிப்பில் வளைந்தன.
ஈஸ்வரனை கண்ட கல்யாணி, “ராஜாண்ணா, ஈஸ்வரன் அண்ணா வந்துட்டாங்க!” என்று சத்தமாய் உரைத்தவாறு ஈஸ்வரனை கைபிடித்து மெத்தையில் அமர வைத்தாள்.
“என்கிட்ட இரண்டு பேரும் மூஞ்சை தூக்கி வச்சிக்கிற மாதிரி நடிச்சிட்டு, அண்ணி வந்ததும் பாச மழை பொழியுறீங்களோ! நான் உங்க இரண்டு பேரையும் பேச சொல்லி எத்தனை நாள் கேட்டிருப்பேன்! இருங்க எனக்கும் ஒரு நாள் வரும் உங்களை வச்சி செய்றேன்” என்றாள் விளையாட்டாய்!
“கல்லுமா” என ஈஸ்வரனும்,
“ஆணிமா” என ராஜனும்,
ஒரே நேரத்தில் அழைக்க,
“ஏன் இன்னும் கத்தி கடப்பாறைனு கூப்பிட வேண்டியது தானே! செல்லப்பேரு வச்சிருக்காங்க பார்த்தீங்களா அண்ணி இரண்டு பேரும்! கல்லு ஆணினு” என வழமைப்போல் கூறி கல்யாணி முகத்தை சுளிக்க,
அனைவரும் வாய் விட்டு சிரிந்திருந்தனர்.
மீனாட்சி தனது அலுவலகத்தின் மூன்று மாத அறிவிப்பு காலத்தை (நோட்டிஸ் பீரியட்) நிறைவு செய்து வீட்டில் இருந்தாள்.
அவளாக விருப்பப்பட்டு ஏதேனும் செய்ய விரும்பினால் செய்யட்டும், தான் எதுவும் திணித்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் ஈஸ்வரன்.
தொடர் ஓட்டமாய் வேலைக்கு சென்று அன்றாடம் உழைத்து கொண்டிருந்தவளுக்கு, வேலை இல்லாமல் இரண்டு வாரத்திற்கு மேல் வீட்டில் இருக்க முடியவில்லை.
அகல்யாவுடன் இணைந்து வீட்டு வேலையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டாலும், போதும் இந்த ஓய்வு என மனம் அலுக்க தொடங்கியது. வேறு புது கம்பெனியில் நேர்முக தேர்வை எதிர் கொள்ளும் தைரியமற்று, ஈஸ்வரனுடன் அவனது வணிகத்தை கவனித்து கொள்வதாய் உரைத்து அவனுடன் செல்லலானாள்.
ஆயினும் அவளை முழுதாய் தனது கடை பணியில் ஈடுபடுத்தி கொள்ளாமல், காலை மாலை என இரு வேளை மட்டும் கடைக்கு வரவழைத்து கணக்கு வழக்குகளையும், அவளின் ஐடி துறை சம்பந்தமான பணிகளில் தனது கடையில் பணிபுரிபவர்களையும் அவளை மேற்பார்வை பார்க்க செய்தான்.
ஏதேனும் வங்கி தேர்வு அல்லது அரசு தேர்வு எழுத விருப்பமுள்ளதா அல்லது ஏதேனும் படிக்க ஆர்வமிருக்கிறதா என பலவிதமாய் அவன் அவளிடம் கேட்டும், அவளுக்கு இச்சமயம் அவனுடன் இணைந்து பணிபுரிய மட்டுமே விருப்பமுள்ளது எனவும், பிற்காலத்தில் மாற்றம் ஏற்பட்டால் அதற்கும் அவன் ஒத்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டாள்.
இவ்வாறாக திருமணம் நடந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் தான் அவனின் புதிய தயாரிப்பான அந்த வெங்காயம் நறுக்கும் இயந்திரத்தை வெளியிட்டான்.
தினமும் மாலை அன்றைய காணொளி தடத்தில் காண்பிக்கப் போகும் பொருட்களை பற்றிய குறிப்பெடுத்து ஈஸ்வரனுக்கு வழங்குவதையும், அப்பொருட்களின் தரத்தை பரிசோதனை செய்வதையும் தனது பணியாய் செய்ய தொடங்கியிருந்தாள் மீனாட்சி.
இந்த இயந்திரத்தை பற்றியும் அவ்வாறு அவள் குறிப்பெடுத்து கொடுக்க, நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியிடப்படும் இந்த புது தயாரிப்பினை தனது மனைவியின் கையால் வெளியிட செய்ய எண்ணியவன், அவளையும் அந்த காணொளியில் பங்குபெற செய்தான்.
நேர்முக தேர்வுக்கே பயந்து நடுங்குபவள், இவ்வாறு பலரின் முன்னிலையில் காட்சி பொருளாய் நிற்க வெகுவாக தயங்குவாள் என அறிந்தவனாகையால், எந்த முன்னறிவிப்புமின்றி காணொளித்தடத்தில் நேரலை தொடங்கி சென்று கொண்டிருந்த பொழுது, “என் மனைவி இந்த வெங்காய கட்டர் மெஷினை லான்ஞ்ச் செய்வாங்க” எனக் கூறி அவளை உள்ளே இழுத்திருந்தான்.
பதட்டமான முகத்துடன் தான் அந்த காணொளி முழுவதும் நின்றிருந்தாள் மீனாட்சி. காணொளியில் சில நிமிடங்கள் அவளுடன் பேசி அவளையும் பேச வைத்தான். ஆயினும் அவளின் முகம் தெளியுறவில்லை. அந்த மெஷினை அவள் கையால் வெளியிட செய்தப்பின், “வாழ்த்துகள் மீனாட்சி சுந்தரேஸ்வரன்” என வாழ்த்தும் சாக்கில் அவளின் தோளைச் சுற்றி கையினை போட்டு, ‘நானிருக்கிறேன்’ என்ற ஆறுதல் அளித்து அவளின் பதட்ட நிலையை வெகுவாக குறைந்து இருந்தான். அவனின் அருகாமை இயல்பாகவே அவளை இலகுவாக்கி இருந்தது. அதன் பின் அவளையே அந்த இயந்திரத்தை பற்றி கூற செய்தான்.
தட்டு தடுமாறி அவள் பேசும் போதெல்லாம் இடை இடையே அவனும் இயல்பாய் அவளுடன் உரையாடுவது போல் பேசி, தன்னுடன் இணைத்து அவளையும் முழுதாய் அந்த காணொளியில் பேச வைத்திருந்தான்.
முதலில் ஈஸ்வரன் இவ்வாறு தன்னை திடீரென உள்ளே இழுத்து விட்டு விட்டாரே என கோபமாய் தான் இருந்தது மீனாட்சிக்கு. ஆனால் நேரலையின் நிறைவில் ஏதோ சாதித்து விட்ட மனநிறைவை பெற்றாள்.
இரவு வீட்டிற்கு வந்ததும், “தேங்க்ஸ் ஈசுப்பா” என அவனை அணைத்து கொண்டாள்.
இது தனது பயத்தை போக்க அவன் செய்யும் முயற்சி என புரிந்தது அவளுக்கு.
“இதை அப்பா பார்த்தா எவ்ளோ ஹேப்பி ஆவாங்க தெரியுமா? நான் என்னோட கூட்டை விட்டு வெளில வரனும்னு அப்பாக்கு ரொம்பவே ஆசை” என்றவாறு அவன் மார்போடு சாய்ந்து கொண்டாள். அன்றைய நாள் சொக்கன் அவளை சொக்க வைத்து தான் உறங்க வைத்தான்.
அந்த காணொளியை அன்னம் தங்களது குடும்ப வாட்சஸ்சப் குழுவில் பகிர, மறுநாள் காலையே இதை பார்த்த ருத்ரன் மீனாட்சிக்கு அழைத்து விட்டார்.
கணவனும் மனைவியுமாய் கடைக்கு செல்ல கிளம்பிக் கொண்டிருக்கும் போது, கைபேசியில் வந்த தந்தையின் அழைப்பை ஏற்றவாறு அவள் கட்டிலில் அமர்ந்து விட, ஈஸ்வரன் கண்ணாடியை பார்த்து தலை சீவிக் கொண்டிருந்தான்.
“என்னம்மா இது! இந்த வீடியோ” என சற்று கோபமாகவே ருத்ரன் ஆரம்பிக்க,
“எதுப்பா?” அவள் கேட்க,
“அன்னம் அனுப்பிருக்காளே உங்க லைவ் வீடியோ” என்றவர் சொன்னதும், தந்தை தன்னை புகழப் போகிறார் என்றெண்ணி கைபேசியை ஸ்பீக்கரில் போட்டாள்.
“ஆமாப்பா நானே எதிர்பார்க்கலை! அவர் திடீர்னு கூப்பிட்டுட்டாரு” என இவள் கூறி முடிக்கும் முன்,
“உன் புருஷனுக்கு தான் அறிவில்ல! உனக்கு புத்தி எங்க போச்சு” என்றவர் கோபமாய் பேச,
“ஹய்யோ அப்பா” அவள் பதட்டமாக உரைக்க, பதட்டத்தில் அவளின் கையில் இருந்த கைபேசி கீழே விழப் போக, அதை விழாது கையில் ஏந்திய ஈஸ்வரன்,
“என்ன மாமா! புருஷனையும் பொண்டாட்டியையும் சேர்த்து வச்சி அர்ச்சனை செஞ்சிட்டு இருக்கீங்க போல” என சிரித்த முகமாய் இயல்பாகவே கேட்டான்.
திடீரென கேட்ட இவனின் குரலில் அங்கே அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்தது.
“ஹான் மாப்ள! நீங்க எப்படி? நான் மீனு போன்ல தானே பேசினேன்” என தட்டு தடுமாறி கூறியவர் மீனாட்சியின் எண்ணிற்கு தானே அழைத்தோம் என ஒரு முறை கைபேசியை கையிலெடுத்து எண்ணை சரி பார்த்தார்.
“மீனாட்சிக்கு தான் மாமா கால் செஞ்சீங்க! அவ ஸ்பீக்கர்ல போட்டு பேசிட்டு இருந்தா” என்றதும்,
‘மீனும்மா’ என பல்லை கடித்து கொண்டவராய்,
“இல்ல மாப்ள! உங்க கடைல சேல்ஸ் மேன் மாதிரி அவ வேலை பார்க்கிறதே எனக்கு பிடிக்கலைனு சொல்லிருக்கேன். நீங்க என்னடானா யூடியூப் மூலமா மொத்த ஊருக்கும் சேல்ஸ்மேன் வேலை செய்ய வச்சிருக்கீங்க” என சற்று கோபம் கலந்த ஆதங்கத்துடன் கேட்டார்.
“என்ன மாமா நீங்க! எந்த காலத்துல இருக்கீங்க? யூ டியூப்ல வீடியோ போடுறதுலாம் இப்ப சாதாரண விஷயம்” என்றவன் சமாதானம் பேச,
“அதான் நீங்க ஏற்கனவே செய்றீங்களே! என் பொண்ணை ஏன் செய்ய வைக்கிறீங்க” என சற்று காட்டமாகவே அவர் கேட்டு விட,
‘அய்யோ இரண்டு பேரும் சண்டை போட்டுக்க போறாங்க’ என மீனாட்சிக்கு பயத்தில் கைகள் வெலவெலத்தது.
“மாமா! இப்ப மீனு உங்க பொண்ணு மட்டுமில்லை. என் பொண்டாட்டி! என் பொண்டாட்டிக்கு எது நல்லது கெட்டதுனு எனக்கும் தெரியும்! அதனால் நீங்க ரொம்ப யோசிக்காம உங்க வேலையை பாருங்க. நாளைக்கே கூட உங்க பெயிண்ட் கடைக்கான விளம்பரத்தை நம்ம யூ டியூப்ல சொல்ல வச்சி வியாபாரத்தை பெருக்கலாம்னு சொன்னா நீங்க வேண்டாம்னா சொல்லுவீங்க. இதெல்லாம் மார்க்கெட்டிங் மாமா! இதை பெரிசா யோசிச்சு மனசை போட்டு அலட்டிக்காதீங்க” என்றவன் கூறவும், அவர் ஏதோ கூற வர,
“மாமா நாங்க கடைக்கு போக நேரமாகிடுச்சு! அப்புறமா பேசுறோம்” என மீனாட்சிக்குமாய் தானே சேர்த்து பேசி இணைப்பை துண்டித்திருந்தான்.
“தான் நினைச்சது தான் நடக்கனும். சரியான அடமெண்ட் (பிடிவாதமான) ஆளு” என ஈஸ்வரனை கடிந்து கொண்டிருந்தார் ருத்ரன்.
மீனாட்சியின் அரண்ட முகத்தையும் மிரண்ட விழிகளையும் பார்த்தவன், “ஏன் இப்படி உட்கார்ந்திருக்க பச்சக்கிளி!” என கன்னத்தில் இதழ் பதித்தவன், “கிளம்பு வா!” என அவளின் கைப்பிடித்து எழுந்து நிற்கச் செய்தான்.
இடையோடு சேர்த்து அணைத்தவனாய், “எங்களுக்குள்ள சண்டையை போட்டுக்கிட்டு நான் முக்கியமா அவர் முக்கியமானுலாம் கேட்டு உன்னை என்னிக்கும் நான் கஷ்டபடுத்த மாட்டேன்! எனக்கு தேவையானதை நானே உன்னை செய்ய வச்சிடுவேன்” என கண் சிமிட்டி அவன் கூற,
“அண்ணனும் தம்பியும் மட்டும் இல்லாம இப்ப மாமானாரும் மாப்பிள்ளையும் சேர்ந்து என்னை புலம்ப விடுறதா முடிவு செஞ்சிருக்கீங்க போல” என இதழை சுழித்தாள்.
“இப்படிலாம் சுழிச்சு வச்சி என்னை டெம்ப்ட் பண்ணீனா எப்படி கடைக்கு கிளம்புறதாம்” என அவளின் இதழை இரு விரல்களால் பிதுக்கியவாறு அவன் கேட்க,
“போதும் போதும் உங்க ரொமேன்ஸ்! கிளம்பலாம் வாங்க” என அவனின் கைப்பிடித்து கீழே அழைத்து சென்றாள்.
இந்த வெங்காயம் நறுக்கும் இயந்திரம் அவன் எதிர்பார்த்த அளவு லாபத்தை வழங்காதிருக்க, மீனாட்சியிடம் அதை பற்றி உரைத்திருந்தான். லாபம் இல்லாவிடினும் நஷ்டமாகாமல் இருந்ததே போதும் என்று நிம்மதி அடைந்து கொண்டான்.
அடுத்த புதிய பொருளுக்கான தயாரிப்பு பற்றி மீனாட்சி, அகல்யா மற்றும் கல்யாணியிடம் ஆலோசித்தான். அதுவும் இதுப்போல் பெரிய இயந்திரமாய் இருக்க,
“ஏங்க நீங்க தான் ஒரு தடவை பெரிய வியாபாரத்தை விட, சின்ன சின்னதா சில்லறை வியாபாரம் நிறைய செய்யும் போது கிடைக்கிற லாபம் அதிகம்னு சொல்லிருக்கீங்க! அப்புறம் ஏன் உடனே பெரிய மெஷினா பிளான் செய்றீங்க! ஏதாவது நூறுலருந்து இருநூறு ரூபாய்க்குள்ள சாதாரண வீட்டு உபயோக பொருட்கள் அல்லது பாத்திரங்கள் பிளான் செய்யலாம்ல” எனக் கேட்டாள்.
“ஆமாடா ஈஸ்வரா! மீனு சொல்றது சரி தான்” என அங்கீகரித்தார் அகல்யாவும்.
அடுத்த ஒரு வாரம் எந்த மாதிரியான வீட்டு உபயோக பொருட்களை தயாரிக்கலாம் என மீனாட்சியின் குடும்பம் உட்பட மொத்த குடும்பமுமே சிந்தித்து பல்வேறு விதமான யோசனைகளை கூற, அதில் மீனாட்சியின் யோசனை அவனுக்கு வெகுவாக பிடித்து போக அதையே தயாரிக்கலாம் என முடிவு செய்தான்.
அடுத்த ஒரு மாதத்தில் அந்த பொருளை தயாரித்தவன், காணொளி நேரலையில் மறுநாள் தங்களது புதிய தயாரிப்பை தனது மனைவி வெளியிடுவாள் என உரைத்த பின்னே நிறைவு செய்தான்.
இதை எதிர்பாராத மீனாட்சி, “என்னது நாளைக்கு நான் லான்ஞ்ச் செய்யனுமா! முடியவே முடியாது” என உடனே மறுப்பு தெரிவித்தாள்.
அன்று அவ்வாறு திடீரென அவளை பேச வைத்தப்பின் மீனாட்சியை அவன் அவளுடன் காணொளியில் பேச வைக்கவில்லை.
“என்ன மீனு! இது உன்னோட ஐடியா தானே! நீ லான்ஞ்ச் செஞ்சி டெமோ காண்பிச்சு விரிவா உன்னோட டெஸ்ட்டிங் அனுபவத்தையும் சொல்லும் போது செம்ம லைவ்லியா இருக்கும் தெரியுமா” என்றான் ஈஸ்வரன்.
இந்த புதிய தயாரிப்பை வீட்டில் ஒரு வாரம் உபயோகப்படுத்தி அருமையான தயாரிப்பு என ஈஸ்வரனை புகழ்ந்து தள்ளிவிட்டாள் மீனாட்சி.
“என்ன பிராடக்ட் தயாரிக்கலாம்னு நான் ஐடியா தான் கொடுத்தேன். ஆனா அதை எப்படி செய்யலாம்னு அலசி ஆராய்ஞ்சி பிளான் செஞ்சி தயாரிச்சது நீங்க தான்” என அவள் கூற,
“எப்படியோ நீ தான் நாளைக்கு அதை பத்தி சொல்ல போற! ரெடியா இருந்துக்கோ” என்று உரைத்து விட்டு அவளை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டான்.
இரவு வீட்டிற்குள் நுழையும் போதே மீனாட்சியின் முகம் வாடியிருக்க, “என்னம்மா மீனு! உடம்பு சரியில்லையா? முகம் வாடி கெடக்கே” எனக் கேட்டார் அகல்யா.
மீனாட்சி சுந்தரேஸ்வரன் உரைத்ததை கூற, “ஏன்டா அவளுக்கு பிடிக்கலைனா விட வேண்டியது தானே! எதுக்கு அவளை வற்புறுத்துற” என மகனை திட்டினார்.
“ம்ம்மா, வாய்ப்புகள் தேடி வரும் போது உபயோகப்படுத்திக்கிறவன் தான் புத்திசாலி! நம்மளோட கம்ஃபோர்ட் ஜோன்லயே இருந்தா எதையும் சாதிக்க முடியாது. நீங்க அவளுக்கு சப்போர்ட் செய்யாதீங்க” என்றவாறு உணவை உண்டு விட்டு அறைக்குள் நுழைந்து கொண்டான்.
மீனாட்சிக்கு மறுநாளை எண்ணி மனம் இன்றே பயங்கொள்ள தொடங்க, உணவு கூட உள்ளே இறங்கவில்லை. பெயரளவிற்கு இரண்டு வாய் உண்டவள் அறைக்கு சென்று விட்டாள்.
அங்கு ஈஸ்வரன் உறங்கி கொண்டிருந்ததை பார்த்தவளுக்கு கண்கள் கலங்கியது. ‘அப்படி என்ன பிடிவாதம் இவருக்கு’ என மனதோடு அவனை வறுத்தெடுத்தவளாய் படுக்கையில் சரிந்தாள்.
“நாளைக்கு இப்படி பேசலாமா! அப்படி பேசலாமா! என்ன பாயிண்ட்ஸ்லாம் சொல்லலாம்” என பலவித எண்ணங்கள் மூளையை விழிப்பாய் வைத்திருக்க, உறக்கம் வராமல் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள் மீனாட்சி.
அதில் அவன் உறக்கம் கலைய, “ம்ப்ச் மீனு! தூங்காம என்னடி உருண்டுட்டு இருக்க” என்றவாறு மீண்டுமாய் அவன் உறக்கத்திற்குள் போக,
அவன் இடையோடு கையிட்டு அவனை நெருங்கி அணைத்தவாறு ஒட்டி படுத்து கொண்டாள்.
அதில் அவனின் உறக்கம் முழுதாய் கலைய, “என்னடா பச்சக்கிளி” என அவள் புறம் திரும்பினான்.
“ஒரு மாதிரி மனசு அலைக்கழிப்பா இருக்குப்பா” என்று அவன் முகம் நோக்கி கூறியவள், தனது விழியை தாழ்த்தியவாறு, “என்னை சொக்க வச்சி தூங்க வைக்கிறீங்களா?” என அவன் நெஞ்சோடு ஒட்டியவாறு உள்ளே போன குரலில் நாணத்துடன் அவள் கேட்க, இதழ் விரிய சிரித்தான்.
அவளுள் மூழ்கி அவளை சிலிர்க்க செய்து, அவளின் சிந்தனை யாவும் தன்னில் மட்டுமே இருக்குமாறு அவளை ஆட்கொண்டிருந்தான் மீனாளின் சொக்கன்.
மறுநாள் மாலை அந்நேரலை தொடங்க போகும் வரையுமே நீங்காத பதட்டத்துடனேயே வலம் வந்தவளை, தனதறைக்கு அழைத்து சென்று அணைத்து விடுவித்தவன், “நான் தான் பக்கத்துலேயே இருக்கேனே! எதுக்கு இவ்வளோ பதட்டம்! ஜஸ்ட் ரிலாக்ஸ்” என்று ஆற்றுப்படுத்தினான்.
நேரலை தொடங்கியதும் அவளை அழைத்து பேச வைத்தான்.
“பார்க்க நீளமான சின்ன டப்பா மாதிரி இருக்க இந்த பிராடக்ட் தாங்க இன்னிக்கு எங்க மீனாட்சி சுந்தரேஸ்வரரின் புதிய தயாரிப்பு! இது என்ன டிபன் பாக்ஸ் மாதிரியும் இல்லாம லஞ்ச் பாக்ஸ் மாதிரியும் இல்லாம நீளமான மூடில அங்கங்க ஓட்டையோட டப்பா மாதிரி இருக்குனு யோசிக்கிறீங்களா! இது நம்ம வீட்டுல நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் ஒரு பொருளுக்காக தயாரிக்கப்பட்டது. என்னனு கெஸ் செய்ய முடியுதா?
“சரி நான் நேரடியாகவே சொல்லிடுறேன்ங்க! நம்ம உணவு முறைல கறிவேப்பிலை கொத்தமல்லி இல்லாம சமையலே இருக்காது தானே! அந்த கறிவேப்பிலையை காயாமலும் கொத்தமல்லியை அழுகி போகாமலும் பாதுகாத்து வைக்கிறது பெரிய போராட்டமாவே இருக்குல. இனி அந்த போராட்டம் உங்களுக்கு தேவையே இல்லை. இந்த டப்பால கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு ஃபிரிட்ஜ்ல வைக்கும் போது மினிமம் இரண்டு வாரத்துக்கு கெட்டு போகாம இருக்கும்ங்க. நான் பர்சனலா எங்க வீட்டுல வச்சி டெஸ்ட் செஞ்சிட்டு தான் உங்ககிட்ட சொல்றேன்” என தொடர்ந்து இடைவிடாது பேசி கொண்டிருந்தவளை ஆச்சரியமும் பெருமையும் பொங்க பார்த்திருந்தான் ஈஸ்வரன்.
மகள் இன்று பேச போகிறாள் என முந்தைய தினம் ஈஸ்வரன் கூறியிருந்ததை ஆச்சி மூலம் அறிந்து கொண்ட ருத்ரன், நேரலையை நேரடியாகவே பார்த்து கொண்டிருந்தார்.
முதல் முறை அவள் நேரலையில் தயங்கி தயங்கி பேசியதற்கும் இன்று இத்தனை தைரியமாய் திடமாய் பேசியதற்கும் எவ்வளவு வித்தியாசம் என ஆச்சரியமாய் பார்த்து கொண்டிருந்தார் ருத்ரன்.
நேரலை முடிந்த மறுநொடி கையை பற்றியவளின் நடுக்கத்தையும் சில்லிப்பையும் ஈஸ்வரனால் நன்றாக உணர முடிந்தது.
‘இத்தனையும் அடக்கிட்டு முகத்துல எதையும் காண்பிக்காம தைரியமா பேசிருக்காளே’ அவளின் விரல்களோடு தன் விரல்களை கோர்த்தவாறு அவளை பெருமிதத்தோடு அவன் நோக்க,
“பாடி ஸ்ட்ராங்! பேஸ்மெண்ட் வீக்” எனக் கண்களை சுருக்கி சிரித்தாள் மீனாட்சி.
“ப்ரவுடு ஆஃப் யூ டா பச்சக்கிளி (proud of you da)” என அவள் தோளில் தட்டி கொடுத்தான் ஈஸ்வரன்.
மீனாட்சிக்கு எதையோ சாதித்த உணர்வு! அதன் பின்பு வாரத்திற்கு ஒரு நாளேனும் அவளையும் காணொளியில் பங்குபெற செய்தான்.
இந்த காணொளிகளின் மூலம் ஈஸ்வரனை போன்று மீனாட்சியும் மதுரையில் பலருக்கும் பரிட்சயமானவளாய் மாறி போனாள்.
மீனாட்சி எண்ணியவாறு இந்த பொருளின் விற்பனை அமோகமாக இருக்க, இவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை வாரி வழங்கியது. தயாரித்தவை எல்லாம் விற்று தீர்ந்து மேலும் தயாரிக்க கேட்டு ஆர்டர் வந்த வண்ணம் இருந்தன. இவர்களின் தயாரிப்பு அத்தனை தரமானதாகவும் இருந்தது.
மீனாட்சி சுந்தரேஸ்வரனுக்கு திருமணமாகி ஒரு வருடம் கடந்திருக்க, கல்யாணியின் நிச்சயத்தில் பங்கு கொள்ள வந்திருந்தான் சுந்தரராஜன்.
கல்யாணி முதுகலை படிப்பை முடித்ததும், ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். ராஜன் தான் கல்யாணிக்கான வரனை பார்த்து தேர்ந்தெடுத்தான்.
அந்த வரன் பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்க, திருமணத்திற்கு பின் கல்யாணி பெங்களூருக்கு மாறுதலாகி போவாள் என முடிவு செய்யப்பட்டது.
காலையில் கோவிலில் வைத்தே நிச்சயம் முடிந்திருக்க, மீனாட்சியின் பிறந்த குடும்பத்தினர் கோவிலிற்கு வந்து விட்டு நிச்சயம் முடிந்ததும் கிளம்பியிருந்தனர்.
வீட்டிற்கு வந்த மற்ற அனைவரும் உறங்கி எழுந்து மாலை தேநீர் அருந்தியவாறு அரட்டை அடித்து கொண்டிருக்க, தீரனும் இவர்களுடன் இணைந்து கொண்டான்.
“அடுத்த கல்யாணம் நம்ம ராஜாண்ணாக்கு தான்” என்ற கல்யாணி, “ராஜா அண்ணாக்கு நான் தான் பொண்ணு பார்ப்பேன்” என்றாள் ஆசையாய்.
“என்னது நீ பார்ப்பியா! உங்க அண்ணன் ஏற்கனவே பொண்ணுலாம் பார்த்து வச்சிட்டாங்க” என அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினான் தீரன்.
“அப்படியா சுந்தர்!”
“நிஜமாவா அண்ணா?”
என மீனாட்சியும் கல்யாணியும் ஆச்சரியமும் அதிர்ச்சியுமாய் அவனை கேட்க,
ஈஸ்வரன் ராஜனின் முகத்தை பார்த்திருந்தான். இருவரும் இன்னமும் நேரடியாக பேசிக் கொள்ளவில்லை என்றாலும் விலகி செல்லவும் இல்லை. அப்படியே அவர்களின் பாசமான உறவு தொடர்ந்து கொண்டிருந்தது.
“அய்யோ அதெல்லாம் இல்ல” என அனைவரின் பார்வையையும் எதிர்கொள்ள முடியாதவனாய் எங்கேயோ வெறித்தவாறு ராஜன் கூற, அவனின் பார்வையை உணர்ந்த ஈஸ்வரன் மீனாட்சியின் காதினில், “பொய் சொல்றான்” என்றான்.
“பொய் சொல்றீங்களாமே! உங்க அண்ணன் சொல்றாங்க” என மீனாட்சி நேரடியாகவே கேட்க,
“பொய் சொல்றியா! அப்ப நிஜமாவே லவ் பண்றியா அண்ணா! யாருண்ணா அந்த பொண்ணு” ராஜனின் அருகில் அமர்ந்தவாறு ஆர்வமுடன் கேட்டாள் கல்யாணி.
“எங்கேம்மா சொல்றான்! நானும் ரொம்ப நாளாக இதை கேட்டுட்டு இருக்கேன். இந்த ஊருல ஏதோ ஒரு உளவாளி பொண்ணு இருக்குனு சொன்னான். அந்த பொண்ணை தான் காதலிக்கிறானானு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறான்” என தீரன் புலம்ப,
அனைவரும் சொல்லுங்க சொல்லுங்க என ராஜனை சுற்றி நின்று நச்சரிக்க தொடங்கினர்.
“இப்போதைக்கு நான் ஒன்னே ஒன்னு தான் சொல்ல முடியும்! அந்த பொண்ணுக்கு என்னை தெரியும்! ஆனா நான் அந்த பொண்ணை லவ் பண்றது அந்த பொண்ணுக்கே தெரியாது” எனக் கூறி சிரித்தான்.
“அடேய் நீ 90ஸ் கிட்ஸ் தான்டா நம்புறேன்! அதுக்குனு இப்படி மொக்கை போடாத” என தீரன் கேலி செய்ய அனைவரும் சிரித்திருந்தனர்.
கல்யாணிக்கு அவளின் வருங்கால கணவனிடத்தில் இருந்து அழைப்பு வர அவள் உள்ளே சென்று விட்டாள்.
இது தான் தப்பிக்கும் நேரம் என, “வாடா கிளம்புவோம்” என தீரனை அழைத்து கொண்டு கிளம்பி விட்டான் ராஜன்.
கல்யாணிக்கு வேங்கடத்தையும் செல்வாம்பிகையையும் தனது நிச்சயத்திற்கு அழைக்க துளியும் விருப்பமில்லை என்பதால் ஈஸ்வரனும் அவர்களை அழைக்கவில்லை. அகல்யாவும் மீனாட்சியும் தான் பெயருக்காவது அழைப்பு விடுப்போம் என கூறிக் கொண்டிருந்தார்கள். ராஜனே அவர்களை அழைக்க வேண்டாமென கூறிவிட்டான்.
“எதுக்கு! வந்து வாழ போற பொண்ணுக்கு சாபம் விடுறதுக்கா! அவங்கலாம் என்னிக்கும் திருந்தவே மாட்டாங்க! மகனா அவங்களுக்கு செய்ய வேண்டிய கடமையை நான் செஞ்சிட்டு இருக்கேன். நீங்க அவங்களை உறவா மதிக்கனும்னு எந்த அவசியமும் இல்லை” என ராஜனே அகல்யாவையும் மீனாட்சியையும் சமாதானம் செய்தான்.
மீனாட்சிக்கு தான் ராஜனின் இந்நிலை எண்ணி மனம் கலங்கி போனது.
“அவரோட நல்ல மனசுக்கு ஏத்த மாதிரி நல்லா பொண்ணா கட்டி வச்சிடு ஆண்டவா” என அவனுக்காக வேண்டியும் கொண்டாள்.
மீனாட்சியின் தந்தை ருத்ரன் மதுரை வரும் சமயங்களில் எல்லாம் மீனாட்சி தனது மாமாவின் இல்லத்திற்கு சென்று தங்கிடுவாள்.
ஈஸ்வரனும் அந்நாட்களில் எல்லாம் மீனாட்சியுடன் அந்த இல்லத்திலேயே தங்கி கொள்வான்.
அவள் சென்னை செல்லும் நேரங்களிலும் அவளுடனே இவனும் பயணித்து விட்டு இரண்டு நாட்கள் தங்கி விட்டு வருவான்.
இன்று தந்தையை காண மாமாவின் இல்லம் சென்றவள் இரவு வரை குடும்பத்தினருடன் வரவேற்பறையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தாள்.
வீட்டிலுள்ள அந்த மர ஏணி படிக்கட்டின் மூலமாகவே மணம் வீசும் அறைக்கு சென்றாள் மீனாட்சி.
அவளின் பின்னேயே அந்த அறைக்குள் நுழைந்த அன்னம், “பாரு நீ இல்லனா கூட உன் ரூமை எவ்ளோ அழகா நான் மெயின்டெய்ன் செஞ்சிட்டு இருக்கேன் பாரு” என்றாள்.
அந்த ஜன்னலின் அருகே நின்று மலரின் வாசத்தை ஸ்வாசித்து உள்ளிழுத்து கொண்ட மீனாட்சி, “உனக்கும் கல்யாணமாகி இங்க வரும் போது இந்த ரூம் கேட்டு சண்டை போட மாட்டியே” என குறும்பாய் கேட்க,
“ஹான் ஆசையை பாரு! நீங்க மட்டும் புருஷன் பொண்டாட்டியா வரும் போது நாங்க ரூமை விட்டு கொடுக்கனுமாம்! ஆனா நாங்க வரும் போது கொடுக்க மாட்டாங்களாம்” என அன்னம் ஒழுங்கு காண்பித்தவாறு கூற சிரித்திருந்தாள் மீனாட்சி.
“சரி அதுக்கு தான் இன்னும் பல வருஷம் இருக்கே” என்று மீனாட்சி கூற,
“என்னது பல வருஷமா” என நெஞ்சில் கை வைத்து கொண்ட அன்னம், “எதே அவங்களே எனக்கு கல்யாணம் செஞ்சி வைக்கலாம்னு சொன்னா கூட நீ செஞ்சி வைக்க மாட்ட போலயே” என்றாள்.
“பின்னே இப்ப தானடி ப்ளஸ் டூ முடிச்சிருக்க! இன்னும் காலேஜ் முடிச்சி வேலைக்கு போகனும். அதுக்கு நாலஞ்சு வருஷம் ஆகும்ல” என மீனாட்சி கூற,
“ஓஹோ நீங்க மட்டும் வேலை செய்ய மாட்டேன்னு எங்கே போனாலும் உன் பின்னாடியே சுத்தி வர மாதிரியான மனுஷனை புருஷனாக்கி ஹேப்பியா வாழுவீங்களாம்! நாங்க மட்டும் வேலை பார்த்து கஷ்டப்பட்டு கிடக்கனுமா?” என கிண்டலாய் ஏட்டிக்கு போட்டியாய் பேசிய அன்னம்,
“ஆமா அப்படி என்ன தான் சொக்குபொடி போட்ட உன்னோட ஈசுப்பாக்கு! பொண்டாட்டி எங்கே போனாலும் பின்னாடியே வந்துடுறாரு” என ரகசியம் போல் மீனாட்சியின் அருகே அமர்ந்து கிசுகிசுப்பாய் அன்னம் பேச, அறையினுள் நுழைந்திருந்தான் ஈஸ்வரன்.
“அய்யய்யோ அண்ணா கேட்டிருப்பாங்களா தங்கம்” என மீனாட்சியின் காதினில் உரைத்தவளாய், “வரேன் அண்ணா” என பதறியடித்து வெளியே சென்றிருந்தாள்.
ஈஸ்வரனின் வதனத்தில் இருந்த சிரிப்பை கண்ணுற்றவளாய், “அவ பேசியதைலாம் கேட்டீங்களா?” எனக் கேட்டாள்.
ஆமென தலையசைத்து அவன் சிரிக்க, “சும்மா விளையாட்டா பேசிட்டு இருந்தா! ப்ளஸ் டூல தொண்ணூறு பர்சன்ட் வரும்னு சொல்லிருக்கா! இஞ்சினியரிங் தான் படிக்க போறா” என்று அவள் கூறியதை கேட்டவன், குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
குளித்து விட்டு வந்தவன் மெத்தையில் அமர்ந்திருந்த மீனாட்சியின் வயிற்றில் முகத்தை புதைத்தவாறு, “எப்ப குழந்தையோட அசைவெல்லாம் தெரியும்?” எனக் கேட்டான்.
“இப்ப தானேங்க அஞ்சு மாசம் ஆகுது! அதுக்கு இன்னும் கொஞ்சம் மாசம் ஆகும்! சரி வாங்க உங்களுக்கு டிபன் எடுத்து வைக்கிறேன்” என அவனுடன் அந்த மர படிக்கட்டில் அவள் இறங்க,
“இதுல இறங்க உனக்கு ஒன்னும் கஷ்டமா இல்லையே” என அவன் கேட்க, இல்லையென மென்னகையுடன் தலையசைத்தாள்.
“இருந்தாலும் குழந்தை பிறக்கிற வரைக்கும் நீ அந்த வெளி படிக்கட்டையே யூஸ் செய்யேன்! எனக்காக” என கண்ணை சுருக்கி அவன் கூற,
“ஹா ஹா ஹா என்னோட பயம் உங்களுக்கு தாவிட்டு போல” எனக் கூறி சிரித்தாள்.
உணவினை உண்டு விட்டு மீண்டுமாய் அந்த மணம் கமழும் அறைக்குள் இருவரும் பிரவேசித்ததும் காற்றின் சுகந்தத்தில் லயித்தவாறு நின்றிருக்க,
“சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தான்டி” என பாடல் வெளியிலிருந்து ஒலிக்கவும் இருவருமே சிரித்து விட்டனர்.
“நான் எங்க சொக்கு பொடி போட்டேன்! நீங்க தான் சொக்க வச்சி சொக்க வச்சி இதோ இப்படி ஆக்கிருக்கீங்க” என வெட்கத்துடன் தனது வயிற்றை காண்பித்தவாறு மெத்தையில் அமர்ந்தாள்.
அவளின் நாணச்சிரிப்பை ரசித்தவனாய், “சொக்க வைக்கிறேன்னு சொல்லி சொல்லி நிஜமாவே நான் தான் உன்கிட்ட சொக்கிப் போய் இருக்கேன் பச்சக்கிளி! சொக்கி போனதுக்கான பரிசு தான் இது” என வயிற்றில் இருந்த அவளின் கையின் மீது கை வைத்து சிரித்தவாறு உரைத்தான் மீனாளின் சொக்கன்.
சொக்கனின் மீனாளாகவும், மீனாளின் சொக்கனாகவும் இருவரும் ஒருவருள் ஒருவர் என்றும் என்றென்றும் இப்படியே இணைப்பிரியா காதலுடன் வாழட்டும் என வாழ்த்தி விடைபெறுவோம் நாமும்.