அத்தியாயம் 4
“இன்னைக்கு அப்பா கூட பைக்ல ட்ராவல் பண்ணுனப்ப சிக்னல்ல பைக் நின்னுச்சு… ரோட்ல இருந்து சில அடி டிஸ்டன்ஸ்ல ப்ளூ கலர் ப்ளாஸ்டிக் கவரை வச்சு டெண்ட் போட்டு அதுல சிலர் குடும்பமா வாழுறதை பாத்தேன்… அது மழைநேரம் வேற… டெண்ட்குள்ள சொட்டு சொட்டா விழுந்த மழைத்தண்ணி தரைய நனைச்சிடாம நெளிஞ்சு போன அலுமினிய பாத்திரம் ஒன்னை வச்சு அது பக்கத்துலயே உக்காந்திருந்தா சின்னப்பொண்ணு ஒருத்தி… தண்ணி பாத்திரத்துல விழுறதை பாக்கிறப்ப நல்லவேளை தரை நனையலனு சின்னதா ஒரு சந்தோசம் அவ முகத்துல தெரிஞ்சுது… நிரந்தரமா தங்குறதுக்கு சின்னதா வீடு கூட இல்லாத நிலமையில கூட அவளால இந்தச் சின்ன சந்தோசத்தை ரசிக்க முடியுதுல்ல, அதுக்குப் பேர் தான் பாசிட்டிவிட்டினு அப்பா சொன்னார்… உண்மை தானே! இல்லாததை நினைச்சு ஏங்குறதை விட இருக்கிறதை நினைச்சு சந்தோசப்படலாமே”
-நித்திலா
லாங்வுட்…
விக்ரம் அமைதியின்றி நகம் கடித்தவாறு அமர்ந்திருந்த நித்திலாவைக் கேள்வியாய் நோக்கினான். ஏதோ பேச வேண்டுமென அழைத்தவள் திடுமென திருமணத்தை நிறுத்திவிடலாமென கூறவும் அவன் அதிர்ந்தான்.
பிற்பாடு என்ன காரணமென பொறுமையாக வினவினான். அப்போதிலிருந்து அமைதியாய் இருக்கிறாளேயொழிய காரணத்தைக் கூறவில்லை.
“நித்தி வாட் ஹேப்பண்ட்? நீ திடீர்னு கல்யாண ஏற்பாடை நிறுத்துனு சொல்லிட்ட… இந்த விசயத்துல உன்னை கம்பெல் பண்ணுறதுக்கான உரிமை எனக்கு இல்ல… ஆனா காரணத்தை தெரிஞ்சிக்கிற அளவுக்கு உரிமை இருக்குல்ல?”
விக்ரம் அவ்வாறு சொன்னதும் நித்திலாவின் மனம் குற்றவுணர்ச்சியில் குன்றிப்போனது.
இத்தனை ஆண்டுகாலம் அழகான கவிதையாக போய்க்கொண்டிருந்த நட்பை திருமணவுறவு இன்னும் பலமாக்கும் என்ற நம்பிக்கையிலும், என் அப்பா யார் என தொடர்ச்சியாய் கேட்டுக்கொண்டேயிருந்த அம்ரித்தின் ஆதங்கத்தைப் போக்கிவிடும் தீவிரத்திலும் ஆழ்ந்து யோசித்து நண்பர்கள் இருவரும் கண்டெடுத்த தீர்வு தான் திருமணம்.
அதன் ஆணிவேரையே அசைத்துப் பார்க்கும் துணிச்சலோடு ஒருவன் வந்து நிற்கையில் தன்னோடு சேர்த்து விக்ரமையும் சிக்கலில் மாட்டிவிடும் அளவுக்கு நித்திலா முட்டாள் இல்லையே!
எதிலும் எனக்கு அக்கறை இல்லை என காட்டிக்கொண்டாலும் கிருஷ்ணராஜசாகர் நினைத்ததை நடத்திக்காட்ட எந்த எல்லைக்கும் செல்பவன் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவள் தேவையின்றி அவனது ஈகோ எனும் நெருப்புக்கு நெய் வார்ப்பாளா என்ன?
ஆனான் இப்போது நண்பன் காரணம் கேட்கிறானே. சூழ்நிலை இதுவென கூறினால் புரிந்துகொள்ளக்கூடியவன் தான் விக்ரம்.
இவ்வளவு நேரம் தயக்கத்தால் பூட்டியிருந்த வாய்ப்பூட்டை கழற்றி எறிந்துவிட்டு மெய்யான காரணத்தைக் கூறிவிட்டாள் நித்திலா.
“அம்ருவோட அப்பா இங்க வந்திருக்கார் விக்கி”
விக்ரமின் விழிகளில் ஆச்சரியம்.
“அவரும் அவரோட அம்மாவும் நம்ம கபேக்கு வந்திருந்தாங்க… என்னையும் அம்ருவையும் பாத்ததும் அவங்கம்மா ஃபீல் பண்ணுனாங்களாம்… இன்னைக்கு மானிங் கபேக்கு வந்தவர் நாங்க கோர்ட்ல அப்ளை பண்ணுன மியூச்சுவல் டிவோர்ஸ் பெட்டிசனை காட்டுனார்… நான் ஹியரிங்குக்குப் போகாததால ஜட்ஜ் எங்க டிவோர்ஸ் பெட்டிசனை ரிஜக்ட் பண்ணிட்டாங்க… இப்பவும் நாங்க…”
தயக்க மிகுதியில் அவள் பாதியில் நிறுத்தினாள்.
“இப்பவும் நீங்க…” விக்ரம் வாக்கியத்தை முடிக்கும்படி ஊக்கினான்.
“இப்பவும் நாங்க ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ப் தானாம் விக்கி”
சொல்லிவிட்டுத் தலையைக் குனிந்துகொண்டாள் நித்திலா. விக்ரமுக்கு அவள் மீது பரிதாபம் வந்தது. நான்காண்டுகளுக்கு முன்னர் கபே கணக்குவழக்கைப் பார்ப்பதற்காக வந்து சேர்ந்த போது அவள் முகத்தில் கவிழ்ந்திருந்த சோகம் இப்போதும் தெரிய விக்ரம் சினேகத்தோடு அவளது கையைத் தட்டிக்கொடுத்தான்.
“என்ன முடிவு பண்ணிருக்க?” என நிதானமாக வினவினான்.
“இதுல முடிவு பண்ணுறதுக்கு என்ன இருக்கு விக்கி? கிரிஷுக்கு நான் இன்னொரு கல்யாணம் பண்ணுறது தான் பிரச்சனை… சோ கல்யாணத்தை நிறுத்திட்டேன்… அவ்ளோ தான்… இதுவே அவருக்குச் சந்தோசமா இருக்கும்”
“அவருக்கு அம்ரு மேல பாசம் இருக்கும்ல நித்தி”
விக்ரம் சொன்னது தான் தாமதம் அவனைப் பார்வையால் சுட்டாள் நித்திலா.
“அந்த மனுசனால அவரையும் அவரோட ஃபேமிலி மெம்பர்சையும் தாண்டி யார் மேலயும் பாசம் காட்ட முடியாது விக்கி… நான் அனுபவப்பட்டவ… அம்ரு அவரோட இரத்தம்ல… அதான் இவ்ளோ ஆர்ப்பாட்டம்… இதுவே அம்ருனு ஒருத்தன் இல்லனா நித்திலானு ஒருத்தி அவர் கண்ணுக்குத் தெரிஞ்சிருக்கவே மாட்டா விக்கி… டிவோர்ஸ் பெட்டிசன் ரிஜக்ட் ஆனதும் அவருக்கு மறந்து போயிருக்கும்”
“சில்… ஏன் இவ்ளோ கோவம்? இத்தனை வருசம் உன்னை கைவிட்டதாலயா?”
கோபம் மறைந்து கேலிச்சிரிப்பை உடுத்திக்கொண்டது நித்திலாவின் வதனம்.
“என்னைக்காச்சும் ஒரு நாள் பிரிஞ்சிடலாம்ங்கிற நம்பிக்கையில தான் நாங்க கல்யாணமே பண்ணிக்கிட்டோம் விக்கி… கிட்டத்தட்ட ஜெண்டிமென் அக்ரிமெண்ட் மாதிரினு வச்சுக்கோயேன்… எங்க ரிலேசன்ஷிப்ல குழந்தைனு ஒன்னு வரப்போறதில்லனு இறுமாப்பா நம்புன காலம் அது… ஒரு சலனம், ஃப்ராக்சன் ஆப் செகண்ட்ல வந்த சலனத்தால…”
எதையோ சொல்ல வந்தவள் தூரத்தில் பொம்மைக்காரில் அமர்ந்து ஓட்டிக்கொண்டிருந்த அம்ரித்தைக் கண்டதும் சொல்லாமல் நிறுத்திவிட்டாள்.
இவனது பிறப்பின் காரணத்தைச் சலனம் என கூறி கேவலப்படுத்தலாமா? மனசாட்சி குத்தியதும் வாய் மூடிக்கொண்டது.
விக்ரம் அவளது நிலையைப் புரிந்துகொண்டான்.
“நான் கேக்குற ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு… அந்தச் சலனத்தோட அடிப்படை எது? உனக்கு வில்பவர் ஜாஸ்தி… சோ என்னைக் கேட்டா அந்தச் சலனத்துக்கு அடிப்படை உனக்கு கிரிஷ் மேல வந்த காதல்”
விக்ரமின் பேச்சின் முடிவில் நித்திலாவின் கண்கள் துடித்தது. உதடுகளோ நடுங்கத் தொடங்கின. முகத்தின் பக்கவாட்டில் அழகுக்காக வெட்டி விட்டிருந்த கூந்தல் கற்றையை நாசூக்காக ஒதுக்கி தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டவள் “புல்ஷிட்” என்றாள் அழுத்தமாக.
குரலின் அழுத்தத்தை பார்வைக்கும் மாற்றிக்கொண்டாள்.
“நீ விசுவாசம் படம் பாத்திருக்கியா? அதுல நயன்தாரா பிசினஸ் வுமன் ஆனதுக்கு அப்புறம் நான் தனியா இருக்குறதால தான் உயரத்துல இருக்கேன்னு ஒரு டயலாக் சொல்லுவாங்க… அதை தாரக மந்திரமா வச்சு வாழுற மனுசன் அந்த கிருஷ்ணராஜசாகர்… பிசினஸ்ல ஜெயிக்கணும்னா பொண்டாட்டி, குழந்தை லொட்டு லொசுக்குனு யாரும் கூட இருக்கக்கூடாதுனு சொல்லுற டைப்… பிசினஸ்ல அவரோட ரோல்மாடல் ரத்தன் டாட்டா… ஏன்னா அவர் இப்ப வரைக்கும் சிங்கிளா இருக்கார்ல”
அழுத்தமாக ஆரம்பித்து சலிப்பாக நித்திலா முடித்த விதத்தில் விக்ரமுக்குச் சிரிப்பு வந்தது.
அம்ரித் கார் ஓட்டுவதை நிறுத்திவிட்டு விக்ரமிடம் ஓடி வந்தான்.
“டாடி நாளைக்காச்சும் என் கூட விளையாட வருவிங்களா?”
ஆவலாக கேட்டவனை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டான் விக்ரம்.
“கண்டிப்பா வருவேன்… பட் எனக்காக ஒரு ஃபேவர் பண்ணுறியா செல்லக்குட்டி?”
“என்ன டாடி?”
“என்னை நீ எப்பவும் எப்பிடி கூப்பிடுவ?”
“விக்கி அங்கிள்னு கூப்பிடுவேன்”
“குட்பாய்… இனியும் அப்பிடி தான் கூப்பிடணும்… டாடி வேண்டாம்… உவ்வேக்”
விக்ரம் முகத்தைச் சுளித்து அவ்வாறு கூறவும் அம்ரித்தின் முகம் வாடி முட்டைக்கண்களில் கண்ணீர் நிரம்பிவிட்டது.
“அப்ப எனக்கு டாடி கிடையாதா?”
தொண்டை கட்ட அவனது குரல் அழுகைக்குத் தாவுவதற்குள் ஆயிரம் முறை நித்திலா மனதிற்குள் வெம்பிப்போனாள்.
விக்ரம் அம்ரித்தை இறுக அணைத்தவன் “யார் சொன்னாங்க அப்பிடி? உன் டாடி உன்னைத் தேடி வந்துட்டார்மா” என்கவும் அவனை முறைத்தாள் நித்திலா.
அம்ரித்தை அவளிடம் கொடுத்தவன் “சில நேரம் நம்மளை பத்தி யோசிக்காம நம்ம நேசிக்கிறவங்களுக்காக யோசிக்கலாம் நித்திலா… நீயும் நானும் மேரேஜ் பண்ணிக்கலாம்னு டிசைட் பண்ணுன மாதிரி” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
அவன் சொன்ன வார்த்தைகள் நியாயமென நித்திலாவுக்குப் புரிந்தது. ஆனால் தன்மானம் கொண்ட மனதிற்கு அது புரியவேண்டுமே!
******
ரிசார்ட்டின் மாடியில் நின்றவாறு மொபைலில் யாரிடமோ கர்வம் தெறிக்கும் குரலில் பேசிக்கொண்டிருந்தான் கிருஷ்ணராஜசாகர்.
குரலில் மட்டுமன்றி அவனது உடல்மொழியிலும் எக்கச்சக்க கர்வம்.
“நான் சென்னைக்குப் போக கொஞ்சம் நாளாகும்… யூ.எஸ்ல இருந்து வந்து நிக்கிறப்ப நீயும் உன் ஒய்பும் நினைச்சுப் பாக்காத எல்லாம் நடக்கும்… எதுக்கும் நிஹாரிகாவ யோகா செஞ்சு மனசை ப்ரிப்பேர் பண்ணிக்க சொல்லு சந்தீப்… அப்ப தான் திடீர்னு பெரிய அதிர்ச்சி வர்றப்ப அதை தாங்கிக்காம அவளோட இதயம் பொட்டுனு நிக்காது”
மறுமுனையில் ஏதோ பதில் வரவும் சத்தமாக நகைத்தான் அவன்.
“போதும்டா டேய்… கல்யாணம் ஆகுற வரைக்கும் தான் அண்ணன் தம்பி.. கல்யாணம் ஆச்சுனா பங்காளினு ஊர்ப்பக்கத்துல ஒரு பழமொழி சொல்லுவாங்க… அதுக்கு வாழும் உதாரணம் நீயும் நானும்… இனிமே அப்பிடியே இருந்துப்போம்… எனிஹவ், ட்ரீட்மெண்ட்ல எதாச்சும் முன்னேற்றம் தெரியுதா?”
கடைசி கேள்வியில் நக்கலைக் கூட்டி அவன் கேட்ட விதத்தில் மறுமுனையில் பேசிக்கொண்டிருந்தவனுக்கு மட்டும் மானம் ரோசம் இருந்தால் உடனே தூக்கிட்டுக் கொள்வான்.
அவ்வளவு ஏளனம் கிருஷ்ணராஜசாகரின் குரலில். அதற்கு மாறாக மறுமுனையில் ஆழ்ந்த மௌனம்.
“இப்பவும் சொல்லுறேன், ஷீ டசிண்ட் டிசர்வ் யூ”
அன்றொரு நாள் சந்தீப் கிருஷ்ணராஜசாகரைப் பார்த்து சொன்ன அதே வார்த்தையை இன்று அவன் சந்தீப்பிடம் கூறி பழைய கணக்கைத் தீர்த்துக்கொண்டான்.
அது பரமானந்தத்தை அளிக்க அழைப்பைத் துண்டித்தவன் மொபைலை டீபாய் மீது வைத்துவிட்டு நெட்டி முறித்தான்.
விசித்திரமான வகையில் மனம் மிகவும் குதூகலமாய் இருந்தது அவனுக்கு. அவனை எள்ளி நகையாடியவர்களுக்குத் தகுந்த பாடத்தைக் கத்துக்கொடுக்க காத்திருந்தவனுக்குக் காலமே மனமுவந்து வெகுமதி அளித்திருக்கிறது.
இப்போது அவனது கண்ணுக்கு வெளிச்சமாகத் தெரிந்தவன் அம்ரித் மட்டுமே. அவனால் மட்டுமே கிருஷ்ணராஜசாகருக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற்றுத்தர முடியும்.
அவனைத் தன்னோடு அழைத்துச் செல்ல மாபெரும் தடையாக நித்திலா இருப்பாள் என்பதில் கிருஷ்ணராஜசாகருக்கு எந்த ஐயமும் இல்லை. அவளைச் சரிகட்டுவது அவ்வளவு எளிதில்லை.
நான்காண்டுகளுக்கு முன்னர் திருமணத்திற்கு அவளைச் சம்மதிக்க வைக்க ஒரு துருப்புச்சீட்டு இருந்தது. எப்போது அவனது வாழ்க்கையை விட்டு நித்திலா விலகினாளோ அப்போதே அந்த துருப்புச்சீட்டுக்கு மதிப்பளிக்கும் மடமையைத் தூக்கியெறிந்துவிட்டாள்.
இனி அதனால் பயனில்லை. புதிதாக எதையாவது யோசிக்க வேண்டும். அவன் சிந்தனையில் ஆழ்ந்த போதே பின்னே யாரோ வரும் அரவம் கேட்டது.
திரும்பிப் பார்த்தவன் வந்தவர் அன்னை என்றதும் அதிருப்தியாய் பார்த்தான்.
“ஏன் குளிர்ல வர்றிங்கம்மா? கூப்பிட்டிருந்தா நானே உங்க ரூமுக்கு வந்திருப்பேன்”
கடிந்துகொண்டாலும் அவர் அமர இருக்கையை நகர்த்தினான்.
நர்மதா சால்வையைச் சரி செய்தபடி அமர்ந்தவர் அம்ரித் விவகாரத்தில் அவனுடைய நிலைபாடு என்னவென வினவினார்.
“இங்க இருந்து போறப்ப அம்ரித் நம்ம கூட வருவான்”
“நித்திலா?”
“மகன் வேணும்னா அவளும் வருவாம்மா… அவளை வெத்தலை பாக்கு வச்சுல்லாம் அழைக்க முடியாது”
மகனின் குரலில் மண்டிய எரிச்சலால் பதபதைத்தது தாயுள்ளம். இன்னும் மனையாளுக்கு வாழ்க்கையில் இருக்கும் முக்கியத்துவம் இவனுக்குப் புரியவில்லையே என்ற ஆதங்கம்.
“இது ரொம்ப தப்பான மைண்ட் செட் கிரிஷ்… உனக்கு நான் எப்பிடி முக்கியமோ அதே மாதிரி தான் நித்திலாவுக்கு அவளோட மகன் முக்கியம்”
“அவன் என்னோட மகன்”
வேகமாகத் திருத்தினான் அவன்.
“கபேல அவனைப் பாக்கலனா இப்பிடி ஒரு மகன் இருக்குறது உனக்குத் தெரிஞ்சிருக்குமாப்பா? உரிமையா என் மகன்னு சொல்லுறதுலாம் சரி… அவனைப் பெத்தவளைப் பத்தி நீ யோசிக்கலையே”
“அதான் சொல்லிட்டேன்ல, அம்ரித் முக்கியம்னா அவ வருவா”
“நான் குளிர்ல வந்ததுக்கு அவ்ளோ டென்சன் ஆனல்ல, அம்மாக்கு குளிர் ஒத்துக்காதுனதும் உனக்குத் துடிக்குதுல்ல, அதே மாதிரி அம்ரித்துக்கும் அவனோட அம்மா முக்கியம்”
விடாக்கண்டனாக இருக்கும் மைந்தனின் மனதில் என்ன திட்டம் ஓடுகிறதென புரியாமல் விழித்த நர்மதா அவன் பாணியிலேயே மடக்கினார்.
“இப்ப என்ன தான் சொல்ல வர்றிங்கம்மா?”
“அந்தக் குழந்தைக்கு இப்ப வரைக்கும் தாயும் தகப்பனுமா இருக்கிறவளை வேதனைப்படுத்தி தான் அவனை நம்ம கூட அழைச்சிட்டு வரணும்னா அவன் வரவே வேண்டாம்… உன் பாசத்தைப் புரிஞ்சிக்கிட்டு நித்திலா அவளாவே விருப்பப்பட்டு வரணும்… இல்லனா அவங்க இங்கயே சந்தோசமா வாழ்ந்துட்டுப் போகட்டும் கிரிஷ்”
கிருஷ்ணராஜசாகர் மௌனமாக நின்றான். இப்போதைக்கு அன்னையின் பேச்சை மீற மனம் வரவில்லை. கூடவே அவரது பேச்சு நியாயமாகத் தோன்றியது.
நர்மதா வந்த கடமை முடிந்ததென எழுந்து சென்றுவிட்டார்.
நித்திலாவைச் சம்மதிக்க வைக்கும் அஸ்திரம் அம்ரித் மட்டுமே. அவன் எப்போதும் தன்னோடு இருப்பதற்கு எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தான் கிருஷ்ணராஜசாகர்.
அச்சிறுவனோ தன்னை தந்தையென அழைக்கக்கூட நித்திலாவின் அனுமதியை எதிர்பார்க்கிறான்! அவனது மனதை மாற்றுவதற்கு இமாலய முயற்சி தேவை போல.
நித்திலாவின் உறுதியும் நிமிர்வும் அவனுக்கு வாய்த்திருக்கிறது என்று எண்ணிக்கொண்டான். முடிந்தவரைக்கும் நித்திலாவிடம் நெருங்கிவிடக்கூடாதென தனக்குத் தானே எல்லை வகுத்துக்கொண்டான்.
ஒருமுறை அவளிடம் இயல்பாகப் பழகி நெருங்கியதில் உண்டான தடுமாற்றத்தின் விளைவு எத்தகையது என அனுவித்தறிந்தவன் அல்லவா!
தடுமாற்றமா அது? கிட்டத்தட்ட போதை! எத்தகைய போதையாக இருந்தாலும் தெளிந்து தானே ஆகவேண்டும். அவள் மீது உண்டான போதையும் தெளிந்தது. விளைவு, அவனை விட்டு விலகி வெகுதூரம் சென்றுவிட்டாள் நித்திலா.
என்றேனும் ஒருநாள் நடக்க வேண்டியது தானே என கிருஷ்ணராஜசாகர் அலட்சியமாக இருந்துவிட்டான். தன்னை விட்டு விலகியவள் தன் பார்வை படாத தூரத்துக்குச் சென்றுவிடுவாள் என்றெல்லாம் அவன் யோசிக்கக்கூட இல்லை.
“அண்ணி அவங்க வீட்டுக்குப் போகலையாம்… அவங்க ரெண்டு நாளா கால் பண்ணலனு அங்கிள் சொல்லுறார்ணா”
இது தான் கடைசியாக நித்திலாவைப் பற்றி அவன் கேள்விப்பட்ட தகவல். ‘மியூச்சுவல் டிவோர்ஸ் பெட்டிசன்’ கையெழுத்திடப்பட்டு அவனது அறையில் அவனுக்காக காத்திருந்தது.
அன்றைய தினம் இனம்புரியாத வெறுமை அவனுக்குள்ளும் அவனது அறைக்குள்ளும் வியாபித்தது. அதே வெறுமை தொடராமல் பிசினசில் தன்னை மூழ்கடித்துக்கொண்டான் கிருஷ்ணராஜசாகர்.
இப்போது அவனுள் இருப்பது மகனைப் பிரிந்தோமே என்ற ஆதங்கமா? அவனை தன்னுடன் சேரவிடமாட்டேன் என தடையாக நிற்கும் நித்திலாவின் மீது வந்த கோபமா? அவனுக்கே என்ன மாதிரியான உணர்வென இனம் காண முடியவில்லை.
எது எப்படியோ அம்ரித்தைத் தன்னோடு சென்னைக்கு அழைத்துச் செல்லும் முடிவில் மாற்றமில்லை என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான் கிருஷ்ணராஜசாகர்.