• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடல் 1

Nancy mary

✍️
Writer
வணக்கம் நண்பர்களே, இது என்னுடைய முதல் தொடர்கதை இதற்கு உங்களின் ஆதரவு கிடைக்குமென்ற நம்பிக்கையோடு என் எழுத்து பயணமென்ற அழகிய பாதையில் பயணிக்க போகிறேன்😇.

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அன்பை பலவிதமாய் உணர்ந்திருப்போம்;
தாய் தந்தை பாசத்தில் துவங்கிய மனிதனின் வாழ்வு துணையின் காதலோடும், சந்ததியினரின் பாசத்தோடும் நிறைவாய் முடிவடையும்;
அப்படிபட்ட அன்பின் பல பரிமாணங்களை ஒவ்வொரு நொடியும் அனுபவிக்கும் நாம் அனைவரும் அனுபவிக்கும் அல்லது அனுபவிக்க துடிக்கும் ஒருவித அன்பு பரிமாற்றமே காதல்.

உலகில் எந்த அன்பான உறவும் தர முடியாத வலியையும், துன்பத்தையும், சந்தோஷத்தையும், நிறைவையும் காதல் தந்துவிடும்; காதல் என்ற உணர்வு நல்லவனையும் அரக்கனாக்கும்; அசுரனையும் நல்லவனாய் மாற்றும்; அப்படிபட்ட காதல் இங்கு சிலபேரின் வாழ்வில் விதியின் துணைக்கொண்டு விளையாட போகிறது;
அதனின் தாக்கம் சமூகத்திலும் பிரதிபலிக்க போகிறது;
இவையனைத்தையும் கடந்து காதல் கொண்ட நெஞ்சங்கள் இணைந்தார்களா தங்களின் வாழ்வில் வெற்றியை அடைந்தார்களா என்பதே இக்கதை.



அத்தியாயம் 1


பகலவன் தன் ரதியை காண ஆவலோடு தேடி வர,
தன் ஆதவனின் வதனம் காண வெட்கம் கொண்டு நிலவுமகள் ஓடி மறைய,
அவளின் ஓட்டத்தினை கண்ட குயில்கள் தன் இன்னிசை குரலால் சங்கீதமாய் ஓசை எழுப்பி சூர்யனுக்கு வழிகாட்ட,
அவ்வொசை வந்த திசையை பார்த்த செங்கதிரோன்,
தன் தலைவியினை தவிப்பினை புரிந்து கொண்டு புன்முறுவலாய் கடந்து சென்று தன் நண்பர்களான மக்களை எழுப்ப வானத்தின் தன் செம்மையை படர விட காலை பொழுது அழகாய் புலர்ந்தது.

இயற்கையின் காதல் விளையாட்டினையும், சென்னை மாநகரில் அழகிய காலை பொழுதையும் தன் கயல்விழி கண்களால் அள்ளி பருகியவாரே இறைவனுக்கு மாலை தொடுத்து கொண்டிருந்தாள் கவியரசி.

தன் செயல்களால் இவ்வீட்டை மட்டுமல்ல குடும்பத்தையே அழகாக்கி மகிழும் செல்ல இளவரசியே கவியரசி.

தன் தாய்க்கு உதவியாய் அவரின் வேலையை பாதியாய் குறைக்கும் பொறுப்பானவள்,
இவளின் பொறுப்புகளின் சிலதையே இப்போது செய்து கொண்டிருக்கிறாள்.

தன் மலர்க் கரங்களால் தொடுத்த பூ மாலையை இறைவனுக்கு சாற்ற வீட்டிற்குள் விரைந்தவள், தன் தாயின் பக்தியின் வெளிபாடாய் சாம்பிராணி மணத்தால் சூழ்ந்த வீட்டின் சூழலை அனுபவித்து கொண்டே கடவுள் படத்திற்கு மாலை போட்டு வேண்டுதல் வைக்க,
இவளின் செயலை கண்டு அடுப்படியிலிருந்து விசில் பறந்தது.

"அச்சசோ, அதுக்குள்ள சாதம் ரெடியாச்சா இட்லியும் செஞ்சாச்சு, இனி சட்னி சாம்பார்னு எல்லாமே சீக்கிரமா ரெடி பண்ணனுமே" என தன் வேலையினை செய்ய ஓடியவள் தன் தந்தையின் செயலால் ஓட்டத்தை நிறுத்தி
அவருக்கு தக்க சன்மானம் வழங்க தயாரானாள்.

"அப்பா என்னப்பா இது...???
நான் பூக்கட்ட போனப்போ காபி வைச்சிட்டு போனேன் அதை இன்னமும் குடிக்காம அப்படி என்னதான் அந்த பேப்பர்ல இருக்குனு ஆர்வமா படிச்சிட்டு இருக்கீங்க" என காபி ஆறியது கூட தெரியாது நியூஸ் பேப்பரின் மூழ்கிய தன் தந்தையை பார்த்து வினவ அதற்கு அவரோ,

"என் செல்ல மக கையாலே போட்ட பில்டர் காபியை குடிக்காம இருப்பேனா மா, அதையும் ஒருபக்கம் குடிச்சுட்டு பேப்பர்ல இருக்கிற நியூஸையும் ஒருபக்கம் படிச்சிட்டு இருக்கேன் டா நீ வேணா பாரேன், நீ வைச்சிட்டு போனப்போ புல்லா இருந்துச்சு இப்போ கொஞ்சம் காலியாகிருக்கு பாரேன்" என தன் செயலுக்கு மகளிடம் விளக்கம் கூற,
அதனை கேட்டு குறுநகை பூத்தவளை மறுபடியும் கோபத்தில் ஆழ்த்த வந்த இவரின் தர்மபத்தினியோ,

"அப்படி நல்லா கேளுமா,
எப்போ பார்த்தாலும் அந்த பேப்பரும் கையுமா தான் மனிசன் உட்கார்ந்திட்டு இருக்காரு, இவரு ஆபிஸுக்கு போயாவது வேலையை பார்க்குறாரா இல்ல அங்கயும் பேப்பரை தான் பார்க்குறாரானு தெரியல,
அதையெல்லாம் விடு இந்தா இந்த காபியை உன் தம்பிக்கு குடுத்து அவனை எழுப்பிவிடு, சாதத்தை நான் இறக்கி வைச்சிட்டேன் மீதி வேலையையும் நானே பார்த்திடுறேன் நீ அவனுக்கு காபியை குடுத்திட்டு காலேஜ் கிளம்புற வழியை பாரு" என தன் கணவருக்கும் ஆப்பு வைத்து அவரின் விளக்கத்தையும் மகள் கேட்காதபடி சாதூர்யமாக செயல்பட்டார் இந்த குடும்பத்தின் தலைவி சாவித்திரி.

அம்மாவின் சொல்லை கேட்டு காபியை வாங்கி கொண்டு தம்பியின் அறை நோக்கி கவி செல்ல, தன் மனைவியின் பேச்சுக்கு மகளிடம் விளக்கம் குடுக்க முடியாததால் பெருமூச்சு விட்ட கணேசன்,

அந்த சத்தியவானோட மனைவி சாவித்திரி; எமன்கிட்டயிருந்து கணவனை காப்பாத்த போராடுனா, ஆனா எனக்கு வாய்த்த சாவித்திரி என் மககிட்ட மாட்டிவிடுறதுலயே குறியா இருக்கா" என முணுமுணுக்க,

"அங்க எங்க முணுமுணுப்பு ஒழுங்கா இந்த காபியை குடிச்சிட்டு வேலைக்கு கிளம்புற வழியை பாருங்க" என அக்குடும்ப தலைவருக்கே உத்தரவு போட்டு விட்டு தன் ராஜாங்கமான சமையல்கட்டை நோக்கி விரைய இவரும் வேறு வழியின்றி வேலைக்கு கிளம்ப தயாரானார்.

அங்கே அறையில் கவியின் தம்பியோ ஹாலில் நடக்கும் கலாட்டாவிற்கும் தனக்கும் சம்மதமில்லை என்பது போல அழகாய் உறங்கி கொண்டிருந்தான்.

அலை அலையான கேசம் காற்றில் அசைந்தாட, தன்னிரு கைகளையும் தலைக்கு வைத்து குப்புறபடுத்து உறங்கியவனின் முகத்தில் இருந்த வசீகர சிரிப்பு, அவனை ஆணழகனாய் காட்டியது தம்பி தூங்கும் அழகினை ரசித்தவள்,

அவனின் தூக்கத்தை கலைக்கும் விதமாய்,
"கார்த்திக் சீக்கிரம் எழுந்திருடா...
இன்னைக்கு முதல்நாள் ஸ்கூலுக்கு சீக்கிரமா போக வேணாமா...
இன்னும் தூங்கிட்டு இருந்தா எப்படிடா மணி ஆச்சு பாரு" என கூற அதற்கு அவனோ,

"அக்கா தூக்கம் தூக்கமா வருதுக்கா, இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேனே பீளிஸ்" என கெஞ்சியவனின் நாசியை நிறைத்த காபியின் வாசத்தில் தன் தூக்கம் மொத்ததையும் துறந்து விழுந்தடித்து எழுந்தமர்ந்தான்.

"வாவ் அக்கா நீ போட்ட காபியா இதை குடுத்திருந்தாலே நான் எந்திரிச்சிருப்பேனே, ப்பா செம டேஸ்ட் அக்கா" என தன் அக்காளின் கையால் போட்ட காபியை ரசித்து குடிக்க அவனின் செயலில் அகமகிழ்ந்து அவன் கேசம் கலைத்து விட்டவளோ,

"ஆமா டா நான் காபி போட்டா மட்டும் தான் நீ குடிப்ப அதான் உனக்கு காபி போட்டு பிளாஸ்க்குல வைச்சிட்டு வேலையை பார்த்தேன்,
சரி அதைவிடு சீக்கிரம் ஸ்கூலுக்கு ரெடியாகி கிளம்புற வழியை பாரு இந்த வருஷம் பப்ளிக் எக்ஸாம் இருக்குல அதுக்கு முதல்ல இருந்தே நல்ல படிச்சா தான் நல்ல மார்க் வாங்க முடியும் அதுனால சீக்கிரமா கிளம்பு கவனமா படி" என தம்பிக்கு அறிவுரை கூற அதனை கேட்டவனோ,

"நீ கவலையேபடாத அக்கா இந்த வருஷம் +2 எக்ஸாம்ல நான் ஸடேட் பர்ஸ்ட் வருவேன்" என வாக்களிக்க அவனின் சொல்லில் அகம் மகிழ்ந்தவள் கல்லூரிக்கு கிளம்ப அவளின் அறை நோக்கி விரைந்தாள்.

காபியை பருகி முடித்தவன் குளியலறை சென்று குளித்து விட்டு தன் அக்கா அயன் செய்து வைத்த பள்ளி சீருடையை மாட்டிகொண்டு கண்ணாடியை பார்த்து தன் தலையை ஸ்டைலாக கோதி கொண்டவன், "கார்த்திக் நீ உண்மையாவே அழகன் தாண்டா" என தன்னை தானே ரசித்தப்படி ஹாலிற்கு விரைந்து காலையுணவினை முடித்து கொண்டு அனைவரிடமும் விடைபெற்று பள்ளிக்கு சென்றான்.

கார்த்திக் ஒரு தனியார் பள்ளியில் பண்ணிரெண்டாம் வகுப்பு பயில்கிறான் படிப்பிலும் சரி ஆசிரியர்களின் மனதிலும் சரி என்றுமே இவனுக்கு முதலிடம் தான் இவனின் தந்தை கணேசன் அரசு அதிகாரியாய் பணியாற்ற தாய் சாவித்திரியோ வீட்டு அதிகாரியாய் வலம் வருகிறார் நமது கார்த்திக்கின் உயிரும் உலகமும் அவனின் அக்கா கவி தான் கவியும் அவனின் மேல் அளவுகடந்த அன்பை வைத்திருக்கிறாள்.

💘💘💘💘💘💘💘💘

அப்பெரும் நகரமான சென்னையில் செல்வ செழிப்பில் மிதக்கும் செல்வந்தர்களும் பெரும் தொழிலதிபர்கள் மட்டுமே அதிகம் வசிக்கும் அந்த தெருவில் ஒருவர் காலை பொழுதை ரசித்தவண்ணம் ஜாக்கிங் முடித்து வர, அத்தனை வீடுகளும் பணக்காரர்களின் வீடு என்று பறைசாற்றும் வகையில் தங்கசிறை வாழ்க்கைக்கு ஏற்ப சத்தமில்லாமல் இருக்க ஒரு வீட்டில் மட்டும் அந்த ஓட்டு மொத்த தெருவிற்கும் சேர்த்து சத்தம் போடுவதை போல பேரிரச்சலாய் இருந்தது, அதனை பார்த்து முறுவலித்த அம்மனிதர் அந்த இறைச்சலான சத்யமூர்த்தி பவனத்திற்குள் நுழைந்தார்.

"ஏண்டி உனக்கு கொஞ்சமாச்சு அறிவிருக்கா காலங்காத்தால கந்த சஷ்டி கவசம் போட்டு பக்திமயமா இருக்க வேண்டிய நேரத்துல சினிமா பாட்டு போட்டு குத்தாட்டம் ஆடிகிட்டு இருக்க;
பொம்பளை பிள்ளையா அடக்க ஒழுக்கமா இருக்காம இப்படியா நடந்துப்ப இதுக்கெல்லாம் உன்னை சொல்லி குத்தமில்லை, எல்லாம் அந்த மனிசனை சொல்லணும் உனக்கு ஓவரா செல்லம் குடுத்து கெடுத்து வைச்சிருக்காரு;
உன்னைய சமாளிக்கிறதுக்குள்ள எனக்கு உயிர் போய் உயிர் வருதே, அடியே நான் இங்க கத்திகிட்டே இருக்கேன் நீ என்னடி ஷோபா மேல ஏறி நின்னு ஆடுற ஒழுங்கு மரியாதையா இறங்கிடி இறங்குனு சொல்றேன்ல" என தன் மகளோடு போராடி கொண்டிருக்க அவளோ,

"அம்மா எனக்கு பிடிச்ச பாட்டு டிவில ஓடுது மா, அதுக்கு டான்ஸ் ஆட விடாம இப்படியா தொல்லை பண்ணுவ; வருங்கால டான்சரோட திறமையை கெடுத்திட்டு இருக்க நீ இதுக்கெல்லாம் சேர்த்து அப்பாகிட்ட சொல்லி கேஸ் போட சொல்றேன் பாரு" என தன் தாயை மிரட்ட அவளின் பேச்சினை கேட்டு கோபமுற்று தாயோ அவளை அடிக்க ஆயுதம் தேட அதற்குள் ஷோபாவுக்கு பின்னால் இருந்து வந்த தடி அவளின் தலையினை பதம் பார்த்தது.

"ஆ யம்மாஆஆஆ..."

"யாருடா அது, என்னோட மண்டையில டிரம்ஸ் வாசிச்சது" என தன் பின்னால் திரும்பி பார்க்க அங்கே அவளின் பாட்டி பெரிய தடியோடு நின்றிருந்தார்.

'ஆத்தி இந்த பாட்டி எப்போ வந்துச்சுனு தெரியலையே, இன்னைக்கு நமக்கு செமத்தியா டோஸ் தர போகுதோ' என மைண்ட்வாய்ஸில் யோசிக்க அதற்குள் அவளின் பாட்டியோ,

இந்தாடி இப்போ எதுக்கு ஷோபா மேல ஏறி நின்னுட்டு இருக்குறவ இதுல உட்கார்ந்து டிவி பார்க்க தான் என் புள்ளை லட்சகணக்கா செலவழிச்சு வாங்கி போட்டிருக்கான் இப்படி நீ ஏறி நின்னு ஆடுறதுக்கு இல்ல" என கோபமாய் கூற அதனை கேட்டவளோ,

"அதே தான் பாட்டி நானும் சொல்றேன் இது எங்க அப்பா வாங்கி போட்ட ஷோபா, இதுல நான் நிப்பேன் என கூறி ராணுவ வீரர்களை போல் விரைப்பாய் நின்றவள் அடுத்து குதிப்பேன் என கூறி ஜங்கு ஜங்கென்று குதிக்க அதை பார்த்த பாட்டியோ பதறியபடி "அடியே என்னடி பண்ற ஒழுங்கா கீழ இறங்கு டி" என அதட்ட அதனை கண்டுகொள்ளாதவள் டிவியில் ஓடிய பாடலுக்கேற்றவாறு ஆடி இப்படி ஸநேக் டான்ஸ் கூட ஆடுவேன் என்ன வேணாலும் பண்ணுவேன் அதைபத்தி நீ கேட்ககூடாது ஏன்னா,
என கூறியபடி பாட்டியின் முகத்திற்கு நேரே குனிந்தவள் அவரின் கண்களை பார்த்து "ஏன்னா, இது எங்க அப்பா வாங்கி தந்த ஷோபா" என கெத்தாய் கூறினாள்

இவளின் இந்த கலாட்டாக்களுக்கு மத்தியில் வீட்டிற்குள் நுழைந்த சத்யமூர்த்தியோ தன் மகளுக்காக பரிந்து பேச வந்தார்.

"அம்மா அவ சின்ன பொண்ணு தானே, அவளை எதுக்கு இப்படி அதட்டுறீங்க; இவ இஷ்டம் போல கொஞ்சம் சந்தோஷமா இருக்கட்டுமே" என்று மகளிற்காக பரிந்து பேச,
அதுவரை தன் மகளின் பேச்சினை அடக்க மும்முரமாய் ஆயுதம் தேடியவரோ தன் கணவரின் பேச்சில் துணுக்குற்று காளி அவதாரம் எடுத்தார்.

"யாருங்க சின்ன பொண்ணு இவளா, விட்டா இந்த ஏரியாவையே விலைபேசி வித்துட்டு வந்திடுவா, எல்லாம் உங்களை சொல்லணும் இவளுக்கு இப்படி செல்லம் குடுத்து கெடுத்து வைக்குறதே நீங்கதான், இவ இப்படியே சேட்டை பண்ணிட்டு இருந்தா எப்படிங்க ஒழுங்கா படிச்சு மார்க் வாங்குவா" என மகளின் மேலுள்ள கோபத்தில் கணவரை பொறிய அதனை கேட்டு கடுப்புற்றவளோ,

"அம்மா, இப்போ எதுக்கு தேவையில்லாம அப்பாவை திட்டுற ; நான் சேட்டை பண்ணாலும் படிப்புல கோட்டை விடாம நிறைய மார்க் எடுத்திடுவேன் நீ கவலையேபடாத" என கூறி நாக்கை துருத்தி அழகு காட்டியவளை கண்டு முகத்தை வெட்டி கொண்டார் ஜெயா.

"இங்க பாரு ஜெயா நம்ம பொண்ணு முட்டி முட்டி படிச்சு என்ன பண்ண போறா, படிப்பை புரிஞ்சு படிக்கணும் அடிப்படையான விஷயத்தை புரிஞ்சு படிச்சா மட்டும் தான் தெரிஞ்சிக்க முடியும் அதைவிட்டுட்டு மனப்பாடம் பண்ணி மார்க் எடுக்கணும்னு அவசியம் இல்ல" என தன் மனைவியிடம் கூறிவிட்டு தன் மகளிடம் திரும்பியவர்.

"இங்க பாருடா அனுக்குட்டி நீ நிறைய மார்க் வாங்க வேணாம், ஆனா படிக்கிற பாடத்தை எப்பயும் போல புரிஞ்சு படிக்கணும் சரியா, உனக்கு எவ்ளோ புரியுதோ அவ்ளோ எக்ஸாம்ல எழுது ஏதாவது புரியலனா அப்பாகிட்ட கேளு ஆனா புரியலனு சொல்லிட்டு மனப்பாடம் மட்டும் பண்ணகூடாது சரியா" என கேட்க தந்தையின் பேச்சில் சந்தோஷமானவளோ,

"கண்டிப்பா அப்பா நீங்க சொல்ற மாதிரியே படிக்கிறேன்" என கூற அவளின் உச்சி முகர்ந்து முத்தமிட்டவரோ;
சரிடா இப்போ உனக்கு ஸ்கூலுக்கு டைமாச்சுல சீக்கிரம் ரெடியாகு அப்பா உன்னைய கொண்டு போய் விடுறேன்" என கூறிய தந்தையின் பேச்சிற்கு மறுபேச்சு பேசாமல் தன் அறையினை நோக்கி விரைந்தாள்.

மகள் போவதையே ரசித்து கொண்டிருந்த தன் மகனினை கண்ட தேவி பாட்டியோ தன் மைண்ட்வாய்ஸில்,

'மருமக பேச்சுக்கே மதிப்ப காணோம் இதுல என் பேச்சை எங்க கேட்க போறான்;
சரி நம்ம போய் மககிட்ட பேசிட்டு வருவோம்' என அங்கிருந்து தன் போனை எடுத்துகொண்டு நழுவி சென்றார்.

மறுபக்கம் சத்யமூர்த்தியின் மனைவி ஜெயாவோ, கணவரின் பேச்சினால் கோபம் கொண்டு, "இவர்கிட்ட பேசி ஜெயிக்க நினைச்ச நான் முட்டாள் தான், இவங்களுக்கு நடுவுல மாட்டிகிட்டு பஞ்சாயத்து பண்ண நேரத்துல அனுக்கு குடுத்து விட லஞ்ச் ரெடி பண்ணிருக்கலாம்" என கணவருக்கு கேட்கும்படி முணுமுணுத்து சென்றவரை பார்த்து சிரித்து கொண்டே வேலைக்கு கிளம்பி செல்ல தன்னறை நோக்கி விரைந்தார்.

வீட்டை சிறிது நேரத்தில் போர்களமாக்கியவள் தான் அனுபிரியா அனைவரையும் தன் குறும்பால் மிரள வைக்கும் இவளே ஒரு விஷயத்திற்காக மிரண்டு ஓடுவாள் (அதைபற்றி கதையின் போக்கிலேயே தெரிந்து கொள்வோம்) அனுவிற்கு தந்தை தான் எல்லாமே;
அவரின் பேச்சிற்கும், முடிவிற்கும் எதிர் பேச்சு பேசாதவள்; இவளின் தந்தை சத்யமூர்த்தி வக்கீலாக பணியாற்றுகிறார் இவரின் பேருக்கு ஏற்றார் போல சத்தியத்தை காக்க வாழ்நாள் முழுவதும் அயராது உழைப்பவர்.

இவரின் மனைவி ஜெயலெட்சுமி;
அனுவின் வாலுதனத்திற்கு வெகுமதி தருவதிலேயே தன் வாழ்நாட்களை ஓட்டுபவர் இந்த குடும்பத்திற்கு மூத்தவராய் கணவரை இழந்த தேவி பாட்டி மட்டும் இருக்கிறார்.

பள்ளி சீருடையை மாற்றி தயாரானவள் தன் தாயிடம் வந்து "அம்மா எனக்கு கொஞ்சம் சடை பின்னி விடேன் பீளிஸ்" என அப்பாவியாய் வினவ அதனை கேட்டு முறைத்த ஜெயாவோ,

"ஏண்டி உங்க அப்பா வார்த்தைக்கு வார்த்தை உன்னைய சின்ன பிள்ளைனு சொன்னா நீ அதை நிருபிக்குற மாதிரியே நடந்துக்கிறீயே, உனக்கு தான் சடைபின்ன தெரியுமே நீயே பின்னலாம்ல" என வாய் கோபமாய் கேட்டாலும் கை தன் மகளின் தலையினை அழகாய் சீவி பின்ன ஆரம்பித்திருந்தது.

"நானே பின்னிடுவேன் மா, ஆனா நீ பின்னுறது போல வராதே" என தன் தாயை செல்லம் கொஞ்ச; மகளின் பாசத்தின் கரைந்தவர் சிரித்தபடியே தலை பிண்ணிவிட்டார்.

அவளின் தந்தை சத்யாவோ தயாராகி தன் வேலை சம்மந்தமான போன் பேசியபடியே வந்தவர் போனை காதில் வைத்தபடியே ஹாட் பாக்ஸில் இருக்கும் தோசையை எடுத்து தட்டில் போட்டு சட்னி உற்றி கொண்டவர் போனில், "ஓகே இதைபத்தி நான் நேர்ல வந்து பேசுறேன்" என கூறி போனை வைத்துவிட்டு தட்டோடு தன் மகளின் முன்னிருந்த சேரில் அமர்ந்து அவளுக்கு தோசையை பிய்த்து ஊட்டிவிட்டார்.

ஒருபுறம் தாயவள் மகளிற்கு தலை வாரிவிட மறுபுறம் தந்தை தோசை ஊட்ட நடுவில் இவ்வீட்டின் வாலு இளவரசி இந்த பாசத்தில் லயித்து இருக்க அதனை ஆவென பார்த்த பாட்டியோ, "இதென்ன உலகத்துல எங்குமே நடக்காத கூத்தால இருக்கு" என நொந்தபடி தன்னறைக்கு சென்றார்.

தந்தையின் அன்பு கலந்த உணவினால் வயிறும் மனமும் சேர்ந்து நிரம்பிட "எனக்கு போதும்ப்பா நீங்க கொஞ்சம் சாப்பிடுங்க" என தன் மென்கரத்தால் தந்தைக்கும் ஊட்டி விட்டவளிடம் ஒருவாய் வாங்கி கொண்டவர் அவளிடம் "நீ எல்லாமே எடுத்து வைச்சிட்டீயானு ஒருமுறை செக் பண்ணு மா, அப்பா அதுக்குள்ள சாப்பிட்டு வரேன்" என சொல்ல "ஓகே ப்பா" என துள்ளிகுதித்து அங்கிருந்து ஓடினாள்.

மகள் ஓடுவதை பார்த்தவர் தன் மனைவியிடம் திரும்பி தோசையை பிய்த்து அதனை ஊட்டி விட கைகளை கொண்டு செல்ல இதுவரை மகளிற்காக போட்ட சண்டையாவும் மறந்து தன் கணவனின் அன்பில் திளைத்தவர் அதனை பெற்றுகொண்டு அவருக்கும் ஊட்டி விட்டார்.

காதல் மனம் புரியாமலேயே ஒவ்வொரு நாளும் காதலால் முழ்கடித்து; தன் உணர்விற்கும் மதிப்பளிக்கும் கணவனை எண்ணி உவகை கொண்ட ஜெயா அகம்மகிழ்ந்து போனார்.

தன் மகளோட காரில் ஏறியவர் தன் மகள் காணாத வண்ணம் மனைவியை பார்த்து கண்ணடித்து காரினை இயக்க, கணவரின் செயலால் முகம் செந்தாமரையாய் சிவந்தாலும் அதனை மறைத்துகொண்டு இருவரையும்
வழியணுப்பி வைத்தார் ஜெயலெட்சுமி.

💘💘💘💘💘💘💘💘

அதேசமயம் இங்கு ஒரு பள்ளியிலோ இரண்டு நண்பர்கள் சுவாரஸ்யமாக உரையாடி கொண்டிருந்தனர்.

"மச்சி என்னைக்குமே பிரைட்டா இருக்கிற உன்னோட முகம் இன்னைக்கு ஓவர் பிரைட்டா இருக்கே டா, என்ன விசேஷம்" என தன் நண்பனான வினோத்திடம் அவன் கேட்க அதற்கு வினோத்தோ,

"இன்னைக்கு என்னோட ஆள்கிட்ட பிரப்போஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன் டா" என கூறி அவளின் வருகைக்காக வாசலையே எட்டி எட்டி பார்த்தான்.

அதற்கு அவனோ,
"மச்சி நீ சொல்றது உண்மையா என்னால நம்பவே முடியலை டா, அவளை பார்த்தே ஒரு வாரம் தானே ஆகுது அதுக்குள்ள பிரப்போஸ் பண்ண போறீயா உனக்கு இது ஓவர் பாஸ்ட்டா தெரியல" என தன் நண்பனின் பேச்சில் அதிர்ச்சியாகி கேட்க அதற்கு வினோத்தோ,

"சத்தியமா தெரியல டா இப்போலாம் எவன், எப்போ, எந்த பொண்ணை உஷாரு பண்ணிட்டு போவானுங்களே தெரியாது அதுனால நமக்கு ஒருத்தியை பிடிச்சிருக்கா, உடனே போய் பிரப்போஸ் பண்ணிடணும், அதைவிட்டுட்டு வேடிக்கை பார்த்திட்டு இருந்த அவ்ளோதான், அதுமட்டும் இல்லாம இப்போவே பிரப்போஸ் பண்ணிட்டா நெஸ்ட் இயர் காலேஜுக்கு போகும்போது நம்மலும் கமிட்டட் தான்னு கெத்தா சொல்லிகலாம்ல" என எகத்தாளமாய் பேச உடனே அவன் நண்பனின் மூளைக்குள் ஒரு சந்தேகம் உதயமாகியது.

"நீ சொல்றது எல்லாம் சரி தாண்டா, ஆனா நீ சொல்றமாதிரி அவகிட்ட போய் பிரப்போஸ் பண்றனே வைச்சிப்போம் அப்போ அவ முடியாதுனு சொல்லிட்டா என்ன பண்ணுவ.." என கேட்ட மறுநொடி அவனின் கன்னம் தீயாய் எரிந்தது.

"அடப்பாவி இப்போ என்னைய ஏண்டா அடிச்ச" என தன் கன்னத்தில் கைவைத்து கொண்டு கேட்க,

"நீதான அவ வேணாம்னு சொன்னா என்ன பண்ணுவனு கேட்டேல இதான் பண்ணுவேன் இதுக்கு மேலயும் பிடிவாதம் பிடிச்சா என்ன வேணாலும் பண்ணுவேன் ஏண்ணா எனக்கு ஒண்ணு வேணும்னா வேணும் அவ்ளோதான், அது கிடைக்குமா கிடைக்காதா, நடக்குமா நடக்காதானு யோசிக்கவே மாட்டேன்" என ஆக்ரோஷமாய் கத்தியவன் அவனின் காத்திருப்பிற்கு காரணமானவளின் வருகையை கண்டு நொடியில் தன் முகத்தில் புன்னகையை ஏந்தி கொண்டு கையில் இருந்த ரோஜாப்பூவோடு அவளை நோக்கி சென்றான்.

இவனின் செயலை கண்ட நண்பனோ, "கடவுளே இந்த சைக்கோகிட்டயிருந்து எப்படியாவது அந்த பொண்ணை காப்பாத்துப்பா" என வேண்டி கொண்டான் பாவம் அவனால் அதுமட்டும் தான் செய்ய முடிந்தது இவனின் வேண்டுதலுக்கு விதி செவிசாய்க்குமா என்ற வினாவோடு நாமும் காத்திருப்போம்.




காதலின் தேடல் தொடரும்🏃🏃🏃
 

Kani Mozhi

✍️
Writer
Wow nancy akka... Superb start... semma interesting ah iruku akka... porupana ponna kavi oda activities elame superb akka... Kurumbukari ana anuvum vera level than... Ada paavi vinodh 🙄paithiyamada ni.... Eagerly waiting for next epi akka ❤❣❤❣❤❣
 

Nancy mary

✍️
Writer
Wow nancy akka... Superb start... semma interesting ah iruku akka... porupana ponna kavi oda activities elame superb akka... Kurumbukari ana anuvum vera level than... Ada paavi vinodh 🙄paithiyamada ni.... Eagerly waiting for next epi akka ❤❣❤❣❤❣
ரொம்ப நன்றி மா😍😍😍❤️❤️❤️
 

பிரிய நிலா

Well-known member
Member
வந்துட்டேன் சிஸ் வந்துட்டேன் உங்க கதை மேல கண்ணு இருந்துச்சு படிக்க ஸ்டார்ட் பண்ணனும்னு இன்னைக்கு தான் நல்ல நாள் நேரம் பார்த்து ஸ்டார்ட் பண்ணிட்டேன்...
 

பிரிய நிலா

Well-known member
Member
காதலே ஆரம்பமாய்... அருமையான தலைப்பு சிஸ்..
மூனு சீன் வந்திருக்கு... கவியரசி கார்த்திக் ஒரு பக்கம்...
அனு ஒரு பக்கம்....
காதலை சொல்றேன்னு ப்ரண்ட் வினோத் கிட்ட சொல்லிட்டு போறவன் ஒரு பக்கம்...

பார்க்கலாம் இந்த மூனும் எப்படி லிங்க் ஆகுதுனு.. எனக்கு தெருஞ்சு அனுகிட்ட தான் லவ் சொல்லப் போறான் நினைக்கறேன். கார்த்திக் காப்பாத்த வருவானா...?
 

Nancy mary

✍️
Writer
காதலே ஆரம்பமாய்... அருமையான தலைப்பு சிஸ்..
மூனு சீன் வந்திருக்கு... கவியரசி கார்த்திக் ஒரு பக்கம்...
அனு ஒரு பக்கம்....
காதலை சொல்றேன்னு ப்ரண்ட் வினோத் கிட்ட சொல்லிட்டு போறவன் ஒரு பக்கம்...

பார்க்கலாம் இந்த மூனும் எப்படி லிங்க் ஆகுதுனு.. எனக்கு தெருஞ்சு அனுகிட்ட தான் லவ் சொல்லப் போறான் நினைக்கறேன். கார்த்திக் காப்பாத்த வருவானா...?
உங்களோட யூகங்கள் உண்மையாகுதானு பார்க்கலாம் சகி😍😍😍❤️❤️❤️❤️❤️
ரொம்ப நன்றி சகி😍😍❤️❤️❤️❤️
 

பிரிய நிலா

Well-known member
Member
உங்களோட யூகங்கள் உண்மையாகுதானு பார்க்கலாம் சகி😍😍😍❤️❤️❤️❤️❤️
ரொம்ப நன்றி சகி😍😍❤️❤️❤️❤️
யூகம் சரியா தப்பானு கண்டு பிடிச்சுட்டேன் சிஸ்.. பட் இங்க அதை சொல்ல மாட்டேன்..
 

Nithya Mariappan

✍️
Writer
நான் வந்துட்டேன் சகி... கவி கார்த்திக்கோட சகோதர பாசத்துல புல்லரிச்சு போய் உக்காந்துருக்கேன்... எப்பா கார்த்தி காலைல எழுந்ததும் பல்லு தேய்க்குற வேலைனு ஒன்னு இருக்கு... அதுக்கு அப்புறம் தான் காபி குடிக்கணும்... அனுகுட்டி நீ ஆடுடா செல்லம்... நம் வீடு, நம் சோபா, நம் டான்ஸ்... ஹூ கேன் ஸ்டாப் அஸ்😂😂😂
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom