அத்தியாயம் – 11
அருண், அரவிந்த் அம்மா இந்த நிச்சயதார்த்தம் நடக்காது என்று கூறியவுடன் திகைத்து நின்றவர்களில் முதலில் சுதாரித்து பிரத்யாதான்.
“பவி, தாரிணி ரெண்டு பேரும் முதலில் பேசாமல் இருங்கள். இந்த விஷயத்தை பெரியவர்கள் பேசிக் கொள்ளட்டும். இது இன்று ஒருநாள் முடியும் விஷயம் அல்ல. உங்கள் திருமணம் நடந்து நீங்கள் அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது, இன்றைக்கு கொட்டிய வார்த்தைகளால் காலம் முழுதும் வருத்தப்படும்படி நேரும்.”
இதை கேட்ட அவள் தங்கைகள், “அக்கா, ஆனால் நீங்கள் இல்லாமல் எங்கள் இருவரின் வாழ்வும் எப்படி சந்தோஷமாக இருக்கும்? “ என்று கேட்டாள்.
“அதை நாங்கள் பேசிக் கொள்கிறோம். நீங்கள் எதுவும் பேசக் கூடாது.” என்றவள் சம்பந்தியம்மாவிடம் திரும்பி,
“அத்தை. இப்போ என்ன பிரச்சினை? என் தங்கைகளை பார்த்து பொறாமைப்படுமளவு என் வாழ்க்கை இல்லை. அவர் எங்கள் திருமணதிற்கு முன்னேரே தான் மட்டும் தான் வெளிநாடு போக முடியும் என்பதையும், அவர் அடிக்கடி வர முடியாது எனபதையும் சொல்லி தான் என்னை திருமணம் செய்து கொண்டார். இதற்காக நான் ஏங்கவோ, வருத்தப்படவோ மாட்டேன். வேறு என்ன வேண்டும் உங்களுக்கு?”
“இங்கே பாரு ப்ரத்யா, எனக்கு உன் மேலோ, உன் குடும்பம் மேலோ எந்த தவறான எண்ணமும் இல்லை. ஆனால் என் மகன்களின் வாழ்க்கை யாரின் கண்ணும் படக் கூடாது. ஊரில் உள்ள மற்றவர்களின் பார்வை பற்றி நான் பயப்படவில்லை. ஆனால் நெருங்கிய சொந்தமான நீ, ஒரு நிமிடம் நானும் என் கணவரோடு சேர்ந்து வெளிநாட்டிற்கு சென்றிருந்தால், நம் தங்கைகள் மாதிரி மகிழ்ச்சியாய் இருந்திருக்கலாமே என்று நினைத்தால், அது இவர்களை பாதிக்கும்”
“திரும்ப திரும்ப சொன்னதையே சொல்றீங்களே. நான் அப்படிப்பட்டவள் இல்லை”
“அது இன்றைக்கு சரி. திருமணதிற்கு பின் உன் தங்கைகள் மறுவீடு, வளைகாப்பு, பேறு காலம் எல்லாம் வரும் போது . உன் எண்ணம் எப்படியும் மாறலாம். முதலில் திருமணம் நடந்த தனக்கு எதுவும் இல்லையே என்று நினைக்கலாம். இதை தான் நான் சொல்கிறேன். உன் கணவனும், நீயுமாக சேர்ந்து நின்று என் பிள்ளைகள், உன் தங்கைகளை ஆசீர்வாதம் செய். அது வரை நீ அவர்கள் கண்ணில் படாதே.”
அது வரை அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த பிரத்யாவின் மாமியார்,
“ப்ரத்யா நீ கிளம்பு. இனிமேல் நீ இங்கிருந்தால் உனக்கு மட்டும் அல்ல, என் மகனுக்கும் மரியாதை இல்லை. எப்போ அவர்கள் இவ்வளவு தூரம் பேசுகிறார்களோ, இனிமேல் நீ உன் அப்பா வீட்டிற்கு கூட ஆதி இல்லாமல் வரக் கூடாது. “ என்று கூற,
பிரத்யவின் அப்பா, அம்மா “சம்பந்தி அம்மா. அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் . நாங்கள் அவர்களை சமாதான படுத்துகிறோம். உங்கள் மகன் என் மூத்த மாப்பிள்ளை. எனக்கு ஆண் பிள்ளைகள் கிடையாது. மாப்பிளைகள் தான் எல்லாமே. ஒருவரை ஒருவர் பிடிக்காமல் போனால் கஷ்டம். “
“வேண்டாம் சம்பந்தி. அவர்கள் இத்தனை தீவிரமாக நினைக்கும் போது , பிறகு எதாவது சின்ன பிரச்சினை என்றாலும் உங்கள் பெரிய பெண்ணைத் தான் சொல்லுவார்கள். அவள் மனசு கஷ்டப்படும். “
“சம்பந்தியம்மா, நீங்கள் சொல்ற மாதிரி என் மருமகளை அனுப்பி விடுகிறேன். ஆனால் நான் போக மாட்டேன். அவள் என் மகனோடு சேர்ந்துதான் வாழ்கிறாள் என்பதற்கு நான் இங்கிருப்பது தான் சாட்சி. இல்லையென்றால் வேறு எதாவது கதை கட்டி விடக் கூடும். அதனால் நீங்கள் மேடைக்கு சென்று ஆக வேண்டிய விஷயங்களை பாருங்கள் “ என்று அனுப்பி வைத்தார்.
அவர் சொல் கேட்டு, மாப்பிள்ளைகளின் அம்மா சென்று விட,
பிரத்யவின் தங்கைகள், “அத்தை . உங்களை எதிர்த்துப் பேசுவதாக எண்ண வேண்டாம். ஆனால் இப்படி ஒரு கல்யாணம் எங்களுக்கு தேவையா?” என,
“இதை நான் உங்களுக்கு மட்டுமாக சொல்ல வில்லை. உங்கள் அக்காவிற்கும் சேர்த்துதான் சொல்கிறேன். இது எல்லாம் வீட்டிலேயே நடந்திருந்தால் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று விட்டிருக்கலாம். மண்டபத்திற்கு நிச்சயம் வரை வந்து நின்றால். நாளை உங்கள் வாழ்க்கை என்ன ஆகும்? அதை பார்த்து உன் அக்கா நிம்மதியாக இருப்பாளா?”
அவர் சொல்லியதைக் கேட்ட ப்ரத்யா, தன் தங்கைகளைப் பார்த்து “அத்தை சொல்வது சரிதான். இந்த விஷயத்தை இதோடு மறந்து விட்டு நீங்கள் உங்கள் வாழ்க்கையை பாருங்கள். நான் எங்கிருந்தாலும் என்னுடைய வாழ்த்து உங்களுக்கு எப்போழுதும் உண்டு.” என்றவள் அவர்கள் எல்லோரையும் பார்த்துத் தலை அசைத்து விட்டு மண்டபத்தை விட்டு சென்று விட்டாள்.
ப்ரத்யா இல்லாததை யாரும் அறியாத படி நிச்சயம் நடந்தது. அவள் குடும்பத்தினர் தங்கள் வருத்தத்தை வெளிக் காட்டவில்லை.
அருண், அரவிந்த் செய்வதறியாது திகைத்து நின்றனர். நிச்சயம் முடிந்த பின் எல்லோர் ஆசிகளும் பெற்றனர். பிறகு போட்டோக்காக சேர்ந்து நிற்கும்போது தங்கள் வருங்கால துணைகளின் முகத்தை பார்த்தவர்கள், நால்வரும் சேர்ந்து நின்று பேசுவது போல்,
“பவித்ரா, தாரிணி சாரி. எங்களால் எங்கள் அம்மாவை சில ஊறின பழக்கங்களில் இருந்து மாற்ற முடியவில்லை. அது உங்கள் அக்காவை பாதிக்கும் என்று எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. நாங்கள் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். “
“நீங்கள் எளிதாக சொல்கிறீர்கள். நாளை எங்களையும் எதாவது ஒரு விஷயத்திற்கு பேச மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் ?”
“இல்லடா. அப்படியெல்லாம் நடக்காது. நாங்கள் ஏற்கனவே சொன்னது போல், அவர்கள் முதல் தலைமுறை கிராமத்தை விட்டு வெளி வருபவர்கள். நாங்கள் படிப்பிற்காக வரும்போது ஊரில் உள்ள பொறமை பிடித்தவர்கள், நாங்கள் இருவரும் பட்டணம் சென்றால், கெட்டு விடுவோம். மேலும் பட்டணத்து வாழ்கை முறை பழகி உறவுகளை மதிக்க மாட்டார்கள் என்று எல்லாம் சொல்லி, அம்மாவை ஒரு மாதிரி பயமுறுத்தி விட்டார்கள். அதன் விளைவுதான் யாராவது ஒரு வார்த்தை குறை சொன்னால் கூட தாங்கள் மாட்டர்கள்.
அம்மாவிற்கு உங்களையும், சொல்ல போனால் உங்கள் குடும்பத்தையும் பிடித்துதான் பெண் கேட்டார்கள். அவர்களின் எண்ணமெல்லாம் உங்களை எங்கள் கூட்டம் குறை சொல்லி விடக் கூடாது என்று தான் அவர்கள் முந்திக் கொள்கிறார்கள். மற்றபடி உங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.” என்ற அரவிந்த்,
“ப்ளீஸ் . இது எவ்வளவு பெரிய வருத்தம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் நம் வாழ்வின் புது அத்தியாயத்தை ஆரம்பிக்க போகும் இந்த நாளில் நீங்கள் இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். இது உங்களுக்காக மட்டுமல்ல, உங்கள் அக்காவிற்காகவும் தான் சொல்கிறேன். அவர்கள் இன்று வெளியே கிளம்பியது உங்கள் சந்தோஷத்தை முன்னிட்டுத் தான். இன்று இந்த ஃபங்சன் நேரில் பார்க்க முடியா விட்டாலும், பின்னால் உங்கள் மாமாவோடு இந்த போட்டோ பார்க்கும் போது நீங்கள் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்தால் தான் அவர்கள் செய்ததற்கு பலன். அதற்காக உங்களை எல்லாவற்றையும் மறந்து போக சொல்லவில்லை. தற்சமயம் ரிலாக்ஸ்டாக இருங்கள். “ என்று முடித்தான்.
அவன் சொல்வதில் உள்ள உண்மையை உணர்ந்த இருவரும் அதற்கு பின் முழு மனதோடு சிரிக்கா விட்டாலும், வருத்தத்தை முகத்தில் காண்பிக்காமல் இருந்ததர்கள்.
இவர்கள் இருவரும் பேசியது போல், அவர்களின் அம்மா, அங்கே தனியாக, பிரத்யாவின் அம்மாவிடமும், மாமியாரிடமும் தான் பேசியதற்கு மன்னிப்பும், வருத்தமும் தெரிவித்தார்கள். மேலும் இவர்கள் கல்யாணத்திற்கு ப்ரத்யா, தன் கணவனோடு வர தான் வேண்டுவதாகவும் கூறினார்.
பிரத்யாவின் பெற்றோருக்கு , இவரை பற்றி என்ன நினைப்பது என்று புரியாமல் சென்றார்கள்.
இத்தனைக்கும் காரணமான வித்யாவின் மாமியார், அடுத்து என்ன திட்டம் தீட்டி கலகம் பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
மண்டபத்தை விட்டு வெளியே சென்ற ப்ரத்யா , நேராக தன் இஷ்ட தெய்வமான வடபழனி முருகன் கோவிலுக்கு சென்றாள்.
அவள் மனதில் எத்தனையோ வருத்தம் இருந்தாலும், தங்கைகளின் நிச்சய நேரத்தில் தான் சிந்தும் ஒரு துளி கண்ணீர் கூட அவர்களைப் பாதித்து விடக் கூடும் என்று அஞ்சினாள்.
அதனால் முருகன் சந்நிதானத்தில் நின்று சஷ்டி கவசம் சொல்லியவள், பின் சற்று நேரம் கழித்து தங்கள் வீட்டிற்கு சென்றாள்.
அவள் மாமியாரும், வித்யாவும் வந்திருக்க, இருவரிடத்திலும் பேசினாள்.
ப்ரத்யா மாமியார், அந்த அம்மா வந்து பேசியதை சொன்னார். பிறகு
“ப்ரத்யா, நான் சொல்வதை தவறாக எடுத்துக் கொள்ளாதே. இனிமேல் உன் தங்கைகள் திருமணம் முடியுமட்டும் நீ உன் அப்பா வீட்டிற்கு கூட செல்ல வேண்டாம். “ என
“நானும் அப்படிதான் நினைக்கிறேன் அத்தை.” என்றவள் பின் வித்யாவின் நெருங்கின மாத நிலையை எண்ணியவளாக , அவர்களைப் படுக்கச் சொன்னாள்.
தங்கள் அறைக்கு வந்த ப்ரயு, ஆதியின் போனிற்காக காத்திருந்தாள்.
ப்ரத்யா வீட்டிற்கு வருவதற்கு முன்பாகவே, ஆதியின் அம்மாவும், அவன் மாமனாரும் நடந்ததை அவனிடம் போனில் சொல்லி விட்டனர். பிரயுவின் அப்பா மிகவும் வருத்ததோடு மன்னிப்பும் கேட்டார். அவரின் தவறு இதில் என்ன என்று உணர்ந்த ஆதியும் அவரை சமாதனப் படுத்தினான்.
அவள் வெளியே போயிருக்கிறாள் என்று அவன் அம்மா சொல்லியதால், அவன் வழக்கத்தை விடவும் தாமதமாகவே பிரயுவிற்கு போன் செய்தான்.
“ஹலோ ப்ரயு “ என்ற ஆதியின் குரல் கேட்டவுடன்,
ப்ரத்யா அழ ஆரம்பித்து விட்டாள்.
“ஹலோ. ப்ரயு . ப்ளீஸ். அழாதடா“ என்று அவளை சமாதனபடுத்த செய்த முயற்சி தோல்வியே . பிறகு அவள் கொஞ்ச நேரம் அழட்டும் என்று விட்டு விட்டான்.
பத்து நிமிடங்கள் கழித்து . சற்று அழுகை குறைய,
“ப்ரயு. இப்போ எதுக்கு அழுத?”
“ஏன் உங்களுக்கு தெரியாதா ?”
“எனக்கு என்ன தெரியும் “
“ஹ்ம்ம். பொய். அப்பாவும், அத்தையும் உங்ககிட்ட பேசாமலா இருந்திருப்பாங்க?’
“அவங்க பேசினது இருக்கட்டும். நீ ஏன் இவ்ளோ நேரம் என்கிட்ட பேசல? உனக்கு இவ்ளோ மனசு வருத்தப்படும்போது என்கிட்டே அப்போவே பேசியிருந்தா இத்தனை நேரம் சமாளிசிருப்பதானே ?”
“அப்போவே உங்ககிட்ட பேசியிருந்தா அழுதிருப்பேன். ஆனால் நல்ல நேரத்தில் அழக்கூடாதுன்னு தான் பேசலை.”
“உனக்கேத் தெரியுது. அப்புறம் ஏன் இப்போ அழறே.?”
“ஹ்ம்ம். யார்கிட்டயாவது என் கஷ்டத்தை ஷேர் பண்ணனும்னு தோணிச்சு. அதான் உங்க கிட்ட அழுதுட்டேன்.”
“இப்போ அழற அளவுக்கு ஒன்னும் இல்லை புரியுதா. ? உங்க அப்பா உன் தங்கைகளின் கல்யாண தேதிய என்னோட ஷெட்யூல் பார்த்து வைக்கறேன்னு சொல்லிட்டார். அதனால் அவங்க கல்யாணத்திற்கு ரெண்டு பேரும் போய் கலக்கிட்டு வரலாம் சரியா ?”
“ஹ்ம்ம். நீங்க எப்போ வர முடியும்? “
“நான் வந்து ஒரு வருஷம் ஆயிடுச்சுன்னா . விசா ரெடி பண்ணி ஒரு பத்து . பதினைந்து நாள் லீவ்லே வர முடியும். அந்த டைம்லே கல்யாணத்தப் பிளான் பண்ண சொல்லிருக்கேன். “
“ஓகே. அவங்க டேட் முடிவு செய்தப்புறம் நீங்க லீவ் சொல்லிடுங்க. வந்து .உங்களுக்கு அப்பா மேலே கோபம் இல்லியே.? “
“ச்சே. அதெல்லாம் இல்லைமா. அவர் என்ன பண்ணுவார் பாவம்.”
“அப்போ என் தங்கைகளின் வுட்பி மேல ? “
“ஹ்ம்ம். கோபம் இல்லை. ஆனால் கொஞ்சம் வருத்தம் இருக்கு.”
“ப்ளீஸ் எனக்காக அதை பெரிசு படுத்தாதீங்க. எங்க அப்பாவிற்கு எல்லாமே நீங்க மூணு பேரும்தான். உங்களுக்குள்ள வருத்தம் இருந்தா அவர் யாரு பக்கம் பேசுறதுன்னு சங்கடபடுவார்.”
“ஏய். அதெல்லாம் ஒன்னும் இல்லைடா. சொல்ல போனால் அருண், அரவிந்த் ரெண்டு பேரும் என்கிட்டே இன்னிக்குப் பேசி வருத்தப்பட்டாங்க. எந்த பிரச்சினையும் இல்லை. ஓகேவா.”
“தேங்க்ஸ் ஆதிப்பா “
“ஷப்பா. இன்னிக்கு இவ்ளோ நேரம் கழிச்சு மேடம் இப்போதான் ஃபார்ம்க்கு வந்துருக்கீங்க. சரி. இப்போ அம்மா எங்கே இருக்காங்க. அவங்க ரூம்லேயா? நம்ம ரூம்லேயா?”
“அவங்க ரூம் லே தான் “
“அப்போ உன்னோட வருத்தம் எல்லாம் போக ஸ்ட்ராங்க் மருந்து ஒண்ணு தரவா ?” என்று கேட்டவன் . சிறிது நேரம் அவளிடம் போனில் வம்பு பேசினான்.
அவனின் பேச்சை கேட்ட ப்ரயு முகம் சிவக்க, அவனிடம் பதில் பேசினாள்.
இருவரும் பேசி முடித்த பின் , அன்றைய பிரயுவின் மன நிலைக்கேற்ப சில மெலோடி பாடல்கள் அவளுக்கு அனுப்பி அவளின் தூக்கத்திற்கு வழி வகுத்தான் அவள் கணவன்.
ஆனால் ஆதியோ தன் தூக்கத்தை தொலைத்து நின்றான். அந்த அம்மா பேசியதை சொன்னபோது ஆதிக்கு பயங்கர கோபம் வந்தது. தன் மனைவி பற்றிப் பேச அவர் யார் என்று எண்ணினான். மேலும் அவளின் புரிந்து கொள்ளுதல் பற்றி அவனுக்குதான் தெரியும்.
என்னதான் முதலிலே சொல்லி திருமணம் செய்திருந்தாலும், அவளிடத்தில் வேறு பெண் இருந்திருந்தால் இத்தனை நாளில் அவன் மனதை மாற்றி, ஒன்று அவனை வரவைத்திருப்பாள். இல்லை அவனோடு அவள் வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்திருப்பாள்.
ஆனால் ப்ரயு ஒருமுறை கூட அந்த மாதிரி சொல்லாதது மட்டுமல்ல,, ஒரு சின்ன மன வருத்தத்தைக் கூட அவனிடம் காண்பித்ததில்லை. அவனைத் தேடுவாளே தவிர , அவனைக் குறை கூற மாட்டாள். அப்படிப்பட்டவள் என்ன பேச்செல்லாம் கேட்க நேர்ந்தது என்று எண்ணி மிகவும் தவித்தான்.
ஆனால் அவன் மாமனார், அந்த மாப்பிள்ளைகள் எல்லோரும் பேசியவுடன் அவனுக்குக் கொஞ்சம் கோபம் தணிந்தது. பிரயுவின் அழுகை அவனுக்கு மிகவும் துன்பமாக இருந்தது. அவளைக் கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினான்.
ஆனால் இத்தனை பிரச்சினைக்கும் காரணம் வித்யாவின் மாமியார் என்பதை யாருமே அவனிடம் சொல்லவில்லை,.
அவன் மச்சினிகளின் திருமணத்திற்குச் செல்லும்போது முடிந்தவரை எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டும் என்று எண்ணினான்.
ஆதி எண்ணியது எதுவும் நடக்க போவதில்லை. தான் திருமணத்திற்கு வருவதாகச் சொன்னது எதுவும் நடக்கப் போவதில்லை என்று தெரியாமல் பெரிதாக திட்டம் போட்டான்.
-தொடரும் -